Wednesday, May 20, 2015

குறுந்தொகை-214



காதலனைப் பிரிந்த காதலி ,பித்துப் பிடித்த நிலையில் இருக்கிறாள்.இதை அறியாத அவளது தாய் இது தெய்வக் குற்றம்.என எண்ணி அந்த முருகனுக்கு வேண்டுதலால் பயன் ஏது (வெறியாடுதல்...என்றால் ஆண்டவனை வேண்டி மாலையிடுதல் எனக் கொள்ளலாம்)

தோழி கூற்று
(தலைவியின் வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறி யாட்டெடுத்த இடத்து, “இவளுக்குத் தழையுடையுதவி அன்பு செய்தான் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியெடுப்பதனால் பயனில்லை” என்று தோழி கூறி உண்மையை வெளிப்படுத்தியது.)


குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கூடலூர் கொழார்

இனி பாடல்-

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
 
பிறங்குகுர லிறடி காக்கும் புறந்தாழ்
 
அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி
 
திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவிச்

செயலை முழுமுத லொழிய வயல
 
தரலை மாலை சூட்டி
 
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே.


                    -கூடலூர் கிழார்.

’.

 மரங்களை வெட்டியகுறவன்,  கொல்லையை உழுதுவிதைத்த, விளங்குகின்ற கதிரைஉடைய தினையை,  காவல் செய்யும்,  புறத்தின் கண்ணே தாழ்ந்த அழகிய சிலவாகியகூந்தலையும், மெலிந்த சாயலையும் உடைய, தலைவியினது,  செவ்விதாகஅமைத்த ஆபரணத்தை அணிந்த,  பெரிய தழையாகிய உடையை அளித்து, அசோகினது பெருத்த அடி மரம் ஒழிந்துநிற்ப, அதனோடு தொடர்பு இன்றி அயலதாய்நின்ற,  அலரி மாலையை முருகனுக்குச்சூட்டி வெறியெடுத்து, இந்த ஆரவாரத்தைஉடைய ஊரானது,  மயக்க முற்றது.



    (கருத்து) தலைவிக்குத் தழையுடை அளித்த அன்பன் ஒருவன்உளன்.


 வெறியாடுவார் அரலை மாலையை முருகக் கடவுளுக்குச் சூட்டுதல்வழக்கம்  அரலை என்பது இப்போது அரளி என வழங்கும்.

 
    இதனால், ‘தலைவனொருவன் தலைவி தினைப்புனங் காக்கும் காலத்தில் அங்கு வந்து அசோகந் தழையுதவி அவளோடு அளவளாவிச் சென்றான்’ என்பதைத் தோழி உணர்த்தினாள்.

No comments:

Post a Comment