Wednesday, May 27, 2015

குறுந்தொகை-216



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவிகூறியது.)


பாலை திணை - பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

இனி பாடல்-

அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
   
வாடா வள்ளியங் காடிறந் தோரே
   
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப
   
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே

அன்ன ளளிய ளென்னாது மாமழை
   
இன்னும் பெய்ய முழங்கி
   
மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.


                      -கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

 

 தோழி, தலைவர், கேடில்லாத உயர்ந்த செல்வத்தை, கொணரும் பொருட்டு, பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; நான்--,  தொகுதியார்ந்த விளக்கத்தைஉடைய வளைகள் நெகிழும்படி,  கவலையுற்று, படுக்கையின் கண் வீழ்ந்து,  துன்பம் மிக்கேன்;  இவள் இரங்கத் தக்காள், என்று எண்ணாமல், மாமழை இன்னும்மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து,  எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக்குறித்து,  மின்னா நின்றது.

.

    (கருத்து) கார்காலம் வந்தும் தலைவன் வராததால் நான் துன்புறு வேனாயினேன்.

   

No comments: