Showing posts with label இனிக்கும் தமிழ்-TVR. Show all posts
Showing posts with label இனிக்கும் தமிழ்-TVR. Show all posts

Monday, April 2, 2018

இனிக்கும் தமிழ்


அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தில் இன்பச்சுவைக்கு அளவே இல்லை.

திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக் காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் 'மங்கையர் கட்டழகில் மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென நினைத்துப் பார்த்து ஏறி தம் காதலியை அடையும் காதலர் எத்தனை பேர்?அவ்வாறிருக்க சீதையின் பேரழகில் மயங்கிய ராமன்..இந்தச் சிறு வில்லை மட்டுமா ஒடிப்பான்? ஏழுமலையையும் கொடுத்தாலும் பிடித்து, எடுத்து ஒடிப்பானே' என்கின்றனர்.

மூவுலகமும் செலுத்தும் ராவணனுக்குப் பண்டு
முத்தி கொடுக்கவந்த சித்திர வடிவைக்கண்டு
தேவியிவள் என்றாள் ராகவன் இந்தச் சின்ன
சிலையோ ஒடிப்பான் ஏழுமலையும் ஒடிப்பான் என்ன
-ராம நாடகம்

என்பது சீதையிடம் ராமன் கொண்ட காதலின் பெருமையைக் கவிஞர் சுவைபடத் தீட்டும் கவிச்சித்திரமாகும்.

சீதை ராமனிடம் கொண்ட காதலையும் நாடகத்தமிழுக்கு ஏற்ப கவிராயர் சுவைப் படக் கூறுகிறார்.

ராமன் தன் சிற்றன்னையின் கட்டளையைத் தலைமேற்கொண்டு வனம் செல்ல ஆயத்தமாகிறான்.தனது பிரிவைத் தன் காதலி சீதைக்கு உணர்த்துகிறான்.

தலைவனைப் பிரிந்து தான் உயிர் வாழ இயலாத காதல் நிலையை...

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

-திருக்குறள்
பிரிந்துசெல்வதில்லை என்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல்..நீ போய்த்தான் தீரவேண்டுமாயின்..நீ திரும்பிவரும்போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்...என்கிறாள் திருக்குறள் தலைவி தன் தலைவனிடம் குறிப்பாக .

ஆனால் கவிராயரோ மேலும் ஒரு படி செல்கிறார்..

தான் தலைவனைப் பிரிந்து வாழ இயலாத காதல் மிகுதியை சீதை புலப்படுத்துவதுடன் மற்றொன்றும் கூறுகிறாள்..

என்னைப் பிரிந்துசெல்லத் துணிந்தீர்..ஆயின் நீர் பிரிந்து சென்று தங்கும் காட்டின் பெயரையேனும் எனக்குக் கூறிச் செல்லுங்கள்.நீர் பிரியின் நான் இறப்பது உறுதி.இறப்பின் மீண்டும் பிறப்பது உறுதி நீர் பிரிந்துறையும் காட்டின் பெயரை அறிவிப்பின் அதனை நினைத்துக் கொண்டே நான் இறக்க நேரும்.அப்படி பெயரை நினைத்துக் கொண்டே இறந்தால் அதே காட்டில் மீண்டும் பிறந்து உங்களை அடைந்து மகிழ்வேன்..என்கிறாள்

நாடிநீர் போயிருக்கும் வனத்தின்பேர்
சொல்லவேணும் - அதை
நான்நினைத்துக் கொண்டிறந்தால்
அங்கே பிறக்க லாங்காணும்
-ராமநாடகம்

என்பது கவிராயர் படைத்த சீதையின் காதல்மொழி..

Thursday, March 22, 2018


கொஞ்சி விளையாடும் தமிழ்
-------------------------------------------------
நிலவை பெண்களுக்கு ஒப்பிட்டு எவ்வளவு கவிதைகள்...
வள்ளுவனும் அதற்கு விலக்கல்ல.
மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாது விண்மீன்கள் தவிக்கின்றனவாம்
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி பொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட இந்த மங்கை நல்லாள் முகத்தில் இல்லையாம்
முழு நிலவே..என் காதலுக்கு உரியவளாக நீயும் ஆக வேண்டுமாயின்..என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் நீ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமானால் (அதில் நீ தோல்வியுறாமல் இருக்க) பலரும் கானும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.
(இன்பத்துப்பால்..குறள்கள்..1116,1117,1118,1119)
இப்போதைய கவி ஒருவன்...தன் காதலி இளமையானவள் என்பதை இப்படிச் சொல்கிறான் நிலவை அழைத்து...
என் அருமைக் காதலிக்கு..நீ இளையவளா..அல்ல மூத்தவளா.." என.
மற்றவனோ..நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றும், நிலவே என்னிடம் நெருங்காதே என்கிறான்.
இன்னொருவன்..நிலவைப் பெண்ணாகவும்..அப்பெண் பார்க்கும் கண்ணாடியாக நீல வானத்தையும் கூறுகிறான்.
பிறை நிலவை பெண்ணின் நெற்றிக்கு ஒப்பிட்டு பக கவிகள் 'பிறை நுதல்' என்கின்றனர்.
அனால் இந்த உவமைகள் எப்படியுள்ளன பாருங்கள்..
யானைத் தந்தம் போல
பிறை நிலா
வெட்டி எறிந்த நகம் போல
பிறை நிலா
அறுத்தெடுத்த பூசணிக்காய்
கீற்று போல
பிறை நிலா
இப்படி சொன்னதுடன் நிற்காவில்லை புத்துக்கவிதைகள்
ஒரு கவிஞர் சொல்கிறார்..
பிறை நிலவாய் இருந்தாலும் முழு நிலவின் உரு மங்கலாகத் தெரியும் அல்லவா? அந்நிலவை குழந்தையாகவும்..வானத்தை துணியாகவும்..குழந்தை வானத் துணியை ஈரம் பண்ணுகிறதாம்..
பெய்யும் ஒளி நீரால்
வானத் துணியில்
ஒரு வட்டமாய் ஈரம் பாயும்
-என்கிறார்..
யார் நிலை என்ன சொன்னாலும்..எப்படி ஒப்பிட்டாலும்..தாய் மனமோ..
அந்நிலவை தன் உறவாய்..தம்பியாய் நினைக்கிறாள்..ஆகவே தான் தன் குழந்தைக்கு அந்த அம்புலிமாமாவைக் காட்டி அழைத்து சோறூட்டுகிறாள்

Friday, March 2, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்


திருவள்ளுவ நாயனார் தன் மனைவி இறந்தபோது இதனைப் பாடியதாகச் சொல்கின்றனர்.
இனிய உணவு சமைத்துத் தருபவளே! என்மீது அன்பு கொண்டவளே! நான் (சொன்ன)படி தவறாமல் நடக்கும் (பொம்மலாட்டப் பொம்மைப்)பாவை போன்றவளே! என் கால்களை அமுக்கி என்னைத் தூங்க வைத்துவிட்டுப் பின்னர் தூங்கி நான் துயிலெழுவதற்கு முன்பே எழுந்து கடமைகளைச் செய்யும் பேதைப் பெண்ணே! நீ என்னை விட்டுவிட்டுப் போகிறாயா? இனி என் கண் இரவில் எப்படித் தூங்கும்?

அடிசிற் கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதையே போதியோ
என்தூங்கும் என்கண் இரா.

Monday, January 4, 2016

இனிக்கும் தமிழ்


சாதாரணமாக கவிஞர்கள் அந்த நாளில் அரசனைப் பாடிப் பொன்னும் பொருளும் பெறுவர்.வறுமையில் அவர்கள் வாடினாலும், அவர்களின் தமிழில் பாடப்படுபவரைப் பற்றி நக்கலும், கிண்டலும் கூட இருக்கும்.அப்படி, பாடி பரிசு பெற எண்ணி அரசன் ஒருவனை இராமசந்திர கவிராயர் பாடுகிறார்.(இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்).  பாடி முடித்ததும் அந்த அரசன் பரிசு ஏதும் தரவில்லை.அந்த மனச் சலிப்பை இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

கல்லாத வொருவனைநான் கற்றா யென்றேன்
காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்
பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்
போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்
மல்லாரும் புயனென்றேன் சூம்பற் றோளை
வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்
இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே !



(கல்லாத ஒருவனை நான் மெத்தப்படித்த மேதை என்றேன்;
காட்டை அழைத்துச் செழிக்கும் ஒருவனை நாடாளும் மன்னனே என்றேன் ;
தீயவனை நல்லான் என்று புகழ்ந்துரைத்தேன் ;
போர்க்களத்தையே பார்த்திராத கோழையை வேங்கையை ஒத்த வீரன் என்றேன்;
சூம்பிய தோள்களைக் கொண்ட நோஞ்சானை மல்யுத்தத்துக்கு ஏற்ற திடம் கொண்ட தோளன் என்றேன்;
எச்சில கையால் காகம் ஓட்டாதவனை வள்ளல் என்றேன்;
இப்படி இல்லாததைச் சொல்லி புகழ்ந்த எனக்கு, அவன் இல்லை எனச் சொல்லி விட்டான்).