Friday, March 5, 2010

நாஞ்சில் நாடனின் 'நீலவேணி டீச்சர் ' சிறுகதை


வார இதழ்களில் சிறுகதைகளே அதிகம் வருவதில்லை என வாசகர்கள் சொல்வதும்..சிறுகதைகள் இப்போதெல்லாம் அதிகம் படிக்கப்படுவதில்லை என இதழ் ஆசிரியர்கள் தரப்பு சொல்வதும் வாடிக்கையாய் விட்டது.ஆனால் பல சிறுகதைகள் இன்னமும் நம்மால் மறக்கப் படாமல் மூளையின் ஒரு ஓரத்தில் சப்பணம் போட்டு அமர்ந்துக் கொண்டு இருப்பது என்னவோ உண்மை.அப்படிப்பட்ட அருமையான ஒரு சிறுகதை ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பின் இந்த வார விகடனில்(10-3-10) படித்தேன்..உங்களில் எத்தனைப் பேர் அதைப் படித்திருப்பீர்கள் எனத் தெரியாது.படிக்கவில்லையெனில்..கண்டிப்பாக தேடி எடுத்துப் படியுங்கள்.

அந்தக் கதை..நாஞ்சில் நாடன் எழுதியுள்ள 'நீலவேணி டீச்சர்' என்னும் கதை.திருமணமாகா முதிர் கன்னியின் கதை.இந்த இடுகை ஒரு திறனாய்வு இல்லை..அவர் எழுத்து நடை பற்றியது.அவர் எழுத்தென்னும் தேனில் சில துளிகள்.

'எல்லோருக்கும் ஒரு நினைப்பு..39 வயதிலும் திருமணமாகவில்லை.பாலுறவுக்கு கொதித்துக் கொண்டிருப்பாள் என.கனிந்த ரஸ்தாளிப் பழம் போல..தொடப் பொறுக்காமல் கையோடு அடர்ந்து வந்துவிடும் என்று'

'பொதுவாகவே..தமிழாசிரியை என்றால் யாவர்க்கும் இளப்பம்தான்..'அன்னா தமிள் போகுது' என்றால், உடன் பணிபுரிபவரும்'என்ன தமிள் இன்னிக்கு விடுப்பா' என்கிறான்

'உன் முத்தம் என்னுதட்டில் அக்கினித் திராவகமாக எரிந்தது'. உதட்டையே அரித்துத் தின்னும் முத்தங்கள் போலும்'

முகங்கள் புதுப் பொருள் எதனையும் புலப்படுத்துவது இல்லை.அலுப்பு,ஆயாசம்.ஆசை,அலப்பு எனக் குறிப்பான சில பொருட்கள் தவிர்த்து உற்சாகமான முகங்கள் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே வாய்க்கின்றன.

ஐந்து பவுன்பேரத்தில் தட்டியது..மாற்றல் கிடைக்காது என வழுக்கியது..நிறக்குறைவு என நிராகரிப்பானது..மூங்கில் கழிப்போல் என்றும், முன் பல் தூக்கல் என்றும், வக்கை நாடி என்றும்,ஏறு நெற்றி என்றும்,கொக்குக் கழுத்து என்றும், கூனல் முதுகு என்றும், மூல நட்சத்திரம் என்றும்...என்ன 'உம்' கொட்டுகிறீர்கள்...நாற்பத்தியிரண்டையுமா சொல்லவியலும்?

தெரிவை கடந்த இறுதிப் பருவம்..பேரிளம் பெண்..நாற்பதுக்கு மேல் நாடி ஒடுங்குவது வரை..ஒப்பனைகள் சில காலம் முகத்தில் பொய் எழுதும்..பின்பு ஒப்பனைகளும் சண்டையில் தோற்றதாயின் இளிப்புக் காட்டும்.காசுடையவர் காதின் பின் பக்கம், நாடியின் கீழ்ப்பக்கம் கீறித் தோலிழுத்துக் கட்டி..சுருக்கங்கள், தொய்வுகள் அகற்றி முகத்தை விறைப்பாக்கலாம்.மத்தளத்திற்கு வார் பிடிப்பது போல..தொய்ந்து தளர்ந்த தனங்களை எடுத்துக் கட்டலாம்.

ஆண் மனத்தோலைச் சுரண்டினால் அரிப்பெடுக்கும் சேனைக்கிழங்கின் சிவப்புத் தெரிகிறது..புளிவிட்டு அவித்தாலும் தணியாத அரிப்பு..ஊரல்..நாக்குத் தடிப்பு

அறிகுறிகள் சாற்றின, ஆண்டுகள் ஓரிரெண்டில் ஈஸ்ட்ரோஜன் அரணும் அழிந்துவிடும் என..

தின்ற தட்டுகளே எச்சில் எனில் திரும்பத் திரும்பத் துய்க்க என மொய்த்த கண்ணெச்சல் பெண்ணா? மொய்த்து, நிராகரித்து, சலித்து.ஊசிநூலிழுத்து, புளித்து, நுரைத்துப் புழு தெறித்து விழும் மெய்யா?

கூடத்தில் பாய் விரித்து, அப்பா..அம்மா..நீலவேணி..என்னும் வரிசைக் கிரமத்தில்..ஈழப்போர்க்களத்தில் அடுக்கிய பிணங்கள் போல தலையோடு பொதிந்து மூடி உறங்க என்பது நியதி

காலமென்னும் கொதிக்கும் எண்ணெய் உருளியில் முறுகிச் சிவக்கின்றன உறவுகள்

இப்படி அருமையான நாடனின் வரிகளை இக்கதையில் சொல்லிக் கொண்டே போகலாம்..தமிழ்ச்சுவை மனநிறைவை அளிக்கும் அதே நேரத்தில்..கதையின் கரு மன கனத்தை ஏற்படுத்துவதையும் தவிர்க்க இயலாது.

தவறாமல் படியுங்கள்..

நாஞ்சில் நாடன் Hats off to you

19 comments:

  1. இந்த நீலவேணி டீச்சர் கேரக்டர் போலவே இப்போது ஒரு ஆசிரியையை நான் இப்போது சந்தித்திருக்கிறேன். இவர் வாழ்வில் மட்டுமே துயரம் என்று நினைத்தேன். ஆனால் இதுபோல் நிறைய நீல வேணிகள் இருக்கிறார்கள் என்பதை மனதில் கணத்துடன்உணரவைத்த கதை.

    ReplyDelete
  2. அன்பின் டிவீஆர்

    நானும் படித்தேன் - ரசித்துப் படித்தேன் - இக்காலக் கதைகள் போல் இல்லாமல் இயல்பாக இருந்தது- அனைத்து வரிகளுமே மனதை ஈர்த்தன. 43 நல்ல வரிசை எண்ணா ........

    ம்ம்ம்ம்ம் - நல்ல கதை

    ReplyDelete
  3. i also read the story...
    My village is just 3 km from Nanjil' sir and the village he mentioned " cholapuram " is there in nnjil nadu..

    I know, nanjil sir has taken a story out of Nanjil nattu pillai society , where these days more no of "Muthir kanni" are there.. Women got good eduaction till there 30 s and finllay ended up living a saint's life...

    ReplyDelete
  4. .தமிழ்ச்சுவை மனநிறைவை அளிக்கும் அதே நேரத்தில்..கதையின் கரு மன கனத்தை ஏற்படுத்துவதையும் தவிர்க்க இயலாது.

    .........அழகான விமர்சனம். நன்றி. அருமையான கதை தந்த நாஞ்சில் சாருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
    திருவாரூரிலிருந்து சரவணன்

    ReplyDelete
  6. //cheena (சீனா) said...
    ம்ம்ம்ம்ம் - நல்ல கதை//

    நன்றி Cheena Sir

    ReplyDelete
  7. //karthi said...
    i also read the story...
    My village is just 3 km from Nanjil' sir and the village he mentioned " cholapuram " is there in nnjil nadu..

    I know, nanjil sir has taken a story out of Nanjil nattu pillai society , where these days more no of "Muthir kanni" are there.. Women got good eduaction till there 30 s and finllay ended up living a saint's life...//


    வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி Karthi

    ReplyDelete
  8. //Chitra said...
    அழகான விமர்சனம். நன்றி. அருமையான கதை தந்த நாஞ்சில் சாருக்கு பாராட்டுக்கள்.//

    நன்றி Chitra

    ReplyDelete
  9. நானும் படித்தேன்.நெஞ்சை நெகிழச் செய்த கதைகளில் ஒன்று.
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி தாமோதர் சந்துரு

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு டி.வி.ஆர்.சார்!

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி பா.ரா.

    ReplyDelete
  13. அன்னாச்ச்யின் கும்பமுனி அவதாரம் டாப்.நினைத்தாலே சிரிப்பு தான்.

    ReplyDelete
  14. //43 நல்ல வரிசை எண்ணா ........//

    :-)))

    ReplyDelete
  15. அருமையான கதை. நானும் விகடனில் படித்தேன்.
    இக்கதைக்கு நாஞ்சில் அவர்கள் வைத்த பெயர் "தெரிவை". விகடன் அவரது அனுமதியுடன் ஏதோ ஷகிலா பட டைட்டில் போன்று "நீலவேணி டீச்சர்" என்று வைத்துவிட்டது.
    இதை நாஞ்சில் நாடன் அவர்கள் தான் சொன்னார். :-)

    ReplyDelete