Tuesday, March 9, 2010

வள்ளுவனும்..கண்ணழகும்..

கயல்விழி,மான்விழி,குவளைக் கண் என கண்களைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் ஏற்பட கண் பிரதான உறுப்பாய் அமைந்து விடுகிறது.காதலுக்கு கண்ணில்லை,கண்டதும் காதல் என்றெல்லாம் சொல்லப் படுகிறது.

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..கண்கள் இரண்டும் உன்னைத் தேடுதே..கண்ணுக்குள் சிக்கிக் கொண்ட..கண்களும் கவி பாடுதே..கண்கள் இரண்டால்.. என்றெல்லாம் கவிஞர்கள் காதலுக்கும்..கண்ணிற்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். அவ்வளவு ஏன்..காதலியின் இதயத்தில் காதலன் நுழையும் வாசல் அவளின் கண்களே..என்பதை கவியரசு..'இதயத்தின் வாசல் விழியல்லவா?' என்கிறார் ஒரு பாடலில்..

இவர்களுக்கெல்லாம் முன்னோடி யார்..என்றால்..வழக்கம் போல வள்ளுவனே முன் நிற்கிறான்..கண்ணழகு பற்றி அவர் இன்பத்து பாலில் பல குறள்களில் சொல்கிறார்.முதலில் தலைவனைக் கவர்வதும்..கடைசிவரை நிற்பதும் தலைவியின் கண்ணழகே என்கிறார்.

காதலில் அடையும் ஐம்புலவின்பத்திலும் ..கண்டு, கேட்டு எனக் கண்,காது ஆகியவற்றலாகும் இன்பத்தை முதலில் குறிக்கிறார்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

தலைவி வீசும் விழிவேலுக்கு எதிராக தலைவன் அவளை நோக்க..அக்கணமே அவள் பார்வை..அவள் மட்டுமே தாக்குவது போதாது என்று தானையுடன் தாக்குவது போல இருந்ததாம்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

எமனைப் பற்றி தலைவன் ஏதும் அறிந்ததில்லை..ஆனால் எமன் எனப்படுபவன் பெண்ணுருவில் வந்து போர்த்தொடுக்கக் கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை தலைவியின் பார்வையால் அறிகிறானாம்.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

பெண்மையின் வார்ப்படமாக திகழும் தலைவியின் கண்பார்வை மட்டும் மாறுபட்டு உயிரைப் பறிப்பது போலத் தோன்றுகிறதாம்.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்

தலைவியின் புருவம் மட்டும் கோணாமல் நேராக இருக்குமே யாயின்..அவள் கண்கள் அவனுக்கு நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யாதாம்.

இன்னுமொரு இடத்தில்..

பிணயேர் மடநோக்கும்.. என்கிறார்..பெண் மானைப் போன்று இளமைத் துள்ளும் பார்வையாம்...

(கண்ணழகு தொடரும்)

14 comments:

  1. அதனாலதான் பய புள்ளைக சைட் அடிக்கிறதுங்கறாங்களோ?:)). அழகான தொகுப்பும் விளக்கமும்.

    ReplyDelete
  2. விழியில் விழுந்து... :)

    கண்ன கட்டுது சார்

    ReplyDelete
  3. வள்ளுவர் வள்ளுவர்தான். என்னா சொல்வளம்..

    கண்கள் ஒரு கண்ணாடி. நாம் மனதில் என்ன நினைக்கிறோம் என்ப‌தை அழகாக காட்டிக் கொடுத்துவிடும். திருட்டுமுழி என்றுகூட சொல்வாங்க.

    நல்ல அருமையான விளக்கங்கள் டிவிஆர் சார்.

    ReplyDelete
  4. கண் பட்டுவிடப் போகிறது

    ReplyDelete
  5. //D.R.Ashok said...
    விழியில் விழுந்து... :)

    கண்ன கட்டுது சார்//


    நன்றி D R Ashok

    ReplyDelete
  6. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    நல்ல அருமையான விளக்கங்கள் டிவிஆர் சார்.//

    வருகைக்கு நன்றி Starjan

    ReplyDelete
  7. //goma said...
    கண் பட்டுவிடப் போகிறது//

    கண்ணுபடப் போகுதய்யா படப் பாடல் ஞாபகம் வந்துவிட்டது கோமா
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. நல்ல பதிவு.. யாரும் கண் வச்சுராதீங்க :-)

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி உழவன்

    ReplyDelete
  10. கண்ணழகு அழகு. அதை எழுதிய எழுத்தும் அழகு.

    கண்கள் இரண்டால் பாட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சார்.

    ReplyDelete
  11. //அக்பர் said...
    கண்ணழகு அழகு. அதை எழுதிய எழுத்தும் அழகு.

    கண்கள் இரண்டால் பாட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சார்.//

    சேர்த்துவிட்டேன் அக்பர்..
    வருகைக்கு நன்றி

    ReplyDelete