Wednesday, April 22, 2009

சரத்பாபுவிற்கு நீங்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது...

கடந்த சிலநாட்களாக சரத்பாபு என்ற பெயர் அடிக்கடி பதிவுகளில் காணமுடிகிறது.அவர் I.I.M.,ல் M.B.A.,படித்த இளைஞர் ..இட்லிக்கடைவைத்து அனேகருக்கு வேலை கொடுத்துள்ளவர் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

இப்படி எழுதுவதையே கண்டிக்கிறேன்...ஐ.ஐ.எம்.,ல் அட்மிஷன் கிடைக்க எவ்வளவு கடுமையான போட்டி நிலவுகிறது...ஒரு பட்டதாரியை உருவாக்க அரசு பணம் லட்சக்கணக்கில் செலவாகிறது.அப்படி அரசு பணத்தில் படித்தவர்...(அம்மா கஷ்டப்பட்டு இட்லி விற்று படிக்கவைத்திருந்தாலும்)..ஒரு சிறந்த துறையில் ஈடுபட்டு...இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தன் பங்கிற்கு ஏதேனும் செய்திருக்கலாம்.இட்லி வியாபாரம் செய்து தொழிலதிபர் ஆக இப்படிப்பை பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.முருகன் இட்லி கடை அதிபர் ஐ.ஐ.எம்.படிக்காமலேயே அனேகருக்கு வேலை கொடுத்துள்ளார்.

சரி...அதுதான் போகட்டும்..என்றால்..எம்.பி., தேர்தலில் நிற்கிறாராம்..சுயேச்சையாக.கண்டிப்பாக வெற்றி அடைய முடியாது எனத் தெரியும்..இருந்தும் ஏன் நிற்கிறார்...இவருக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது எனலாம்.மக்களுக்கு சேவை செய்ய..அரசியலில் தான் ஈடுபட வேண்டும் என்று இல்லை.சமுதாயத்தில் பின் தங்கியவர்கள்..ஆதரவற்றோர் ஆகியவருக்கு இவர் தன்னால் முடிந்தவிதத்தில் உதவலாம்.ஒரு ராஜாராம்,ஒரு வித்யாகர் ஆக ஆகலாம்...அதைவிட்டு..ஒரு பாலு ஆக ஆசைப்படுவது...இப்போது...இவ்வயதில்...இவருக்கு தேவையில்லை.மலிவான விளம்பரத்திற்கு ஆசைப்படுகிறாரோ?

அப்படியே ஆசை இருக்குமானால்...ஒரு கட்சியில் சேரட்டும்...அடுத்து வரும் தேர்தல்களில் முயலட்டும்...

சுயேச்சைகள் வெற்றிபெரும் வாய்ப்பு இந்தியாவில் இல்லை.அப்படி வெற்றி பெறுவதானால்...எம்.எஸ்.உதயமூர்த்தி வெற்றி பெற்றிருப்பார்.ஜெயகாந்தன் வெற்றி பெற்றிருப்பார்.எஸ்.வி.,சேகர் அவருக்கு பழக்கமான...கிட்டத்தட்ட அனைவரையும் அறிந்த மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலேயே சுயேச்சையாக 1500 ஓட்டுகளே வாங்க முடிந்தது.சுயேச்சையாக வெற்றி பெற தாமரைக்கனியா இவர்?

ஆகவே...நண்பர் சரத்பாபு அவர்களுக்கு...அரசியல் ஆசை இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க வேண்டிய தேவையில்லை.

உங்கள் ஓட்டு வீணாகவேண்டுமானால்..அவருக்கு ஓட்டளியுங்கள்.

29 comments:

  1. //உங்கள் ஓட்டு வீணாகவேண்டுமானால்..அவருக்கு ஓட்டளியுங்கள்//
    உங்கள் ஓட்டுகளை பொக்கிஷமாக பாதுகாத்து கொள்ளுங்கள். நாளை அருங்காட்சியகத்தில் வைக்கத் தேவைப்படும்

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி தீப்பெட்டி

    ReplyDelete
  3. தாமரைக்கனியா niirukum pothu சரத்பாபுவிற்கு niirika kudatha ?

    Eaan "சரத்பாபுவிற்கு meethu mattum illavu akkarai ? why not others ?

    ReplyDelete
  4. //சுயேச்சையாக வெற்றி பெற தாமரைக்கனியா இவர்?//

    இதில் உள்ள உள்குத்து விளங்கவில்லையா? KaviKutty

    ReplyDelete
  5. நல்ல பதிவு ட்வி ஆர் சார், பார்ப்போம் தேர்தலுக்கு பின் அவர் என்ன செய்ய போகிறார் என்று...

    ReplyDelete
  6. அய்யா உங்களை மாதிரியே நானும் ஒரு பதிவை தெரியாத்தனமா எழுதிப்புட்டேன்...
    கொஞ்சம் நம்ம கடைக்கு வாங்களேன்.

    ReplyDelete
  7. ///நகைக்கடை நைனா said...
    அய்யா உங்களை மாதிரியே நானும் ஒரு பதிவை தெரியாத்தனமா எழுதிப்புட்டேன்...
    கொஞ்சம் நம்ம கடைக்கு வாங்களேன்.//

    கடைக்கு வந்தேன்...எல்லாமே அசல் 916 தான் .

    ReplyDelete
  8. உள்ளதை உள்ள படி கூறிவிட்டீர்கள் ..அருமை

    ReplyDelete
  9. சரத்பாபு பத்தி எழுதற எல்லா பதிவுலையும் போயி நான் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன். நாளைக்கு வரலாறு ராதாகிருஷ்ணன் ஐயா பதிவுக்கு மட்டும் ஏன் போகலன்னு கேள்வி கேக்க கூடாது இல்லையா ? உங்க கிட்டயும் வந்துட்டேன். உங்களுக்கு விசயகாந்த் ஸ்டைல்ல பதில் சொல்ல முயற்சி பண்றேன் :-

    ஒரு தொகுதில ஒரு லட்சம் வாக்களார்கள் இருந்தா வாக்கு செலுத்தும் சதவீதம் 55% தான். சோ, நாப்பத்தி அஞ்சாயிரம் பேரு வாக்க வீணடிக்கராங்க.

    மிச்சம் இருக்கற அம்பத்தி அஞ்சாயிரம் பேருல 30,000 பேரு தோக்கற கட்சிக்கு வாக்களிச்சு வீணடிக்கராங்க.

    மிச்சம் இருக்கற 25,000 பேரு ஜெயிக்கற கட்சிக்கு வாக்களிச்சு வீணடிக்கராங்க..

    இதுல சரத்பாபு மட்டும் என்ன பாவம் பண்ணினாரு ? இப்படி போட்டு தாளிக்கறீங்க ?

    இல்லாட்டி, ஒரே வரில, யாருக்கு வாக்களிச்சா வீணா போகாது மக்களோட வாக்குன்னு சொல்லுங்களேன் ! அது பாசிடிவ் விவாதமா இருக்கும். என்ன சொல்றீங்க ?

    அது என்ன ஆசை இருந்தா கட்சில சேரனும்ன்னு அட்வைஸ் ? புதுசா கட்சி ஆரம்பிக்க சொல்லி இருந்தாலாவது நியாயம். இல்லாட்டி எந்த கட்சின்னு சொன்னா சரின்னு சொல்லலாம்.

    Food Business ஒரு அருமையான தொழில். அதுவும் இட்லி வடை போன்ற அன்றாட டிபன் பிசினஸ் இன்னுமே பெரிய அளவில் லாபம் தரும் தொழில். பலருக்கு வேலைவாய்ப்பு தரும் தொழிலும் ஆகும். அதுனால IIM ல படிச்சா இது பண்ணக்கூடாதுன்னு சொல்ற உங்க அட்வைஸ் சரி இல்லைன்னு நான் கருதறேன். Recession டைம்ல உலகளவுல MCdonalds மற்றும் Burger King நல்ல லாபம் பெறுகிறது என்பதை ஞாபகம் வச்சிக்கோங்க. நல்ல இன்வெஸ்ட்மென்ட் கூட.
    அதுனால இது சிறந்ததுறை இல்லன்னு சொல்லுவது தவறு. ஆதலால நீங்க கண்டிச்த்து தவறுன்னு என்னோட தாழ்மையான கருத்து.

    ஏன் சார், எவ்வளவு தான் அரசு தவறு செஞ்சாலும், நாங்க தவறை சுட்டிகாட்டுவோம். திருந்த சந்தர்ப்பம் கொடுப்போம். திருந்தாவிட்டால், மறுபடியும் திட்டுவோம். மறுபடியும் அதே கட்சிக்கு சந்தர்ப்பம் கொடுப்போம். ஆனால் தேர்தல் என்று வந்தால் கண்டிப்பாக அவர்களுக்கே வாக்களிப்போம்ன்னு சொல்லுவதை விட இவ்வாறாக வீணடித்தல் தேவலாம் என்பது எனது கருத்து.

    நான் கிச்சடி எழுதினா மட்டும் தான் என்னோட பதிவு பக்கம் வரீங்க. இது சரி இல்லை !

    ReplyDelete
  10. என்ன சார், ஐஐஎம்-ல் படித்தால் சொந்தமாக தொழில் செய்யக்கூடாதா? உடனே இட்லிக்கடை என ஏளனமா? ஐஐஎம்-ல் படித்தால் உடனே ஒரு MNC-ல் அடிமை சேவகம்தான் செய்ய வேண்டுமா?

    சரத்பாபு ஐஐஎம்-ல் படித்ததால்தான் அவரால் 2000 ரூபாயில் ஆரம்பித்த வியாபாரத்தை 2-3 வருடத்தில் 250 கோடியாக்க முடிந்தது.

    ஐ.ஐ.எம்.படித்துவிட்டு இட்லிக்கடை எனச் சொன்னால் நமக்கு இளக்காரம்தான்.அதையே ஆங்கிலத்தில் entrepreneur என சொல்லி பாருங்கள்.இப்ப சரிதானே? (பாவம் தமிழன்னை!)

    //முருகன் இட்லி கடை அதிபர் ஐ.ஐ.எம்.படிக்காமலேயே அனேகருக்கு வேலை கொடுத்துள்ளார்.//

    இதைவிட அம்பானி ஸ்கூல் படிப்பை மட்டும் முடித்தவர்.ஆனால் பல ஐ.ஐ.எம்.களுக்கு வேலை கொடுத்தவர்.இதனால் ஐ.ஐ.எம்.களை மூடிவிடலாமா?


    கடைசியாக ஒரு சந்தேகம்...
    ஜெயிக்கப் போகும் திமுக, அதிமுக-விற்கு ஓட்டுப் போட்டால் ஓட்டு வீணாகாதா?

    ReplyDelete
  11. // தீப்பெட்டி said...
    //உங்கள் ஓட்டு வீணாகவேண்டுமானால்..அவருக்கு ஓட்டளியுங்கள்//
    உங்கள் ஓட்டுகளை பொக்கிஷமாக பாதுகாத்து கொள்ளுங்கள். நாளை அருங்காட்சியகத்தில் வைக்கத் தேவைப்படும்
    //

    Liked this comment :-)

    ReplyDelete
  12. செம காமெடி சார் நீங்க :)

    இவர் நிற்பதின் அடிப்படை விஷயம், ஒரு முயற்சி மற்றும் அரசியல் வெறும் அரசியல் வியாபாரிகளுக்கே என்ற கருத்தை உடைக்க.

    எப்போதுதான் தூய்மையான படித்த அரசியல்வாதிகளை பார்க்கப்போகிறோமோ?

    நீங்கள் எல்லாம் தகுதியே இல்லாத கருணாநிதி(ஊழல்,குடும்பம்), ஜெயலலிதா(தனியாய் வாழ்வது, மக்கள் பற்றிய கவலை இல்லாதது, சந்தர்ப்பவாதம்) மற்றும் பணத்திற்கு ஓட்டு போட்டே பழகி விட்டீர்கள்.

    உங்களை எல்லாம் எவன் வந்தாலும் திருத்த முடியாது. முடிந்தால் நல்லவனைக்காட்டுங்கள் அல்லது நல்லவனா என்று பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்.

    அரசியல் என்ன எட்டாக்கனியா? எப்படி உங்களுக்கு இப்படி தோன்றுகின்றது என்று வியப்பாக உள்ளது.

    உடம்ப பார்த்துக்கங்க சார்

    ReplyDelete
  13. வருகைக்கும்...கருத்துக்களுக்கும் நன்றி
    மணிகண்டன்
    நந்தவனத்தான்
    வெட்டிப்பயல்
    கிஷோர்

    ReplyDelete
  14. //மணிகண்டன் said...
    நான் கிச்சடி எழுதினா மட்டும் தான் என்னோட பதிவு பக்கம் வரீங்க. இது சரி இல்லை !//

    பதிவு பக்கம் வரவேண்டாம் என்றால் வரவில்லை

    ReplyDelete
  15. உடன்படுகிறேன்

    இவர் ஏன் முதலில் வார்டு கவுன்சிலர் ப்தவிக்கு நிற்கவில்லை என்பதே எனக்கு புரியவில்லை

    ReplyDelete
  16. வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி Dr.

    ReplyDelete
  17. :-)

    கலக்கறீங்க தலைவரே!

    நாடகம் என்னிக்கு?

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி லக்கி..

    நாடகம் நடக்கும் தேதியன்று தொலைபேசுகிறேன்.

    ReplyDelete
  19. ***
    பதிவு பக்கம் வரவேண்டாம் என்றால் வரவில்லை
    ****

    உங்க கிட்ட கணேச அனுப்பறேன் !

    ReplyDelete
  20. ஐயய்யோ..வேண்டாம்ப்பா...கண்டிப்பா வரேன்

    ReplyDelete
  21. யூ டூ ராகி சார்...

    கலக்கல். நாடகத்துக்கு ரெண்டு டிக்கெட் பார்சல்

    ReplyDelete
  22. மக்கள் வரிப் பணத்தை ,வீணாக்குபவர்களையெல்லாம் விட்டு விட்டு ,பாவம் ,படித்த படிப்பிற்குத் தக்க வேலை ,அது அயல் நாட்டில் கூட அமைந்ததையெல்லாம் அதையெல்லாம் ஒதுக்கிவைத்தவர் சரத் பாபு.இவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்தால் தப்பே இல்லை.
    இவரைப் போல் இன்னும் 10 இளைஞர்களாவது துணிந்து முன் வந்தால்தான் நாட்டின் நாடித் துடிப்பு சீராகும் என்பது என் [தாழ்மையான கருத்தல்ல,]உயர்ந்த கருத்து.

    ReplyDelete
  23. கோமா,

    இது என்ன அநியாயமா இருக்கு ? அயல்நாட்டுக்கு வேலைக்கு போவறது என்ன அவ்வளவு இழுக்கா ?

    வேலை செய்வதுக்கு பதில், வேலை கொடுப்பவராக மாறினார் என்று கூறுவது சரி. அதை தவிர, இந்த செயலை தியாகமாக சித்தரிப்பது சிரிப்பை வரவழைக்கிறது.

    ReplyDelete
  24. வருகைக்கு நன்றி
    goma
    மணிகண்டன்

    ReplyDelete
  25. இந்த செயலை தியாகமாக சித்தரிப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
    ......தியாகம் என்ற தொனியே என் வரிகளில் இல்லையே.


    இது என்ன அநியாயமா இருக்கு ? அயல்நாட்டுக்கு வேலைக்கு போவறது என்ன அவ்வளவு இழுக்கா ?

    ..அப்படியா சொல்லியிருக்கிறேன்....

    ReplyDelete
  26. ////goma said...
    இந்த செயலை தியாகமாக சித்தரிப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
    ......தியாகம் என்ற தொனியே என் வரிகளில் இல்லையே.


    இது என்ன அநியாயமா இருக்கு ? அயல்நாட்டுக்கு வேலைக்கு போவறது என்ன அவ்வளவு இழுக்கா ?

    ..அப்படியா சொல்லியிருக்கிறேன்...///

    :-)))).

    ReplyDelete