Wednesday, January 27, 2010

திருமணங்களும்..அழைப்பிதழ்களும்

நம் வீட்டுத் திருமணங்களுக்கு நெருங்கிய உறவினர்களையும்...நம் நண்பர்களையும் அழைப்பதில் தவறில்லை.ஆனால் அதிகம் அறிமுகம் இல்லாத..அல்லது..திருமணமாகும் மணமகள் குடும்பத்திற்கோ,மணமகன் குடும்பத்திற்கோ சற்றும் தெரியாத ஒருவருக்கு அழைப்பிதழ் கொடுப்பது வீண் என்றே எண்ணுகிறேன்.

உதாரணத்திற்கு..சென்ற வாரம் என் நண்பர் ஒருவர்..அவரது தம்பி மகள் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.எனக்கு அவரது தம்பியையோ..அவர் குடும்பத்தினரையோ தெரியாது.

ஆயினும்..அழைப்பிதழ் கொடுத்தவர் என் நண்பர்..திருமணத்திற்கு போகவில்லையெனில் தப்பாய் எண்ணிவிடப் போகிறாரே என்று போனேன்.நண்பர் பெண்ணின் பெரியப்பா என்பதால்..மணமேடையில் மிகவும் சுறுசுறுப்பாக செயல் ஆற்றிக் கொண்டிருந்தார்.நான் எப்பொதும் சங்கோஜி..பேருந்தில் கூட சப்தம் போட்டு நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்க மாட்டேன்.நடத்துநருக்கு நான் இரண்டுமுறை கேட்டால் தான் காதில் விழும்..அந்த அளவிற்கு மென்மையாகப் பேசக்கூடியவன்.

கல்யாண வீட்டில் யாரையும் தெரியாததால்..ஒரு ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.அங்கு ஒவ்வொருவரும்..அடுத்தவரிடம் பேசிக்கொண்டும்..சிரித்துக் கொண்டும் இருந்தனர். எனக்கு உள்ளூர பயம்..யாராவது வந்து..பையன் வீட்டிற்கு சொந்தமா..பெண் வீட்டு சொந்தமா என்று கேட்டு விடுவார்களோ என்று.

அந்த பயத்திலேயே..காஃபி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் கூட காஃபி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..அப்படிப்பட்டவன் போய் டிஃபன் எங்கே சாப்பிடப் போகிறேன்.

நூறு ரூபாய் மொய் எழுதிவிட்டு..சாப்பிடப் போகலாம் என்று நினைத்தேன்.ஓட்டலில் சாப்பிட்டால் கூட நூறு ரூபாய் ஆகாதா என்று மனம் கணக்குப் போட்டது.

தாலி கட்டி முடிந்ததும்..தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..மேடையில் ஏறி நண்பரைப் பார்த்து கை கொடுத்துவிட்டு மொய் கவரை திணித்தேன்.நண்பர் மணப்பெண்ணிடம் என் பெயரைக் கூறி அறிமுகப் படுத்தினார்.'ஆமாம்..இவனை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு என்னவாகப் போகிறது'என்று அந்தப் பெண் மனதில் எண்ணியபடியே..அரை சென்டிமீட்டர் வாயை அகற்றி என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தாற் போல இருந்தது.

பின் நண்பர் கண்டிப்பாய் சாப்பிட்டுட்டுப் போங்க..என்றார்.

சரி என தலையாட்டிவிட்டு..தனியாக டைனிங் ஹால் போக தயங்கி..வேகமாக வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டேன்.(நல்ல வேளை..செருப்பு காணாமல் போகவில்லை)

நேரே அருகில் இருந்த ஓட்டலுக்குப் போனேன்..சாப்பிட்டேன்..இன்று மதிய சாப்பாடு இரு நூறு ரூபாய் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்..

வீட்டில்..கல்யாணத்திற்கு போனீங்களே தாம்பூலப் பை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது..என்று தெரியவில்லை..கல்யாணப் பரிசு பைரவன் கதையாய் இருந்தாலும் பூமாலையை கடையில் வாங்கிக் கொண்டு போகலாம்..தாம்பூலப் பைக்கு எங்கே போவது..

22 comments:

  1. .//.பேருந்தில் கூட சப்தம் போட்டு நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்க மாட்டேன்.//

    ஐயா வெளியில இப்படினா வீட்டுக்கு போனா பேசவே மாட்டிங்களா

    ReplyDelete
  2. திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. அப்படி என்றால் அழைப்பிதல் அதற்கு டிக்கெட் கொடுப்பதா ?
    :)

    ReplyDelete
  3. நானா இருந்தா சாப்ட்டுத்தான் வந்திருப்பெங்கோ!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  4. நல்ல இடுகை, அது எல்லாம் பார்க்க கூடாது. அங்கு ஒரு நண்பரை உருவாக்கிக் கொண்டு, நல்லா சாப்பிட்டு வரவேண்டும். இதுதான் நம்ம பார்முலா.நன்றி.

    ReplyDelete
  5. //அத்திரி said...
    .//.பேருந்தில் கூட சப்தம் போட்டு நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்க மாட்டேன்.//

    ஐயா வெளியில இப்படினா வீட்டுக்கு போனா பேசவே மாட்டிங்களா//

    நான் பேசற ஒரே இடம் அதுதானே

    ReplyDelete
  6. //கோவி.கண்ணன் said...
    திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. அப்படி என்றால் அழைப்பிதல் அதற்கு டிக்கெட் கொடுப்பதா ?
    :)//
    ஏடாகூடமே உனக்கு மறு பெயர் கோவி யா :)))

    ReplyDelete
  7. திமா ஜொஹ்ரா said...
    அடப்பாவமே//

    எனக்காக பரிதாபப்படும் உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  8. //Jawahar said...
    நானா இருந்தா சாப்ட்டுத்தான் வந்திருப்பெங்கோ!

    http://kgjawarlal.wordpress.com//

    நான் நீங்க இல்லையே..என்ன செய்வது:-))

    ReplyDelete
  9. //பித்தனின் வாக்கு said...
    நல்ல இடுகை, அது எல்லாம் பார்க்க கூடாது. அங்கு ஒரு நண்பரை உருவாக்கிக் கொண்டு, நல்லா சாப்பிட்டு வரவேண்டும். இதுதான் நம்ம பார்முலா.நன்றி.//

    நல்ல ஃபார்முலா..ஆனால் என்னால் முடியவில்லையே

    ReplyDelete
  10. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    சரிதான் .//

    எது..நான் செய்ததா..

    ReplyDelete
  11. இதுல கூத்து என்னான்ன சுற்றி இருக்கிறவங்க எல்லோரும் ஓசில சாப்பிடவந்தவனை இளக்காரமா பார்க்கிறமாதிரியே நமக்கு தோணும்.

    அதுக்காக சப்பிடாம வந்தது டூமச்.

    அவ்வளவு பண்ணிட்டிங்க அதைப்பண்ண மாட்டிங்களா.

    ReplyDelete
  12. //அக்பர் said...
    இதுல கூத்து என்னான்ன சுற்றி இருக்கிறவங்க எல்லோரும் ஓசில சாப்பிடவந்தவனை இளக்காரமா பார்க்கிறமாதிரியே நமக்கு தோணும்.

    அதுக்காக சப்பிடாம வந்தது டூமச்.

    அவ்வளவு பண்ணிட்டிங்க அதைப்பண்ண மாட்டிங்களா.//

    பண்ண முடியலையே!

    ReplyDelete
  13. கொஞ்சம் தர்ம சங்கடமான விஷயம் தான்.

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  15. ச்ச...என்ன நீங்க.இப்பிடி இருக்கலாமா ?
    தைரியமா கலகலன்னு இருங்க.

    ReplyDelete
  16. //ஹேமா said...
    ச்ச...என்ன நீங்க.இப்பிடி இருக்கலாமா ?
    தைரியமா கலகலன்னு இருங்க.//

    கலகல :)))

    ReplyDelete
  17. என்னாண்ணே உங்களுக்கு இவ்வளவு கூச்சமா?? இதுக்கு நீங்க போகாமலே இருந்திருக்கலாம். இல்லையினா துணைக்கு என்ன மாதிரி தைரிய சாலிங்க ரெண்டு பேரை கூட்டிட்டு போயிருக்கலாம்... :-))

    அழைப்பிதழ் கொடுப்பவர்கள் இதை யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  18. ஒரு நல்ல சாப்பாடு போச்சே

    ReplyDelete
  19. அடுத்த முறை இப்படி ஏதேனும் அழைப்பு வந்தால் நான் அழைப்பு அனுப்பப் போவது உங்களுக்குத்தான்.வருகைக்கு நன்றி ரோஸ்விக்

    ReplyDelete
  20. //நசரேயன் said...
    ஒரு நல்ல சாப்பாடு போச்சே//

    சாப்பிடாமலேயே நல்ல சாப்பாடுன்னு எப்படி சொல்ல முடியும்

    ReplyDelete