Saturday, November 13, 2010

குறள் இன்பம் - 1

திருக்குறள்களில் காணப்படும் பல சீரிய கருத்துகள், வள்ளுவர் பயன்படுத்தியுள்ள சொற்கள்,அடுக்குச் சொற்கள்,தமிழ் விளையாட்டு ஆகியவற்றை..நான் ரசித்தவற்றை ஒரு தொடர் பதிவாக எழுத உள்ளேன்.வாரம் ஒரு இடுகை.படிக்க படிக்க தேன்.. குறளதில் சொல்லப்படாததே இல்லை.ஆகையால் இவ்விடுகைகளை விடாமல் நண்பர்கள் படித்து ஆதரவு அளிப்பர் என நம்புகிறேன்.நன்றி.

சொல் விளையாட்டு பல கவிஞர்களுக்கு கை வந்த கலை.
திருவள்ளுவரும் தன் ஒன்றே முக்கால் அடி குறள்களில் பலவற்றில் இதைக் கையாண்டுள்ளார்.
வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் மழையின் சிறப்பை இப்படிக்கூறுகிறார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

இந்தக் குறள் சாதாரணமாக அனைவருக்கும் தெரியும்.ஏதேனும் ஒரு திருக்குறளைக் கூறு என யாரேனும் சொன்னால், தம் மேதாவித் தனத்தைக் காட்ட உடன் இந்தக் குறளைச் சொல்பவர்கள் அதிகம்.தப்பாவேனும் சொல்லி விடுவார்கள்.ஆனால் எத்தனைப் பேருக்கு இதற்கான பொருள் தெரியும் எனத் தெரியாது.

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.

அடுத்து ஒரு குறளைப் பார்ப்போம்

தீவினையச்சம் என்னும் அதிகாரத்தில் இரண்டாம் குறள்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்ச வேண்டும்.

(தொடரும்)

13 comments:

  1. ரெண்டும் நல்ல ஆரம்பம்:)

    ReplyDelete
  2. நல்லதொரு பணி.நன்றி.

    ReplyDelete
  3. //யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.//

    இப்போது எல்லா விளைநிலங்களும் பிளாட்டுகளாக மாறுவது கண்டு மழை தன் போக்குகளை மாற்றிக் கொண்டுவிட்டதோ..!

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    தொடரட்டும் உங்களது பணி.

    ReplyDelete
  5. நல்ல பயணுள்ள பதிவு.

    ReplyDelete
  6. நன்றி கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  7. நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்

    ReplyDelete