Sunday, September 12, 2010

காதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் தமிழ் - 21




(132- புலவி நுணுக்கம் தொடர்ச்சி)

முந்தைய பதிவிற்கு

எதற்கெடுத்தாலும்..சந்தேகப் படுகிறாளே..இவள் நம் மீது சந்தேகப் படக்கூடாது, அதே நேரம் அவளை மகிழ்விக்கவும் வேண்டும்..என்ன செய்வது என எண்ணிய காதலன்..'உன்னை நினைத்தேன்' என்கிறான்..

ஆகா..இவர் நம்மை நினைத்தாரே என காதலி மகிழ்வாள் என எண்ணுகிறான்..அவளோ..'அப்படியானால்..இவ்வளவு நாளாக என்னை மறந்திருந்தீரா..ஏன் மறந்தீர்? என அவனிடம் ஊடல் கொள்கிறாள்.காதலன் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது..அந்த சமயம் அவனுக்கு தும்மல் வர..தும்முகிறான்..'யார் உன்னை நினைத்தார்கள்..என்னைவிட முக்கியமானவர் யார்..' என ஊடல் மாற அழத் தொடங்குகிறாள்.அவனுக்கு அடுத்த தும்மல் வர, எதற்கு வீண் வம்பு..என தும்மலை அடக்குகிறான்.அதைப் பார்த்த அவள்..'ஓஹோ..உமக்கு நெருக்கமானவர் உம்மை நினைப்பதை..என்னிடம் இருந்து மறைக்க..வரும் தும்மலை அடக்குகிறீர்களா..என்கிறாள்.

அவளை சமாதானப் படுத்த வேறு வழி அறியாத அவன் தன்நிலை இறங்கி, பணிந்து..அவள் ஊடலை நீக்கி..மகிழ்விக்க எண்ணுகிறான்..அப்போதும் அவனிடம்..'இப்படித்தான் மற்ற பெண்களிடமும் இப்படித்தான் அசடு வழிய நடந்துக் கொள்வீரா?' என்று கோபப் படுகிறாள்.

அவள் அழகில் மயங்கியவன்..அவளை இமைக் கொட்டாமல் பார்க்கிறான்..இதற்கும் கோபமுற்று..இப்படி என்னைப் பார்த்து..யாருடன் என்னை ஒப்பிடலாம் என என்னை இப்படி பார்க்கிறீர்..என கோபத்தின் உச்சிக்குப் போகிறாள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள் -1316

('உன்னை நினைத்தேன்' என்று காதலியிடம் சொன்னதும்..'அப்படியாயின் நீர் என்னை மறந்திருந்ததால் தானே நினைத்திருக்க முடியும்?' எனக் கேட்டு "ஏன் மறந்தீர் ?" என்று அவள் ஊடல் கொண்டாள்)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று -1317

(தும்மினேன்.. என்னை வாழ்த்தினாள்..உடன் சந்தேகத்துடன்..'யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்' என்று அழத் தொடங்கினாள்)

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று -1318

(தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்தவள்..நீர் உள்ளத்தில் உள்ளவரை என்னிடம் மறைக்கிறீர் என அழுதாள்)

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று -1319

(தான் பணிந்து போனாலும் உடன் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடப்பீரா என்று கோபம் அடைகிறாள்)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று -1320

(அவளையே நினைத்து பார்த்தாலும்..யாருடன் ஒப்பிட்டு நோக்கினீர் என்று கோபம் கொள்வாள்)

இப்படிப்பட்ட சந்தேகமும்...கோபமும் கொண்ட காதலியுடன் (தலைவியுடன்) காதலன் (தலைவன்) எப்படி காலம் தள்ளுவான்...பாவம் அவன் நிலை

8 comments:

  1. \\ வானம்பாடிகள் said...

    :))good morning sir\\

    வழிமொழிகிறேன்:-)

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. அந்த தும்மல் மேட்டரை நர்சிம்மும் பதிவிட்டிருந்தார். மறுமுறை படித்தாலும் அழகு:)

    ReplyDelete
  3. அழகான தொகுப்பு! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி அபி அப்பா

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி வித்யா

    ReplyDelete