Tuesday, October 30, 2012

தினமணி தலையங்கம்..(கண்டிப்பாக படிக்கவும்) அதுவரை... இது தொடரும்!



உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன் அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கியதில் முறைகேடு குறித்து நிரூபித்தால் பதவி விலகுவேன் என்று அறிவித்தார் அப்போது சட்டத் துறை அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். அமைச்சரவையில் மாற்றம் என்று பேசப்பட்டபோது, குர்ஷித் பதவி விலகுவார் என்று எதிர்பார்த்தால், அவரை வெளியுறவு அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர்.

ஐபிஎல் அணி உரிமம் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக புகார்கள் எழுந்து, பெரிய விவகாரமாகி, அதனால் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்த சசி தரூர், தற்போது மீண்டும் மனித வள ஆற்றல் துறைக்கு அமைச்சராக்கப்பட்டுள்ளார். மிகவும் பொருத்தமான பதவிதான் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது!

ஊழல் புகாரில் சிக்கியவர்கள், அந்த ஊழல் குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்படும்வரை தாங்களாகவே பதவி விலகுவதுதான் அரசியல் நாகரிகம். சல்மான் குர்ஷித் மீதும், சசிதரூர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். நிரூபிக்கப்படாதவரை தவறு இல்லை என்றால், ஆ. ராசாவையும் தயாநிதி மாறனையும் மீண்டும் அமைச்சர்களாக்கி அழகு பார்த்திருக்கலாமே...

ஆ. ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இதைக் கூறவில்லை. தமிழகம் காரணமே இல்லாமல் வஞ்சிக்கப்படுகிறதே என்கிற ஆதங்கம்தான். மத்திய அமைச்சரவை மாற்றம் எத்தகைய அளவில் எப்படி நடந்திருந்தாலும், இந்த மாற்றத்தால் தமிழகத்துக்குக் கிடைத்தது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. தமிழகத்தின் தலையாய பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் யாருக்குமே உளப்பூர்வமான அக்கறை இல்லை என்பதற்கு அமைச்சரவை மாற்றத்தில் தமிழகம் தவிர்க்கப்பட்டிருப்பது ஓர் உதாரணம்.

புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை அண்மையில் அமைச்சர் நாராயணசாமி சந்தித்துப் பேசியபோது, அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு நல்ல இலாகா அளிக்கும்படி கருணாநிதி கூறியதாகப் பேச்சு எழுந்தது. நல்ல இலாகாவாகக் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானபோது, அமைச்சர் பதவிகளை தமிழ்நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தக் கேட்கிறாரோ என்று நினைக்கத் தோன்றியது. அப்படி ஏதாவது செய்து, தமிழகத்தின் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நல்ல பெயருடன் மக்கள் செல்வாக்கைத் திமுக பெற்றுவிடுமோ என்கிற அச்சம் அதிமுக தலைமைக்கேகூட ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

இன்றைய தமிழகத்தின் உயிர்த்தேவை மின்சாரம். உடனடியாக மின் உற்பத்தி செய்ய இயலாத நிலையில், வெளியில் இருந்துதான் விலைக்கு வாங்கிக்கொண்டு வந்தாக வேண்டும். ஆனால், மத்திய மின்வழித்தடத்தில் இடமில்லை என்று மறுக்கப்பட்டதால்தான் தமிழகத்தால் அதிக விலை கொடுக்கத் தயாராக இருந்தாலும் மின்சாரத்தைக் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை.

"வடமாநிலங்கள் தன் மின்வழித்தடப் பாதையை நவீனமயமாக்கி, கூடுதல் பாதைகள் அமைத்துத் தடையின்றி மின்சாரம் கிடைக்க வகை செய்துகொண்டுவிட்டன. கடைக்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கரிசனம் காட்டவில்லை. கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று வரும் தமிழகத்தின் காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் இத்தகைய மின்வழித் தடத்தை தமிழகத்துக்காக அமைக்கத் தவறிவிட்டனர்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில் - பிரச்னையை ஜெயலலிதா திசை திருப்புகிறார் என்பது மட்டுமே.

முதல்வர் ஜெயலலிதா இத்தகைய புகார் எழுப்பிய அடுத்த கணமே அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, உண்மையிலேயே தமிழர்களின் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு தன்னால் உதவ முடியும் என்று நினைத்திருந்தால், தற்போது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள மின்துறையைத் தனது திமுக அமைச்சர் ஒருவருக்குப் பெற்றுத்தந்து, தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்கச் செய்திருக்க முடியும். இதை அவர், தனது தனிப்பட்ட சாதனையாகச் சொல்லிக் கொள்ளவும், 2014-மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசவும் வாய்ப்பாக அமைந்திருக்கும். இந்த வாய்ப்பை திமுக தலைவர் கருணாநிதி தவறவிட்டுவிட்டார். தமிழர் நலனும் நழுவிப் போனது.

மத்தியில் தமிழகத்துக்கான ஒரு மின்துறை அமைச்சர் இருந்தால், நாம் நீதிமன்றத்தின் படியேறி உபரி மின்சாரத்தைக் கேட்டு நிற்க வேண்டியதில்லை. மின்வழித்தடங்களை சரியாக அமைத்துக்கொண்டு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதிலும் சிக்கல் இருக்காது. இதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகவே தெரியவில்லையே...

ரயில்வே, மின்சாரம், விவசாயம் போன்ற துறைகளை நமது மாநிலக் கட்சிகள் கேட்டுப் பெற்று அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு, தனிப்பட்ட முறையில் பயனளிக்கும் துறைகளைத்தான் கேட்டுப் பெறுகின்றன. இல்லையென்றால், அப்படி வாய்ப்பிருந்தும் அமைச்சர் பதவியே வேண்டாம் என்று வலிய வரும் அதிர்ஷ்டத்தையும் எட்டி உதைத்து விடுகிறார்கள்.

÷இன்றைய தமிழக ஆளும் கட்சி மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கட்சி. அதனால் தமிழகத்திற்கு வர இருப்பது வரப்போவதில்லை. சரி, மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவாவது தமிழக நலன் கருதி செயல்படுகிறதா என்றால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டால் அதன் பயன் அதிமுகவுக்குப் போய்விடுமோ என்று பயந்து, வேண்டுமென்றே வாளாவிருக்கிறது.

தங்களது தலைமையில் கூட்டணி அமையப் போவது இல்லை என்பதாலும், தங்களை மாநிலக் கட்சிகள் வளரவிடப் போவதில்லை என்பதாலும் தேசியக் கட்சிகளுக்கும் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை. அப்படியானால், தமிழகத்தின் வருங்காலம்தான் என்ன? பகலில் இரவும், தெருவில் போதையுமாகத் தேர்தலுக்கு தேர்தல் நமது வாக்குகளுக்கு வழங்கப்படும் பிச்சைக் காசை எதிர்பார்த்து வாழ்வதுதான் நமது தலைவிதியா?

÷தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 மக்களவை உறுப்பினர்களும், கட்சி மனமாச்சரியங்களை மறந்து, தமிழகத்தின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எப்போது செயல்படுகிறார்களோ, ஓர் குரலில் தமிழகத்தின் கோரிக்கைகளைத் தில்லித் தலைமைக்கு வலியுறுத்திப் பெறப் போகிறார்களோ, அப்போதுதான் தமிழகத்தின் தலைவிதி திருத்தி எழுதப்படும். அதுவரை... இது தொடரும்...!

Monday, October 29, 2012

மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..




பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான புகார்கள், கட்டாய டியூசன் விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.
இந்த புதிய சட்டம் சொல்வது என்ன?
- மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.
- குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கவும்கூடாது. மாணவர்களை வேண்டுமென்றே பெயில் ஆக்கக்கூடாது.
- பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.
- விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
- 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கலாம்.
- மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும்.
டெல்லியில் வரும் நவம்பர் 1- ந் தேதி நடைபெற உள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் இப்புதிய சட்டத்துக்கான மசோதா முன்வைக்கப்பட இருக்கிறது. இக்கூட்டத்துக்குப் பிறகு சட்டமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.


டிஸ்கி- அது சரி...மாணவர்கள் ஆசிரியர் மீது பொய்ப்புகார் கொடுத்தால்....
        ஆசிரியர் பிழைப்பே..கம்பங்கூத்தாடி கம்பின் மீது நடப்பது போல...கரணம் தப்பினால் மரணம்  ????


Saturday, October 27, 2012

ஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா...??




சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 போட்டியில் ஆஜீத் வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்..

ஆனால்...இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி பரவலாய் இருக்கிறது.முந்தைய ஜூனியர் 2 போட்டியில் சந்தேகமின்றி அல்கா வெற்றி பெற்றது குறித்து எள்ளளவும் சந்தேகம் எழவில்லை.

ஆனால் இந்த போட்டி...

ரஹ்மான் வருவது ரகசியமாய் வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.ஆனால்..அஜீத்தை உனக்குப் பிடித்தவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டு அவனும் ரஹ்மான் சார்தான் தனக்குப் பிடித்தவர் என்றான்.

ரஹ்மான் பாடிய பாடல்களே அவன் பாடினான்.தவிர்த்து வந்தே மாதரம் பாடலை போட்டியில்..அதுவும் ஃஃபைனலில் யாரும் பாடமாட்டார்கள்.அப்பாடல் முதலில் கிளாஸிகள் பாடலோ..படப்பாடலோ இல்லை.

(போட்டிமுடிவு எப்படிருந்தாலும்..ஏதேனும் குறைகள் சொல்லக்கூடும்..சந்தேகங்களும் வரும் )

(முன்னதாக..கௌதம் ஒருமுறை 'பிச்சைப்பாத்திரம்:" பாடல் பாடிய போது..'இது இச் சுற்றுக்கு ஏற்றபாடல் இல்லை' என மறுக்கப்பட்டது..நினைவிருக்கலாம்)

எது எப்படியோ...இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியமைக்கு விஜய்டீவிக்கு பாராட்டுகள்.

லட்சக்கணக்கில் எஸ் எம் எஸ் அனுப்பி...எதிர்பாராத வருவாயை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிய மக்களுக்கும் பாராட்டு (?!)

பிரகதி இரண்டாம் இடத்தில் இருந்தாலும்..கண்டிப்பாக முதலிடத்திற்கு தகுதியானவர்.

சுகன்யா தான் சற்றே ஏமாற்றிவிட்டார்.

(டிஸ்கி - தலைப்பு வெற்றீ என்று போடப்பட்டுள்ளதே எனக் கேட்கலாம்..வெற்றி...இழுக்கப்பட்டால்..? அதற்கு அர்த்தம் என்ன..உங்களுக்கேப் புரியும் )

நிருபர்களை நாய் எனத் திட்டிய விஜய்காந்த்...





செ‌ன்னை ‌விமான‌ ‌நிலைய‌த்‌தி‌‌ற்கு வ‌ந்த தே.மு.‌‌தி.க. தலைவ‌ர்க‌ள் ‌விஜயகா‌ந்‌த், நிருப‌ர்க‌ளை கெ‌ட்டவா‌ர்‌த்தைகளா‌ல் ‌‌தி‌ட்டிய ச‌ம்பவ‌ம் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க எம்.எல்.ஏ. ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி தே.மு.தி.க எம்.எல்.ஏ. தமி‌ழ்அழக‌ன் ஆ‌கியோ‌ர் நே‌ற்று முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவை ச‌ந்‌தி‌த்து, தொகு‌தி ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ராதாபுர‌ம் தே.மு.‌தி.க. எ‌ம்.எல்.ஏ. மை‌க்கே‌ல் ராய‌ப்ப‌ன், பேராவூர‌ணி தே.மு.‌தி.க. எ‌ம்.எல்.ஏ. நடிக‌ர் அரு‌ண்பா‌ண்டிய‌ன் ஆ‌கியோ‌ர் கோ‌ட்ட‌ை‌யி‌ல் இ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதாவை ச‌ந்‌தி‌த்து பே‌சின‌ர்.

ஜெயல‌லிதாவுட‌ன் ச‌ந்‌தி‌ப்பை தொட‌ர்‌ந்து தே.மு.‌தி.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் 4 பே‌ரு‌ம் அ.‌தி.மு.க.‌வி‌ல் இணைய போ‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று அர‌‌சிய‌ல் வ‌ட்டார‌த்‌தி‌ல் பரபர‌ப்பாக பேச‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மதுரை செ‌ல்வ‌த‌ற்காக செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌‌த்‌தி‌ற்கு மனை‌வி ‌பிரேம லதாவுட‌ன் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் இ‌ன்று காலை வ‌ந்தா‌ர்.

அ‌ப்போது, ‌தினகர‌ன் ‌‌‌‌நிருப‌ர் ‌பாலு, விஜயகா‌ந்‌திட‌ம் ரெ‌க்கா‌ர்டு மை‌க்கை ‌நீ‌ட்டினா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திர‌ம் அட‌ை‌ந்த ‌‌விஜயகா‌ந்‌த் அ‌ந்த ‌நிருபரை சரமா‌ரியாக கெ‌ட்ட வா‌ர்‌த்தைகளா‌ல் ‌தி‌ட்டினா‌ர்.

‌பி‌ன்ன‌ர், கூடி‌யிரு‌ந்த ‌நிருப‌ர்களை பா‌ர்‌த்து, சொ‌ல்லு‌ங்க சா‌ர் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியது‌ம், முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதாவை தே.மு.‌தி.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் ச‌ந்‌தி‌த்து பே‌சியது கு‌றி‌த்து ‌நிருப‌ர்க‌ள் கே‌‌ள்‌வி கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌‌ல் அ‌ளி‌க்காத ‌விஜயகா‌ந்‌த், ‌மி‌ன்சார‌ம், டெ‌ங்கு ப‌த்‌தி பேசுவோ‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர். அ‌ப்போது, சூ‌ரிய ‌மி‌ன்ச‌க்‌தி மூல‌ம் 3000 ஆ‌யிர‌ம் ‌மெகாவா‌ட் ‌மி‌‌ன்சார‌ம் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளாரே எ‌ன்று ஒரு ‌நிருப‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

இதனா‌ல் மேலு‌ம் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த ‌விஜயகா‌ந்‌த், அ‌ந்த அ‌ம்மா‌விட‌ம் போ‌ய் கேளுடா எ‌ன்று கோபமாக பே‌சி‌வி‌ட்டு மன‌ை‌வியுட‌ன் நட‌ந்து செ‌ன்றா‌ர்.

‌நிருப‌ர்க‌ள் ‌பி‌ன் தொட‌ர்‌ந்து செ‌ன்று கே‌ள்‌வி கே‌ட்க முய‌ன்றா‌ல் ஆ‌த்‌திர‌‌த்‌தி‌ன் உ‌ச்‌சி‌க்கே செ‌ன்ற ‌விஜயகா‌ந்‌த், நா‌ய்... நா‌ய்... எ‌ன்று ‌நிருப‌ர்களை ‌‌தி‌ட்டி‌வி‌ட்டு ‌விமான ‌நிலைய‌த்‌திற‌்கு‌ள் ‌விஜயகா‌ந்‌த் செ‌ன்று ‌வி‌ட்டா‌ர்.

(வெப் துனியா)

டிஸ்கி- தி மு க விற்கு பிரதான எதிர்க்கட்சி ஆகும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது

Friday, October 26, 2012

தமிழனுக்கு தண்ணீர் தராதவர் தமிழக கவர்னர் ஆகலாம்...


மத்திய அமைச்சரவையில் இருந்து திராணமுல் காங்கிரஸ் விலகியுள்ள நிலையில் ஏற்கனவே தி.மு.க வினரின் பதவி விலகளாலும் அமைச்சரவையின் சில இலாகாக்கள் காலியாக உள்ளன. இதனால் சில அமைச்சர்கள் கூடுதல் பொறுப்புகளிலும் இருந்துவருகின்றனர்.


இதனை அடுத்து இரண்டு நாட்களில் அமைச்சரவை மாற்றம் பெற உள்ளது, அதில் ராகுல் காந்தி போன்ற புது முகங்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்படும் என்ற கருத்தும் நிகழ்கிறது.


அமைச்சரவை மாற்றங்கள் நடக்கவிருக்கும் வேலையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பிரதமர் மன் மோகன் சிங் உடனான லாவோஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.

இதனால் அமைச்சரவையில் இன்னும் சில முக்கிய பதவிகளில் மாற்றம் பெறுவது உறுதியாகியுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி, வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரது பெயர்கள் புதிய பட்டியலில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஸ்கி- கர்நாடகாவின் முதல்வராயிருந்த போதும் சரி,மத்திய அமைச்சரவையில் இருந்த போதும் சரி...தமிழனின் தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே..

Thursday, October 25, 2012

மகாத்மா காந்தியை 'தேசத் தந்தை' என்று அழைக்க சட்டத்தில் இடமில்லை



தேசதந்தை என்று மகாத்மா காந்தியை அழைக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.

லக்னோவை சேர்ந்த ஐஷ்வர்யா பராஷர் என்ற மாணவி மகாத்மா காந்தி பற்றி விவரங்கள் தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கு மகாத்மா காந்தியை தேச தந்தை என்று அழைக்கப்பட வேண்டிய காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது..

இதனை அறிய அவர் தேசத்தந்தை என்று காந்தியை குறிப்பிடும் காரணங்கள் தேட தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன் படி இந்திய அரசியல் சட்டத்தில் கல்வித்துறை மற்றும் ராணுவம் தவிர மற்ற துறையினருக்கு எந்த வித சிறப்புப் பெயரும் வழங்கும் உரிமை இல்லை என்று தெரியவந்தது.

உடனடியாக ஐஸ்வர்யா பராஷர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எழுதி மகாத்மா காந்தி தேசத் தந்தை என்று அறிவிக்கை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தனது கோரிக்கை என்னவானது என்று மீண்டும் அந்தச் சிறுமி தகவலறியும் உரிமைச் சட்டத்தை நாடினார். இவரது இந்த மனு உள்துறை அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்க அனுப்பப்பட்டது.

அப்போதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் படி மகாத்மா காந்திய தேசத் தந்தை என்று அழைக்கும் சிறப்புப் பட்டத்தை அரசு தர முடியாது என்பது தெரியவந்துள்ளது.

(வெப் துனியா)



Wednesday, October 24, 2012

மானுடம் பொய்க்குதம்மா! - தலையங்கம் (கண்டிப்பாய் படிக்கவும்)

(தினமணி பத்திரிகைச் செய்திகள் குறித்து எனக்கு கருத்து வேறுபாடுண்டு.ஆனால் அவர்கள் எழுதும் தலையங்கம் பௌல சமயங்களில்

அருமையாய் இருக்கும்..இது அவற்றில் ஒன்று)


எல்லா வீடுகளிலும் பால் வாங்கப்பட்டிருக்கும்.  பண்டிகை நாளில் பால் இல்லாமல் இருக்காது. அந்தப் பால் கலப்படம் இல்லாததுதானா?

இந்த ஆய்வு முடிவுகள் இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட மாதிரிச் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது என்பதும், இந்த மாதிரிச் சான்றுகளின் எண்ணிக்கை குறைவு என்பதும் தெரிந்ததுதான். இத்தகைய ஆய்வு முடிவுகளைப் 10 விழுக்காடு கூடுதலாக அல்லது குறைவாக மதிப்பிடலாமே தவிர, இந்த ஆய்வு முடிவுகளை முழுவதுமாகத் தவறு என்று குறை சொல்லிவிட முடியாது. இந்தியாவில் விற்கப்படும் பாலில் கலப்படம் மிக அதிக அளவில் இருக்கிறது என்பதுதான் உண்மை.
இன்றைய சூழ்நிலையில், பால் என்பது இந்தியாவில் எல்லா வீடுகளிலும் பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது. பால் இல்லாமல் குழந்தை உணவு இல்லை. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் பால் மிகவும் அவசியமான உணவாக ஆகிவிட்டது. தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்களிலும் இடம்பெற்றுவிட்ட தேநீர்க் கடைகளில் பால் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அனைவரும் ஏதோ ஒருவகையில் பால் மற்றும் பால் பொருள்களை உண்கிறோம்.
இவ்வாறாக நம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பாலில் 68 விழுக்காடு கலப்படம் என்றால், நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஆண்டுதோறும் பாலின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் 2009-10-ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 11.60 கோடி டன். 2010-11-ஆம் ஆண்டில் இது 12.20 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நிகழாண்டிலும் 60 லட்சம் டன் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாலுக்கான சந்தைத் தேவை அதிகரிக்கிறது. அதற்கேற்ப கலப்படமும், எடை, அளவுக் குறைபாடுகளும் அதிகரிக்கின்றன.
பால் உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களால் அனைவரது தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் இந்த இடைவெளியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இவர்களில் பிரபலமான முத்திரை நிறுவனங்கள் சில இருப்பினும், பல நூறு நிறுவனங்கள் யாரும் கேள்விப்படாத பெயரில் செயல்படுவன. இவற்றின் மீது அரசின் கண்காணிப்பு மிகவும் குறைவு.
ஊரகப் பகுதிகளில் நடத்திய ஆய்வுகளில் கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்ட பாலில் 83 விழுக்காடு கேன்களில் விநியோகம் செய்யப்பட்டவை. நகர்ப்புறங்களில் 66 விழுக்காடு கலப்படப் பால் கேன்களில் விநியோகம் செய்யப்பட்டவை.
இந்தக் கலப்படத்தில் தண்ணீர் கலப்படம்தான் அதிகம். தண்ணீர் கலப்பதால் பாலின் சத்து குறைந்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்க, அந்தத் தண்ணீர் தூய்மையான தண்ணீராக இல்லை என்பதுதான் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. சில இடங்களில் பால் அடர்த்தியாக இருக்க சோப்புநீர் கலக்கப்பட்டிருப்பதும், சிலவற்றில் பால்பவுடர் கலக்கப்பட்டிருப்பதும், சிலவற்றில் பாலின் தன்மையை சமன்படுத்த வேதிப்பொருள்களைச் சேர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது என்று இந்த உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது.
தமிழ்நாட்டில் அரசு நிறுவனமாகிய ஆவின் கூட்டுறவு பால் உற்பத்திக் கூடத்தைத் தவிர மற்ற அனைத்தும் தனியார் நிறுவனங்கள்தான். இவற்றில் எத்தனை நிறுவனங்களை நம்பலாம், அல்லது கேன் மூலம் பால் விநியோகிப்போரில் எத்தனைப் பேரை நம்புவது?
தற்போது மின்தட்டுப்பாடு காரணமாக, குளிரூட்டு வசதி இல்லாததால் ஆவின் பால் உள்பட அனைத்துப் பாலும் விரைந்து கெட்டுப்போய், திரிந்து விடுகின்றன என்று புகார்கள் எழுகின்றன. பால் விரைந்து கெட்டுப்போவதற்கு மின்தடையால்  குளிரூட்டு வசதி இல்லை என்பது ஆணித்தரமாகச் சொல்ல முடிவதைப்போல, இந்தப் பால் தரமானதாக இல்லை என்பதால்தான் விரைந்து கெட்டுப்போனது என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. ஏனெனில், நாம் நம்புகிறோம். நமக்கு வழங்கப்படும் பால் உண்மையிலேயே தரமானது என்று!
இந்தியாவில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் 10 மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 8வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பால் உற்பத்தி செய்கிறது. தமிழகம் வெறும் 60 லட்சம் டன் மட்டுமே! இதிலும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் மூலம் கிடைக்கும் அளவு மிகவும் குறைவு.
ஆவின் பால் விநியோக சேவையில் குறைபாடு இருந்தாலும், அவர்கள் கலப்படம் செய்தார்கள் என்பதாக முறைகேடு இல்லை. ஆவினைப் பொருத்தவரை, நிர்வாக ஊழல்கள் உண்டே தவிரக் கலப்படம் இல்லை. ஆனால் ஆவின் நிறுவனம் ஏன் வளரவில்லை, அதை வளர விடவில்லை என்கிற கேள்விக்கு சரியான பதிலில்லை.
இன்று தமிழகத்தில் தனியார் பால் விநியோகம்தான் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு பால் தரத்தைச் சோதிப்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பால்பண்ணைகளிலும் வாரம் ஒருமுறையாகிலும் திடீர் ஆய்வுகள் நடத்தி, பால் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் விற்பனை முகவர்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
மனிதனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதால்தான் இயற்கை, குழந்தைகளுக்குத் தாயுருவில் பாதுகாப்பு அளிக்கிறது. போஸ்டர்களையும், குப்பைக் கூளங்களையும் தின்கிற அவலம் ஏற்பட்டாலும் பசு தனது கன்றுக்குக் கலப்படம் இல்லாத பாலைத்தான் வழங்குகிறது. ஆனால் மனிதன்...?

Tuesday, October 23, 2012

யாரிடத்து போயுரைப்பேன் -கலைஞர்





உள்கட்சி சண்டையால் நான் நிம்மதி இழந்திருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு மீது அக்கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும், மத்திய இணை அமைச்சருமான பழனிமாணிக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு "நீர் இடித்து நீர் விலகுவதா' என்ற தலைப்பில் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் 89 வயதில் நானும், 90 வயதில் பொதுச்செயலாளர் அன்பழகனும் கட்சிக்காக தினமும் உழைக்கிறோம்.

திமுகவினர் குழு சேர்த்துக் கொண்டு மோதிக் கொள்கிறார்கள் என்ற செய்திதான் என்னை பெரிதும் வருந்தச் செய்கிறது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி வந்து விட்டது, கட்சி போச்சே என்றார் அண்ணா. அதனை இப்போது அனுபவரீதியாக உணர்கிறேன்.

கட்சியினருடன் பேசிவிட்டு இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றால் உள்கட்சியை அரித்து வரும் இத்தகைய குழுக்கள் பற்றிய வேதனைதான் என்னை சூழ்ந்து கொள்கிறது. தூங்க விடாமல் செய்கிறது.

மத்திய இணை அமைச்சர் பழனிமானிக்கம் சனிக்கிழமை (அக்டோபர் 20) அளித்த பேட்டி குறித்து அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், முரசொலி செல்வமும் கூறியவுடன், இன்றிரவு என் தூக்கம் போச்சு என்றுதான் கூறினேன். அதுபோலவே இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.

அண்ணா சொன்ன குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது மறந்துவிட்டதா? தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய நானும், அன்பழகனும் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். அப்போது பேசிய துரைமுருகன், தஞ்சை மாவட்டம் தலைவரின் (கருணாநிதி) நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டம். அங்கு அவர் கூறுவதுதான் வேதவாக்கு. அங்கு குழு உருவாகலாமா என்று கண்ணீர் மல்க கேட்டாரே? அந்த மாவட்டத்திலா இந்த தலைகுனிவு?

இரண்டு நாள்களுக்கு முன்பு என்னைச் சந்தித்த பழனிமாணிக்கம், அவரது தொகுதியில் நடப்பதைப் பற்றி சொன்னார். பொறுத்திருங்கள். தலைமைக்கு புகாராக எழுதிக் கொடுங்கள் என்றேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் அனைவருடனும் அன்புடன் பழகுகிறேன் என்பதை பலவீனமாக எடுத்துக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்வதா? நான் அனைத்தையும் மன்னித்து விடுகிறேன். மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்யத் துணிவதா?

எதிர்க்கட்சிகளிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவதா அல்லது நமக்குள் நிலவும் குழு பேதத்தை போக்குவதா? இலையில் நிறைய பண்டங்களைப் பரிமாறிவிட்டு ஒரு ஒரத்தில் சாணத்தை வைப்பதற்கு பெயர் விருந்தோம்பலா? எதற்காக நான் இருக்கிறேன்? எதற்காக தலைமை இருக்கிறது? மாவட்டத்துக்கு மாவட்டம் இது போன்றதொரு நிலைமை உருவானால் அதற்கு எங்கே எல்லை?

மனசாட்சி உறுத்தியதால் பேட்டி கொடுத்த இரவே பழனிமாணிக்கம் என்னைச் சந்தித்து விளக்கம் அளித்தார். டி.ஆர். பாலுவும், பழனிமாணிக்கமும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலுவை மேற்கு வங்க மாநில எம்.பி.க்கள் தாக்க வந்தபோது 5-வது வரிசையில் இருந்த பழனிமாணிக்கம் முதல் வரிசைக்கு ஒடி வந்து தடுத்தார். அந்த உணர்வு இன்று எங்கே போய்விட்டது?

பழனிமாணிக்கத்தை தாக்க யார் முற்பட்டாலும், ஓடிவந்து பாதுகாக்க கூடியவர் பாலு.

ஊரிடத்து பகை என்றால் உறவிடத்து போயுரைப்பேன். உறவிடத்தே பகை என்றால் என்ற நிலையில் யாரிடத்து போயுரைப்பேன் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

டிஸ்கி-  கலைஞரும்...இப்படி சொல்லியிருக்க வேண்டாமே...மூன்றாம் நபருக்குத் தெரியாமல்..உட்கட்சி பேச்சு வார்த்தையில் இப்பிரச்னையை தீர்த்திருக்கலாம்.
        என் காங்கிரஸ் நண்பன் ஒருவன் கோஷ்டி பற்றி...நீங்கள் பேசாதீர்கள் என்கிறான் என்னிடம்.

Monday, October 22, 2012

புரசைவாக்கம் புன்னகை பவன் - உணவகம்..




புரசைவாக்கம்..தானா தெருவு தாண்டி சென்றால் ஒரு சின்ன குறுக்குத் தெரு வரும். தெருமுனையில் சிறுநீர் கழிக்கக்கூடாது என சுவரில் கிறுக்கியிருப்பார்கள்.ஆனால் அங்குதான் சிறுநீர் கழித்து நாற்றம் அடிக்க வைத்திருப்பர் குடிமகன்கள்.

அதைத் தாண்டி சற்றுச் சென்றால்..புன்னகை பவனைப் பார்க்கலாம்.போர்டு ஏதும் இருக்காது.அங்கு விசாரித்தால் சின்ன குழந்தைகளும் புன்னகையுடன் இடத்தைக் காட்டும்.

நீங்கள் உள்ளே நுழையும் போது வாயிலில் ஒருவர் கை கூப்பி புன்னகையுடன் 'வாங்க..வாங்க.'.என்று புன்னகையுடன் வரவேற்பார்.கல்யாண மண்டபத்தில்..பெண்ணைப் பெற்றோர்., பிள்ளை வீட்டாரை வரவேற்கும் தோரணைப் போலவே இருக்கும்.

நீங்கல் புன்னகையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று..ஒரு மேசையில் அமர்ந்து..இரண்டு பரோட்டா, பீஸ்மசாலா ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தால் கால்மணி நேரத்தில் பரோட்டா உங்கள் முன் வந்து அமரும்....சும்மா பள பள என..

கண்டிப்பாக நெய் போட்டிருக்க வாய்ப்பில்லை.ஆனால்..நெய் போன்ற வஸ்து உபயோகப்பட்டிருக்கக் கூடும்.அதை பிட்டு..பீஸ் மசாலாவை சேர்த்துச் சாப்பிட்டால்....அடடா...அடடா..

"தெய்வம் இருப்பது எங்கே..அது இங்கே..வேறெங்கே..' என பாட ஆரம்பித்துவிடுவீர்கள்.

பரோட்டா மாஸ்டரைப் பார்த்தால்...வேர்த்துக் கொட்ட இருப்பார்..பரோட்டாவின் பளபள ப்புக்கு காரணம் தெரிந்துவிடும்.

விலையும் அதிகம் இல்லை...

ஆனால்...அங்கு விஜயம் செய்து..உங்கள் உடல் நலம் கெட்டால்...நான் பொறுப்பல்ல.


Sunday, October 21, 2012

பீட்சா..(மாற்றான விமரிசனம்)




பீட்சா படம் பற்றி விமரிசனம் செய்ய ஆசை.

நாம் ஒரு நல்ல படத்தைப் பார்த்தால்...அந்த சந்தோசத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்.

படம் பற்றி..விவாதிப்போம்..கிளைமாக்சை அலசுவோம்.

படம் நன்றாய் இருந்தால்..விமரிசனம் நன்றாக எழுதுவோம்.

ஆனால் பீட்சா பற்றியும் விமரிசிக்க ஆசை.

படத்தின் முடிவை வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்...

ஆரம்பம் பற்றி மட்டும் கூறிவிட்டு..முடிவைக் கூறாவிட்டால் முழு விமரிசனமும் ஆகாது என்பதால் படம் பற்றி விமரிசனம் செய்வதைத் தவிர்த்திருக்கிறேன்.

இதற்கு மேலும் எழுதினால்...நான் முடிவைச் சொல்லிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.

வெள்ளித்திரையில் மட்டுமே பார்த்து..முடிவை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

யாரேனும் உண்டோ..?






வானவூர்தி ஒலிக் கேட்டு

விண்ணைப் பாராதார்

மழை கொட்டுகையில்

மனதில் மத்தாப்பாய் ரசிக்காதார்

விபத்து நடந்ததும்

விரைந்து சென்று

வேடிக்கைப் பார்க்காதார்

கடந்து சென்ற அழகைக் காண

கழுத்து வலிக்க திரும்பாதார்

பேருந்து நிறுத்தத்தில்

சரியாக நிறுத்தும் ஓட்டுநர்

ஆளும் கட்சியின் நற்செயலையும்

குறைகூறா எதிக்கட்சியினர்.

Friday, October 19, 2012

மின்வெட்டு...முதல்வர் அதிரடி பேட்டி..




மின்வெட்டு குறித்து..இன்று அமைச்சர்களின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர், 'மாநிலத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை இதுவரை எந்த அமைச்சரும், அதிகாரிகளும் தன் கவனத்திற்குக் கொண்டு வராதது ஏன்? என வினவினார்.

அவர் மேலும் கூறுகையில்..தான் பத்திரிகைகள் மூலமே இதை இப்போதுதான் அறிந்ததாகக் கூறினார்.அதற்காகவே இந்த அமைச்சரவை கூட்டம் என்றார்.

மின்துறை அமைச்சரை நிலைமை சீராகும் வரை இலாகா இல்லாத அமைச்சராக இருக்குமாறு பணித்தார்.


Thursday, October 18, 2012

தினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)


இல்லாமை, இயங்காமை அல்ல!



மின்வெட்டைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விதவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் கடையடைப்பு நடத்துகிறார்கள். சில ஊர்களில் ஆர்ப்பாட்டம், தெருமுனைக்கூட்டம். சிறுதொழிலதிபர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவை போன்ற நகரங்களில் பேரணி நடத்தப்படுகின்றது.
மின்சார அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிடுகிறார்கள். சில இடங்களில் இரவு நேரத்தில் முற்றுகையிட்ட மக்கள், ஆத்திரத்தில் மின் அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.
கரண்ட் காணாமல் போய்விட்டது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று சிலர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். அந்தப் புகாருக்கு காவல்நிலையமும் ரசீது கொடுக்கிறது. "காணவில்லை- பெயர் மின்சாரம், அடையாளம் - தொட்டால் ஷாக் அடிக்கும்' என்று சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இதெல்லாம் சரி. மின்தடைக்குத் தமிழக அரசு மட்டுமே காரணமா, தமிழக அரசும் காரணமா, அல்லது எந்த அரசாக இருந்தாலும் இந்த நிலையைச் சந்திக்க வேண்டியாகியிருக்குமா? மின்சாரத்தை வைத்துக்கொண்டே தமிழக அரசு வழங்க மறுக்கிறதா? சுமார் 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை இருக்கும்போது ஒரு மாநிலம் என்ன செய்ய இயலும்?
இந்தக் கேள்விகளைப் போராட்டம் நடத்துபவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே இந்தப் பிரச்னையை அணுகுகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிர்வாகம் செய்யத் தெரிந்திருந்தால், இந்நேரம் தட்டுப்பாட்டை போக்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் வாதம் செய்கின்றன. ஆனால், மத்திய அரசு ஏன் தர மறுக்கிறது என்பதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை. கூடுதல் விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு எத்தனைக்காலத்துக்கு சமாளிக்க முடியும் என்பது பற்றியும் அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை.
மின்வாரியத்திடம் மின்சாரம் போதுமான அளவு இல்லை என்பதே உண்மை. மத்திய தொகுப்பிலிருந்து அதிக மின்சாரத்தை தமிழகம் கெஞ்சிக் கேட்டாலும் தரப்படவில்லை. மேட்டூர் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகியன அடிக்கடி பழுதாகின்றன. பருவமழைக் காலத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்துபோனது. உற்பத்தியாகும் குறைந்த மின்சாரத்தை பகிர்மானம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழக மின்வாரியம் திணறிக்கொண்டிருக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கு மட்டுமே இழப்பு என்றில்லை. மின்வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு. மாதம் முழுவதும் நாள்தோறும் 12 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் செய்ய முடியும் என்றால், மின்வாரியத்துக்குக் கிடைக்க வேண்டிய மின்கட்டண வசூல் 50% குறையும். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டுமென்றே மின்தட்டுப்பாட்டை தமிழக அரசு உருவாக்குகிறது என்ற பிரசாரங்கள் ஏற்புடையவை அல்ல. நீதிமன்ற விவகாரமும், ரஷ்யா தற்போது,"இழப்பீட்டுக்கும் பொறுப்பேற்க வேண்டுமானால், கூடங்குளத்தின் மின்உலைச் செலவுகள் இன்னும் கூடுதலாகும்' என்று சொல்வதால், கூடங்குளம் மின்உற்பத்தி இன்னும் சில ஆண்டுகளுக்கு நிச்சயமில்லை என்பதுதான் உண்மை நிலைமை.
கூடங்குளத்தால் தமிழகத்துக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்ற செய்திக்கு முகநூலில் ஒரு அன்பர் ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார். "எங்கள் வீட்டுல விளக்கெரிய அடுத்தவன் வீட்ல பொணம் விழணும்னு நாங்களா கேட்டோம்?' என்று. நல்லவேளை, அவருக்கு உண்மை தெரிந்திருக்கவில்லை. தமிழகத்தின் பாதித் தேவையைப் பூர்த்தி செய்யும் அனல்மின்சாரம், பல ஆயிரம் ஏக்கர் காடுகளை அழித்துக் கிடைத்த நிலக்கரியை எரிப்பதால் கிடைப்பதும், புவிவெப்ப மாறுதலை அது ஏற்படுத்துகிறது என்பதும்! தெரிந்தால், அனல் மின் நிலையங்களையும் மூட வேண்டும் என்பார்!.
இத்தகைய சூழ்நிலையில், மின்தட்டுப்பாடு குறித்து நிலைமையை ஆராய மின்துறை அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து, திங்கள்கிழமைதோறும் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள முதல்வரின் நடவடிக்கை இந்த நேரத்திற்கு அவசியமானது. அதே நேரத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், அரசியல் கட்சியினரை அழைத்து நிலைமையை விளக்குவது பயன் உள்ளதாக அமையும்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்பதால்தான் அரசு ஜூன் மாதத்தில் திறக்கவில்லை என்பது விவசாயிகளுக்குப் புரிவதைப் போல, இன்றைய மின்உற்பத்தி இவ்வளவுதான்; இதைக்கொண்டு இவ்வளவு நேரம்தான் மின்சாரம் வழங்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அரசு மக்களிடம் வெளிப்படையாக விளக்கம் தர வேண்டும். தொழில்துறைக்கு மின்சாரத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்குப் புரியவைத்தால் போராட்டங்கள் தானே குறையத் தொடங்கும்.
தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு நிலவும் வேளையில், புதிய தொழிற்கூடங்களுக்கு அனுமதி அளிப்பதை சிறிது காலம் தள்ளிப்போடலாம். அல்லது மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக்கொள்ள முன்வரும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம். அரசும் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
நாள்தோறும் மத்திய அரசு தரும் மின்சாரம் இவ்வளவுதான் என்று சொல்வதால், அரசியல் ரீதியாகவும் மாநில அரசுக்கு சாதகம்தான். உள்ள நிலைமையை வெளிப்படையாகப் பேசுங்கள். மக்கள் புரிந்துகொள்வார்கள். பேசாவிட்டால், இதை, அரசின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் சித்திரிக்கும். இல்லாமை வேறு, இயலாமை வேறு, இயங்காமை வேறு! அரசியல் ரீதியாக அணுக வேண்டிய பிரச்னைகளை அதிகாரிகள் மூலம் தீர்க்க முடியாது. மக்களாட்சியில் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடக் கூடாது. அரசின் இன்றைய நிலைமை இல்லாமைதானே தவிர, இயலாமையோ, இயங்காமையோ அல்ல என்பதைப் புரியவைக்காததால்தான் இத்தகையப் போராட்டங்கள்!

Wednesday, October 17, 2012

வைரமுத்து வ‌ரிகள் - நீர்ப்பறவையில் நீக்கப்பட்டது..




சர்ச்சைக்கு‌ரிய பாடல் வ‌ரிகளை தனது நீர்ப்பறவை படத்திலிருந்து சீனு ராமசாமி நீக்கினார். கவிப்பேரரசு வைரமுத்துவின் சம்மதத்துடன் இது நடந்ததாக கூறப்படுகிறது.

நீர்ப்பறவையில் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கையை சீனு சொல்லியிருக்கிறார். கதையோட்டம் எப்படியோ அதே ஓட்டத்தில் பாட்டு அமைக்கிறவர் வைரமுத்து. அப்படி அமைத்ததால் தென்மேற்குப் பருவக்காற்று அவருக்கு கி‌‌ரீடமாக அமைந்தது.

நீர்ப்பறவையின் களம் கிறிஸ்தவ மீனவர்கள் என்பதால் விவிலிய வார்த்தைகளை பயன்படுத்தி மொத்தப் பாடல்களையும் எழுதியிருந்தார். இது பலராலும் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அதில் சில வ‌ரிகள் சர்ச்சையை கிளப்பியது. காதலன் காதலியைப் பார்த்து சத்தியமும் ‌ஜீவனும் நீயே என்று சொல்வது போல் அமைந்த வ‌ரி கிறிஸ்தாவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்களைப் பொறுத்தவரை சத்தியமும் ‌ஜீவனும் ஏசு மட்டுமே.

பாடல் வ‌ரிகளை நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடர்ந்து யார் மனதையும் புண்படுத்த நான் அப்படி எழுதவில்லை என வைரமுத்து விளக்கமளித்தார். ‌ரிலீஸ் நேரத்தில் படத்தைப் பற்றி பேசுவதற்குப் பதில் இந்த சர்ச்சை பாடுபொருளாகிவிடக் கூடாது என்று அந்த வ‌ரிகளையே நீக்கிவிட்டார் சீனு ராமசாமி.

(வெப்துனியா)

டிஸ்கி- இந்து மதம் தவிர எந்த மதத்தினர் பற்றி எழுதினாலும் நாங்கள் சும்மாயிருக்கமாட்டோம்.

Tuesday, October 16, 2012

ஊழலோ..ஊழல்...




பல தியாகங்களைச் செய்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் என நாம் படித்திருக்கிறோம்..

ஆனால்..நாடு போகும் போக்கைப் பார்த்தால்...ஊழல் கட்சி காங்கிரஸ்..நாட்டு வளங்களை அழித்தது காங்கிரஸ் என அடுத்த தலைமுறையினர் படிக்க வேண்டுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ..கடந்த நான்கு வருட காங்கிரஸ் ஆட்சியைப் பாருங்கள்..

காமென்வெல்த் ஊழல்..கோடிக்கணக்கில்..

2ஜி ஸ்பெக்டர்ம் ஊழல்..கோடிக்கணக்கில்

நிலக்கரி சுரங்க ஊழல் கோடிக்கணக்கில்

மத்திய அமைச்சர் அறக்கட்டளை ஊழல் 76 லட்சங்கள்..

இவையெல்லாம் வெறும் புகார்கள்தான் என்று கூறினால்..ஆம்..புகார்கள் தான்..ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்..

கண்டிப்பாக பத்திரிகைகள் சொன்ன அளவு கோடிகள் ஊழல் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் ஊழல் நடந்திருப்பது என்னவோ உண்மை..

இதுபற்றி சமீபத்தில் ஒரு மத்திய அமைச்சர் பேசுகையில்...மக்கள் ஃபோஃபர்ஸ் ஊழலை மறந்துவிடவில்லையா...அதுபோல நிலக்கரி ஊழலையும் மறந்து விடுவார்கள்...எனப் பேசுகிறார்.என்னே..ஒரு பொறுப்பற்ற பேச்சு..

நேற்று ஒரு மைய அமைச்சர் 76 லட்சம் ஒரு மத்திய அமைச்சர் செய்த  ஊழலா..ஜுஜுபி...இந்த  பணம் சர்வசாதாரணம் ஒரு மத்திய அமைச்சருக்கு..கோடிக்கனக்கில் என்றாலும் பரவாயில்லை என்ற பொருள் பட பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் மருமகன் மீது சொல்லப்பட்ட ஊழல் விசாரணை அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..

என்னவோ...மாதவா..நம்ம தலையெழுத்து இவர்களை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என புலம்புவதைத் தவிர சாதாரண குடிமகனால் என்ன செய்ய முடியும்?

வசூல் படங்கள் தோல்வியைத் தழுவுவதேன்?




கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் படங்கள் வசூலில் வேண்டுமானால் வெற்றி பெறுகின்றன.ஆனால் உண்மையில் அவை தோல்வி படங்களே.

பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளியாகும் போதே 1000 ப்ரிண்டுகளுக்கு மேல் போடப்பட்டு..1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் (குறிப்பாக மல்டிபிளக்ஸ்- டிக்கெட் 120 ரூபாய்) திரையிடப்படுவதால், வெளியான சில நாட்களில், படத்தைப் பற்றிய விமரிசனம் வருவதற்குள் ஓரளவு பணத்தை ஈட்டிவிடுகின்றன.

சமீபத்தில் வெளிவந்த, பில்லா-2, தாண்டவம், சகுனி ஆகியவை சில உதாரணங்கள்.சமீபத்தில் மாற்றானும் இப்பட்டியலில் சேர்ந்து விட்டது.

இதற்குக் காரணங்கள் என்ன?

கதையில் புதுமையாக ஏதும் கிடையாது..

அப்படியே இருக்கும் பட்சத்தில்...அதற்கான காரணம்..வழக்கமான பழிவாங்கல்.

படம் வெளிவருவதற்கு முன் ஏராளமான எதிர்பார்ப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிடுதல்.(படம் வெளிவந்த பின் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்)

அதைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை..எங்கள் குறியே கலெக்க்ஷன்தான் என்றால்...

மன்னித்துக் கொள்ளுங்கள்...

நீங்கள் செய்வதும் விபச்சாரம் தான்.

ஆகவே..தயாரிப்பாளர்களே, நடிகர்களே, இயக்குநர்களே..புதிதாக சிந்தியுங்கள்...

தமிழில் ஏராளமான நாவல்கள் உள்ளன.அவற்றை படியுங்கள்..

எங்கள் வழி இதுதான் என்றால்..மக்கள் EXITஐ காட்டிவிடுவார்கள்..

Monday, October 15, 2012

தயாரிப்பாளரும்...சினிமா கதாசிரியரும்...




தயாரிப்பாளர் - என்ன கதாசிரியரே! நம்ம் படத்திலே கிளைமாக்ஸ் என்ன எழுதியிருக்கீங்க..

கதாசிரியர் _ மூணு நாலு கிளைமாக்ஸ் எழுதியிருக்கேன்..உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வைச்சுக்கலாம்..

            முதல் கிளைமாக்ஸ்..வில்லன் கதாநாயகியை தூக்கிக் கிட்டு கார்ல வேகமா போயிடறான்...கதாநாயகனுக்கோ கார் இல்லை...அதனால தெருவில இருந்த ரோடு            ரோலர்ல அவனை சேஸ் பண்ணி பிடிச்சு..நாயகியைக் காப்பாத்தறான்..

தயாரிப்பாளர் - இது சாதாரணமாய் எல்லாப் படத்திலேயும் வரது தானே..புதுசா..மக்கள் நம்பறாப்போல சொல்லுய்யா..

கதாசிரியர் - .வில்லன் எலிகாப்டர்ல போறான்...கதாநாயகன்...ஏர்போர்ட்ல நுழைஞ்சு...அங்க புறப்படத் தயாராயிருந்த பிளேனை எடுத்துக் கொண்டு எலிகாப்டரை துரத்தறான்.வில்லனோட நடுவானில சண்டை..பிளேன்ல இருந்த பயணிகள் முகத்திலே அதிர்ச்சி...கடைசியிலே எலிகாப்டர்ல இருந்த வில்லனை..பிளேன்லே இருந்து தாவித் தாவிப்போய் அழிக்கிறான்.

தயாரிப்பாளர்- இது  நம்பறமாதிரி  இருக்கு..வேற ஏதாவது வைச்சிருக்கியா..

கதாசிரியர்- வில்லன் கதாநாயகனை மின்சார நாற்காலில கட்டிப்போட்டுட்டு...மின்சாரத்தை ஆன் பண்ணிட்டு ஓடிப்போயிடறான்...கதாநாயகன் செத்துட்டதா...மக்களை நம்ப வைக்கிறோம்.ஆனால் அவன் சாகலை.. அந்தக் காட்சியை மக்கள் நம்பவைக்க...தமிழக மின்சார வாரியத்தோட போர்டைக் காட்டறோம்.

தயாரிப்பாளர்- அடடா..அற்புதம்..பிரமாதம்..நம்பறமாதிரியான கிளைமாக்ஸ்...இதையே வச்சுப்போம்.

Saturday, October 13, 2012

அபி அப்பாவும்..காவல்துறையும்...




அபி அப்பா..சென்னையில் அவரது செல் ஃபோனை தவறவிட்டதாகவும்..அதை காவல்துறையினரிடம் புகார் அளித்ததாகவும்..காவல்துறை அக்கறையுடன் கண்டுபிடித்துக் கொடுத்ததாக ஒரு பதிவிட்டு..அவர்களை நண்பர்கள்தான் என வாழ்த்தியிருந்தார்.

காவல்துறை இன்று முதல்வர் ஜெ யிடம் உள்ளது.அத்துறை சிறப்பாக செயல்பட்டதாக அபியப்பா எழுதியிருந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.

அபி அப்பா..ஒரு திமுக என்பது காவல்துறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அப்படி தெரிந்திருந்தால்..அவர் செல்ஃபோனும் கிடைத்திருக்காது...அவரையும் ஏதேனும் அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் (அபி அப்பா ஒல்லியாக இருந்தாலும்) கைது செய்திருப்பார்கள்.

ஆகவே..அவர் அவசரப்பட்டு காவல்துறையை அணுகியது அவரது அசட்டுத் துணிச்சலையேக் காட்டுகிறது என்கிறார் ஒரு திமுக முக்கியப் புள்ளி.

தவிர்த்து..காவல்துறையை அபி அப்பா பாராட்டிவிட்டதால் கலைஞர் சற்றே வருத்தத்தில் உள்ளதாக நம்பத் தகுந்த வட்டார செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

தமிழகத்தை சீனா கைப்பற்றும்- சிங்கள தலைவர்




தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் அழைத்துப் பேசியிருப்பது சிங்கள அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்கள அமைப்பின் தலைவர் குணதாச சமசரசேகர கூறியுள்ளதாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசுகிறது. இலங்கையில் ஈழத்தை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.

இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது. சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும்.
இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் அமெரிக்கா, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.

தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார் அவர்.

(தகவல் - தட்ஸ்தமிழ்)




Friday, October 12, 2012

மாற்றான்..(ஒரு மாற்றான விமரிசனம்)




விமல்,அகில் என ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள் .இந்த இரட்டை குழந்தைகளுக்கு எல்லா உறுப்புகளும் வேறு வேறாக இருந்தாலும்..இதயம் மட்டும் ஒன்றுதான்.இதயம் விமலின் உடலில் உள்ளதாம்.விமல் வல்லவன், நல்லவன்.அகில் நேர்மாறானவன்.

இந்நிலையில் இவர்கள் தந்தையின் அலுவலகத்தில்..குழந்தைகள் பானத்தில் கலக்கப்படும் ..கெடுதலான ஊக்க மருந்து பற்றி விமல் கண்டுபிடிக்க..அவன் கொல்லப்படுகிறான்.விமலின் உடலில் இருந்த இதயம் அகிலுக்கு பொருத்தப்படுகிறது.

விமலின் இதயம் கிடைத்ததுமே அகில் குணம் மாறி நல்லவனாக ஆகிறான்.(மனிதர்களில் நல்லவன்..கெட்டவன் ஆகியவற்றை தீர்மானிப்பது இதயமோ..?!)

பின் அகில் தன் காதலியுடன் வெளிநாடு சென்று...ஊக்க மருந்து விஷயங்களை கண்டுபிடித்து...நடந்த தவறுகளை திருத்துகிறான்..

இப்படியாக போகிறது கதை.ரொம்பவும் மெனக்கட வேண்டாத கதை.

முழுக்க ,முழுக்க படத்தை சூர்யா தன் தோள்களில் சுமக்கிறார்.அதில் வெற்றியும் பெறுகிறார்.

கிராஃபிக்ஸ் வேலைகள் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காதலியாக வரும் காஜல் 'பளீச்" என அனைவரையும் வசீகரிக்கிறார்.

பாடல்கள் சுமார் ரகம் தான்.

மொத்ததில்..சாதாரணமாக படம் பார்க்கும் அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.சூர்யா ரசிகர்கள் பலமுறை பார்ப்பர்.வசூலில் படம் வெற்றி பெறும்.

(டிஸ்கி- கண்ணதாசன் நடத்தி வந்த பத்திரிகையில் ராசிபலன் எழுதுபவர் அந்த வாரம் எழுதவில்லையாம்.உடனே கண்ணதாசன் முந்தைய வார இதழ்கள் சிலவற்றை எடுத்து..ராசி பலன்களை அதில் இருந்தபடி ராசிகளுக்கு மாற்றி மாற்றி எழுதி வெளியிட்டாராம்.
அப்படியே..நாமும்..படம் பார்க்காமல்..சில விமரிசனங்களைப் படித்து விமரிசனம் எழுதினால் என்ன? எனத் தோன்றியதன் விளைவே இவ்விமரிசனம்)

Thursday, October 11, 2012

கொடிது..கொடிது..ஃபேஸ்புக் கொடிது...




இளமையில் வறுமை கொடிது... என்பார்கள்..

ஆனால்..இப்போது எல்லாவற்றையும் விட ஃபேஸ்புக் பழக்கம் கொடிது என ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறதாம்.
 
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்ததாம்.
.
ஆன்லைன் மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனராம்.. அதில் செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம்.

செக்ஸ், சிகரெட்டை விட பேஸ்புக்கும், டிவிட்டரும்தான் அனைவரையும் அதிகம் தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம்.

இன்னும் படுக்கை அறையில்  கூட பேஸ்புக் அல்லது டிவிட்டர் பற்றி நினைக்கிறார்களாம்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்துத்
 தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.

Wednesday, October 10, 2012

புற்றுநோய்... பாலசந்தர் மற்றும் விகடன்..




தமிழ் சினிமாக்களில் ஒரு கட்டத்தில்..கதாநாயகன் மீதோ, நாயகி மீதோ இரக்கம் வரவேண்டுமெனில் அவர்களுக்கு கேன்சர் என்று சொல்லிவிட்டு..இறுதியில் அவர்களை சாகடித்துவிடுவதுண்டு.
அதிகம் இப்படி ஆரம்ப காலங்களில் பாலசந்தர் படங்கள் இருந்ததுண்டு.
அவர் கதை,வசனத்தில் வந்த நீலவானம் பட நாயகிக்கு கேன்சர்..அப்படத்திற்கு விளம்பரமும்..."ஆறில் சாகலாம்..அறியாத வயசு..அறுபதில் சாகலாம் அனுபவித்த வயசு..இருபதில் சாவது..?' என்று இருந்தது.
அடுத்து அவரது  நீர்க்குமிழி நாடகத்திலும்/படத்திலும் நாகேஷ் பாத்திரம்..கேன்சரில் மடியும்.
அதே போன்று சிவசங்கரியின் நண்டு படமும்..
அக்காலகட்டத்தில்..பாலசந்தர் படம் ஒன்றை விமரிசித்த குமுதம்..இனி இவர் 'பு.பாலசந்தர்' என்றது.
அதே போன்று..விகடனும் ..இனி கேன்சர் பற்றி  கதைகள் இனி விகடனில் வராது என அறிவித்திருந்தது.(இப்போது விகடன் டெலிவிஸ்டாசின் ஒரு மெகாசீரியலில் ஒரு பாத்திரம் புற்றுநோயால் தவிக்கிறது..தனி விஷயம்)
இப்படி புற்றுநோய் என்றாலே..மரணம்தான் என்பது எழுதப்படாத விதியாக உருவாக்கப்பட்டது.
ஏன்..சிறுநீரகம்..சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் இல்லையா?
ரத்த அழுத்தத்தால்..மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதில்லையா?
எந்த வியாதி மனிதர்களுக்கு வந்தாலும்..ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் குணமாகிவிடும்..புற்றுநோயும் இதற்கு விலக்கல்ல.
ஆகவே..இன்று பல விஷயங்கள் இணைய தளம் மூலமும், அனுபவத்திலும், படிப்பிலும் அறிந்துள்ள நாம்..நமக்கும்..நம்மை நெருங்கியவர்களுக்கும் வரும் நோயின் அறிகுறியை சில முன்னறிவிப்புகளிலேயே அறிந்து விடலாம்..உடனே சரியான சிகிச்சைக்கும் சென்றிடலாம்.எப்பேர்பட்ட நோய்க்கும் இது பொருந்தும்.
எல்லோரும் மனதில்  வைக்க வேண்டிய ஒன்று..
சிறிய காயம் வந்து மரித்தவர்களும் உண்டு..
தீராத வியாதி வந்து பிழைத்தவர்களும் உண்டு...
என்பதைத்தான்.
 மனோதைரியம், நம்பிக்கை, முயற்சி இவை மூன்றும் இருந்தால் எதுவும் நம்மை ஒன்றும்செய்யாது.

Tuesday, October 9, 2012

மத்திய அமைச்சர் செய்தது தவறு - கலைஞர்





 தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டுமென்று மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள எஸ்.எம். கிருஷ்ணா பிரதமருக்கு கடிதம் எழுதியது மிகப்பெரிய தவறாகும் என்று கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காக மாநில உணர்வோடு நடந்து கொள்வது தவறாகும்.

ஒருவேளை இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை மனதிலே கொண்டு வாக்கு வாங்கவேண்டுமென்பதற்காக கிருஷ்ணா மாநில மக்களைக் கவருகின்ற வகையில் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மக்களும், தலைவர்களும் கட்சி உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையோடு செயல்படுகிறார்கள். அந்த மாநில அரசும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிலே முடிவெடுத்து, அதன்படி செயல்படுகிறார்கள். அதன் விளைவாகத்தான் கர்நாடக மாநிலத் தலைவர்கள் எல்லாம் பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டிலோ தனக்கே எல்லாம் தெரியும், யாருடைய ஆலோசனையும் தயவும் தேவையில்லை என்று கருதுகின்ற அரசு நடக்கின்றது. எப்படியிருந்தாலும், காவிரிப் பிரச்சினையில் பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் பிரதமர் அறிவித்த முடிவுக்கு மாறாக நண்பர் கிருஷ்ணா பிரதமருக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கடிதம் எழுதியது தவறு, கண்டிக்கத்தக்கது.

நல்லவேளையாக காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமரும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டுமென்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 8, 2012

பேசும் போது ஜாக்கிரதை ..எச்சரிக்கை பதிவு


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை 50 காசு இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் 50 காசுகளை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

இப்போது என்னதான் சொல்ல வருகிறாய்? என்கிறீர்களா?

வேண்டாம்..நான் ஏதாவது சொல்லப்போக..நீங்கள் ஏதாவது புரிந்துக் கொள்ளப்போக,,,,,ம்ஹூம்..வேண்டாம்.நான் சொல்ல வருவது..என்னுடனே இருந்துவிட்டு போகட்டும்.


Sunday, October 7, 2012

சினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..


சினிமாவிற்கு எழுதப்படும் கதைக்கு மூன்று வடிவம் நிலைகள் இருக்கின்றன..

முதலாவது அந்தக் கதையின் சுயவடிவம்.இரண்டாவது அக்கதையைச் சினிமாவிற்காக பண்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்.இதைத்தான் 'டிரீட்மென்ட்' என்கிறார்கள்.மூன்றாவது படங்களாகவே கதையை எழுதுவது.இதை 'சினாரியோ' என்றும் 'ஸ்கிரிப்ட்' என்றும் சொல்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும்..ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது.அதேபோல ஒவ்வொரு கதையிலுமொரு தனித் தத்துவம் அல்லது அடிப்படையான கருத்து அடங்கி இருக்கிறது.ராமாயணத்தில் 'ஆதர்ஷ புருஷனின் லட்சணங்கள்' ஒரு அடிப்படைத் தத்துவம்.மார்க்கண்டேயன் கதை 'விதியை மதியால்' வெல்லலாம்..என்னும் அடிப்படைக் கருத்தின் மேல் கட்டப்பட்டது.கண்ணகி கதை 'ஒரு கற்புக்கரசியின் கோபம் உலகையே எரித்துவிடும்' என்ற கருத்தின் மேல் எழுந்தது.

எனவே, சினிமாவிற்குக் கதை எழுதுகிறவர் முதலில் அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்ன என்பதை முதலில் நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும்.அந்தக் கருத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் கதை எழுதப் படுகிறது.ஆகையால் கதையின் ஆரம்பம், வளர்ச்சி,முடிவு எல்லாம் அதை விளக்குவதற்காகவே அமைக்கப் பட வேண்டும்.

அதே போல.. கதை தங்குத் தடையின்றி மட மட என நகர வேண்டும்.அனாவசியமாக நிற்கக் கூடாது.ஒரு சம்பவத்திற்குப் பிறகு அடுத்தது...அதற்கடுத்தது என்று, நிற்காமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.படத்தில், கதையை நேருக்கு நேர் நடப்பது போலவே பார்ப்பதால் அது வேகமாக நகராவிட்டால் சலிப்புத் தட்டிவிடும்.ருசி குறைந்துவிடும்

(சிறுகதை எழுத்தாளர்,நாடக ஆசிரியர், சினிமா கதை,வசனகர்த்தா ஆகிய பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா என்னும் நூலிலிருந்து...
இப்புத்தகம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை.யாரிடமாவது இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.தெரிவிக்கவும்.
பி.எஸ்.ராமையா நாலு வேலி நிலம், போலீஸ்காரன் மகள்..ஆகிய திரைப்படங்களின் கதைக்கு சொந்தக்காரர் ஆவார்)

Saturday, October 6, 2012

பாக்டீரியா உருவாக்கும் சுத்தத் தங்கம்!




 


தங்கம் என்ற மஞ்சள் உலோகம் இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. மண்ணில் சுரங்கம் அமைத்து தோண்டி பின்னர் சுத்திகரிக்கப்பட்டுதான் தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மிகத் தூய்மையான தங்கமான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான தகவலை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகலத்தின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.
தங்களின் கண்டுபிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா' என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்' என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஆய்வு முடிவு பற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று கூறினார்.
24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா?. சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி

(தட்ஸ்தமிழ்)

Friday, October 5, 2012

ஆனாலும் பா.ம.க.,விற்கு ரொம்பத் தாங்க.....


கடலூர் மாவட்டத்தில் கிராமம், ஊராட்சி, நகரம், ஒன்றியம் வாரியாக பாமக கட்சிக் கொடிக் கம்பங்களை ஏற்றி வைத்துச் செல்லும் வழியில் நெய்வேலி வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாமக இனி தனித்துப் போட்டியிடும் என நெய்வேலியில் வெள்ளிக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் இன்று மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம், தமிழகத்தை முன்னர் ஆண்ட கட்சியும், தற்போது ஆளுகிற கட்சியும்தான். இதில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம்.

÷காவிரி நீர்ப் பிரச்னைக்காக அன்றாடம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது.

÷காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் இரு கட்சிகளும் மெத்தனமாகவே செயல்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் வழியை ஆய்வுசெய்து அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்.

÷பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. மேலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ராமதாஸ் மட்டுமே.

÷எனவே திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது இளைஞர்கள் பாமகவில் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் அன்புமணி ராமதாஸ்.


Thursday, October 4, 2012

அன்னிய மோகம்! (தினமணி தலையங்கம்-கண்டிப்பாக படிக்கவும்)


அன்னிய மோகம்!


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு "எழில் நகரம்' (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் இணைந்து செயல்படவுள்ளன.
இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் குறிப்பிடுகையில், ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நகரங்களில் போக்குவரத்து, சாலை வசதி, தகவல் தொழில்நுட்பம், கரியமில வாயு கட்டுப்பாடு, இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்தேவை இல்லாமல் வீடுகள் தற்சார்புடன் கதிரொளி ஆற்றல் பெறுதல், வீடுகளுக்கு பகலில் மின்விளக்கு எரியாமலேயே வெளிச்சம் பெறும் வகையில் வடிவமைப்பு என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்படும். முதல்கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி, ஜபல்பூர் ஆகிய இரு நகரங்களில் இதைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரியா நாட்டின் அமைச்சர் டோரீஸ் பர்ஸ் குறிப்பிடும்போது, இத்தகைய பசுமை நகரம், எழில் நகரம் அமைக்கப்படும் பணியில் ஆஸ்ட்ரியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரியாவும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நகர்ப்புற மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளும் என்கிறார் அமைச்சர் கமல்நாத். எல்லாம் சரிதான். ஏன் இதற்குப்போய் ஆஸ்திரியாவுடன் ஒப்பந்தம்போட வேண்டும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
இந்தியாவில் இல்லாத தொழில்நுட்பமா? இந்தியாவில் இல்லாத முன்மாதிரி நகரங்களா? இதையெல்லாம்விட, இந்தியாவில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் மிகத்திறமையான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளின் நகர் வளர்ச்சிக்குப் பங்காற்றிக்கொண்டிருக்கையில் நாம் ஏன், ஆஸ்திரியா நாட்டின் தொழில்நுட்ப நிறுவனத்தின் தயவைப் பெற வேண்டும்?
ஆஸ்ட்ரியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி என்பது அரசு நிறுவனம் அல்ல. இது ஒரு கூட்டு நிறுவனம். ஆஸ்திரிய குடியரசு 50.46%, தொழில் கூட்டமைப்புகள் 49.54% எனும் விகிதத்தில் அரசு - தனியார் பங்கேற்பில் செயல்படும் நிறுவனம். இது ஒரு ஆய்வு மற்றும் ஆய்வைச் செயல்படுத்தும் நிறுவனம். இவர்கள் யாருக்கான ஆய்வைச் செய்வார்கள் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும்?
இவர்கள் ஆஸ்திரியா நாட்டின் பல்வேறு தொழில்நிறுவனங்களுக்காக ஆய்வுசெய்து தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்குமே தவிர, இவர்களது நோக்கம் இந்தியாவில் எழில் நகரங்களை உருவாக்குவதுதான் என்பதை நம்ப இயலவில்லை.
இவர்கள் உருவாக்க இருக்கும் எழில் நகரத்தின் சாலைகள் அவர்கள் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். வீட்டின் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு, மெட்ரோ ரயில், அதிவிரைவு போக்குவரத்துப் பாதை, வீடுகளுக்கான மின்ஆற்றல் சுயச்சார்பு எல்லாமும் அவர்கள் தீர்மானிப்பார்கள். அவர்களது பொருள்களை விற்பனை செய்யும் வாய்ப்புகளையே இங்கே உருவாக்குவார்கள். இந்த ஒத்துழைப்புக்கு எத்தனை கோடி ரூபாய் பணம் பெறுவார்கள் என்பது குறித்து அமைச்சர் கமல்நாத் குறிப்பிடவில்லை.
இன்றைய இந்திய நகரங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் விரிவடைந்ததற்கு யார் காரணம்? அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகள் முறையாகச் செயல்பட்டு, விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டுமானங்களை தயக்கமின்றி இடிக்கத் தொடங்கியிருந்தால், இன்று இந்திய நகரங்கள் இத்தகைய நெரிசலாக அமைந்திருக்குமா?
பாதசாரிகள் நடக்க முடியாத அளவுக்கு சிறு நடைமேடை அமைத்து, அதில் கடைகள் ஆக்கிரமிக்கும்போதே தடுத்து நிறுத்தவும் செய்யாமல் வளரவிட்டு, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்கள் யார்?
வீடுகளுக்கு சூரிய ஆற்றல் மூலம்தான் வென்னீர் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்காமல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பைக் கட்டாயமாக்காமல் இருந்ததற்கு யார் காரணம்?
முறையின்றி கட்டப்பட்ட வீடுகளையும் பணம் செலுத்தி முறைப்படுத்திக்கொள்ள சட்டம் தீட்டியதற்கு அரசியல்வாதிகள்தானே காரணம்?
இந்தியாவில், அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மிகக் குறைந்த செலவில் தரமான வீடுகளை, குடியிருப்புகளை அமைக்க முடியும் என்று லாரி பேக்கர் போன்றோர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அத்தகைய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு தர மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் அத்தகைய தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கவும், உதவிகள் வழங்கவும் கட்டட மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நோக்கம் நிறைவேறவில்லை.
ஆஸ்திரியாவிலிருந்து ஒரு நிறுவனம் தரும் ஆலோசனைப்படி எழில் நகரம் அமைக்கப்போகிறோம் என்று அமைச்சர் கமல்நாத் சொல்லும்போது, "கேப்பையிலே நெய் வழிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்கு அறிவு எங்கே போயிற்று?' என்கிற கேள்விதான் நினைவுக்கு வருகிறது.
நமக்கான எழில் நகரை நாம் அமைத்துக்கொள்ள முடியாதா? அதற்கான தொழில்நுட்பமும், அறிவும் இந்தியர்களிடம் இல்லையா என்பதுதான் பதில் வராத கேள்வியாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிட்டு மதுரை மாநகரம் அமைக்கப்பட்டபோது, ஆஸ்திரியா என்கிற நாடு எப்படி இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஹரப்பாவும், மொகஞ்சதாரோவும் நகர வடிவமைப்பில் நமது மேலாண்மைக்குச் சான்றாக இருக்கும் சரித்திரச் சுவடுகள். நகரக் கட்டமைப்பைப் பற்றி நமக்குக் கற்றுத் தருவதற்கு அன்னிய நாட்டை நாடுவானேன்? இதற்குப் பின்னால் என்ன ஊழலோ, என்ன திட்டமோ யார் கண்டது?
இந்தியாவின் எந்த நகரத்தையும் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் எழில் நகரமாக மாற்றிவிட முடியும். இதற்கு ஆஸ்திரியா நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் வந்துதான் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்பதில்லை.

Wednesday, October 3, 2012

உணவகம் - ஆரோக்கிய பவன்




அடையாறு சிக்னலில் இறங்கி, சற்று கிழக்கு நோக்கி நடந்தால்..ஒரு பழைய கட்டிடம் இருக்கும்.அக்கட்டிடத்தின் வாசலில் சென்னை மாநகராட்சியின் குப்பைத்தொட்டியைப் பார்க்கலாம்.கட்டிடத்தில் ஒரு அழுக்கேறிய..வாசகங்கள் மறைந்து போன போர்ட் ஒன்று இருக்கும்.அதை சற்று எக்ஸ்ரே கண்ணுடன் பார்த்தால்..ஆரோக்கிய பவன் என்பதை கண்டுபிடித்து விடலாம்.உள்ளே நுழைந்தால்..கல்லாவில் ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருக்கும், அவ்வப்போது இருமலுடன்.இருமும் போதே தொண்டையில் சளி இருப்பதைக் காணலாம்.அவருக்கு டிபி யாய் இருக்கலாம்.அதனாலென்ன..

நாம் உள்ளே போய் அமர்ந்தால்..எல்லா மேசையிலும் ஈக்கள் குவிந்து இருக்கும்.அதனால் என்ன நாம ஈக்களையா சாப்பிடப் போறோம்.என்ன ஒன்று..அவை பக்கத்து தட்டில் அமர்ந்து, நம் தட்டில் அமராவண்ணம் இடது கையால் நாம் வீசிக்கொண்டிருக்கலாம்.காற்றுக்கு காற்று ஆச்சு...ஈக்களும் நம் தட்டை அண்டாது.சர்வர்..அவனது விரல்கள் அனைத்தையும் உள்ளே விட்டு..தண்ணீர் கொணர்ந்து வைப்பான்.

இரண்டு இட்லி ஆர்டெர் செய்தால்...அத்துடன் மஞ்சள் கலரில் ஒரு திரவம் (சாம்பார்?)..சற்று வெண்மையும் ,பச்சையும் சேர்ந்த கலரில் ஒரு சட்னி வைக்கப் படும்.இட்லியை சற்று கஷ்டப்பட்டுதான் விள்ள வேண்டும்.கல் போல இருக்கும்.இட்லி மலிவாய் இருப்பதால், வீடு கட்டும்சிலர்..செங்கல்லுக்கு பதிலாக இவற்றை வாங்கி உபயோகிப்பதும் உண்டு..என செவி வழிச் செய்தி.

கஷ்டப்பட்டு..இட்லி சாப்பிட்டுவிட்டு தோசை ஆர்டர் செய்தால்...நாயின் தொங்கவிட்ட நாக்கு போல் தட்டில் கொண்டுவந்து வைப்பார்கள்.கடையில் ஃபேனோ, ஏசியோ இல்லை எனினும், தோசை மட்டும் ஏசியில் வைத்திருந்தாற் போல சில்லென்றிருக்கும்.

கடைசியில் காஃபி சாப்பிடலாம் என்றால்..காஃபி என்னும் வெந்நீர் வரும் டபராவில் உள்ள அழுக்கை, கையினாலேயே அகற்றலாம்.அந்த அளவு சுத்தம்.

ஆரோக்கிய பவனில் உணவருந்துவோர் தேவைக்கென...கடையை ஒட்டி..சில மருத்துவர்கள் கிளீனிக் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் இந்த கிளீனிக்கில் சம்பாதித்து தலைக்கு இரு வீடு வாங்கிவிட்டார்களாம்.

டெங்கு,சிக்கன்குன்யா போன்றவை வருபவர்கள்..உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள இந்த ஓட்டலுக்கு செல்லலாம் என சிபாரிசு செய்கிறேன்.


இரு நிலவுகள் (கவிதை)






பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

Tuesday, October 2, 2012

விகடன் சொன்னது உண்மையா?




ஆனந்த விகடன் 3-10-12 இதழில் விகடன் டீமின் விகடன் ஜன்னல் பகுதியில் இச் செய்தி வெளியாகியுள்ளது..

"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..

'தமிழர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்/ -ராஜபக்க்ஷேவின் இந்திய வருகையின் போது பாதுகாப்புக்காக இருந்த இந்திய படை வீரர்களுக்கு மத்திய அரசு கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் இவை'

இது உண்மையா?

யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய இயலுமா?

இது உண்மையாயின்..தமிழக அரசியல் தலைவர்கள் ஏன் மன்மோகன் சிங் காய் மாறிவிட்டார்கள் இவ்விஷயத்தில்.

தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்:



தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தமிழில் எழுதுதல் மற்றும் படிக்கும் திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் தமிழில் எழுத, படிக்க திணறுவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்த அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 96 அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் பலரும், தமிழை பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து கூடுதல் திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் 9ம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பி்த்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ள 96 பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டது. அதில் மாணவர்கள் தமிழில் பிழையி்ன்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுவது கண்டறியப்பட்டது. தமிழ் மொழியை வாசிக்க திணறும், இந்த மாணவர்கள் மற்ற பாடங்களை படிப்பது கடினமாகும். எனவே தனி கவனம் எடுத்து தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் கற்று கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு அரசு பள்ளிகளும் 9ம் வகுப்பு மாணவர்களை தனித்தனியே தமிழில் வாசிக்க செய்து சரியாக வாசிக்க தெரியாத மாணவர்களையும், பிழையோடு எழுதும் மாணவர்களையும் தரம் பிரித்து பட்டியல் தயாரிக்க வேண்டும்.

தமிழை படிக்க திணறும் மாணவர்களிடம் தனி கவனம் செலுத்தி அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். இதற்காக தினமும் 1 மணி நேரம் தனி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தகவல் - தட்ஸ்தமிழ்)

Monday, October 1, 2012

பட்டுக்கோட்டை பிரபாகரும், சரித்திரக் கதையும்..




ஆனந்த விகடனில்..நட்சத்திர எழுத்தாளர்களின் அணிவகுப்பு என்ற வரிசையில் பல சிறந்த எழுத்தாளர்கள் கதைகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

பத்திரிகைகள் சிறுகதைகளையே பிரசுரிக்க மறந்துள்ள நிலையில்..தரம் வாய்ந்த ஒரு கதையாவது விகடனில் படிக்கமுடிகிறதே என வாசகர்கள் மகிழ்கின்றனர்.

இந்நிலையில் சென்ற வாரம் விகடனில் பட்டுக்கோட்டை பிரபாகரனின் சரித்திரக்கதை 'ஆனந்தவல்லியின் காதல்' பிரசுரமானது.

அதைப் படித்ததும்..எனக்குத் தோன்றிய முதல் கருத்து..இக்கதையில் என்ன இருக்கிறது என நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதே..

மிகவும் அமெச்சூர்த்தனமான கதை.

பல தவறுகள்..

அநிருத்தன் என்னும் மன்னன் வலுவான சேனையைக் கொண்டு ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவுபடுத்துபவனாம்.அவன் விஜயநந்தன் என்னும் குறுநில மன்னனிடம் கப்பம் கட்டுகிறானா...அல்லது போரைச் சந்திக்க வேணுமா? என்கிறானாம்.அந்த வருத்தத்தில் அவன் இருக்கையில் 'அவனது மகளை தனக்கு கேட்கிறானாம்' அநிருத்தன்.அதற்கு விஜயநந்தன் சம்மதிக்கிறானாம் மகிழ்ச்சியுடனும்..போரிலிருந்தும் தப்பிக்கலாம் என.

ஆனால் இளவரசியோ நந்தகுமாரன் என்னும் கட்டியக்காரனை விரும்புகிறாளாம்.அவளும், நந்த குமாரனும் ஒரு சிறு நாடக மாடி தப்பித்து இலங்கை சென்று மணமுடித்து வாழ நினைக்கிறார்களாம்.

அதற்காக அவன் விஜயநந்தனிடம் மாட்டிக்கொண்டு, இளவரசியை காதலிப்பதாகக் கூற, இளவரசி இல்லை என மறுக்க, மன்னன் அவனுக்கு உயிருடன் கல்லறைக் கட்ட அவன் கல்லறைக் கட்டும் நபர்களில் ஒருவனான அவன் நண்பனிடம்...ஒரு கல்லுக்கு பதில் அங்கு வெறும் சுண்ணாம்பு வைத்து கட்டிவிடு என்கிறானாம்.அவன் நண்பனோ, அவனுக்கும் இளவரசி மீது ஆசைவர அப்படிச் செய்யவில்லையாம்.ஆனால் நந்தகுமாரனின் தங்கை பொன்னி , கல்லறையை முடிக்கும் முன் கோழிக்கறி ஊட்டுகிறாளாம் நந்தகுமாருக்கு.

அன்று பௌர்ணமி ஆனதால்..இளவரசி தோழியுடன் கடலில் குளிக்க..கடல் அவளை இழித்துச் செல்கிறதாம்.அவள் உடன் வந்த வீரர்கள் அவளை காப்பாற்ற முடியவில்லையாம்.அவள் உடலும் கிடைக்கவில்லையாம்.

ஆனால் நந்தகுமாரன் நண்பன் துரோகமிழைத்தாலும், பொன்னி ஊட்டிய கோழியின் எலும்பில்மஜ்ஜை நீக்கி அதில் சிறு கத்தி வைத்து அனுப்ப, அதன் மூலம் நந்தகுமார் தப்பித்து, நண்பனின் படகில் மறைந்து கொள்கிறானாம்.இதற்கிடையே, கடலில் மூழ்கியது போல நடித்த இளவரசி , நந்தகுமாரின் மற்றொரு நண்பனின் படகில் ஏறி காத்திருக்க.நந்தகுமாரை ஏமாற்றும் நண்பன் அங்கு வந்து..இளவரசி மீதான காதலைச் சொல்லி தன் துரோகச் செயலை கூற, அந்த படகில் மறைந்திருந்து வந்த நந்தகுமார் அவனைக் கொன்று இளவரசியுடன் இலங்கை பயணிக்கிறானாம்.

மெகாசீரியலுக்கு ப.பி., வசனம் எழுதுவதால்..இதிலும் அங்கங்கே சின்னச்சின்னத் திருப்பங்களை வைத்துள்ளார்... மனதில் அவை எதிர்பாரா திருப்பங்கள் என எண்ணி.

இந்தக் கதையை வேறு சாதாரணமான எழுத்தாளன் எழுதியிருந்தால்..'பிரசுரிக்க தகுதியில்லை' என விகடன் திருப்பி அனுப்பியிருக்கும்.

 இந்தப் பதிவிற்கு பல மைனஸ் ஓட்டுகள் விழலாம்..ஆனால் என் மனதில் இக்கதைப் பற்றி தோன்றியது.

அமெரிக்காவில் வினாயகர் சிலை கரைப்பு




டல்லாஸில் உள்ள இந்து கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது. முதல் முறையாக விநாயகர் சிலைக் கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மும்பையிலிருந்து வரவழைக்கப் பட்ட 5 அடி விநாயகர் சிலைக்கு பதினோரு நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை, கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீச்சல்குளத்தில் கரைக்கப்பட்டது.


மும்பையில் விநாயகர் ஊர்வலம் நிறைவடையும் நாளில், பருவ மழையும் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம். பெரும்பாலும் அவ்வாறே நடந்து வருகிறது. டெக்சாஸ் மாகாணம் முழுவதும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மழையை காணாமல் வறட்சியில் இருந்த நிலையில், சனிக்கிழமை டல்லாஸ் மட்டுமல்லாமல், மாகாணம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மும்பையில் முடிவடையும் பருவமழை, டெக்சாஸில் ஆரம்ப மாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. அந்த மழையிலும் ஐநூறுக்கும் மேலான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

மும்பை ஊர்வலத்தில் பாட்டுகளுடன், ஆட்டம் பாட்டம் என ஆண்களும் பெண்களும் கடற்கரை வரை சென்று சிலையை கரைப்பது வழக்கம். அதே போல் இங்கும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் இறுதியில், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீச்சல் குளத்தில் சிலை கரைக்கப் பட்டது.
களிமண் சிலை போலில்லாமல், தானாகவே நீரோடு நீராக கரையக்கூடிய சிறப்பு அம்சத்துடன் மும்பையிலிருந்து தருவிக்கப் பட்டிருந்த்து. சித்தி விநாயக் கணேஷ் மண்டல் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் இந்து கோவில் நிர்வாகிகளுடன் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்கள். தமிழர்கள் உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.
டெக்சாஸில் இதுதான் முதல் முறையாக நடந்த விநாயகர் ஊர்வலம், சிலை கரைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

டிஸ்கி- இறைவன் எதிர்ப்புக்குக்கு இணையாக இறைவனை வேண்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துத்தான் வௌகிறது.என்றும் மக்களிடையே டிபாசிட் இழக்காத ஒரே தலைவன் இறைவன்தான் போல் இருக்கிறது.