Friday, September 12, 2014

குறுந்தொகை-104



தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் பிரிந்து வாழ்வதில் பொறுக்கமுடியா தலைவி, “ பின்பனிப் பருவத்திற் பிரிந்த தலைவர் பலநாள் செல்லவும் மீண்டும் வந்திலர்; நான் எங்ஙனம் பொறுத்து கொள்வேன்!” என்று கூறியது.)

பாலை திணை- பாடலாசிரியர் காவன்முல்லைப் பூதனார்

இனி பாடல்-
 
அம்ம வாழி தோழி காதலர
   
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
   
தாளித் தண்பவர் நாளா மேயும்
   
பனிபடு நாளே பிரிந்தனர்

பிரியு நாளும் பலவா குவவே.

                  - காவன்முல்லைப் பூதனார்



உரை _

தோழி ஒன்று கூறுவேன் கேட்பாயாக! தலைவன் , நூலற்ற முத்துமாலையிலிருந்து தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை விடியலில் பசுக்கள் மேயும் பனி விழும் காலத்திலே பிரிந்து சென்றார்.அங்ஙனம் பிரிந்து சென்று வாழ்ந்த நாட்களும் பலவாகின்றன.நான் அதை எப்படி பொறுப்பேன்.

 
    (கருத்து) தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் திரும்பிவரவில்லை.

(தாளிஅறுகு-ஒருவகைக் கொடி.பசு மேய்கையில் அறுகின் நுனியில் உள்ள பனித்துளிகள்)

   
   

2 comments: