Monday, November 30, 2009

வெற்றியும்..தோல்வியும்..


நாம் ஒரு போட்டியில் கலந்துக் கொள்கிறோம்..அதில் வெற்றிக் கனியை நம்மால் பறிக்க முடியவில்லை என்பதால்..மனம் துவண்டுவிடக் கூடாது.

ஒருவனுக்கு தோல்விகள் வரலாம்..ஆனால்..தோல்வி மனப்பான்மை வரக்கூடாது.

மின்சார பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அதை தன் முதல் முயற்சியிலேயே கண்டுபிடிக்கவில்லை.அவர் இரவு, பகல் பாராது..மெய் வருத்தம் பாராது,பசி பற்றி கலைப்படாது,தூங்காது,காலம் பற்றி கவலைப்படாது கருமமே கண்ணாக ஆராய்ச்சி செய்தார்.கடைசியில் பல்பை வடிவமைத்துவிட்டு..ஆய்வு செய்யும் போது அது வேலை செய்யவில்லையாம்.

இத்தனை காலம் தன் உழைப்பு வீணாகி விட்டதே என அவர் கவலைப் படவில்லையாம்.மாறாக அதை ஒளிர வைக்க மேலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

கிட்டத்தட்ட ஆயிரம் முறைகளுக்கு மேல் முயன்ற பின் பல்பை எரிய வைத்தார்.

அப்போது அவரிடம் ஒருவர் கேட்டாராம்..'இத்தனை முறை தோல்வியடைந்த பிறகும், எப்படி விரக்தி அடையாமல் இருந்தீர்கள்?' என்று.அதற்கு எடிசன் சொன்னாராம்,'எனக்கு அவை தோல்வியில்லை.அந்த பரிசோதனைகள்..மின்சார பல்பை எப்படியெல்லாம் தயாரிக்கக் கூடாது..என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது' என்றாராம்.

தோல்விகள் ஒருவனுக்கு பின்னடைவு அல்ல..படிப்பினை..

தோல்விகள் வெற்றியை அடையச் செய்யும் படிக்கட்டுகள்.

அதற்கு உதாரணம் ஆபிரஹாம் லிங்கன்..

அவருக்கு 21 வயதில் வியாபாரத்தில் தோல்வி..22 வயதில் மாநில தேர்தலில் தோல்வி.26 வயதில் நரம்பு தளர்ச்சி நோய் 28 வயதில் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி..33 வயதில் மக்களவை தேர்தலில் தோல்வி..46 வயதில் உதவி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி..48 வயதில் செனட் தேர்தலில் தோல்வி..50 வயதில் அமெரிக்க அதிபராக வெற்றி..

எந்த நிலையிலும் உற்சாகத்தை இழக்காமல் முயன்றால்..வெற்றிக்கனி நம் மடியில் தானாக விழும்.

Sunday, November 29, 2009

அன்பளிப்பு (சிறுகதை)

எங்கள் வங்கியின் ஆண்டிப்பட்டி கிளைக்கு என்னை அதிகாரியாக மாற்றியிருக்கிறார்கள்.

உடன் வேலையில் சேர்ந்து அந்தக் கிளையில் தற்போது உள்ள சுப்புராமன் ஒரு வாரத்திற்குள் பொறுப்பிலிருந்து விடுவித்து சென்னை பிரதானக் கிளைக்கு அனுப்புமாறு எனக்கு உத்தரவு.

அடுத்த நாள் காலை..ஆண்டிப்பட்டிக்குப் போய் சுப்புராமனை சந்தித்தேன்..அவர் எனக்கு அந்தக் கிளையைப் பற்றியும், வாடிக்கையாளர்கள் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது...

'ஐயா கும்புடறேனுங்க' என்று சொல்லியபடியே ஒரு கிராமவாசி கையில் ஒரு பெரிய பூசணிக் காயையும், இரண்டு கிலோ தக்காளி கொண்டுவந்து சுப்புராமனிடம் அவற்றை வைத்துவிட்டு சென்றான்.

இதெல்லாம் என்ன என்றேன்

'கணபதிராமன்..நாம சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுக்கிறோம்..அதை வைச்சு அவங்க வியாபாரம் பண்ணி முன்னுக்கு வராங்க.இப்ப வந்து போனானே அவன் ஒரு காய்கறி வியாபாரி.நான் அவனுக்கு வங்கிக்கடன் கொடுத்ததாலே இந்தக் காய்களை அன்பளிப்பா கொடுத்துட்டுப் போறான்..'

'இது போல நாம வாங்கறது தப்பில்லையா?'

'நான் அவன் கிட்ட பணமா வாங்கறேன்..தவிர நாம கொடுக்கற பணத்தால அவங்களுக்கு ஆயிரக்கணக்கில லாபம் வர்றப்போ..நமக்காக கொஞ்சம் செலவு பண்ணினா என்ன தப்பு ?'

நான் அவரிடம் பதில் ஏதும் பேசவில்லை.

அடுத்த நாள் அலுவலகம் செல்ல சட்டையைத் தேய்க்க சலவைக் கடைக்கு போன போது..என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்துவிட்டார் கடைக்காரர்.

'ஐயா..வங்கிக்கு வந்திருக்கிற புது அதிகாரி நீங்க..எனக்கு நீங்க இதுக்கெல்லாம் காசு தரவேணாம்..சுப்புராம ஐயா போல இந்த ஏழை மேல கருணை வைச்சா போதும்' என்றார் கடைக்காரர்.

மேலும் விசாரித்த போது ரிக்சாக்காரர் ஒருவருக்கு கடன் கொடுத்ததால்..சுப்புராமன் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சென்றுவர இலவச ரிக்சா சவாரி.

சுப்புராமனால் பயனடைந்த தையல்காரன் இவரது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை தைத்துக் கொடுத்திருக்கிறான்.மளிகைக் கடைக்காரன் ஒருவன் அவரது மாதாந்திர மளிகைச் செலவுகளைக் கவனித்துக் கொள்கிறான்.

நான் விசாரித்த வரையில் சுப்புராமன் கடன் வழங்கி அதற்கு பதிலாக எந்த அன்பளிப்பையும் கொடுக்காதவர் ஒருவர் மட்டுமே இருந்தார்..

சுப்புராமனைப் பற்றி மேலிடத்தில் புகார் செய்யலாமா..வேண்டாமா..எனக் குழம்பிக்கொண்டிருந்த எனக்கு..அவரை..அவரது இல்லத்தில் சென்று பேசினால் என்ன? என்ற எண்ணம் எழ அவரது வீடு நோக்கிப் போனேன்.

வீட்டின் வாசலில் சிறு கும்பல்..சுப்புராமனுக்கு திடீரென இரவு மாரடைப்பு வந்து..மருத்துவர் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டதாம்.

'நான் கடன் வழங்கினவங்க எல்லாரும் அன்பளிப்பு கொடுக்கறாங்க..ஆனால் உன்னால் மட்டும் எதுவும் தரமுடியாதுடான்னு சொல்வீங்களே..ஆனா நான் இப்ப இலவசமா கொடுக்கப்போற சவப்பெட்டிலதான் நீங்க போகணும்' என்று கூறியபடியே அழுது கொண்டிருந்தான் ஒருவன்.

'அவன் யார்?' என்று அருகிலிருந்தவரை விசாரித்தேன்.அவன் பெயர் அந்தோணி..சவப்பெட்டி தயாரிக்கிறவன்.சுப்புராமன் அவனுக்கும் வங்கிக் கடன் கொடுத்திருக்கிறார்' என்றார் அவர்.

செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு படிச்சிருக்கிறேன்..ஆனால் இந்த சுப்புராமன் தனக்கு வர வேண்டிய அன்பளிப்பை செத்தும் பெற்றுக் கொண்டார்.

Saturday, November 28, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 9

ராமனுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது..அயோத்தியில் அரசகுரு வசிஷ்டர் ராமனுக்கு மணிமுடி சூட்டுகிறார்.இது எல்லா ராமாயணத்திலும் பொதுக் கருத்து.இதற்குமேல் கம்பனின் கற்பனையைப் பாருங்கள்.

வசிஷ்டரோ..அரச வம்சத்தினரின் குரு..எனினும் அரச மணிமகுடத்தைத் தானே எடுத்துச் சூட்டும் உரிமை அவருக்கில்லை.உயர்ந்தோர் எடுத்துக் கொடுக்க அதனை வாங்கிச் சூட்டும் உரிமையே அம்முனிவனுக்குரியது.

மணிமகுடத்தை எடுத்துக் கொடுக்கும் தகுதி வாய்ந்த உயர்ந்தோர் யார்? உலகம் என்னும் அழகிய தேர் இனிது இயங்க உதவும் அச்சாணி போன்றோரே வேளாளர் என்று அழைக்கப்பட்ட விவசாயிகள் .அவர்கள் வாழ்வு உயர்ந்தால் தான் அரசு உயரும்.

போர்க்களத்தில் கூட அஞ்சாது நின்று எதிர்த்துப் பகைவரை புறங்கண்டு துரத்தும் பகை வீரர் வெற்றியும்..விவசாயிகள் கலப்பை ஊன்றி உழுது விளையும் நெல்லின் பயனே ஆகும்.இதையே சங்கப்புலவர் வெள்ளைக்குடி நாகனார்..புறநானூறில் கூறுகிறார்.

வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தருஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே

இதையே கவிஞர் மருதகாசி

மண்ணிலே முத்தெடுத்து வழங்கும் குணமுடையோன் விவசாயி ...என்கிறார்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

என்கிறார் திருவள்ளுவர்.

வள்ளுவனைப் பின்பற்றி எழுபது பாடல்களில் அவ் ஏரைப் புகழ்ந்து ஏரெழுபது பாடியவர் கம்பர்...விவசாயியே உயர்ந்தவர் என்று உறுதிக் கொண்டவர் ஆனார்.

அதனால் மணிமகுடத்தை எடுத்து வசிஷ்டர் கையில் கொடுக்க ..விவசாயிகளின் தலைவராய்த் திகழும் சடையப்ப வள்ளலின் மரபினரே தகுதியானவர் என எண்ணுகிறார்.

சடையப்ப வள்லலின் முன்னோர் மகுடத்தை எடுத்து வாழ்த்தி..வசிஷ்டர் கையில் கொடுக்க..அவர் அதனை ராமனுக்கு சூட்டினார் என்கிறார் கம்பர்.

வள்ளுவனும், ஔவையும்,கம்பரும் போற்றிப் புகழும் விசாயிகள் அனைவரும் போற்றிப் புகழ வேண்டுகிறார் அருணாசலக் கவிராயர் தன் ராம நாடகத்தில்.

மீட்சிசெய்த சீதாச மேதன் ஆகவேஓங்கி
வீறும்சிங் காசனம்மேல் மேவிக் கருணைதேங்கி
மாட்சிபெறுஞ் சடையன் மரபோர் கொடுக்கவாங்கி
மணிமகு டத்தைஞான வதிட்டர் தரிக்கத்தாங்கி
காட்சியு டனேராமன் தாழ்ச்சியில் லாமல்அர
சாட்சிசெய் திருந்தானே
_ராமநாடகம்

கம்பர் முடிசூட்டுவிழாவை எப்படிச் சொல்கிறார்...

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப்
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன்றங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி

வாய் விட்டு சிரியுங்க..

1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.

2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா

3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே

4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு

5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே

6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

Friday, November 27, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (27-11-09)

ஒரு செடியின் வேர் மண்ணுக்குள்.அதன் தாகம் நீருக்குள்..அத சுவாசம் காற்றுக்குள்..அதன் ஏக்கம் சூரியன் என்ற நெருப்புக்குள்..அதன் இலட்சியம் ஆகாயம் நோக்கி....ஒரு செடிக்குள் ஐந்து பூதங்களும்.

2)உலகம் முழுதும் மதுபானங்கள் வாங்க ஒரு ஆண்டில் மக்கள் செலவிடும் தொகை 1,26,000 கோடி ரூபாய்.சிகரெட்,சுருட்டு என போதை வஸ்துக்களுக்காக ஒரு ஆண்டில் செலவிடும் தொகை 1,02,000 கோடி ரூபாய்.அபின்,கஞ்சா,ஓபியம் என சட்ட விரோத போதைப் பொருள்கள் வாங்க உலகம் செலவிடும் தொகை 75,000 கோடி ரூபாயாம்.

3)யார் என்ன சொன்னால் என்ன..உண்மையில் நம்மிடம் தவறு இல்லாதவரை..யாருடைய விமரிசனத்திற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.பிறர் ஒன்றைச் சொல்வார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டிராமல் நம் மனதிற்கு சரியென்று தோன்றுவதைத் தீர்மானமான முடிவுடன் செய்ய வேண்டும்.

4)கவிதை என்ற சொல்..பொருளுடைய சொல்.அதிலிருந்து ஒரு எழுத்தை எடுத்துவிட்டாலும் பொருள் கொடுக்கும் சொல்.'க' என்ற எழுத்தை எடுத்தால்..'விதை' கிடைக்கும்.'வி'யை எடுத்து விட்டால்
கதை கிடைக்கும்.'தை'யை எடுத்து விட்டால் கவி கிடைப்பான். - கலைஞர்

5)ஒரு ஜோக்
ஊரைச் சுற்றி கடன் வாங்கிட்டியே இனிமே என்ன பண்ணப்போறே?
ஊருக்கு நடுவே வாங்குவேன்

Tuesday, November 24, 2009

நான் என்ன படிக்கணும்?

கண்டிப்பா கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சேர்க்கணும்- என்றார் அப்பா.

'போடா...மடையா...இன்னிக்கு சாஃப்ட்வேர்க்கு மவுஸ் இருக்குன்னு சேர்த்துட்டா...எதிர்காலத்தில எப்படி
இருக்குமோ..யாருக்குத் தெரியும்? இப்பவே பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பேனி எல்லாம் ஆள்
குறைப்பு ன்னு நியூஸ் வருது' என்றார் தாத்தா.

'ஏங்க..வேணும்னா..B.Com.,படிச்ச்ட்டு CA பண்ணட்டுமே....நம்ம நாட்டிலே என்னிக்குமே
கறுப்பு பணத்தை ஒழிக்க முடியப் போறதில்லை..அதனாலே வருமானவரி கட்டாம எப்படி
ஏய்க்கலாம்ங்கற மனப்பான்மை நம்ம மக்கள் கிட்ட மாறப்போறதில்லை.
அப்படிப்பட்டவங்களுக்கு CA உதவி கண்டிப்பா தேவை இருக்கும் என்னிக்கும்' என்றாள்
படுக்கையில் இருந்தபடியே தங்கமணி.
'இல்ல..இல்ல..நம்ம குடும்பத்திலே டாக்டர் யாரும் இல்லை..அதனால டாக்டருக்குத்தான்
படிக்கணும்'இது அம்மா.

'அவன் என்ன நினைக்கிறானோ..அதை படிக்கட்டுமே..அவனை தொந்தரவு பண்ணாதீங்க'
என்றாள் பாட்டி.

'அடடா..நான் பிறந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை..அதுக்குள்ள நான் என்ன படிக்கணும்னு
என்ன சர்ச்சை..முதல்ல என் பர்த் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க'என்று கூற நினைத்து..
அதை எப்படி இவர்களுக்கு சொல்வது எனத் தெரியாமல் அழ ஆரம்பித்தது..காலையில்
தான் இந்த உலகத்துக்கு வந்த பாப்பா.

Monday, November 23, 2009

பார்த்துப் போ!!


இப்போதெல்லாம்

பொறுமையாய் இருக்கிறேன்

கோபம் வருவதில்லை

நா எனக்கு அடங்குகிறது

யாரைக் கண்டாலும் மகிழ்கிறேன்

பணத்தை

தலையிலா கொண்டு போகப்போறோம் - என

தாராளமாய் இருக்கிறேன்

ஏன் இப்படி ஒரு மாற்றம்?

பெரிசு பார்த்துப்போ என்கிறான்

துவி சக்கர இளைஞன்

இறுதிவரை பிரியாதிருக்க...


இன்று

உன் மணநாள்

இறுதிவரை துணையிருப்பாய்

என்றிருந்தேன்..

ஆயின்..வேறொருவன் துணையானாய்

மரணமே...

இனி என் துணை

மறு பிறப்பென்று ஒன்றிருந்தால்

மறவாமல் உனக்கு

மகனாய் பிறந்திடுவேன்..

அப்போதேனும்..

உன் இறுதி வரை

உனைவிட்டு பிரிய வேண்டாமே!!!!

Sunday, November 22, 2009

மனிதா..எறும்பாய் இரு..


எறும்புகளிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.ஒருவரின் எடை 75 கிலோ என்றால் அவரால் அதிகப் பட்சம் 40 கிலோ எடையைத்தான் தூக்க முடியும்.ஆனால் எறும்புகள் தன்னைவிட பல மடங்கு எடையை சர்வ சாதாரணமாக தூக்கிக் கொண்டு ஓடும் வல்லமை வாய்ந்தவை.அவை அப்படி ஒடும் போது சிறு தடையை நாம் ஏற்படுத்தினாலும்..அதைப் பற்றிக் கவலைப் படாமல் அந்த தடையின் மீது ஏறியோ அல்லது தடையை சுற்றிக் கொண்டோ தன் இலக்கை நோக்கி செல்வதில் குறியாய் இருக்கும்.இச்சமயம் கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது..

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா

தவிர எறும்புகளின் அணி வரிசை..அடடா..இவர்களுக்கு ஒழுக்கத்தை யார் கற்றுக் கொடுத்தார்கள்?

அவை வசிக்கக் கட்டும் புற்று..எறும்பில் கூட சிவில் எஞ்சினீயர்,ஆர்கிடெக்ட் உண்டா என அதிசய வைக்கும். வெளியே எத்தனை உஷ்ணமாய் இருந்தாலும் உள்ளே குளிமையாய் இருக்கும்.எறும்புகள்
திட்டமிடுவதிலும் கில்லாடிகள்.மழைகாலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே சேமித்து வைக்கும்.இப்படி திட்டமிடுதல் எவ்வளவு மனிதர்களிடம் இருக்கிறது? எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் ஊக்கம் வேண்டும் உயர்வுக்கு.இதையே வள்ளுவர்..

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு

என்கிறார்.தண்ணீர் எந்த அளவு குளத்தில் உள்ளதோ அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் அவ்வளவே இருக்கும்..அதுபோல மனிதரின் வாழ்க்கை உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் உயர்வே இருக்கும்.

ஊக்கத்துடன் செயல்படும் போது..நடுவே சோம்பேறித்தனம் வரக்கூடாது.மனிதனுக்கு அதைவிட பெரிய வியாதி எதுவும் இல்லை எனலாம்.எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாமல் உடனே செய்ய வேண்டும்.முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பித் திரிபவர்கள் வாழ்வில் இகழ்ச்சிக்கு ஆளாவர்கள்.இதையே..வள்ளுவர்

இடிபுரிந் தெள்ளஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

என்கிறார்.

எறும்பு பற்றி பாரதி என்ன சொல்கிறார்..

சிற்றெறும்பைப்பார் - எத்தனை சிறியது
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா
அவயங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர் - மகாசக்தி
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன
எறும்பு உண்ணுகிறது..உறங்குகின்றது
மணம் செய்துக் கொள்கிறது..குழந்தை பெறுகிறது
ஓடுகிறது..தேடுகிறது..போர்செய்கிறது..நாடு காக்கிறது
இதற்கெல்லாம் காற்றுதான் ஆதாரம்
மகாசக்தி காற்றைக் கொண்டுதான்
உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்

சரி..இப்பொது இடுகையின் தலைப்பிற்கு வருவோம். எறும்பைப் போல சுறுசுறுப்பும்,ஒழுக்கமும்,ஊக்கமும்,திட்டமிடுதலும் இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் முன்னேற்றம் உண்டு.

கலைஞர் என்னும் கலைஞன் - 8(இறுதிப் பகுதி)

1988ல் வந்த படம் பாடாத தேனீக்கள்.பூம்புகார் தயாரிப்பு.இளையராஜா இசை,சிவகுமார்,அம்பிகா நடித்திருந்தனர்.

1989ல் வந்த படம் தென்றல் சுடும்..ராதிகா,நிழல்கள் ரவி நடிக்க மனோபாலா இயக்கம்

1989ல் வந்த மற்றொரு படம் பொறுத்தது போதும்..பி.கலைமணி இயக்கம்.விஜய்காந்த் நடித்தது..இளையராஜா இசை

1989ல் வந்த படம் நியாயத் தராசு.கே.ராஜேஷ்வர் இயக்கம்.மேனகா பிக்சர்ஸ் தயாரிப்பு.நிழல்கள் ரவி,ராதா நடிக்க சங்கர்-கணேஷ் இசை

1989ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் ஹனீஃபா இயக்கத்தில் சிவகுமார்,ராதிகா நடிக்க இளைய ராஜா இசையில் பூம்புகார் தயாரிப்பு பாச மழை

1990ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பிரபு,நிரோஷா நடிக்க இளையராஜா இசையில் சந்தான பாரதி இயக்கத்தில் வந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன்

1993ல் வந்த படம் மதுரை மீனாட்சி.கலைஞர் திரைக்கதை, வசனம்

1996ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் செல்வா,சுகன்யா நடிக்க வந்த படம் புதிய பராசக்தி

பின் 9 ஆண்டுகள் கழித்து 2005ல் வந்த படம்..கண்ணம்மா..கலைஞர் கதை வசனத்தில் பிரேம் குமார்,மீனா நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாபா இயக்கத்தில் வந்த படம்

2008ல் வினீத்,கீர்த்தி சாவ்லா நடிக்க கலைஞர் திரைக்கதை,வசனத்தில் இளையராஜா இசையில் இளவேனில் இயக்கத்தில் வந்த படம் உளியின் ஓசை

இப்போது பெண் சிங்கம்,பொன்னர் சங்கர் தயாரிப்பில் உள்ளன.

தவிர மனோகரா(1954) தெலுங்கு,ஹிந்தி திரைக்கதை கலைஞருடையது.பராசக்தி(1957) தெலுங்கு திரைக்கதை கலைஞருடையது

1951ல் ஆடா ஜென்மா,தெலுங்கு(தேவகி)1957ல் வீர கங்கனம் தெலுங்கு (மந்திரிகுமாரி)1967ல் ஸ்திரீ ஜன்மா தெலுங்கு (பூமாலை) ஆகிய படங்களுக்கு கதை,திரைக்கதை கலைஞருடையது.

இடைவிடாமல் 85 வயது இளைய கலைஞர் இன்னமும் கலைத்துறைக்கு ஆற்றிவரும் தொண்டு பாராட்டுக்குரியது. (முற்றும்)