Sunday, November 30, 2014

குறுந்தொகை-164



காதற் விலைமகள் கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட விலைமகள் தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியை நோக்கிக் கூறுவாளாய், “தலைவி குறை கூறுதற்குரிய குற்றம் உடையேமெனின் எம்மைக் கடல் வருத்துக” என்று சொல்லியது.)

 மருதம் திணை-பாடலாசிரியர் மாங்குடி மருதன்

இனி பாடல்-

கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூன் மடநாகு
 
துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம்
 
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
 
தண்பெரும் பவ்வ மணங்குக தோழி

மனையோண் மடமையிற் புலக்கும்
 
அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே.

 
                                                  -மாங்குடி மருதன்.



  தோழி. தலைவி தன் அறியாமையாற் புலப்பதற்குக் காரணமாகிய அத் தன்மையேமாக, தலைவன் மகிழ.  நாம் ஆயினோமாயின்,  திரண்ட கொம்பையுடைய வாளை மீனினது,  நிறைந்த கருப்பத்தையுடைய மடப்ப மிக்க பெண்ணானது,  கொத்தையுடைய தேமாவினது,  உதிர்ந்த இனிய பழத்தை, கவ்வுதற்கிடமாகிய, மிகப் பழைய வேளிருக்குரிய,  குன்றூருக்குக் கிழக்கின் கண்ணுள்ளதாகிய, தண்ணிய பெரிய கடல்,  எம்மை வருத்துவதாக.

 
    (கருத்து) தலைவி அறியாமையால் எம்மைக் குறைகூறுகின்றாள்.

Saturday, November 29, 2014

குறுந்தொகை-163




தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்துந் தலைவி காமமிகுதியாற் கடலை நோக்கி, “நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றனையே; யாரால் வருத்த முற்றாய்?” என இரங்கிக் கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் அம்மூவன்

இனி பாடல்-

யாரணங் குற்றனை கடலே பூழியர்
 
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
 
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
 
வெள்வீத் தாழை திரையலை

நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.


                                 -அம்மூவன்.

 

    (ப-ரை.) கடலே, பூழி நாட்டாரது, சிறிய தலையையுடைய,  வெள்ளாட்டின் தொகுதி பரவினாற்போன்ற,  மீனை உண்ணும் கொக்குகளையுடைய,  சோலை சூழ்ந்த பெரிய துறையினிடத்து,  வெள்ளிய பூவையுடைய தாழையை,  அலைகள் அலைக்கின்ற, நடு இரவிலும்,  நினது ஆரவாரம் செவிப்படும்;  நீ யாரால் வருத்த மடைந்தாய்?



    (கருத்து) கடலே, நீ யார் பிரிவுபற்றி வருந்துகின்றாய்?

தலைவனைப் பிரிந்த காம மயக்கத்தால் கடலைப் பார்த்துத் தலைவி கூறியது இது. நள்ளிரவிலும் துயிலாமல் ஆரவாரம் செய்யும் கடலையும் தன்னைப் போன்றதெனக் கருதி,நான் ஒரு தலைவனால் வருந்துவது போல, நீயும் ஒரு தலைவனால் வருந்துகிறாய் போலும்! அத்தலைவன் யார்?” என்று வினவினாள்.

Friday, November 28, 2014

குறுந்தொகை -162


முல்லைத் திணை- பாடலாசிரியர் கருவூர் பவுத்திரன்

இனி பாடல்-

கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
   
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
   
முல்லை வாழியோ முல்லை நீநின்
   
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை

நகுவை போலக் காட்டல்
   
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.

.
                             -கருவூர்ப் பவுத்திரன்.


உரை-

 முல்லையே,  நீ வாழ் வாயாக.  முல்லையே,  மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற,  நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண், பலர் தம் இல்லத்திற் புகும் ஒளியிழந்த மாலைக் காலத்தில்,  நீ நினது சிறிய வெள்ளிய அரும்புகளினால்,  புன்னகை கொண்டாய்; தலைவியரைப் பிரிந்த தனிமையை யுடையோர்பால், எள்ளி நகைப்பாய் போலக் காட்டுதலாகிய இது நினக்குத் தகுமோ?

 
    (கருத்து) நான் தலைவியைப் பிரிந்தமையை இகழ்ந்து என்னைச் சிரிப்பதுபோல் இம்முல்லைக் கொடிகள் பூத்தன.

Friday, November 21, 2014

குறுந்தொகை-161



தலைவி கூற்று
(தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் நக்கீரர்.

இனி பாடல்-
   
பொழுது மெல்லின்று பெயலு மோவாது
   
கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப்
   
புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி
   
அன்னா வென்னு மன்னையு மன்னோ

என்மலைந் தனன்கொ றானே தன்மலை
   
ஆர நாறு மார்பினன்

   
மாரி யானையின் வந்துநின் றனனே.


                            -நக்கீரர்.

   

    (ப-ரை.) தோழி,  சூரியனும் விளக்கம் இலனாயினன்; மழையும்,  ஒழியாமல், பேய்கள் கண்ணை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி, வேகமாகப் பெய்யும்;  அதற்கு மேல்,  தாயும், புலிப்பற் கோத்த தாலியை யணிந்த, புத்ல்வனைத் தழுவி அன்னையே யென்று என்னை விளிப்பாள்; அப்பொழுது, தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன்,  மழையில் நனைந்த யானையைப் போல, இவ்வீட்டுப்புறத்தே வந்து நின்றான்; !  அவன் எதனைச் செய்ய மேற் கொண்டானோ!

 

    (கருத்து) நேற்றுக் காப்புமிகுதியால் தலைவனைக் காணப்பெற்றேனில்லை.

   

   

Thursday, November 20, 2014

குறுந்தொகை-159


தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அருகிலேயே நின்றானாக, “தலைவியின் துயரத்தை உணர்ந்து இரங்காதாரை யுடையதாயிற்று இவ்வூர்” என்று கூறும் வாயிலாகத் தலைவியை இற்செறிக்கக் கருதி யிருப்பதைத் தோழி அவனுக்குப் புலப்படுத்தியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.

இனி பாடல்-

தழையணி யல்கு றாங்கல் செல்லா
   
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
   
அம்மெல் லாக நிறைய வீங்கிக்
   
கொம்மை வரிமுலை செப்புட னெதிரின

யாங்கா குவள்கொல் பூங்குழை யென்னும்
   
அவல நெஞ்சமொ டுசாவாக்
   
கவலை மாக்கட்டிப் பேதை யூரே.


                -வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.
உரை-.

 இந்தப் பேதைமையையுடைய ஊர்,  தழையை அணிந்த பெண்மையை,  பொறுத்தலாற்றாத,  நுணுகிய சிறிய இடைக்கு,  துன்பம் உண்டாகும்படி,  அழகிய மெல்லிய மார்பகம் நிறையப் பருத்து, பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள்,  செப்போடு மாறுபட்டன; பூத் தொழிலையுடைய குண்டலத்தை யணிந்த தலைவி,  என்ன துன்பத்தையுடையள் ஆவளோ,   என்று எண்ணும் கவலையையுடைய நெஞ்சத்தோடு,  ஏனென்று கேளாத,  கவலையையுடைய மாக்களை உடையது.


    (கருத்து) என்தாய் முதலியோர் என் நிலையை உணர்ந்திலர்.

Wednesday, November 19, 2014

குறுந்தொகை-160



தலைவி கூற்று
(பொருளீட்ட சென்ற தலைவன் நீட்டித்தானாக, ஆற்றாமையை யடைந்த தலைவியை நோக்கித் தோழி, “அவர் நின்னை மணந்து கொள்வர்; நீ ஆற்றியிருப்பாயாக” என, “அவர் வரவேண்டிய பருவத்து வந்தாரிலர்; இனி மணப்பது யாங்ஙனம்?” என்று கூறியது)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரை மருதன் இளநாகன்.

இனி பாடல்-
 
நெப்பி னன்ன செந்தலை யன்றில்
 
இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு
 
தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
 
கையற நரலு நள்ளென் யாமத்துப்

பெருந்தண் வாடையும் வாரார்
 
இஃதோ தோழிநங் காதலர் வரைவே.

                           -மதுரை மருதன் இளநாகன்.

   உரை-

தோழி - நெருப்பைப்போன்று சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறாமீனை ஒத்த வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு தடா மரத்தினது உயர்ந்த கிளையின் கண்ணுள்ள கூட்டினிடத்தேயிருந்து ஒலிக்கின்ற செறிந்த இடையிரவையுடைய பெரிய தண்மையையுடைய வாடைக் காற்று வீசும் உதிர்க்காலத்திலும் தலைவர் வரவில்லை.தலைவர் மணந்த் கொள்வேன் என்பது இதுதானா?



    (கருத்து) தலைவர் இன்னும் வந்திலர்; மணப்பார் எனக் கருதுதல் எங்ஙனம்?

 

Tuesday, November 18, 2014

குறுந்தொகை-158



தலைவி கூற்று
(தலைவன் இரவுக்காலத்தில் வந்து அளவளாவுங்காலத்து ஒரு நாள் பெருமழை உண்டாயிற்றாக, அவனது வரவுக்குத் தடை நிகழுமோவென அஞ்சிய தலைவி அவ்வச்சத்தைத் தலைவன் வந்த பின்னர் அம்மழையை நோக்கிக் கூறுவாளாய் அவன் கேட்பக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
   
நெடுவரை மருங்கிற் பாம்புபட விடிக்கும்
   
கடுவிசை யுருமின் கழறுகுர லளைஇக்
   
காலொடு வந்த கமஞ்சூன் மாமழை
   
ஆரளி யிலையோ நீயே பேரிசை

இமயமுந் துளக்கும் பண்பினை
   
துணையில ரளியர் பெண்டிரிஃ தெவனே.

                           -ஒளவையார்.

    உரை-
ஊயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள,பாம்புகள் படம் எடுக்கின்ற மிக்க வேகத்தையுடைய இடியேற்றினது இடிக்கும் முழக்கத்துடன் கலந்து காற்றோடு வந்த நிறைந்த நீராகிய சூழையுடைய பெரிய மழையே, இயல்பாகவே உன்னிடம் நிறைந்த இரக்கத்தைநீ இப்போழுது பெறவில்லையோ?பெரிய புகழையுடைய இமயமலையையும் அசைக்கின்ற தன்மையினையுடையாய், நின்னால் அலைக்கப்படும் மகளிர் துணைவரை பெற்றிலர்.ஆதலின், இரங்கத்தக்கார்.இங்கனம் நீ பெய்து அலைத்தல் எதன் பொருட்டு?



    (கருத்து) இதுகாறும் தலைவர் வாராமையின் இப்பெருமழையினால் அவர் வரவு தடைப்படுமோ வென்று அஞ்சினேன்.

    (வி-ரை.) தலைவன் பெருமழையினால் துன்புறுவானோ வென்றும் வாரானோ வென்றும் அஞ்சிய தலைமகள் தான் அங்ஙனம் அஞ்சியதை இதனால் தலைவனுக்கு உணர்த்தினாள்.
   

மல்லிகா மறைந்தாளா?

                 



சித்ராவோ

சிரித்து மகிழ்கிறாள்

அஞ்சலியோ

அலுவலகம் கிளம்பிவிட்டாள்

சந்தியாவோ

சமையலில் ஈடுபட்டுவிட்டாள்

மல்லிகாவோ

மரணப் படுக்கையில்

வேறு வேறு சேனலில்

வேறு வேறு

மெகாசீரியல் காட்சிகள்

இரைச்சலாக

தெரு முழுவதும்


Monday, November 17, 2014

யாதெனின்..யாதெனின் (சிறுகதை)



என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது.

'கொஞ்சம் உள்ளே வா..' என்றார் ஆசிரியர்.

நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு..

நான்..கிருஷ்ணன்..ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்த போதே ..அந்த வாரப்பத்திரிகையின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.பின் படிப்பை முடித்ததும்..உதவி ஆசிரியர் வேலையும்..அங்கேயே கிடைத்தது..

ஆசிரியர் அறையை அடைந்ததும்..கதவை லேசாக தட்டினேன்..

'வா..கிருஷ்ணா..' என்றார் ஆசிரியர். சென்றேன்..

'உட்கார்..'என்றவர் .அன்றைய தினசரி ஒன்றை எடுத்துப் போட்டு..அவர் கோடிட்டு இருந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ..'படித்தாயா?' என்றார்.

ஏற்கனவே படித்த செய்தி..இருந்தாலும்..அவர் சொன்னார் என்பதற்காக மீண்டும் படித்தேன்..

தமிழக வீரர் மரணம்

என்ற கொட்டை எழுத்துக்களில் போட்டு..பின்..

தனசேகர் என்னும் ராணுவ வீரர் ஒருவர்..பாகிஸ்தானுடன்..திடீரென எல்லையில் ஏற்பட்ட போரில்..தன் தீரத்தைக் காட்டி..அவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்ததாகவும்..அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ..சிலரை சுட்டு வீழ்த்தியதாகவும்..பின் பாகிஸ்தானின் எதிர் குண்டு வீச்சில் இறந்ததாகவும்...குறிப்பிட்டிருந்தது.

மேலும்..அவ்வீரன்..தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும்..அங்கு அவரது தந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

'கிருஷ்ணா..உடனே..புறப்படு..அவர் உடல் அடக்கத்தில் கலந்துக்கொள்..முடிந்தால்..அவர் தந்தையிடம் ஒரு பேட்டி எடு' என்றார் ஆசிரியர்.

என் சக ஃபோட்டோகிராபர் மணியனுடன் இரவே கிளம்பினேன்.
*** *** *** ****

பூங்குளம்..

பிரதான சாலையில்..பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.உள்ளே ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்றார்கள்.பாதையின் இரு பக்கங்களிலும் வாழைத் தோப்பு.கிழக்கே பார்த்த சிவன் கோவில் ஒன்று.சற்று
வடக்குப் புறம் திரும்பியது சந்து..மொத்தம் ஊரே 100 வீடுகள் தான் இருக்கும்.அதற்கு அப்பால்..வயல்வெளிகள்...பச்சை ஆடை அணிந்த பருவம் வந்த கன்னிப் பெண்கள் கூட்டம் போல் ..அவர்கள் கலகல சிரிப்புப் போல காற்றில் சலசல என சப்தத்துடன் ஆடி மகிழ்ந்தன..அறுவடைக்குத் தயாராய் இருந்த நெல்மணிகள்.எவ்வளவு பேரின் பசியைத் தீர்க்கும் பாக்கியம் பெற்றவை அவை?

கிராமத்தின் அழகில் மனம் பறிகொடுத்தபடியே..அங்கு கில்லி விளையாடும் சிறுவர்களை பார்த்தோம்.தமிழக ஆட்டங்களான..பம்பரம்,கோலி,கிளித்தட்டு,கில்லி..ஆகியவை இறந்துவிட்ட பெருநகரங்களையும் மனம் ஒரு நிமிடம் நினைத்தது. ...

ஒரு சிறுவனைக் கூப்பிட்டு..'தம்பி..பட்டாளத்துக்கு போனாரே..தனசேகர்..அவர் வீடு எது?' என்றேன்.

பையன்...ஊர் எல்லையில் இருந்த ஒரு பனை ஓலை வேய்ந்த குடிசையை...கை காட்டினான்.

அங்கு சென்றவன்..'ஐயா..ஐயா..' எனக் குரல் கொடுக்க...

வயதான ஒருவர்..நரைத்த தாடி,மீசையுடன்..வெளியே வந்து..தன் இரு கைகளையும்..கண்களுக்கு மேல்..மறைத்து..'யாரு' என்றார்.

'ஐயா..நாங்க..மதராஸ்ல இருந்து வரோம்..உங்க பையன்..நாட்டுக்கு,குறிப்பா தமிழ்நாட்டுக்கு..அதுவும்..இந்த கிராமத்திற்கு பெருமையைச் சேர்த்துட்டார்.அவரது சேவையை நாங்க பாராட்டுறோம்..அவரோட உடல் நாளைக்கு வரப்போறதா..கேள்விப்பட்டோம்..அதுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கோம்.உங்க மகன் பற்றி..நீங்க எதாவது சொல்ல விரும்பினா சொல்லுங்க..எங்க பத்திரிகைல அதைச் போடறோம்' என்றேன்.

'என்னத்த சொல்றது..தம்பி..' என்றபடியே ஆரம்பித்தார் அவர்.

'நாங்க தலித்துங்க..தம்பி..தீண்டத்தகாதவங்க..இந்த பையன் தனசேகரை பெத்துப் போட்டுட்டு..என் சம்சாரம் போய் சேர்ந்துட்டா..அப்பறம்..வேற கல்யாணம் கட்டிக்காம..என் பையனை நானே வளத்தேன்.நாம தான் படிக்கலை..நம்ம பையனாவது படிக்கட்டும்னு..நாயா உழைச்சேன்.தம்பி..அவன் படிக்கறப்ப..வாத்தி..இந்த கிளாஸ்ல தாழ்ந்த சாதி யார்னு கேப்பாராம்.கூனிக் குறுகி இவன் எழுந்து நிப்பானாம்.இவன் சாதி என்னென்னு தெரிஞ்சதும்..இவன் ஃபிரண்ட்ஸ்கூட இவன் கூட பேசறதில்லையாம்.

ஒரு நா..இவன் எம்.சி.ஆரோட..ஒரு தாய் மக்கள் நாமென்போம் ங்கற பாட்டை பாடிட்டு வரப்பு மேல வந்தான்.அப்ப..எதுர வந்த பஞ்சாயத்து தலைவர்..உசந்த சாதி..ஆளு..அவருக்கு வழிவிட வரப்புல ஓரமா ஒதுங்கினான் இவன்.உடனே அவர் இவன் கன்னத்தில பளார் ன்னு அறைவிட்டு..ஏண்டா..கீழ் சாதி நாயே..நான் வர்றேன் இல்ல..நீ வயல்ல இறங்கி வழி விடறதை விட்டுட்டு..வரப்புலேயே ஒதுங்கி நிக்கறாயா..நான் உன்னை இடிச்சுக்கிட்டுப் போகணுமா?ன்னாராம். ஏன்..தம்பி..இவரு பளார்னு அறைஞ்சாரே..அப்பமட்டும் அவர் கை எங்க மேல படலியா?

அவன் அப்படியே..பல அவமானத்தை தாங்கிகிட்டு வளந்தான்.எங்க ஊரு டீக்கடையிலே..இன்னி வரை இரட்டை டம்ளர் தான்.அப்போ..தலைவரை சேர்ந்தவங்க எல்லாம்..அதை எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தாங்க.

அவங்களுக்கு..பந்தல் போட்டு கொடுத்துட்டு..என்னோட மவனும்..அவங்களோட ஓரமா..உட்காந்து..உண்ணாவிரதம் இருந்தான்.

சாயரட்சை..உண்ணாவிரதம் முடிஞ்சதும்..அந்த கட்சித் தலைவரு வந்து பழ சூசு குடுத்து..விரதத்தை முடிச்சுவைச்சார்.கடைசியா மிச்சமிருந்த சூசை இவன் சாப்பிட்டிருக்கான்.அப்போ முதுகுல பலமா ஒரு உத விழுந்ததாம்.' ஏண்டா ......பயலே..உனக்கும் சூசு கேக்குதான்னு தலைவர் உதச்சாரு.

அன்னி ராப்பூரா இவன் தூங்கல..அழுதுகிட்டே இருந்தான்.காலைல ஆளைக்காணும்.எங்கெங்கோ தேடினேன். ஊர் எல்லைல இருக்கற குளத்துல போய் பார்த்தேன்...முதக்கறானான்னு..ம்...காணும்..எங்க போனான்னு தெரியல..தவிச்சுப்போயிட்டேன் தம்பி.

கொஞ்ச நா கழிஞ்சு..ஒரு கடுதாசு வந்தது..அதுல..தான் பட்டாளத்துல சேர்ந்துட்டதாயும்..கவலைப்படாதேன்னும் எழுதியிருந்தான்.

அவன் சாகல..எங்கனாச்சும் நல்லா இருந்தா சரின்னு வுட்டுட்டேன்.மனசை தேத்திக்கிட்டேன்.'

இந்த இடத்தில்..அடக்க முடியாது அழ ஆரம்பித்தார் பெரியவர்..அவரை தேற்ற எண்ணி...

'என்ன ஜனங்க இவங்க..நாயைக்கூட தொட்டு..கொஞ்சி விளையாடறவங்க..மனுஷனைத் தொடக்கூடாதாம்' என்றேன்..

அதற்கு..அவர்..'அந்த நாயைக்கூட நல்ல உயர்ந்தசாதி நாயா பார்த்துத்தானே தம்பி வாங்கறாங்க' என்றார்.

அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க..என்றார் உடன் இருந்த புகைப்படக்காரர்.

'அப்பறம் என்ன தம்பி..ராணுவ ஆபீசில இருந்து..நேத்து ஒரு தந்தி வந்துது..அதுல..நம்ம நாட்டு எல்லைல..பாகிஸ்தானோடு நடந்த போர்ல..இவன் அவக சில பேரை கொன்னானாம்.இவனையும் கொன்னுட்டாங்களாம்.அப்படின்னு சேதி இருந்தது.

தம்பி மனசுல..துக்கம் தாங்கல..ஆனாலும்..என் பையன் நாட்டுக்காக செத்திருக்கான்னு ஒரு சந்தோசம்..

சேதி கேட்டு..எந்த தலைவர்..சூசு சாப்புடும்போது உதச்சாரோ..அவரே..காலைல வந்து..அந்த மாவீரனை புள்ளையா பெத்தயேன்னு பாராட்டி..சால்வை போத்தினார்.ஃபோட்டோ கூட என்னோட எடுத்துக்கிட்டார்.எம் பையன் செத்து..அவனுக்கும்...எனக்கும்..என் சாதி மக்களுக்கும் பெருமை வாங்கி தந்துட்டான்.எனக்கு அது போதும் தம்பி'



அதற்குள்..வெளியே..கூச்சல் கேட்க..மூவரும் வெளியே வந்தோம்..

ஒரு ஆம்புலன்ஸ்..ராணுவ ஜீப் பின் தொடர வந்தது..தவிர..உடன் கட்சித் தலைவர் காரும்..வேறு சில கார்களும் வந்தன.

குடிசைமுன் நின்ற ஆம்புலன்ஸிலிருந்து..தனசேகர் உடலை ராணுவ வீரர்கள் இறக்கினர்..அவனது உடைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன.

பின் ஒவ்வொரு..தலைவராக வந்து மாலை.மலர் வளையம் என மரியாதை செலுத்தினர்.

அன்றிரவு முழுதும் ஊரே உறங்கவில்லை.

அடுத்த நாள் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.தலைவர் உட்பட அனைத்து தர மக்களும்..தனசேகரின் கால்களைத் தொட்டு வணங்கினர்.

குண்டுகள் வெடித்து..மரியாதை செய்யப்பட..உடல் தகனம் செய்யப்பட்டது..தலைவர்..சந்தனக்கட்டைகளை எடுத்து..சிதையில் இட்டார்.

அந்த நேரம் வரை அழாத பெரியவர்..திடீரென..குலுங்க..குலுங்க..'டேய்..நீ சாதிச்சுட்டேடா..சாதிச்சுட்டே..' என அழ ஆரம்பித்தார்.

இப்போது எனக்கு ஒன்று புரியவில்லை...

உடலில் உயிர் இருக்கும் போது மதிக்காதவர்கள்..உயிர் பிரிந்ததும்.......ஏன்?

ஆமாம்..இவர்கள் உயர்ந்த ஜாதி,கீழ் ஜாதின்னு எதை வைச்சு சொல்றாங்க...

உயிரைவைத்தா..உடலை வைத்தா..புகழை வைத்தா..பணத்தை வைத்தா?

நாங்கள் கிளம்பினோம்..அதற்கு முன்..ஃபோடோகிராபரிடம்..'மணி..அந்தப் பெரியவர் அழும் போது தலைவர் கட்டிக்கொண்டு ஃபோடோ எடுக்கச் சோன்னாரே..அதை சரியா எடுத்தியா...அடுத்த வாரம் நம்ம ஆசிரியர் அதைத்தான் அட்டைப்படமா போடுவார்' என்றேன்..மன இறுக்கத்துடன்.

Sunday, November 16, 2014

மழையே வந்து போ!

                                 


மழை வேண்டி

அமிர்தவர்ஷிணி இசைப்போம்

கழுதைக்கு மணம் முடிப்போம்

யாகங்கள் செய்வோம்

நீ வந்து விட்டாலோ

மூன்று நாட்களுக்கு மேல்

வேண்டா விருந்தாளி ஆவாய்

சீரியல் பார்க்கையில்

வந்த விருந்து போல..

சபிக்கப்படுவாய்

குறுந்தொகை-157


தலைவி கூற்று
(பூப்பு எய்திய தலைமகள் அதனை மறைத்துக் கூறுவாளாய், “வைகறை வந்தது; இனித் தலைவனைப் பிரியநேருமென்று அஞ்சுகின்றேன்” என்று சொல்லியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்மூலன்

இனி பாடல்-
.  
குக்கூ வென்றது கோழி யதனெதிர்
   
துட்கென் றன்றென் றூய நெஞ்சம்
   
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
   
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.


                     -. அள்ளூர் நன்மூலன்.

உரை-

கோழி ,குக்கூ என்று கூவியது.அதற்கு நேரே எனது தோளை மணந்த தலைவரை பிரியச் செய்யும் வாளைப்போல விடியற் பொழுது வந்ததென்று எனது குற்றமற்ற நெஞ்சம் அச்சத்தை அடைந்தது

 

    (கருத்து) தலைவனை இனிப் பிரிந்திருத்தல் வேண்டுமென்று அஞ்சுகின்றேன்.

 (தலைவிதான் பூப்பெய்தியதை வெளிப்படையாகக் கூறாதொழிந்தாள். துட்கென்றன்று - துட்கென்றது; துட்கு - அச்சம். தலைவனோடு ஒன்றுபட்டுப் பிறிதொரு நினைவின்றி யமைந்ததாதலின் தூய நெஞ்சாயிற்று.

    பூப்புக்காலமாகிய மூன்றுநாளும் தலைவியினதுசொற்கேட்கும் அணிமையிலிருத்தலையன்றி அளவளாவுதல் அறநெறியன்றாதலின் பூப்பு, தலைவனைத் தோள் தோயாமற் பிரிப்பதாயிற்று;)

Saturday, November 15, 2014

குறுந்தொகை- 156



தலைவன் கூற்று
(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்

இனி பாடல்-

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
   
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
   
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
   
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே

எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
   
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
   
மருந்து முண்டோ மயலோ விதுவே.
.
                     -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்.

உரை-

செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கிவிட்டு, அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும், விரத உணவையுமுடைய வேதத்தையறிந்த நின்னுடைய அறிவுரைகளுள் பிரிந்த தலைவியரையும், தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய பரிகாரமும் உள்ளதா.இது மயக்கத்தால் வந்ததாகும்

      (கருத்து) நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.

 

    (பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோவென்றது என்னையும் தலைவியையும் சேர்த்து வைக்கும் முயற்சியே பயன்படுவதென்னும் குறிப்பையுடையது; எனவே நீ கழறுவதொழிந்து அது செய்க என்றானாயிற்று).

Friday, November 14, 2014

குறுந்தொகை-155


தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தமை யறிந்த தலைவி, "இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி வருந்தியது.)

முல்லைத் திணை- பாடலாசிரியர்  ஒரோடகத்துக் காரத்தனார்

இனி பாடல்-

முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர்
   
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
   
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான்
   
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி

மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு
   
மாலை நனிவிருந் தயர்மார்
   
தேர்வரு மென்னு முரைவா ராதே.
                       
                       - ஒரோடகத்துக் காரத்தனார்.)

உரை-

பழங்கொல்லையை உழுத மிக்க ஆரவாரத்தையுடைய உழவர்களுடைய, காலையிலே விதையை விதைக்கும் பொருட்டு எடுத்துச் சென்ற சிறிய வட்டிகள் விதைத்து விட்டு வீட்டிற்கு மீளும் பொழுது மலர்கள் நிறையும்படி மாலைப் பொழுது வந்தது.மெழுகால் செய்த கருவில் அமைத்து ஊதுகின்ற கொல்லனுலையின்கண் பெய்து இயற்றிய பிளவுபட்ட வாயையுடைய மணிகள் மரங்கள் நெருங்கி வளர்ந்த குறுங்காட்டிடத்துஒலிக்கும்படி அருவழியைக் கடந்து மாலைக் காலத்தில் மிக விருந்து நுகரும் பொருட்டு வரும் தலைவருடைய தேர் வருகின்றதென உரை வந்திலது


 (கருத்து) மாலைக் காலம் வந்தும் தலைவர் வந்திலர்.

Thursday, November 13, 2014

குறுந்தொகை-154



தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து, “என்னைப் பிரிந்து நெடுந்தூரத்தில்தங்கும் வன்மையை அவர் எங்ஙனம் பெற்றார்?” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் மதுரை சீத்தலைச் சாத்தன்.

இனி பாடல்-
 
யாங்கறிந் தனர்கொ றோழி பாம்பின்
   
உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத்
   
திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப்
   
பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை

பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்
   
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
   
அருஞ்சுர வைப்பிற் கானம்
   
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே.

                              -மதுரை சீத்தலைச் சாத்தன்.

  உரை-

பாம்பினது உரி மேலெழுந்தாற்போன்ற கானல் விளங்குகின்ற நண்பகற் காலத்தில் இரையை விரும்பி மேலெழுந்து சென்ற ஆண்பறவையை நினைத்து, புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுக அடியிடும் நடையினையும் உடைய பெண் புறாவானது பொரிந்த அடியையுடைய கள்ளியினது வெடித்த காயையுடைய அழகிய கிளையில் விளங்கும்படி இருந்து தனிமை தோன்றும்படி கூவுகின்ற கடத்தற்கரிய வழியையுடைய இடமாகிய பாலை நிலத்தை கடந்து நெடுந்தூரத்தில் தங்குதலில் வன்மையுடைய தலைவர் , அவ்வன்மையை எவ்வாறு தெரிந்து கொண்டனர்,

 

(கருத்து) தலைவர் என்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருக்கின்றனர்?

Wednesday, November 12, 2014

மனஉறுதி

                         


மரத்தினடி கொத்தும்

மரங்கொத்திகள்

கிளைக்கு கிளை தாவும்

குரங்கினங்கள்

கூடுகட்டி முட்டையிட்டு

வம்சம் காக்கும் புள்ளினங்கள்

பூத்திருக்கும் பூக்களின்

மகரந்தம் சுவைக்கும் வண்டினங்கள்

அசைந்து கொடுப்பதில்லை


குறுந்தொகை-153


தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்காது நெடுங்காலம் வந்து அளவளாவுதலால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “இனி அவரை வாரற்கவென்று கூறுவாயாக” என, தோழி தலைவியை, “அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாது?” என வினவ, “அவர் வரும் வழியின் ஏதமறிந்து எனக்கு ஆற்றாமை உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை-பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-

குன்றக் கூகை குழறினு முன்றிற்
   
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
   
அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே
   
ஆரிருட் கங்கு லவர்வயிற்

சார னீளிடைச் செலவா னாதே.

                            -கபிலர்

உரை-

என் நெஞ்சம்- குன்றிலுள்ள பேராந்தை ஒலித்தாலும், முற்றத்திலுள்ள பலாமரத்தினது பெரிய கிளையினிடத்து ஆண் குரங்கு தாவித் துள்ளினாலும் அச்சத்தை முன்பு அடையும். அது கழிந்தது. இப்பொழுது செல்லுதற்கரிய இருளையுடைய இருளில் அவரிடத்தே மலைச்சாரற் கண்ணுள்ள நெடுவழியில் செல்லுதலை நீங்காது.அது இரங்குதற்குரியது.


   
 கருத்து- தலைவர் இரவில் வருதலின், ஆற்றின் ஏதம் அஞ்சி வருந்துகின்றேன்,

Tuesday, November 11, 2014

குறுந்தொகை-152



(தலைவன் நெடுங்காலம் வராது இருந்தமையால் வருந்திய தன்னை இடித்துரைத்த தோழியை நோக்கி முன்னிலைப் புறமொழியாக, “என்னை இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவர் உடனுறைவதன் இன்றியமையாமையையும் உணர்ந்திலர்” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கிளி மங்கலங்கிழார்

இனி பாடல்-
   
யாவது மறிகிலர் கழறு வோரே
   
தாயின் முட்டை போலவுட் கிடந்து
   
சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ

   
யாமைப் பார்ப்பி னன்ன

காமங் காதலர் கையற விடினே.

                   -கிளி மங்கலங்கிழார்

உரை-

தாய்முகம் நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பல்காற் காண்டலால் வளருந்தன்மையையுடைய காமமானது,அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால், தாயில்லாத முட்டை கிடந்தபடியே அழிவது போல உள்ளத்துள்ளே கிடந்து மெலியினன்றி வேறு என்ன உறுதியை உடையது? என்னை இடித்துரைப்போர் இதனைச் சிறிதேனும் அறிந்திலர்..


(கருத்து) தலைவர் விரைவில் வராவிடின் காமம் பயனற்றுக் கெடும்.

     (வி-ரை.) விரைவில் வந்து தன்னை மணப்பதற்கான முயற்சியைத் தலைவன் செய்யும்படி அவனைத் தூண்டாமல் தன்னைக் கடிந்த தோழியை வேறுபடுத்திப் படர்க்கையாற் கூறினாள்; முன்னிலைக் கண் உள்ள தோழிக்குப் படர்க்கையாற் குறிப்பாக உணர்த்தினமையின் இது முன்னிலைப் புறமொழி).

    கழறுதல் - இடித்துரைத்தல்.

     தாயில்லாத முட்டை அத்தாயால் இடப்பட்டும் அடுத்தடுத்துப் பாதுகாத்தலை இழப்பதால் குஞ்சாகும் பயனைப் பெறாதது போல, தலைவனால் உண்டான காமம் அவன் அவளை மணந்து உடன் வாழாமையால் இல்லறப் பயனைப் பெறாததாகிறது..


Monday, November 10, 2014

குறுந்தொகை-151


தலைவன் கூற்று
(பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்”என்று கூறித் தலைவன் வருந்தியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் தூங்கலோரி

இனி பாடல்-


வங்காக் கடந்த செங்காற் பேடை
   
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
   
குழலிசைக் குரல குறும்பல வகவும்
   
குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது

மறப்பருங் காதலி யொழிய
   
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே.


                                -தூங்கலோரி.

     உரை-

நெஞ்சே! ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால் தனித்த சிவந்த கால்களையுடைய பெண் பறவை ,புல்லூறென்னும் பறவை தன்னிடம் இரையாகக் கொள்ளும் பொருட்டு வீழ்ந்ததாக தம்முடைய கணவனாகிய ஆண் பறவையைக் காணாமல் வேய்ங்குழலினிது இசையைப் போன்ற குரல்களை உடையவனாய் குறிய பல ஒலிகளால் அழைக்கும் குன்றைப் பொருந்திய சிறிய வழிகள் கடத்தற்கு அரியன வென்று எண்ணாமல் மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்க நான் செல்வேனென்று துணிவது இங்கே நம் இளமைப் பருவத்திற்கு முடிவாகும்.



     (கருத்து) இளமை பயனற்றுக் கழியுமாதலின், யான் தலைவியைப் பிரிந்து செல்லேன்.


     இளமைக் காலத்தே தலைவியோடிருந்து இன்புற வேண்டும்; பொருள் தேடச் சென்றால் அது முற்றும் வரையில் பிரிவு நேர்வதால் அதற்குள் இளமை கழியும்; இளமை கழியுமேல் அவ்வின்பம் கைகூடாதென்று கருதியவனாதலின், இறப்பலென்பது இளமைக்கு முடிவென்றான்.

Saturday, November 8, 2014

குறுந்தொகை-150



தலைவி கூற்று
(தலைவன் இரவில் தலைவியை சந்திக்க விரும்ப அதை தோழி தலைவிக்கு  தெரிவிக்க, தலைவி, “தலைவர் மார்பு நினைத்தால் காமநோய் மிகுதற்குக் காரணமாக உள்ளது; அவரை அணைத்தால் அந்நோய் நீங்குதற்குக் காரணமாக உள்ளது” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் அவனை சந்திக்க சம்மதத்தைத் தெரிவித்தது.)


குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மாடலூர் கிழார்

இனி பாடல்-


சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
 
வான மீனின் வயின்வயி னிமைக்கும்
 
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
 
உள்ளி னுண்ணோய் மல்கும்
 
புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய்.

                            -மாடலூர் கிழார்.

  உரை-

தோழி...மரத்தின் உச்சியிற் பரணின் மீது இருக்கும் குறவன் கொளுத்திய நன்மணமுள்ள புகையையுடைய கொள்ளியானது வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல இடந்தோறும் ஒளியை வீசும் ஓங்கிய மலைநாட்டையுடைய
தலைவனது பூசிய சந்தனம் வீசும் மார்பினை, நான் நினைத்தால் என் உள்ளத்தில் காமநோய் பெருகும்.அம்மார்பை நான் அணைத்தால் அந்நோய் இல்லையாதல் ஆச்சரியிமான ஒன்று.

     (கருத்து) தலைவனைக் கண்டு அளவளாவினாலன்றி என் நோய் தீர்வதில்லை.

   

குறுந்தொகை-149



தலைவி கூற்று
(தோழி தலைவனுடன் போகவேண்டுமென்று கூறத் தலைவி அவனுடன் செல்லுதலால் நாண் அகலுமென்று இரங்கிக் கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் வெள்ளி வீதியார்

இனி பாடல்-
 
அளிதோ தானே நாணே நம்மொடு
   
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
   
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
   
தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத்

தாங்கு மளவைத் தாங்கிக்
   
காம நெரிதரக் கைந்நில் லாதே.


                     -வெள்ளி வீதியார்

     உரை-

(தோழி) நம்மோடு மிக நெடுங்காலம் உடனிருந்து வருந்தியது, இனிமேல் வெள்ளிய பூவையுடைய கரும்பினது உயர்ந்த மணலையுடைய சிறிய கரை ,இனிய நீர் நெருங்கி அடித்தலால் அழிந்து வீழ்ந்தாற் போல தடுக்கும் வரையில் தடுத்து காமம் மேன்மேலும் நெருக்க என்பால் நில்லாது போய்விடும்.அஃது இரங்கத்தக்கதாகும்

Friday, November 7, 2014

குறுந்தொகை-148




தலைவி கூற்று
(தலைவன்  வருவதாகக் கூறிச் சென்ற கார்ப் பருவம் வரவும் அவன் வாராமையால் துன்பமுற்ற தலைவியை நோக்கித் தோழி, “இது பருவமன்று; அவர் பொய்யார்” என வற்புறுத்த, தலைவி, “கொன்றைமரங்கள் பூத்தன; இது கார்ப்பருவந்தான்” எனக் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் இளங்கீரந்தையார்


இனி பாடல்-

 
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
   
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
   
காசி னன்ன போதீன் கொன்றை
   
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்

காரன் றென்றி யாயிற்
   
கனவோ மற்றிது வினவுவல் யானே.

                            -இளங்கீரந்தையார்.

     உரை-

செல்வத்தையுடைய சிறு பிள்ளைகளையுடைய சிறிய அடியிங்கண் விளங்கிய தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய,பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசைப் போன்ற பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றை பருவத்தையும் கார்காலமெனக் கூறுவாய் ஆனால், அப்படிச் சொல்வது கனவா? எனக் கேட்பேன்..நீ சொல்வாயாக!
   

     (கருத்து) தலைவர் இக்கார் காலத்தும் மீண்டும் வந்திலர்.

Thursday, November 6, 2014

இறைவனுக்கு மனம் என்ன கல்லா...

                   

டாக்டர் புரூனோ

கள்ளமில்லா வெள்ளை மனம்..அவர் அணியும் உடையைப் போலவே..

எந்த வேறுபாடும் இன்றி..அனைவரிடமும் நண்பனாகவே பழகுபவர்..

செருக்கின் விலை என்ன எனக் கேட்பவர்..

உதவி என்று அழைத்திட்டால்...நேரம்..காலம்...தனது வேலைகள் அனைத்தும் மறந்து ஓடோடி வருபவர்.

ஒருசமயம்...அவருக்கு நான் தொலைபேசி, 'உங்களால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று கேட்டேன்.உடன் அவர் தந்த பதில், "என்ன இப்படிக் கேட்கிறீர்கள்.."புரூனோ! இந்த வேலை செய்யுடா..என கட்டளையிடுங்கள்" என்றார்'

சற்று படித்தாலே போதும்..ஆர்பாட்டம் செய்யும் மானிடரிடையே இப்படி ஒரு முத்து..

அப்படிப்படவர்க்கு...மக்கள் சேவையே முக்கியம் என்று இருந்தவர்க்கு ஏன் இந்த சோதனை..வேதனை..

 டாக்டர் தொழில் செய்பவர் குறித்து யாரேனும் குறை சொன்னால் பொங்கி எழுவாயே! புரூனோ..இப்பொழுது உனக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வேன்?

இறக்கும் வயதா உன் துணைக்கு...வாழ்வில் நாம் இருவர்..நமக்கு இருவர்...என ஆசைப்பட்டது தவறா..அதற்கு..இப்படி ஒரு தண்டனையா..

இறைவன் இருக்கின்றானா? இருந்தால்..அவன் யாருக்குத் துணையாய் இருக்கின்றான்?

நல்லவர்களுக்கு இல்லையா?

ஆம்..என்றால்..அவனைத் தூக்கி எறிவோம்..

கல் மனம் கொண்டவன்..ஆண்டி ஆனால் என்ன?ஆண்டவன் ஆனால் என்ன?

(புகைப்படம் உதவி - அபி அப்பா)

குறுந்தொகை-147



தலைவன் கூற்று
(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனவில் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் கோப்பெருஞ் சோழன்

இனி பாடல்-


வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
 
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
 
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
 
இன்றுயி லெடுப்புதி கனவே

எள்ளா ரம்ம துணைப்பிரிந் தோரே.

என்பது தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது.

   
                                              -கோப்பெருஞ் சோழன்

   உரை-
வேனிற்காலத்தில் மலரும் பாதிரியினது வளைந்த மலரினத் துய்யைப் போன்ற மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும், நுண்ணிய தொழிலையுடைய ஆபரணத்தையும் உடைய தலைவியை கொணர்ந்து கொடுத்தாயைப்போல
இனிய துயிலினின்றும் எழுப்புகிறாய்.மனைவியைப் பிரிந்தோர் உன்னை இகழார்..கனவே




     (கருத்து) தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு என்ன கைம்மாறு செய்வேன்!



.

Wednesday, November 5, 2014

கனவு காண்பேன் கண்ணா...

               


அவள்

கனவை

விரும்புகிறாளாம்

நனவில்

நடக்காதவை

கனவில் நடப்பதால்..

ஊர்

முதிர் கன்னி என்கிறது

அவளை


குறுந்தொகை-146



தோழி கூற்று
(தலைவன் சான்றோரைத் தலைவியின் சுற்றத்தாருடன் மணம் பேசி வர விடுப்ப, தன்தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நம் இனத்தார்/சுற்றம் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.)


குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வெள்ளிவீதியார்

இனி பாடல்-

 
அம்ம வாழி தோழி நம்மூர்ப
   
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
   
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
   
நன்றுநன் றென்னு மாக்களோ

டின்றுபெரி தென்னு மாங்கண தவையே.

.                          -வெள்ளிவீதியார்.


   

உரை-

தோழி..கேள்...அவ்விடத்திலுள்ள நம்மைச் சார்ந்த குழுவில் உள்ளோர், தண்டைப் பிடித்த கையினரும், நரையையுடைய
தலைக்கண் துகிலையுடைவருமாகிய நன்று..நன்று எனக்கூறும் தலைவன் தமரோடு இந்நாள் நீங்கள் வரப்பெற்றமையால் பெருமையுடையதென்று முகமன் கூறுவர்.ஆதலால், நம் ஊரினிடத்து பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போர் இருந்தனர்.


     (கருத்து) தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர்.