Thursday, December 5, 2013

சிவராமனின் கவசம்..




நண்பர் பைத்தியக்காரர் சிவராமின் 'கர்ணனின் கவசம்' அமானுஷ்யத் தொடர்..குங்குமத்தில் தொடராக வந்து இந்த வாரத்துடன் நிறைவுபெறுகிறது.

என்ன ஒரு இடியாப்பச் சிக்கல் கதை..

எந்த ஒரு தொடரிலும்,  அந்தந்த பாத்திரங்களை நினைவு வைத்திருக்க முடிந்த நம்மால்...இந்தத் தொடரில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் நினைவு கூற முடியுமா? என்பது சந்தேகமே...

ஒரு வாரம் படிக்கும் போதே...முந்தைய சில வாரத்து புத்தகம் எடுத்து, மீண்டும் பழைய அத்தியாயத்தை நினைவில் கொண்டுவர வேண்டி இருந்தது.

இதையெல்லாம், பல வேலைகளிடையே, நினைவில் நிறுத்தி மிக அற்புதத் தொடரை அளித்த சிவராமன் பாராட்டுக்குரியவர்.

அவரிடம் ஒரே ஒரு கேள்வி..

முழுத் தொடரையும் முதலிலேயே எழுதி விட்டாரா? அல்லது...அந்தந்த வாரத்திற்கான சினாப்சிசை முதலிலேயே குறித்துக் கொண்டு எழுதினாரா?

நான் ஒரு துணுக்கு எழுதி இருந்தேன் முன் ஒருமுறை..

ஒரு மெகாசீரியல் இயக்குநரைச் சுற்றி..ஒரே காகிதக் குப்பைகள்..அவர் என்ன செய்கிறார்..

தன் தொடரில் எந்தெந்த பாத்திரங்களை எங்கு விட்டார் எனத் தேடிக்கொண்டிருக்கிறார் என..

அந்த துணுக்கு இப்போது ஞாபகம் வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு அற்புதத் தொடரை அளித்ததுடன் மட்டுமல்லாது, இத் தொடரால் பிற சில வாரப்பத்திரிகைகளும் தொடர்கதைகளை வெளியிடும் போக்கை மீண்டும் ஆரம்பிக்க காரணமாய் இருந்த சிவராமனுக்கு மீண்டும் பாராட்டுகள்.

ஹேட்ஸ் ஆஃப் சிவராமன்.

Tuesday, November 19, 2013

பொங்கல் நாளில் படம் வந்தால் அள்ளலாம் வசூலை...



பொங்கலுக்கு வெளிவரும் பட வரிசைகளில் முக்கிய நடிகர் நடிக்கும், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படமும் உள்ளது.முக்கியமாக இந்நாளில் படத்தை வெளியிட பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பது ஏன்?

இப்போதெல்லாம், பெரிய பட்ஜெட் படங்கள் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் ஒரே நாளில் 300 காட்சிகளுக்கு மேல் நடைபெறும் வண்ணம் திரையிடப்படுகின்றன.படம் தோல்வியடைந்தாலும், வசூலைக் குறி வைத்தே இப்படி நடக்கின்றன.

பொங்கல் சமயம் வந்தால்...

ஜனவரி 10ஆம் நாள் வெளிவரும் பட மென்றால், அன்று வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு அரங்கம் நிறைவது 'டப்பா' படத்திற்கும் நிச்சயம்.

தவிர்த்து, 13 நாம் நாள் போகி, அடுத்து மூன்று நாட்கள் பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல்...ஆகக் கூடி படம் வெளியாகி ஏழு நாட்கள் அரங்கு நிறைவது நிச்சயம்.

சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட பிரபல நடிகர் படம் என்றால் 2100 காட்சிகள்.வசூல் வேட்டை அபாரமாய் இருக்கும்.பிறகு பட வசூல் பற்றி , கவலை இல்லை..படம் ஓடினாலும், ஓடாவிடினும்.

பார்ப்போம்...இந்த ரேசில் யார் யார் ஜெயித்து படத்தை வெளியிடுகிறார்கள் என்று.

Monday, October 21, 2013

வாய் விட்டு சிரிங்க...



1) இன்னிக்கு இன்டெர்வியூ போன கம்பெனியில என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க...
   ஏன்..
   நேர்முகத்தேர்வாம்..

2)அரபு நாட்டிலே போய் ஃபோட்டோ எடுத்தியே..என்ன ஆச்சு?
  எல்லாம் ஷேக் காயிடுச்சு

3)எங்கப்பா 40 திருடர்களை அவர் சர்வீஸ்ல புடிச்சிருக்கார்?
 உங்கப்பா பேரு என்ன?
 அலிபாபா

4)வெயிட்டே இல்லாம கட்டப்பட்ட கட்டிடம் எது தெரியுமா?
  எது?
  லைட் ஹவுஸ்

5)சட்டை புதுசா இருக்கே! தீபாவளிக்கு எடுத்ததா?
  இல்லை....எனக்கு எடுத்தது

6)உங்க படத்துலே வசனம் எல்லாம் கிணத்திலே இருந்து பேசுகிறாப் போல இருக்கே...ஏன்?
  அவ்வளவு டீப் பான வசனங்கள்


Thursday, October 17, 2013

கொள்ளுத்தாத்தா வழியில் பேரன்....



சாதாரணமாக...தாத்தாக்குரிய சில குணாதிசியங்கள்..பேரனுக்கும் சில ஏற்படும் எனப்படுவது இயற்கையிலேயே அமைந்தது.

அப்படி ஒன்று, இன்று கொள்ளுத்தாத்தா வழியில் பேரனுக்கும் வந்துள்ளது.

பாரதப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது, தி.மு.க., பற்றி நேரு ஒருசமயத்தில், "நான்சென்ஸ்" என்று கமெண்ட் அடித்தார்.

அதை அப்படியே கிண்டல் செய்து, கலைஞர் கதை வசனம் எழுதிய 'திரும்பிப்பார்' படத்தில், சிவாஜி கணேசன் பாத்திரம், நேருவைப்போல கறுப்புக்கண்ணாடி அணிந்து, 'நான்சென்ஸ்' என்று அடிக்கடி கூறுவது போல படைத்திருந்தார் கலைஞர்.

இன்று....

நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல், தன் கட்சி கொண்டுவர இருந்த அவசரச் சட்டத்தையே கடைசி நிமிடம் வரை வாளாயிருந்துவிட்டு, பின்.."நான்சென்ஸ்' என்றுள்ளார்.

இதை கலைஞர் எழுதிய அன்றைய வசனத்துடன் மனம் ஒப்பிடுகிறது.ஆனால் இன்று இதை நையாண்டி செய்பவர் யாருமில்லை.

தாத்தா வழியில் பேரன் சென்றது..சரியான வாரிசு அரசியல் என்பது இதுதான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, October 15, 2013

தமிழ் சினிமா நூற்றாண்டு விழா..கலைஞர் தலைமையில்..



சமீபத்தில் இந்திய சினிமா நூற்றாண்டுவிழா..தமிழக அரசுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.

ஆனால். இதில், பல பிரபலங்கள் கௌரவிக்கப் படவில்லை..என்று பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளன.தவிர்த்து, நடிகர்,நடிகைகள் கௌரவிக்கப்பட்டது போல, மற்ற திரைக்குப் பின் இயங்கும் கலைஞர்கள் கௌரவிக்கப்படவில்லை.

குறிப்பாக, கலைஞரை கௌரவிக்காதது பெரும் தவறென்றே தோன்றுகிறது.

அரசியலைத் தவிர்த்துப் பார்த்தாலும்...1947 முதல், அறுபத்தி ஆறு ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் ஒன்றிணைந்தவர் கலைஞர்.கிட்டத்தட்ட 75 படங்களில், கதை,வசனகர்த்தாவாகவோ, படலாசிரியராகவோ,தயாரி[ப்பாளராகவோ...கலைஞர் செயல்பட்டிருக்கிறார்.வாழும் வரலாறான அவரை விடுத்து ஒரு தமிழ் சினிமா விழாவா?

தி.மு.க., கட்சியைச் சார்ந்தவராய் இல்லாதாரும்...கலைஞரின், திரையுலக சேவையை மனதாரப் பாராட்டுவர்.

அப்படிப்பட்டவர்கள் துயரப்பட வேண்டாம்...

தமிழின் முதல் சினிமா, "கீசகவதம்" 1916ஆண்டுதான் வெளியானது.அதை வைத்துப் பார்த்தால், 2016 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு.

அவ்விழா, கலைஞர் தலைமையில் கண்டிப்பாக நடைபெறும்.

விருப்பு, வெறுப்பு இன்று அவ்விழாவில், உண்மையில் கௌரவிக்கப் பட வேண்டிய அனைத்து கலைஞர்களும் கௌரவிக்கப்படுவர்.

Friday, October 11, 2013

மெகா பட்ஜெட் படங்களும், ஏமாற்றப்படும் ரசிகனும்...



சிவாஜிகணேசன் நடித்து வெற்றி பெற்ற பல படங்கள் சென்னையில் 3 அல்லது 4 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்..வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்தால்..அப்படம் நூறு நாட்கள் ஓடும் படம் என வெற்றி பட வரிசையில் சேர்ந்து விடும்..உதாரணத்திற்கு அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திருசூலம் பட விவரத்தைப் பாருங்கள்

'திரிசூலம் மாபெரும் வெற்றி படமாகும்.வெள்ளிவிழா படம்.சென்னையில் வெளியான சாந்தி ,கிரௌன்,புவனேஸ்வரி திரை அரங்குகளில் தொடர்ச்சியாக முறையே 315,313,318 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகும்(100 நாட்களுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள்)மதுரை சிந்தாமணியில் 401 அரங்கு நிறைந்த காட்சிகள்.மேலும் 20 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.இப்படம் சிவாஜியின் 200 ஆவது படம்..அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 26 மட்டுமே.8 திரை அரங்குகளில் வெள்ளிவிழா.இலங்கையிலும் இரு திரை அரங்குகளில் வெள்ளிவிழா.அந்த நாட்களிலேயே முதன் முதலாய் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த படம்.'

இரண்டு கோடிகள் வசூலே பெரும் சாதனை என்றால்..படத்திற்கான தயாரிப்பு செலவு எவ்வளவு குறைவாய் இருந்திருக்கும்...நடிகர்கள் சம்பளம் எவ்வளவு இருந்திருக்கும்..

ஆனால்..இன்று வரும் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் குறைந்தது 100 கோடிகளை தாண்டும் படங்கள்..

இன்றைய தயாரிப்பாளர்கள் படங்கள் நூற்றுக் கணக்கில் பிரிண்ட் போடப்படுகின்றன.ஒரு நாளில் 150 காட்சிகள் (சென்னையில் மட்டும்)திரையிடப் படுகின்றன.இது போலவே பிற மாவட்டங்களிலும்.

தவிர்த்து, தமிழகம் முழுவதும்..மற்ற மாநிலங்கள்..உலக மார்க்கெட் எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்..சராசரியாக 3000 முதல் 6000 காட்சிகள் வரை ஒரே நாளில் நடைபெறுகிறது.மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்சக் கட்டணமே 120 ரூபாய்.நாள் வசூலே கோடிக்கணக்கில்.

படத்தைப் பற்றி விமரிசனம் வரும் முன், ரசிகனை ஏமாற்றி வசூலை அடைந்து விடுகின்றன.

இது ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் தான் செத்துட்டான்..என்பது போல..(படம் வசூலாகிவிட்டது ஆனால் ஓடத்தான் இல்லை.)

போலிகளை விற்று வியாபாரம் செய்வதற்கும், இதற்கும் அதிக வித்தியாசமில்லை.

ஆனால் அதே நேரம் 40 அல்லது 50 பிரிண்டுகள் மட்டுமே போடப்பட்டு..கிடைத்த தியேட்டர்களில் வெளியாகி..குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில்..கதாநாயகர்கள் சம்பளம் குறைய வேண்டும்..தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்...தோல்வி..தோல்வி..என தியேட்டர்காரர்கள் புலம்பலும்,விநியோகஸ்தர் கதறலும்..தயாரிப்பாளர் தலையில் போட்டுக் கொள்ளும் துண்டுகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.


Thursday, October 10, 2013

காதலாவது...கத்திரிக்காயாவது..(ஒரு பக்கக் கதை)



தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களுக்கு அவரவர்கள் எதிர்காலம்தான் முக்கியம்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளிச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Wednesday, October 9, 2013

வாய் விட்டு சிரிங்க....



1)ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?

உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2)என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...

நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!


3)நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை

குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4)நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?

டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க பிழைச்சுடுவீங்க

5.)தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட ஐந்து ரூபாய் காயின் ஒன்று கொடுத்தேனே!

மகன்-ஆமாம்..ஆனா..பஸ்ல கண்டக்டர்...ஐந்து ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.)கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..

அப்போ நீங்க லேசி மோகன்னு சொல்லுங்க.



Tuesday, October 8, 2013

அட்டை படும் பாடு...



அந்த வீட்டில் எல்லா முடிவையும் அம்மாதான் எடுப்பார்.ஆனால் அப்பா முடிவெடுப்பது போல தோன்றும்.அம்மாவும், ஊரில் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.தவிர்த்து, இக் குடும்பத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் உச்ச முடிவு அப்பாவையேச் சேரும் என்றும் ஒரு மாயத் தோற்றம்.

அவர்களது மகனுக்கான அத்தியாவசிய செலவுகளில் ஏற்றம் காரணமாக அவனுக்கு விழும் பற்றாக்குறையை அம்மா தருவார்.திடீரென அம்மாவிற்கு, தான் கொடுக்கும் பற்றாக்குறையை மகன் நேரில் வாங்கக் கூடாது எனக் கருதி மகன் பெயருக்கு ஒரு அட்டையை வழங்கி, மகனிடம் அவ்வட்டையைக் காட்டி வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பிக்கும் படியும், அவனது பற்றாக்குறை பணத்தை தான் நேரிடையாக வங்கியில் செலுத்தி விடுவதாகவும், இது கட்டாயம் என்றும் கூறினார்.

உடன், மகன் அப்பாவிடம் இதை எடுத்துச் சென்றார்.

அப்பா , அம்மாவிடம் சொன்னார், 'அவன் நம் மகன்.அவனுக்காகத் தான் நாம் இருக்கிறோம், அவனிடமிருந்தே பெற்ற அவன் பணத்தில், அவனுக்கு பற்றாக்குறை ஏற்படுகையில் நாம் கொடுக்க வேண்டியது கடமை.இதற்கு அட்டையெல்லாம் ஏன்? வீண் செலவு..தவிர்த்து, பணம் பெற வேண்டியது அவன் உரிமை..அதற்கு கண்டிஷன்ஸ் ஏன்? ஆகவே அட்டையே  தேவையில்லை என்றார்?'

மகனுக்கோ அப்பா இப்படி சொன்னது ஒரே சந்தோஷம்.

ஆனால், அம்மாவோ, இந்த வீட்டில் நான் வைத்ததுதான் சட்டம்..ஆகவே அட்டை அவசியம் என தனது வீடோ பவரை உபயோகித்தார்.

அப்பாவிற்கும், மகனுக்கும் வாய் பேச வார்த்தையில்லை.


Monday, October 7, 2013

தாமதமாய் ஒரு விமரிசனம்...



இந்த படத்திற்கு மிகவும் தாமதித்து விமரிசிக்கக் காரணம்..

ஒரு வாரப் பத்திரிகை மதிப்பெண் குறைவாகப் போட்டதால் அவ்விதழ் அலுவலகத்திற்கே போய் நீதி கேட்டதால் ,சற்றே இப்படத்தை என் வலைப்பூவில் விமரிசிக்க பயம்..

இனி..பல இடங்களில் படத்தைப் பார்த்து விட்டதாலும்..சில இடங்களில் படத்தை எடுத்து விட்டதாலும் , இனி எழுதலாம் என்று எழுதியுள்ளேன்.

மகள்..படிப்பில் சற்று திறமைக் குறைவு...அதற்குக் காரணம் ஆசிரியையும், பள்ளி நிர்வாகத்தின் அடாவடி செயல்களும் என்கிறார்கள், சரி .

பள்ளியில் பணத்தைக் கட்ட, தந்தை தயாராய் இருந்தும், அப்பணத்தை வாங்க மறுக்கும் நாயகன்..மகளின் மீது அதீத பாசம் கொண்டவனா?

சம்பளம் கிடைக்கவில்லை என்பதால்...குடும்பத்தை விரோதித்துக் கொண்டு அண்டை மாநிலம் சென்று அங்கு வேலை செய்கிறானாம்...மகள்..ஆசைப்பட்டுக் கேட்ட நாய்குட்டிக்காக..ரைன்மேகர்..என்னும் ஆதிமக்கள் பயன்படுத்தும் கருவி தேடி..நாய் வாங்க 25000 ரூபாய்க்காக (??!!)  செல்கிறானாம்.அவர்கள் அதைக் கொடுக்க மறுக்க ..அந்த ஆதிவாசியின் காலில் விழுகிறானாம்.

தந்தையிடம் போலி கௌரவம், பள்ளி முதல்வரிடம் போலிகௌரவம், ஆசிரியரிடம் போலி கௌரவம்...ஆனால்..சற்றும் தேவையில்லாத நாய்குட்டிக்கு தகுதிக்கு மீறி செலவு செய்வது என்ன நியாயம்.அதுவும் முன்பின் தெரியாதவர் காலில் விழுந்து கௌரவத்தை இழப்பானேன்.அதுதான் மகள் மீது பாசம் என்றால், அந்த தப்பான பாசம் தேவையில்லையே.

கடைசியில்...செய்தி சொல்ல வேண்டும் என்பதற்காக....அரசு பள்ளியில் படித்தாலேயே சிறக்கலாம்...எனகிறார்.இந்த ஞானோதயத்தை முதலிலேயே செயல் படுத்தியிருந்தால் பல அவமானங்களைத் தவிர்த்திருக்கலாமே.

ஒன்றே ஒன்று எனக்கு புரிந்தது...

வண்ணதாசன் மீது அளவற்ற பற்று கொண்டதால் நாயகனுக்கு படத்தில் 'கல்யாணி;' என்ற பெயர் என்று.

(பி.கு. படத்தின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்றால்..என் வீட்டிற்கு வந்து விமரிசனத்திற்கு தகராறு செய்தால் என்ன செய்வது? எளியோன் தாங்க மாட்டேன். அதனால்தான்.)  

மிஷ்கினும்...ராஜாவும்..

               

ஓநாயும்..ஆட்டுக்குட்டியும்..

இந்த படத்தைப் பற்றி விமரிசிக்க என்ன இருக்கிறது.

தமிழ்ப் படங்களின் தரம் மாஸ் ஹீரோக்களால் மாறாமலேயே இருக்கிறதே என வருந்தும் ரசிகர்களுக்கு ஆறுதலாக பல லோ பட்ஜெட் படங்கள் மிகவும் தரத்துடன் வந்துக் கொண்டிருக்கும் வேளையில்..

'முகமூடி' போடாமல் வந்திருக்கிறது மிஷ்கினின் படம்...

இப்படத்தைப் பற்றி என்னத்த சொல்ல..?

மிஷ்கின் சார்..உங்களுக்கு தமிழ்ப்பட ரசிகர்கள் சார்பில்..ஒரு பெரிய சல்யூட்...

உலகத் தரத்தில் ஒரு படம்..

ஆரம்பக் காட்சியிலே இருந்தே..நாற்காலியில் ரசிகனைக் கட்டிப் போட்டு விட்டு...கடைசியில் தான் அவிழ்த்து விடுகிறீர்கள்..

படத்தில், ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் அளவில் யாரும் இல்லை, கதாநாயகி இல்லை, டூயட் இல்லை...இது தமிழ்ப்படமா? வியக்கவைக்கிரது.

ஆனால்...இவர்கள் யாரும் தேவையில்லை..

நல்ல கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, யதார்த்தம் ..இவை இருந்தால் போதும்..அது வெற்றிப்பட ஃபார்முலா..என உணரவைத்து விட்டீர்கள்.

அதே சமயம் சில லாஜிக் மீறல்களும் உண்டு, சில காம்பரமைஸ்களும் உண்டு.

ஆனால் எல்லவற்ரையும் மறக்க வைத்து விடுகிறது படம்.

அட..அட..அட..இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு.

அட்டகாசம் மிஸ்கின்...

அதே சமயம் இளையராஜா...

என்ன சொல்ல... ஒரே வார்த்தை...

ராஜா ராஜா தான்.. (இது போதும் என எண்ணுகிறேன்). படத்தின் வெற்றியில் கணிசமான பங்கு ராஜாவிற்கு.

மிஷ்கின்...ரொம்பவே வுல்ஃப் வேடத்திற்கு பொருந்துகிறார்.இரட்டைநாடியாயும் இருப்பதால்.

ஸ்ரீ யும் பாத்திரம் உணர்ந்து அசத்தியுள்ளார்.

திருட்டி டிவிடி யில் பார்க்காமல், மக்கள் அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்தால்..படம் இமாலய வெற்றி அடையும்.

மக்கள் செய்வார்களா?


Monday, September 30, 2013

நீரிழிவு நோயால் அவதிப்படும் தமிழ் இதழ்கள்..



ஒருவர் திடீரென காரணமில்லாமல் இளைத்து விட்டால், சாதாரணமாக, "உங்களுக்கு சுகர் இருக்கிறதா?" என விசாரிப்போம்..

அதுபோல தமிழ் இதழ்களும் இன்று இளைத்து விட்டன..

தமிழ் வார இதழ்கள், தங்களுக்கே உரிய அளவுடன்..அதிகப் பக்கத்துடன், நிறைய கதைகள், தொடர்கதைகள், அரசியல், சினிமா, இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் என அனைத்தையும் தாங்கி வந்து, வாசகர்களை அவை என்று வருகிறது என ஆவலுடன் எதிர்ப்பார்க்க வைத்த காலங்கள் உண்டு.

ஆனால்...என்று விகடன், தன் அளவை அதிகரித்தானோ, அன்றே தரத்திலும் சற்று குறைந்து விட்டது. ஆனாலும் சில இலக்கியத் தரம் வாய்ந்த கட்டுரைகள், விமரிசனம் என சுவாரஸ்யம் சற்று இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.ஆனால்..144 பக்கங்கள் வரை வந்த அது, இன்று மிகவும் இளைத்து விட்டது.

அடுத்து அதிகம் வருத்தப்பட வைத்துள்ளது கல்கி. நல்ல பாரம்பரியத்துடன், ஜன ரஞ்சகப் பத்திரிகையா அல்லது இலக்கியமா அல்லது பொது அறிவா என்று அதிசியப்படும் அளவிற்கு வந்த பத்திரிகை.இன்று மிகவும் இளைத்து 48 பக்கங்களே தாங்கி வருகிறது.இப்படியே போனல், கல்கி..வரும் தலைமுறையினரிடம் ஒரு காலத்தில் வந்த பத்திரிகை என்ற பெயர் எடுத்துவிடுமோ என அஞ்சப்பட வேண்டியுள்ளது.

தன் பங்குக்கு கலைமகளும், அமுதசுரபியும் கூட இளைத்து விட்டன.

ஓரளவு, குமுதமும், குங்குமமுமே இன்று சிறப்பாக வருகிறது எனலாம்.(குமுதத்தில் இன்று வரும் செய்திகளில் நாம் உடன்படுகிறோமா , இல்லையா இன்பது வேறு விஷயம்)

இதற்குக் காரணம் என்ன? சர்குலேஷன் குறைந்து விட்டதா? என்றால், அப்படியும் சொல்ல முடியாது.

வேறு என்ன காரணம்..

நான் அறிந்த வரை..அவற்றில் வரும் விளம்பரங்கள் தான் காரணமாய் இருக்கக் கூடும்.

முன்பெல்லாம் இதழுக்கு, இருபது , முப்பது பக்கங்கள் விளம்பரம் வரும்.அதனால் விஷயங்களும் அதிகப் பக்கங்கள் வந்தன.இன்றோ வார இதழ்களில் விளம்பரங்களை அதிகம் காணமுடிவதில்லை.

சென்ற வார 'கல்கி' யில், வெளியார் விளம்பரம் என மூன்று பக்கங்கள் தான் வந்துள்ளது.தவிர்த்து, விளம்பரங்கள் இல்லாததாலும்,காகித விலை உயர்வு, நிர்வாகச் செலவு என கட்டுக்கடங்காத செலவுகள் அதிகரித்ததாலும் இந்நிலை என நிர்வாகிகள் கூறக்கூடும்.

ஆனால்

இனி பழைய தரத்தில் கல்கியையோ, விகடனையோ பார்க்க முடியாதா..என..தமிழ் வாசகர்கள் வருத்தமே அடைகின்றனர்.

Sunday, September 22, 2013

தவறு செய்பவரா நீங்கள்...



மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.


Friday, September 20, 2013

அண்ணா....



பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.

அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.

படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.

படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.

எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.

சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.

இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.

1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.

17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.

நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.

அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.

அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.

எதையும்..தாங்கும் இதயம்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

Tuesday, September 17, 2013

அவரவர் பார்வையில்... (சிறுகதை)



அவள்:-

நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.

எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.

ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.

அம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.

அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.

இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

ரவியின் தாயார்:-
-----------------
என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.

அவன்:-
----------
நான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.

திடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.
நானும் பார்த்தேன்.
பாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.
அம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா?'

'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.

Sunday, September 15, 2013

எல்லாம் இன்ப மயம்..(ஒரு பக்கக் கட்டுரை)


நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...பின்  .........பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

Thursday, September 12, 2013

ஆதலால் அன்புடன் இருப்பீர்..



காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு (79)

அன்பு எனும் அகத்துறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாய் இருந்து என்ன பயன்?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (80)

அன்பு நெஞ்சகத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் அது எலும்புத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

Tuesday, September 10, 2013

வாய் விட்டு சிரிங்க...



சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.



Monday, September 9, 2013

நலம்..நலம் அறிய ஆவல்...




பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகள்லே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்தோட நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.


Thursday, September 5, 2013

உண்மையும்...பொய்யும்...


எல்லோரும் ஊழல்வாதிகள்...உண்மையாய் நாட்டுக்கு உழைப்பவர் இன்று யாரும் இல்லை..இப்படி
பல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.
இன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
பொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.
அலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.
தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.
5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா?
தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,
சுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.
நாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...
தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.

ஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.
உடனே பீர்பால்'நான்கு விரற்கடை வித்தியாசம்'என்றாராம்.
நான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.
அதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.
ஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..
'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே!!!!

Wednesday, September 4, 2013

கனிப்பேச்சு SPB..


 சூபர் சிங்கர் 4..
இதைப் பற்றி பேசாதவர்களோ..நிகழ்ச்சியைப் பாராதவர்களோ மிகச் சிலரே இருப்பர் என எண்ணுகிறேன்.
என்னமாய் பாடுகிறார்கள் இளைஞர்கள்.
கடந்த மூன்று நாட்களாக சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் , இசையப்பாளர் S.P.பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்.
பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார் வள்ளுவர்.
பாலசுப்பிரமணியிடம், அது காணப்பட்டது.
சில பாடகர்கள் பாடியதில் உள்ள சிறு குறைகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டிய போதும், இவர்," சூப்பரா பாடின தம்பி.நாங்க எல்லாம் பாடினபோது கூட பல டேக்குகள் வாங்கிய பாடல்களை நீங்க எல்லாம் சுருதி சுத்தமா லைவ்வா எப்படி பாடறீங்க..' என்று வியந்தார்.
எந்த ஒரு போட்டியாளரையும், கடுமையாய் விமரிசித்து...மன வேதனை அடையச் செய்யவில்லை.
சிறு வயதில் தான் செய்த தவறுகளையும் சொன்னார்.
அவர் சிறப்பு விருந்தினராய் இருந்தாலும், போட்டியாளர்களிடம் ஒரு தந்தைக்குறிய பாசத்துடன் செயல்பட்டார்.
காய் கவராத கனியாய் இருந்தது அவர் பேச்சு.
மற்ற நீதிபதிகளும்..போட்டியாளர்களிடம் இவர் காட்டிய மனித நேயத்தைக் காட்டுவார்களா? 

Tuesday, September 3, 2013

வாய் விட்டு சிரிங்க...



1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?


உடல், மனம் ஆரோக்கியம் அடைய நினைக்க வேண்டியன - பாரதியார்




நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

Monday, September 2, 2013

மிருகங்களே...மனித ஆசை தவிர்...



நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

Friday, August 30, 2013

பொன்மொழிகள் ஐந்து...




..1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

Sunday, August 25, 2013

கொஞ்சி விளையாடும் தமிழ்..- 27




காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.


ஒரு தினசரியில், திரு இரா.ராமமூர்த்தி எழுதியது இது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.ஆகவே இப்பதிவு.

Thursday, August 22, 2013

வாய் விட்டு சிரிங்க... தலைவர் ஜோக்ஸ்..



1) எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னைப் பார்த்தால் பயம்....நான் என்ன சிங்கமா அல்லது புலியா
  சேச்சே...அது எல்லாம் எவ்வளவு சாதுவான மிருகங்கள்...

2)தலைவர் இன்று வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போறாராம்...
 யார் தலைமை..? யார் முன்னிலை..??
 அவர் மச்சான் தலைமையிலே..மாமா முன்னிலையிலே..அவர் மகன் வரவேற்புரை நிகழ்த்தியதும்..பேசுவார்

3)தலைவர் ஏன் எப்பவும் கைகளில் 'கிளவ்ஸ்' போட்டுக்கிட்டு இருக்கார்?
  தன் கை அவ்வளவு சுத்தம்னு சிம்பாலிக்கா சொல்றாராம்.

4)நம்ம தலைவர் டிபாசிட் இழந்துட்டார்??
 எந்தத் தொகுதியில் போட்டியிட்டு..?
 நான் சொல்றது..அவர் டிபாசிட் போட்டு வைத்திருந்த ஃபைனான்ஸ் கம்பெனியை மூடிட்டதால..

5)குறவர்கள்கிட்ட ஓட்டுக் கேட்கப் போன தலைவர், 'அவர்கள் முதாதையர்கள் தமிழுக்குச் செய்த சேவைக்கு பாராட்டு தெரிவித்தாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை இவர்கள்தான்னு தப்பா நினைச்சுட்டார்..

6)தலைவா! உங்கப் பெயர் குற்றப்பத்திரிகையிலே வந்திருக்கு..
 அந்தப்பத்திரிகை சர்குலேஷன் எவ்வளவு.


Tuesday, August 20, 2013

குறள் போற்றுவோம் -5



ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்)

கண் போன போக்கில் எல்லாம் மனிதன் போகலாமா? என்று ஒரு பாடல் உண்டு.அதாவது, நம் கண்கள் பார்த்து, ஆசைப்பட்டு அதன் வழியில் எல்லாம் நடந்தால், அது சிக்கலில்தான் கொண்டு விடும். கண்கள் பார்த்தாலும், மனம் சிந்தித்து நல்லது, கெட்டது உணர்ந்து செயல் பட வேண்டும்.(புலன் - கண்)

நம்மில் கோபம் ஏற்பட்டால் , இடம் மறந்து..வாயில் வந்ததை எல்லாம் உரக்கக் கூறி, அதுவரை நம்மைப் பற்றி நல்லபடியே நினைப்பவர்கள் எண்ணங்களை மாற்றி விடுவோம்.அது சரியா? பிறர் பற்றி புறம் கூறுவோம்..அது சரியா(புலன்-மெய்)

கெட்டவற்றைக் கேட்காத செவி வெண்டும்.நல்லவற்றையே நாளும் கேட்க வேண்டும்.(புலன்-செவி)

வாசனையைத் தரும் பொருள்கள், உணவு போன்றவைக்கூட ஆசையைத் தூண்டும்.ஆனால் அவை உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு விளைவிப்பவை என உணர வேண்டும். (மூக்கு -புலன்)

நமக்கு புலனடக்கம் இல்லாவிடில், நம் பெயர், புகழ், வாழ்வு எல்லாம் கெடும்.மனிதனாய் பிறந்தோர் அனைவருமே..தங்கள் ஐம்புலன்களை அடக்கினால், வையத்தில் சந்தோசமாக வாழ்வாங்கு வாழலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை..ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவனைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு    (28)

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் .

சிரிப்போம்..சிந்திப்போம்...




வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Wednesday, August 14, 2013

சுதந்திரம் எப்போ கிடைச்சது?! வாய் விட்டு சிரிங்க..



1) அப்பா..நாளையிலிருந்து நாம பணக்காரரா ஆயிடலாம்
   எப்படி
  நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயா மாத்தறதுன்னு சொல்லிக்கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்

2)இன்னிக்கு தலைவருக்கு எடைக்கு எடை பேனா கொடுக்கிறார்களாம்
 ஏன்...
 பிரதமருக்கு அப்பப்ப கடிதம் எழுத பேனா வேண்டியிருக்குமே

3)நீங்க நடிச்சப்படம்..வெற்றியடையணும்னு நாமே முயற்சி செய்யணுமா? புரியலையே..
 படம் வெளிவரும் நாள் அன்று ஏதெனும் கிளர்ச்சி பண்ணவைச்சு படம் வெளிவராம தடுக்கணும்

4)சுதந்திரம் எப்ப கிடைச்சுது
 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி
 என்ன சொல்ற
 அன்னிக்குத்தானே என் மனைவி கோச்சுண்டு பிறந்த வீடு போனா

5)வர வர ஆஃபீஸிலிருந்து ஏன் லேட்டா வரீங்க
  எந்த பயலும் கிளம்பும்போது எழுப்பாமல் போயிடறான்

6)உன்னைவிட உன் பையன் தைரியசாலியா? எப்படி சொல்ற
  என் மனைவியை எதிர்த்து பேசறானே

  (பதிவர்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துகள்)


Tuesday, August 13, 2013

சூரியனுக்கே டார்ச்...



(வண்ணதாசனின் கவிதை ஒன்றை பாராட்டி என் கவிதை)


வண்ணத்துப் பூச்சி
விரலிடுக்கில்
வண்ணத்தை
விட்டுச் செல்லல் போல்
வண்ணதாசா..
உன் எழுத்தின்
வண்ணம்..மனதில்..
வன்மையாய் ஒட்டிக்கொள்ளும்
வண்ணம்..கோலில்..
விடுப்பது என்ன மை..

Tuesday, July 30, 2013

ஒபாவிற்கு நாளைக்கு இப்படியும் கடிதங்கள் வரலாம்..


மோடிக்கு விசா வழங்கக் கூடாது என ஒபாமாவிற்கு கடிதம் எழுதிய எம்.பி.க்கள் நாளை இதெற்கெல்லாம் கூட கடிதம் எழுதினால் ஆச்சரியப்பட வேண்டாம்.

தமிழக எம்.பி.க்கள் _- கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும்

கேரளா - முதல்வர் மீதான சோலார் ஊழல் புகாரை FBI விசாரைக்க வேண்டும்.

நிதிஷ் குமார் - மதிய உணவில் 23 குழந்தைகம் இறந்ததிற்கு சர்வதேச சதி இருக்கிறதா..அல்லது பி ஜேபி போன்ற  எதிர்க்கட்சிகள் சதியா என விசாரிக்க வேண்டும்.

லாலூ - ராகுலும் வேண்டாம். மோடியும் வேண்டாம். அடுத்த பிரதமராக நீங்கள் வருவதானால் எங்கள் கட்சி ஆதரிக்கும்.

மன்மோகன் சிங்- அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் சோனியாவிடம் பேசி..பிரதமர் பதவியை எனக்கு வாங்கித் தர வேண்டும்.

கர்நாடக முதல்வர் - காவிரி தண்ணீரை துளியும் தரமுடியாது அன அறிவித்ததும் , அந்த அறிவிப்பை மழை கெடுத்தது.உங்கள் அனுமதியின்றி வந்த மழை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மோடி- பிரதமர் பதவி என் காருக்கு முன் ஓடும் நாய்க்குட்டி போல.அடிபட்டாலும் எனக்கு லாபம்.பிழைத்தாலும் எனக்கு லாபம்.இதற்கும் விசாவிற்கும் சம்பந்தமில்லை.வீடியோ கான்ஃபிரன்ஸிற்கு தடை போட வேண்டாம்.

அத்வானி - எனக்கு அழுகை அழுகையாய் வருது.ஏன் எனத் தெரிந்தால் உடனே தெரிவிக்கவும்.


Thursday, July 11, 2013

குறள் போற்றுவோம் - 4



மழை...வாழ்வாதாரங்களில் முக்கியமானது.

இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும்.

மழை.....பெய்யத் தவறினால்....விவசாயம் மட்டுமா பதிக்கப்படும்? மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்...நதிகள் வேண்டுமானல்..அந்நீரை...தன் புகலிடமான கடலில் கொண்டு சேர்க்கும்.ஆனால்..மக்கள் வாழும் பகுதிகளில்..வெள்ளம் புரண்டோடி உயிர்களில் வாழ்வைக் கெடுத்து..பல உயிர்களை பறித்துச் செல்லும்.

இக்கருத்தை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார்?

"கெடுப்பதூஉங்  கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
 எடுப்பதூஉம் எல்லாம் மழை"  - 15

பொருள் - பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.


Wednesday, July 10, 2013

குறள் போற்றுவோம் - 3



இந்தியா...

தனது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம்.

ஆனால் கடல் நீரால் என்ன பயன்?.நதிகளில் தண்ணீர் இல்லை.கடல் நீர் விவசாயத்திற்கு பயன் படுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

ஆனால்..ஒரு அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறோம்.

அந்த கடல்தான் தன் நீரை ஆவியாக்கி, மழைமேகமாக்கி மழையை தருவிக்க மூல காரணமாய் உள்ளது.ஆனால் அந்த கடல் நினைக்கும் இடத்தில் மழை பொழிய வாய்ப்பில்லை.

ஆகவே..கடல் நீர்  சூழ்ந்த உலகமாயினும்..அதிலிருந்த்து தோன்றும் மழை தேவையான இடங்களில் பெய்யாது பொய்த்துவிடின் விளைச்சல் இல்லை...நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுகிறது.

வள்ளுவரும்..வான்சிறப்பில் சொல்லுவது என்ன.....

'விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி'  - 13

பொருள் - கடல்நீர் சூழ்ந்த உலகமாய் இருந்தாலும், மழைநீர் பொய்த்து விட்டால், பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


குறள் போற்றுவோம்..- 2



இன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன.

அதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை.

நமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும்.

காரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.அவன் விளைச்சலுக்கு அவனால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.அப்படியும் விவசாயம் செய்யலாம் என்றால், மழையில்லை. அதனால் நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.தண்ணீரிலும் அரசியல்.ஆகவே கிடைத்த விலைக்கு விளைநிலத்தை விற்று விட்டு, நகரம் நோக்கி நகர்கிறான்.நகரத்தில் கூலி வேலையாவது செய்து பிழைக்கலாம் என்று.

விவசாயியின் வளம் குறைய மழை பிரதானக் காரணம்.இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்..

 'ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
 வாரி வளங்குன்றிக் கால்'

இதன் பொருள்......

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத்தொழில் குன்றிவிடும்.

மழையை விவசாயியின் வருவாய் என அவர் குறிப்பிட்டது இக்குறளின் சிறப்பு.

Monday, July 8, 2013

குறள் போற்றுவோம்..- 1



திருக்குறள்..

ஒன்றே முக்கால் அடியில், பல கருத்துகளை தன்னுள் அடக்கியுள்ள நூல்..

உலகம் போற்றும் தமிழ் மறை..

அதில் இருந்து நாள் தோறும் ஒரு குறளுக்கு விளக்கம் சொல்ல முடிவெடுத்துள்ளேன்.

இன்று..

வான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்..

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை....    -12

இது சாதாரணமாக...திருக்குறள் தெரியுமா?  எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
இக்குறளுக்கான பொருள் என்ன? பார்ப்போம்..

இது என்ன  துப்பாக்கி ..என்கிறீர்களா?

அந்தத் துப்பாக்கி ஏந்தி வரும் அர்த்தம் என்ன?..

இன்று  பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்...என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..

மழை...மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.

அதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.

இப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை...நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.

இனி....மேற் சொன்ன குறளுக்கான உரை-

மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.

(பின் குறிப்பு- இது அக்குறள் கூறும் பொருள். இதை ஒவ்வொரு சொல்லுக்குமான பொருள் கொண்டு நோக்க வேண்டாம் )


Wednesday, July 3, 2013

புற்றுநோயும்..விளம்பர படங்களும்....



இப்போதெல்லாம் விளம்பரங்களுக்கு என்னதான் செய்வது என்று இல்லாமல்..சற்று எல்லை மீறியே வருகின்றன.

குறிப்பாக, முடி கொட்டுவதற்கான ஒரு தைல விளம்பரத்தில், பெரியவர்களுக்குத் தெரியாத ஒன்றை..பள்ளி சிறுவர்களுக்குத் தெரிந்திருப்பது போல காட்டப்படுகிறது.

அதுவாவது பரவாயில்லை..பதினைந்தே வயது நிரம்பியுள்ளது போன்ற ஒரு பெண், தந்தைக்கு சாக்லேட் கொடுக்க, தந்தை அதற்காக மேலும் இரண்டு சுற்று ஓட வேண்டும் என்கிறார்.அவரை அனுப்பி விட்டு தனது பாய் ஃப்ரண்டுக்கு விசில் அடித்து கூப்பிடுகிறாள் அப்பெண்.இது பிரபல சாக்லெட் நிறுவன விளம்பரம்.(இந்த சாக்லேட் அப்பாவை ஏமாற்ற என்கிறார்களோ)

அதைவிட கொடுமை...

ஒரு தனியார் மருத்துவமனை விளம்பரப்படம்.

புற்று நோய்க்கு வைத்தியம் பார்க்கிறார்களாம் சிறப்பாக..அதற்கான விளம்பரத்தில்..

ஒரு சிறுவனுக்கு (அவனுக்கு பத்து வயதிருக்குமா) புற்று நோய் என குடும்ப வைத்தியர் கூறி, அந்த குறிப்பிட்ட மருத்துமனையை சிபாரிசு செய்கிறாராம்.

யாருக்கு உடம்பிற்கு வந்தாலும் வருத்தமே..ஆனால் ஒரு சிறுவனுக்கு (குழந்தை என்று சொல்லலாமா) புற்று நோய் வந்துள்ளது எனக்காட்டுவது..மனம் ஆறவில்லை.அவனை பெற்றோர் கவலையுடன், கண்கள் கலங்க அம்மருத்துவமனையில் சேர்க்கிறார்களாம்.அங்கு வைத்தியர்..புற்று நோய் தடுப்பு வீரன் என்ற பேட்ஜ் குத்திவிட..அவன் ஒரு போர் வீரனாக நடிக்கிறான்.அவனைப் பெற்றோர் கண் கலங்க கைதட்டுகின்றனர்.

இது என்ன விளம்பரம்.ஒரு மருத்துவ மனை , கிட்டத்தட்ட ஆட்கொல்லி நோய்க்கு... சிறந்த மருத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி.ஆனால் அதை விளம்பரமாக்கி, அதையும் ஒரு சிறுவனைக்காட்டுவது..

சே....கோபம் வருகிறது..கூடவே..விளம்பர நோக்குக் கொண்ட அந்த மருத்துவமனை மீது அருவெறுப்பும் வருகிறது.

Tuesday, July 2, 2013

தமிழுக்கு கொம்பு விளைவித்தவர்



தமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்

கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.

நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)

இந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.

அதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..

னை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.

Sunday, June 2, 2013

கலைஞர் 90

                                 

கலைஞர்...

தமிழக அரசியலில் மறக்கமுடியாதவர்.அவரிடம் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள் கூட..சிறுவயது முதல் ..ஒரு நொடி கூட அயராமல் உழைத்த..உழைத்துக் கொண்டிருக்கும் நபர் என்றால்..இவரைத் தவிர உங்களில் வேறு ஒருவர் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் வருமா?

உழைப்பு..உழைப்பு..உழைப்பு...

அந்த உழைப்புதான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது.

அஷ்டாவதானி அவர்..

திரைப்பட வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடலாசிரியர், இலக்கியவாதி,அர்சியல்வாதி என பன்முகம் கொண்டவர்.

அந்த உழைப்பின் சிகரத்திற்கு இன்று 90ஆம் பிறந்த நாள்.

கட்சி வேறுபாடுகள், காழ்ப்புணர்ச்சி ஆகியவை விட்டு அந்த மனிதனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வோம்.

இந்நாளில்..அவருக்கு தமிழா..தமிழா ..வலைப்பதிவு..உங்களது அனுமதியுடன்..'உழைப்பின் சிகரம்' என்ற பட்டம் அளித்து சிறப்படைகிறது.

Friday, May 24, 2013

லட்சியத்தை அடைவது எப்படி...



அவனுக்கு பறவைகள் என்றால் பிடிக்கும்.,
தினமும் காலை ஜன்னலைத் திறந்தால்..அவனுக்காக காத்திருக்கும் புறாக்கள்..
அவனைக் கண்ட சந்தோஷத்தில்..கா கா என கூவி தன் இனத்தை அழைத்து அவனைக் காணச்சொல்லும் காகங்கள்.,
சில கிளிகள்..மரங்கொத்திகள்,குருவிகள்..
சுருங்கச் சொன்னால்..அவன் ஒரு பறவைகளின் சரணாலயமாகவே திகழ்ந்தான்.
அவைகள் அவன் கொடுக்கும் தானியங்களையும்,பழங்களையும்...அவன் பக்கத்தில் வந்து உண்ணும்.

ஒருநாள் அவன் மகன் 'அப்பா..எனக்கு விளையாட ஒரு கிளி பிடித்துத் தாயேன்' என்றான்.

மறுநாள் அவன் லாவகமாக ஒரு கிளியைப் பிடித்து மகனிடம் கொடுத்தான்..அவனை அக்கிளி பயந்தபடி பார்த்தது.மற்ற பறவைகள் பறந்து செல்ல கிளியின் கண்களில் ஒரு ஏக்கம்.
மறுநாள் காலை..ஜன்னலைத்திறந்தான்...
பறவைகளை காணவில்லை.
மீண்டும் அவை வரவேயில்லை.
மனதில் இரக்கம் இருந்தவரை பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்தவன்..இரக்க குணத்தை விட்டதும்...தண்ணீர் அற்ற இடம் என எண்ணி அவை வரவில்லையோ?

பிறர்க்கு தொல்லை கொடுக்கும் போது..அவருக்கு வேண்டியர்களால் வெறுக்கப்படுகிறோம்.,
ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.


ஸ்ரீசாந்த் எம்.பி.. ஆகிறார்..



இது என்னப்பா புது செய்தி என்று பார்க்கறீர்களா..

ஆமாங்க..ஸ்பாட் ஃபிக்சிங்க் என்று சொல்லி அவரை கைது பண்ணினாலும்...அவர் இனி தன் வாழ்நாள் முழுதும் கிரிக்கெட் விளையாட முடியாது என லைஃப் டைம் தடையை கிரிக்கெட் வாரியம் அளித்தாலும்...

இந்த ஊழல்களெல்லாம் நம்ம மக்களைப் பொறுத்தவரை ஜுஜுபி...அவங்க எவ்வளவு லட்சக்கணக்கில..தப்பு..தப்பு..லட்சக்கணக்கான கோடி ஊழல் பற்றியெல்லாம் பார்த்திருக்காங்க,,

மக்களை ஏமாத்தினால்தாங்க அரசியல்ல பிரகாசிக்க முடியும்.

வேணும்னா பாருங்க..கூடிய சீக்கிரம்..ஸ்ரீசாந்த் எம்.பி., ஆகிடுவார்.

இதுக்கு முன்னால இப்படித்தானே மேட்ச் ஃபிக்சிங்க்குன்னு வாழ்நாள் தடை அறிவிக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரரை..காங்கிரஸ் எம்.பி., தேர்தல்ல சீட் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினராக்கியது.

Wednesday, May 22, 2013

'பொன்னியின் செல்வன்' குறுந்தகடு வெளியீட்டு விழா..




எனது நண்பர் திரு பாம்பே கண்ணன், இதற்கு முன் அப்புசாமி கதைகள், சிவகாமியின் சபதம் போன்ற ஒலிப்புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

அவரது அண்மைய முயற்சி, என்றும் ஒளி குன்றா..'கல்கி' அவர்களின் ஒலிப்புத்தகம் (audio Cd). ஆம்..இனி கல்கியின் சாகாவரம் பெற்ற பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் நம் முன் ஒலி வடிவில் வரப்போகிறார்கள்.அறுபதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள், 15 முத்தான பாடல்களென 78 மணி நேர ஒலிப்புத்தகம் மூன்று குறுந்தகடுகளாக வெளி வருகிறது.இதை தயாரித்துள்ளவர் சி.கே.வெங்கட்ராமன்.இயக்கம் பாம்பே கண்ணன்.

நல்லி ஆதரவில், பிரம்ம கான சபா இந்த விழாவை நடத்துகிறது. 14-6-13 அன்று மாலை 6 மணிக்கு சென்னை நாரத கான சபாவில் குறுந்தகடுகள் வெளியாகின்றன.

தவிர்த்து, அன்று அடுத்த நிகழ்ச்சியாக சிறப்பு பட்டி மன்றமும் நடக்க உள்ளது.

பேராசிரியர் வா.வே.சு. தலைமையில்...திருப்பூர் கிருஷ்ணன், வழக்கறிஞர் சுமதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.தலைப்பு..
'அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் வெற்றிக்கு மிகுதியும் காரணமாய் இருந்தது..கற்பனை வளமா...கருத்துப் பொலிவா..

அனுமதி இலவசம்.

நண்பர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கவும்.

Tuesday, May 21, 2013

படித்ததில் பிடித்தது...





.1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

Sunday, May 19, 2013

வாய் விட்டு சிரிங்க...




1.உன்னை நம்பி வநதவனை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது?
நம்பி வந்தவனைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவனை என்ன செய்ய முடியும்.

2.நம்ம தலைவரை நான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டது தப்பாப் போச்சு
ஏன்? என்ன ஆச்சு
என்னய்யா ஏதோ நூல் வெளியீடுன்னு சொல்லிட்டு கையிலே புத்தகம் ஒன்னைக் கொடுத்து
வெளியிடச் சொல்றியேன்னு கோபப்பட்டார்

3.தயாரிப்பாளர்-(கவர்ச்சி நடிகையிடம்)வயதான கிராமத்து கிழவியை மையமா வைச்சு ஒரு படம் எடுக்கிறோம்
யாருக்கும் எந்த மேக்கப்பும் கிடையாது..நீங்க நடிச்சா தத்ரூபமாயிருக்கும்.

4.உங்க ஆஃபீசிலே வேலை செய்யற சாஃப்ட்வேர் எஞ்சினீயர் தங்கம் உண்மையிலேயே பத்தரை மாற்று தங்கம் னு
எப்படி சொல்றே
உரசி பார்த்துட்டேனே

5. இன்னயிலேயிருந்து நம்ம கம்பனிலே உங்களை அப்பாயிண்ட் பண்றேன்..உங்களுக்கு எதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க..
நான் VRS ல போகமுடியுமா...சார்

6.உன்னோட நண்பன் அண்டப்புளுகு ன்னு எப்படி சொல்ற
ஹாஸ்பிடல்லே ஆபரேஷன் தியேட்டர்ல புரஜக்டர் ஆபரேட்டராய் இருக்கேன் னு சொல்றான்


Thursday, May 16, 2013

யாகாவாராயினும்.....




என்னிடம் ஒரு குணமுண்டு..

அது வேடிக்கையாய் பேசுவது. நண்பர்களும் அவற்றை ரசிப்பதுண்டு.

உதாரணத்திற்கு, நண்பர் ஒருவர் தன் வீட்டில் செய்த இனிப்பு ஒன்றைக் கொடுத்தார்.நன்றாய் இருந்தது.நண்பர், 'எப்படி இருக்கிறது "என்றார். வழக்கமான நக்கல் தலைகாட்ட நான்,'நன்றாய் இருக்கிறது..ஆனால் சற்று உப்பு குறைவு' என்றேன்.சுற்றியிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.நண்பரின் முகமும் சுருங்கிவிட்டது.

மற்றொரு நண்பர் டிரட் மில் வாங்கியிருந்தார்.ஒருநாள் எங்கள் அனைவரையும் கூட்டிக் காட்டினார்.என்னால் காலையில் வாக் போக முடிவதில்லை.ஆகவே வீட்டிலேயே செய்திடுவேன் என்றார்.ஆனால்..அவர் அப்படி செய்யவில்லை.ஒரு சமயம் ஊரிலிருந்து வந்த அவர் உறவினர், 'டிரட் மில்லில் தினம் நடக்கிறாயா?' என்றார்.நான் சும்மா இருக்கக் கூடாது.அதுதான் நம் பழக்கம் இல்லையே , அதனால்' உங்களுக்குத் தெரியாதா? இந்த டிரட் மில் அதற்காக வாங்கவில்லை.அது வாங்கிய கடையில் இடமில்லாததால்..இதை இங்கே கடைக்காரர் போட்டு வைத்துள்ளார்.' என்றேன்.நண்பர் நெளிந்தார்.

இப்படி எனது நா காக்காததால்..பல நண்பர்களை இக்கட்டில் ஆழ்த்தியுள்ளேன்..நகைச்சுவை என்ற பெயரில்.

ஒருநாள் ஒருவரிடம் இப்படி செய்யப்போக அவர் மிகவும் வருந்தினார்.அப்போதுதான் எனக்கு தெரிந்தது.இது போல எவ்வளவு நண்பர்களை வருத்தப்பட வைத்திருக்கிறேன் என்று.

நாம் நகைச்சுவை என்று நினைத்து சொல்வது, பிறரை வருத்தப்பட வைத்துள்ளதே ..அது கூட எனக்குத் தெரியவில்லையே! என.வருந்தினேன்.

இனி யாரிடமும் இப்படி நடக்கக்கூடாது என தீர்மானித்து விட்டேன்.

சமீபத்தில் ஒரு நண்பர், 'வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை' என்றார்..கீழே வாழைப்பழத்தோல் வழுக்கி(!!) விழுந்தவரைக் கண்டு நான் நகைக்காததால்..பிறர் துயர் நமக்கு நகைச்சுவை என அவர் எண்ணியதால்.

பிறர் புண்பட பேசுவது, பிறர் துயர் கண்டு நகைப்பது, பிறர் செயலை எள்ளி நகையாடுவது போன்றவை நகைச்சுவை என்றால்..அந்த உணர்வு என்னை விட்டு சாகட்டும்.

யாரையும் புண் படுத்தாத நகைச்சுவை உணர்வு  நம் அனைவரிடமும் வளரட்டும்.

Tuesday, May 14, 2013

வாய் விட்டு சிரிங்க....




1.தயாரிப்பாளர்- தூக்கம் வரலேன்னா நம்ம படத்தைப் பார்க்கலாம்னு பத்திரிகைல விமரிசனம் எழுதி இருக்காங்க..
இயக்குநர்-  அதனால்தான் படத்துக்கு ஆஃபீஸ்னு பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

2.தயாரிப்பாளர் (கதாசிரியரிடம்) என்னங்க..உங்க கதையில ஒரே துப்பாக்கி சத்தம்..கொலை..அப்படி..இப்படின்னு இருக்கு..மக்கள் சட்டம் என்ன செய்யுதுன்னு கேட்கமாட்டாங்களா?
கதாசிரியர்- அதற்கும்..ஒரு ஐடியா வைச்சிருக்கேன்..கதாநாயகன் எப்பவும் கையில ஒரு மர சட்டம் வைச்சிருப்பார்..அதனால சட்டம் அவர் கையிலன்னு சொல்லிடலாம்.

3.எங்க ஆஃபீஸ்ல இப்ப தொட்டதெற்கெல்லாம் மெமோ கொடுத்திடறாங்க..
ஆமா..அப்படி எதைத் தொட்டீங்க?
ரிஷப்ஷனிஸ்ட் தாராவைத்தான்

4.என்னங்க..உங்க ஹோட்டல்ல பா.ம.க., ஐந்து ரூபாய்னு போட்டிருக்கீங்க
பார்சல் மட்டும் கட்ட ஐந்து ருபாய்..அதன் சுருக்கம்தான் பா.ம.க.,

5.ஏன் சார்..முகத்தை திருப்பி வெச்சுக்கிட்டு லஞ்சம் வாங்கறீங்க
யாராவது ஃபோட்டோ எடுத்தா ஆள் யாருன்னு தெரியக்கூடாதே...அதற்குத்தான்..

6.அந்த மருந்து கடையில வேலை செய்யறவர் முன்னால டாஸ்மாக் ல வேலை செஞ்சார்னு எப்படி சொல்ற
இருமலுக்கு மருந்து கேட்டா 100 மில்லியா..200 மில்லியான்னு கேட்கறாரே



அதிஷாவும்...சினிமா விமரிசனமும்..




ஒரு படம் வெளியீடு அன்றே...முதல் காட்சி முடிந்ததுமே சுடச் சுட இணையத்தில்..அவரவர் வலைப்பூவில் விமரிசனங்கள் வந்துவிடுகின்றன.

சில பதிவர்களின் விமரிசனங்கள் தரமானவையாகவே உள்ளன.

ஆகவேதான் தயாரிப்பாளர்களும் இப்போது இணைய விமரிசனத்திற்கு பயப்படுகிறார்கள்பலர் டைடில் கார்டில் இணையதள நண்பர்களுக்கு நன்றி என்றும் போட ஆரம்பித்துவிட்டார்கள்..

தரம் பற்றி சொல்ல ஆரம்பித்து வேறு எங்கோ செல்கிறேன்....

தரமான விமரிசனம் எழுதுபவர்களில் முன் வரிசையில் இருப்பவர்களில் அதிஷாவும் ஒருவர்.

அவரது நாகராஜ சோழன் விமரிசன் படித்ததும் அவரை உடனே பாராட்டத் தோன்றியதால் இப்பதிவு.

விமரிசனம் காண இங்கே செல்லவும்....

http://www.athishaonline.com/2013/05/blog-post.html

திறமை அதிகம் இருந்தும்..அதை முழுமையாக செலவிடாதவர் இவர் எனலாம்.

நான் இப்படி சொல்வதற்கும், அவரிடம் இருந்து ஏடாக்கூடமான பதிலே வரும்..இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள்....

Sunday, May 12, 2013

அம்மா...

                 



அன்னையைப் போல் தெய்வம் இல்லையாம்
 நாத்திகனையும் சற்று மாற்றுகிறாள் 
அன்னையை எண்ணியதும் 
தெய்வம் உண்டென்கிறான் 
அவளே தெய்வம் என்கிறான்
 கருவறையில் அவள் இல்லையாயினும் 
கருவில் அவனைச் சுமந்தவளாயிற்றே...

Thursday, May 9, 2013

உங்களை மாற்றிக் கொள்ளுங்களேன்....




சமீபத்தில் நண்பர் ஒருவரின் 90 வயது தந்தை அமரரான செய்தி அறிந்து அவரது இல்லம் சென்றேன்.
நண்பர் சற்று பிரபலமானவர் என்பதால் துக்கம் வருவோர் கூட்டமும் சற்று அதிகம் இருந்தது.
ஆனால் வந்த அனைவரும் நண்பரைப் பார்த்து தங்கள் வருத்தத்தை தெரிவித்துவிட்டு...மரணம் எப்படி நிகழ்ந்தது, அவர் மருத்துவமனையில் இருந்தாரா? கடைசியில் அவருடன் இருந்தது யார்? எப்படி மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்தீர்கள்?வர வேண்டியவர்கள் எல்லாம் வந்தாய் விட்டதா? எத்தனை மணிக்கு சொல்லியிருக்கிறீர்கள்? பெசண்ட் நகரா..மைலாப்பூரா? என நண்பரை துக்கம் விசாரித்துவிட்டு..தேர்வுப்போல ஒரு மதிப்பெண் கேள்விகள் பலவற்றைக் கேட்டுவிட்டனர்.
ஒருவர்..இருவர் என்றால் பரவாயில்லை..
 நண்பரால் எத்தனைப் பேருக்கு இதே கேள்விகளுக்கு பதிலைக் கூறிக்கொண்டிருக்க முடியும்.
தவிர்த்து அவர் மேற்கொள்ள வேண்டிய வேலைகளும் இருக்கிறது..
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு..சற்று கோபமே வந்தது.
நம் பங்கிற்கு நாமும் கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று எண்ணி..நண்பரிடம்..என் வருத்தத்தை தெரிவித்துவிட்டு கிளம்பினேன்.
ஆகவே நண்பர்களே...மரணம் விசாரிக்கச் செல்லும் நாம்..அதைமட்டும் செய்துவிட்டு கிளம்புவோம்.
மேற்கொண்டு தெரிய வேண்டுமானால் பிறகுக் கேட்டுக் கொள்ளலாமே!

Wednesday, May 8, 2013

கர்நாடக மக்களை குறை சொல்ல முடியாது...


கர்நாடகா...என்னத்தச் சொல்ல..

கர்நாடகத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

கொஞ்சம் எண்ணிப்பார்ப்போம்..


மக்கள் ,  பிஜேபியை நம்பி..தென் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைக் கொடுத்தார்கள்.ஆனால் மக்களை பிஜேபி நன்கு ஏமாற்றிவிட்டது.

ஐந்து ஆண்டு காலமும், உட் கட்சிப் பூசல், கட்சி மேலிடம் விலகச் சொல்லியும்..பிடிவாதமாக ஒட்டிக்கொண்டிருந்த முதல்வர், ஊழல், பதவி ஆசை என ஆட்சி நடந்தது.தவிர்த்து..தனக்கு ஆதரவு உள்ளதாக அவரவர் எண்ணிக் கொண்டு, கட்சியையே உடைத்தனர்.மக்களுக்காக பெரிதாக ஏதும் செய்யவில்லை

மக்கள்..சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தனர்.தங்கள் முடிவை தேர்தலில் காட்டி விட்டனர்.

இதனால்..காங்கிரஸையோ, அவர்களின் வானளாவிய உழலையோ மக்கள் ஆதரிப்பதாக காங்கிரஸ் கனவு காண வேண்டாம்.

மக்களுக்கு வேறு போக்கிடம் இல்லை..என்ன செய்வது..இதை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்ததால்தான் மனம் போன படி நடக்கிறார்கள்..நாடகம் ஆடுகிறார்கள்..முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ராமன் ஆண்டாலும் என்ன ராவணன் ஆண்டாலும் என்ன..என்பார்கள்..

உண்மையில்...மக்களைப் பொறுத்தவரை அனைவரும்...ஊழல் வாதிகள், பதவிப்பித்து கொண்டவர்கள்...மாற்றி  மாற்றி பிழைத்துக் கொள்ளட்டும் என்ற எண்ணம்தான்.

Sunday, April 28, 2013

பாவேந்தர் பாரதிதாசன் 123 ஆவது பிறந்த நாள்





அண்ணாவால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசனின்  பிறந்தநாள் விழா இன்று.

பாரதிதாசனின்..புகழ் பெற்ற நம்மால் மறக்க முடியா வரிகள்..

'புதியதோர் உலகம் செய்வோம்..கெட்ட
போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்'

மற்றும்..

தமிழுக்கு அமுதென்று பெயர்-அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்'

'சங்கே முழங்கு' என்ற பாடலும் திரைப்படத்திலும் பாடப்பட்டு புகழ் பெற்றது..

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற பாடலும் பிரசித்தம்.

உவமைகள் சொல்வதில் மன்னர் இவர்.இவர் தன் படைப்புகளில் 900 க்கும் மேற்பட்ட உவமைகளை சொல்லியிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

உவமை என்பதை ஆங்கிலத்தில் simile என்பர்.உவமை என்பது தெரிவிக்க விரும்பும் பொருளைத்..தெரிந்த பழைய பொருளோடு ஒப்பிட்டுச் சொல்வதே யாகும்..

உதாரணமாக..பாரதிதாசன் மணல் மேட்டை உவமைப்படுத்தும் போது..அந்த மணலின் மென்மைத் தன்மையை..'கீரியின் உடல் வண்ணம் போல்..மணல் மெத்தை' எம்கிறார்.

கணவனும், மனைவியும் தேனும்..வண்டும் போல இருக்க வேண்டுமாம்..அப்படிப்பட்ட இல்லறமே சிறக்குமாம்.

அதேபோல கல்வி இல்லா பெண்களை களர் நிலத்திற்கு ஒப்பிடுகிறார்..

கல்வியில்லாத பெண்கள்
களர் நிலம்!.அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்..நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி

என்கிறார்.

குழந்தையைப் பற்றிக் கூறுகையில்..

பெற்ற தாயின் மடியின் மீது யாழ் கிடப்பது போல பிள்ளை ..என்கிறார்..

குழந்தைகளின் வளரும் புருவத்தை

'எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்' என்கிறார்

எறும்புகள் செல்லும் வரிசையை புருவத்திற்கு ஒப்பிடுகிறார்.

எந்த ஒரு இலக்கியவாதியும்..உவமைகள் அற்ற இலக்கியத்தை படைக்க முடியாது..அதுபோல பாவேந்தரும் உவமைகளை விடவில்லை..

மேலே குறிப்பிட்டுள்ள சில உவமைகள் மாதிரிக்கே..இவை பாவேந்தரின்..'குடும்பவிளக்கு' காவியத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இவரது படைப்புகள் 1990 அரசுடமையாக்கப்பட்டன.
1970ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இவர்.

Sunday, April 21, 2013

நாடக விழாவில் எனது புதிய நாடகம்

                                         
                               


நாடக விழாவில் எனது புதிய நாடகம்


எனது 'சௌம்யா' குழு சார்பில், நான் எழுதி, இயக்கிய, "காத்தாடி" என்னும் நாடகம்..கார்த்தில் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடகவிழாவில், வருகின்ற வெள்ளிக்கிழமையன்று (26-4-13) சென்னை ஆள்வார்பேட்டை நாரத கான சபா அரங்கில் மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.அனுமதி இலவசம்.

பதிவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


Monday, April 15, 2013

தேமதுரக் குரலோன் P.B.S.,


ஏ.எம்.ராஜா..போன்றே..குரலையுடையவர் ஸ்ரீநிவாஸ்..கல்கண்டு போன்ற இனிமை.

ஆந்திராவில் காகிநாடாவில் 1930ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு தெலுங்கு,தமிழ்,மலையாளம்,ஹிந்தி,உருது,கன்னடா,சேன்ஸ்கிரிட் மற்றும் ஆங்கிலம் என்று எட்டு மொழிகள் தெரியும்.ஜாதகம் படம் மூலம் அறிமுகமானார் இவர்..பிரேமபாசம் படம்தான் இவரை அனைவருக்கும் வெளிக்காட்டியது.பாவமன்னிப்பு படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம் 'பாடல் இவருக்கு புகழை ஈட்டித்தர ஆரம்பித்தது.
இவர் குரல்..ஜெமினி,முத்துராமன்,பாலாஜி ஆகியோர்களுக்கு சரியாக இருந்தது.இவர் பாடி என் நினைவில் நிற்கும் சில பாடல்கள்.

ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
என் அருகே நீ இருந்தால்-திருடாதே
பால் வண்ணம் பருவம் கண்டு-பாசம்
காற்று வெளியிடை கண்ணம்மா-கப்பலோட்டிய தமிழன்
இன்பம் பொங்கும் வெண்ணிலா-வீரபாண்டிய கட்டபொம்மன்
அழகிய மிதிலை நகரினிலே-அன்னை
ஆண்டொன்று போனால்-போலீஸ்காரன் மகள்
எந்த பருவத்து கேள்விக்கு - சுமைதாங்கி
ஒடிவது போல இடை இருக்கும்-இதயத்தில் நீ
மாம்பழத்து வண்டு-சுமைதாங்கி
யார்..யார்..அவள் யாரோ--பாசமலர்
அவள் பறந்து போனாளே-டி.எம்.எஸ்.உடன் சேர்ந்து பார் மகளே பார் படத்தில்
பொன் ஒன்று கண்டேன்-படித்தால் மட்டும் போதுமா
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்- ஊட்டி வரை உறவு
உங்க பொன்னான கைகள்-காதலிக்க நேரமில்லை
நிலவே என்னிடம் - ராமு
நேற்றுவரை நீ யாரோ-வாழ்க்கைப்படகு
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி பேசி' பாடலும், வாடாத புஷ்பமே பாடலும் கேட்கக் கேட்க திகட்டாதவை.

ஆமாம்..முக்கியமான ஒரு பாடலை விட்டுவிட்டேன் என்கிறீர்களா? இவர் பெயரைக் கேட்டதுமே வயது வித்தியாசம் இல்லாது அனைவரும் முணுமுணுக்கும் பாடல்...ஆம்..அதுதான்

சுமைதாங்கிக்காக இவர் பாடிய 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்'

சென்னை வுட்லண்ட்ஸ் டிரைவின் இருந்தவரை இவரை அங்கு பார்க்கலாம்..சட்டைப்பை நிறைய பேனாக்களுடன்..கையில் ஒரு டயரி வைத்துக் கொண்டு கவிதை எழுதிக் கொண்டிருப்பார்..இப்போது நாரத கான சபா வளாகத்தில் உள்ள வுட்லண்ட்ஸில் காணலாம்





(இது ஒரு மீள் பதிவு)

நேற்று அமரரான பி.பி.எஸ்.,ஸின் ஆத்மா சாந்தியடைய பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன்

Wednesday, April 10, 2013

சாவே உனக்கொரு சாவு வாராதா...




'காலா..உன்னை காலால் மிதிக்கிறேன் வாடா' என்றார் பாரதி.ஆனால்..காலன் வந்த போது அவனை அவரால் வெல்ல முடியவில்லை.

நேரு இறந்த போது, 'சாவே, உனக்கொரு சாவு வாராதா' என்றார் கண்ணதாசன்..

இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அந்த 'காலன்;' தன் கடமையை செய்துக் கொண்டுதான் இருக்கிறான்.

இதுதான் இயற்கை.'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது'.

இது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தாலும், நமக்கும், நமக்கு வேண்டியோருக்கும் இழப்பு ஏற்படுகையில்தான் நமக்கு அந்த இழப்பின் வலி தெரிகிறது.

என்ன ஒன்று...சில சமயங்களில் காலன் வயது வித்தியாசம் பார்ப்பதில்லையே என்ற ஆதங்கம்...புலம்புகிறோம்.

கடந்த இரண்டு மாதங்களாக மரணவலிப் பட்டுக்கொண்டிருந்த மணிஜியின் மனைவியின் மறைவு...அவரைப் பொறுத்தவரை விடுதலையானாலும், அவரை இழந்து வாடும் மணிஜிக்கும், அவரது மகள் நிலாவிற்கும் எப்படிப்பட்ட இழப்பு.

அவர்கள் இருவருக்கும்...இந்த துயரைத் தாங்கி..மீண்டும் எழ பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன்.

Friday, April 5, 2013

மணிஜியின் வாழ்க்கைத் துணைவிக்காக பிரார்த்தியுங்கள்..



பிரபல பதிவரும், நண்பரும் குறிப்பாக மனித நேயம் மிக்கவருமான மணிஜி யின் மனைவியார் வீட்டில் சமைக்கும்போது சிறு தீவிபத்தில் சிக்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அவரிடம் தொலைபேசியபோது...அவர் குரலில் காணப்பட்ட தெளிவு, என் மனதிற்கு சற்று நிம்மதி அளித்தது.

ஆனால்..நேற்று இரவு அவர் பிளஸ்ஸில் இப்படி செய்தி இட்டுள்ளார்..

"உடல்,மனது...இரண்டும் களைத்து விட்டது. மிகக் கடுமையான போராட்டம்.. பிரார்த்தனைகள் மட்டுமே ஏதேனும் அற்புதம் நிகழத்தலாம்.. பிரார்த்தியுங்கள் நண்பர்களே."

அவரது அலைபேசி ரிங் டோன் கூட..'குறையொன்றும் இல்லை' என்றே ஒலிக்கும்.

அவருக்குக் கண்டிப்பாக குறையேதும் ஏற்படாது என நம்புவோமாக..

மருத்துவர்களால் முடியாததையும்..கூட்டு பிரார்த்தனைகள் நிறைவேற்றியுள்ளதை...நாம் அறிவோம்...

ஆகவே..நண்பர்களே..நாம் அனைவரும் நாளை ஞாயிறு காலை 8 மணிக்கு அவரவர் இல்லத்திலோ..அல்லது கோவிலிலோ, சர்ச்சிலோ, மசூதியிலோ இருந்தவாறு பிரார்த்திப்போம்.

இறைநம்பிக்கை இல்லாதோர்..பிரபஞ்ச சக்தியை வேண்டுங்கள்..

நல்லதே நடக்கும்...நம்புவோம்..


Thursday, April 4, 2013

வாய் விட்டு சிரிங்க...





1) இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியா இருக்கிற நீங்க..அவங்களுக்கு ஏதேனும் சொல்ல ஆசைப்படுகிறீர்களா?
அவங்க விலாசங்களைத் தெரிவிச்சா..அவங்க கனவில நான் வர்ற நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியா இருக்கும்

2)தலைவர் பேசும்போது.நடுவே..நடுவே..மீட்டர்..மீட்டர்னு சொல்றாரே ஏன்.
அவர் எதையும் அளந்து தான் பேசுவாராம்.

3)ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு கவர்னர்...இதே போல ஒரு வாக்கியம் சொல்..
ஆட்டுக்கு தாடி போல..ஆட்டோவிற்கு மீட்டர்

4) அந்த டாக்டர் முன்னால துணிக்கடை வச்சிருந்தார்னு எப்படி சொல்ற?
ஆடித் தள்ளுபடி..அறிவிச்சிருக்கார்..ஒவ்வொரு பேஷண்டும்..இன்னொரு பேஷண்டைக் கூட்டிக்கிட்டு வந்தா..ஒருத்தருக்கு வைத்தியம் இலவசமாம்

5)நம்ம பையன் எட்டணா காசை விழுங்கிட்டான்..
சரி..சரி..டாக்டர் கிட்ட ஐந்து ரூபா காயினை விழுங்கிட்டான்னு சொல்லு..எட்டணா ன்னா நம்மைப் பத்தி கேவலமா நினைப்பார்

6) சம்பந்தமில்லாமல் பெயரை வைச்சிருக்காங்க
எந்த படத்துக்கு சொல்றீங்க?
படத்துக்கு இல்ல....இவ்வளவு ஒல்லி ஊசிக்கு குண்டூசின்னு பெயர் வைச்சாங்களே அவங்களைச் சொல்றேன்



Wednesday, April 3, 2013

விருந்தும் ....மீனவனும்


           



ஐந்தாண்டு பதவி வேண்டி

ஐந்து நட்சத்திர ஓட்டலில்

பலவகை மீன்களுடன்

பலமான விருந்து

போதை ஏறியதும்

தட்டில்

தண்ணென கிடந்த

ஒவ்வொரு மீனும்

தமிழக மீனவனாகவும்

கொண்டு வந்த வெயிட்டர்

சிங்கள கடற்படையாயும்

கண்ணுக்குத் தெரிந்தது

தலைவனுக்கு

Monday, April 1, 2013

வள்ளுவனும் ..பைத்தியக்கார சிவராமனும்..




கே.என்.சிவராமன்....

இப்படிச் சொன்னால் வலையுலகில் பாதிப் பேருக்குத் தெரியாது.ஆனால்..பைத்தியக்காரன் என்றால்..உடனே அவரா..! என்பார்கள்.

தான் பெற்ற இன்பம்..பெருக இவ்வையகம்..என்று திகழ்பவர்.பல உலகப் படங்களை..கிழக்குப் பதிப்பக மாடியில் வலைப்பூவினருக்காக ஏற்பாடு செய்து..அவர்கள் ரசனையை வளர்த்தவர்.

டால்ஸ்டாயின்,அன்னாகரீனா படத்தை நீண்ட நாட்களாக நான் பார்க்க எண்ணியதுண்டு.அந்த ஆசையை தீர்த்துவைத்தவர் இவர்.

தவிர்த்து தினகரன் வெள்ளிமலரில்..உலகப் படங்கள் பற்றிய இவரது விமரிசனம் என்னைப் போன்ற பலரை அப் படங்களைத் தேடிப் பார்க்க வைத்தது.

வலைப்பூவினர் இடையே எழுத்துத் திறனை வெளிக் கொணர..ஜ்யோவ்ராமுடன் சேர்ந்து..சிறுகதைப் போட்டி வைத்து..இருபது பேருக்கு 1500 ரூபாய் பரிசு வழங்கியது...இவரது எழுத்து தாகத்தை வெளிப்படுத்தியது.

இதுவெல்லாம் கூட பரவாயில்லை...இவரின் அபாரத் திறமையுள்ளதை நிரூபித்து வருகிறது..'குங்குமம் இதழில் இவர் எழுதிவரும்,'கர்ணனின் கவசம்' என்னும் அமானுஷ்ய மர்மத் தொடர்.தயவு செய்து அதைப்படிக்காதவர்கள்.கடந்த நாலு இதழ்களை தேடி வாங்கி படிக்க ஆரம்பியுங்கள்.

ஆமாம்..இதற்கும் வள்ளுவனுக்கும் என்ன தொடர்பு....என்கிறீர்களா..

சொல்கிறேன்..

இனிய உலவாக இன்னாத கூறல்..இவரிடம் கிடையாது..இனிமையாகப் பேசக்கூடியவர்.ஒரு சமயம் இவர் மீது ஒருவர் அநாவசியமாக கெட்டப் பெயர் ஏற்படுத்த நினைத்தபோது...அமைதி காத்தவர்.வயதிற்கு மீறிய பொறுமை.

பெருக்கத்து வேண்டும் பணிவு ..என்பதற்கேற்ப..பணிவானவர்.என்னைக்கூடசிலரிடம் அறிமுகம் செய்தபோது..நான் பிரமாதமாக சாதித்து விட்டது போல..'பிரபல நாடக எழுத்தாளர்' என அறிமுகம் செய்தவர்.(அப்படியாவது நான் பிரபலம் ஆவேன் என அவர் எண்ணியிருக்கலாம்.ஆனால் அது நிராசையானதுதான் மிச்சம்??!!)

இப்படி இவரைப் பற்றி ..எழுதிக் கொண்டே போகலாம்..இவ்வளவிற்கும் என்னுடனான அவர் பழக்கம் சில காலமே.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்துள்ளோம் அவ்வளவே.

அமாம்..இவருக்கு பைத்தியக்காரன் என்ற பெயர் பொருத்தமா...

கண்டிப்பாக..

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் என்பது சொலவடை..

ஆனால், இந்தப் பைத்தியக்காரன் பத்தும் அறிந்தவன்..

சிவராமனே...கர்ணணின் கவசம் படைப்பவனே..உனக்கு ஹேட்ஸ் ஆஃப்.



Sunday, March 31, 2013

ஜெயகாந்தனும்... ராஜுமுருகனின் வட்டியும்..முதலும்..

                               


ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' கட்டுரைத் தொடர் நான் விடாமல் படித்து மகிழ்ந்து வருகிறேன்.அந்த அளவிற்கு அது 'சுவையோ சுவை"

அதே போன்று அந்த நாட்களில் ஜெயகாந்தனின் படைப்புகள்..அது கட்டுரைகள் ஆனாலும் சரி, சிறுகதைகள் ஆனாலும் சரி..தொடர் ஆனாலும் சரி.. ஆண்டுகள் பலவாகியும் மனதை விட்டு அகலாதவை.அப்படிப்பட்ட அவர் படைப்புகளில், அவரது ,'அம்மா நான் இருக்கிறேன்' என்ற சிறுகதையும் ஒன்று.

அக்கதையை இந்த வாரம் ராஜுமுருகன் நினைவுபடுத்தி விட்டார்.அக்கதை இதோ...ராஜுவின் வரிகளிலேயே..

'ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன் அம்மாவுடன் வசித்து வருவான்.கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.அம்மாவோடு பேருந்தில் போகும் போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'சாரி.' கேட்பாள்.அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் விழுந்து விடுவான்.ரயில் வருகிற நேரம் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரன், அந்த இளைஞனைக் காப்பாற்றி விடுவான்.பக்கத்தில் இருக்கும் ஒரு கல்மண்டபத்திற்கு அழைத்துப்போய் அந்த இளைஞனிடம் சொல்வான்,' நான் எப்படி இருக்கேன்னு பார்த்தியா...அன்னிக்கு ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையைக் காப்பாத்தினேன்.அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க..அவ்வளவு அருவருப்பா இருக்கு என்னையப் பார்க்க.நானே உயிரோட இங்க வாழ்ந்துட்டு இருக்கேன்..உனக்கெல்லாம் என்ன தங்கம்..' எனப் பேசி அந்த இளைஞனின் நம்பிக்கையைத் தூண்டி விடுவான்.தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு அவன் தூங்குவான்.காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் என பயந்து ஒடிவருவாம் அவன் அம்மா.'அம்மா..நான் இருக்கேன் அம்மா..' என அந்த இளைஞன் கத்திக் கொண்டே வருவான்.அங்கே அந்த பிச்சைக்காரன் செத்துக்கிடப்பான்.இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன், 'இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்..நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..' என யோசித்து தண்டவாளத்தில் குதித்திருப்பான்.செத்துப்போன அவனைப் பார்த்தப்படி அந்த இளைஞன் சொல்வான், 'அம்மா,..அவன் எனக்கு வாழக்கத்துக் கொடுத்தான்.நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்..'

எவ்வளவு அருமையான கதை..

இக்கதையை நினைவூட்டிய ராஜுமுருகனுக்கு நன்றி..

நல் எழுத்துகள்..இலக்கியங்கள் சாகா வரம் பெற்றவை.அப்படிப்பட்ட பல படைப்புகளைக் கொடுத்த ஜெயகாந்தனுக்கு...நன்றி சொல்வதைத் தவிர..என்னைப்போன்ற ரசிகனுக்கு வேறென்ன செய்துவிட முடியும்...

  .



Monday, March 25, 2013

தைரியத்தை இழக்கிறார்களா திராவிடத் தொண்டர்கள்....




ஒரு காலத்தில்..திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர் என்றால்...தைரியமானவர் என்றும் பொருள் கொள்ளும் வகையில் இருந்தனர் தொண்டர்கள்..தலைவர்கள்.

திராவிட முன்னேற்ற கழகம் உருவானபோது.. அதில் இருந்த பலம் மிக்க..தொண்டர்கள் ஆதரவு மிக்க, தனக்கென தன்னை பின்பற்றுவோர் இருக்க பல வலிமையான தலைவர்கள் இருந்தனர்.

உதாரணத்திற்கு...அண்ணா...நேர்மைக்கு பெயர்போன தலைவர்..அவருக்கு ஆதரவாக, சம்பத், நெடுஞ்செழியன்,மதியழகன்,சாதிக், எம்.ஜி.ஆர்.,ராஜாராம்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களை நம்பி பல லட்சம் தொண்டர்கள்..எந்த தியாகமும் செய்யத் தயாராய்..

அவ்வளவு ஏன்...அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நான், அநையும் மீறி...ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களுக்கு அம்பத்தூரில் ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளேன்.

ஆனால்..இன்றைய தொண்டர்களிடம் அந்த அளவு வீரமோ..கட்சிப் பற்றோ உள்ளதா என்றால்..தலையை இடமிருந்து வலம் ஆட்ட வேண்டியதுதான்.

கருத்து வேறுபாடால் சம்பத் , அண்ணா கலத்திலேயே பிரிந்து தனிக்கட்சி தொடங்கி தோல்வியடைந்தார்.

அண்ணாவின் மறைவிற்குப் பின்...முதல்வர் யார்..என்ற கேள்வியின் போது..பரவலாக நெடுஞ்செழியன் பெயர் பேசப்பட்டாலும், தொண்டர்களின் ஆதரவைத் தவிர..எம்.ஜி.ஆரின் பக்கபலம் கலைஞரை தலைவராக தேர்ந்தெடுத்தது.

பின்னர்..இதேக் கட்சியைச் சேர்ந்த..எம்.ஜி.ஆர்., தனிக் கட்சி ஆரம்பித்து..தன் சொந்த செல்வாக்கில் ஆட்சியைப் பிடித்தார்.நெடுஞ்செழியன் தனிக்கட்சி ஆரம்பித்து..ஆதரவு இல்லாததால் அ,தி.மு.க.வில் இணைந்தார்.வை.கோ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க., ஆரம்பித்தார்.

இப்படியாக தி.மு.க.,விலிருந்து பலர் பிரிந்து தனிக்கட்சிகளை ஆரம்பித்தாலும்..தாய்க் கட்சி சேதமடையவில்லை.

ஆனால்...சமீப காலங்களாக நடந்துவரும் நிகழ்ச்சிகளைக் கண்டால்...இவர்கள்..கட்சியை உடைத்து, அழித்து...புதைத்துவிடுவார்கள் போல இருக்கிறது.

இதற்கான காரணம் என்ன..

என சற்று யோசித்தால்..கட்சித் தலைமையிடம் முன்னர் இருந்த கண்டிப்பு இல்லை..

தலைவர் என்றால்..ஒரு பயம் கலந்த மரியாதை இருக்க வேண்டும்..அது இன்று மிஸ்ஸிங்.

தொண்டர்களுக்கும்..மக்களுக்கும் கட்சி தலைமையிடமும், கட்சியிடமும் சற்று அவநம்பிக்கை எற்பட்டு விட்டது..

இக்கட்டத்தில்..பாரம்பரியம் மிக்க இக்கட்சி செல்வாக்கை இழக்காமல் இருக்க வேண்டுமாயின்..

மீண்டும் தலைமையிடம்..கண்டிப்பும், தவறு யார் புரிந்தாலும் அதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கும் திறனும் வேண்டும்.

இது இல்லாவிடின்...

கட்சி மக்கள் ஆதரவை மட்டுமல்ல..தொண்டர்களின் ஆதரவையும் இழந்து...அழிவை நோக்கிப் போவதை தடுக்க முடியாது.

Sunday, March 24, 2013

மௌனராகமும்...மணிரத்தினமும்..




1970 களில் வந்த தமிழ்ப்படங்களின் தரத்தைப் பார்த்து..அதை மாற்றும் எண்ணத்துடனே திரையுலகில் பிரவேசித்ததாக பொருள்படும்படி மணிரத்தினம் கூறியிருந்ததைப் பார்த்த போது..இவர் மீது பெரு மதிப்பு வைத்திருந்த நான், "சீ..இவரும் இப்படித்தானா?" என்று எண்ணினேன்.

'கடல்' படம் தோல்வியடைந்த போதும்...'பெருக்கத்து வேண்டும் பணிவு' எனபதை மறந்ததால், கிடைத்த தண்டனை என எண்ணினேன்.

ஆனால்...நேற்று ஆதித்யா சேனலில்..மாலை..இவரது 'மௌனராகம்' படம் ஒளிபரப்பானது..

மனிதன் என்னமாய் எடுத்துள்ளார்..

இளமையும்..குறும்பும், ததும்பும் ரேவதியின் பாத்திரம்...பின்னர் சோகமாய் மாறியும் பிரகாசிக்கிறது.

சுறு சுறு என சுற்றித் திரியும், எதற்கும் பயப்படாத .. கார்த்திக்(மிஸ்டர் சந்திரமௌலி..காமெடி..இவரின் பாத்திரத்திற்கு..ஒரு சோறு பதம்) .என்னமாய் வந்திருக்க வேண்டிய நடிகர்...!  ம்..

எதிலும் நிதானம்..கண்ணியமான மோகன் பாத்திரம்..

தமிழ் கற்று கொள்ளும் சர்தார்ஜி நகைச்சுவை.

என்னைத் தொடும் போது.."கம்பிளி பூச்சி ஊறுவதைப் போல இருக்கு" போன்ற கூர்மையான வசனங்கள்...

பத்து நிமிடம் படம் பார்க்கலாம் என உட்கார்ந்த என்னை..படம் முழுக்க பார்க்க வைத்து..ஆனால் அதே சமயம் பத்து நிமிடங்களே பார்த்த உணர்வை ஏற்படுத்தி.....

"மணி உண்மையிலேயே,,யூ ஆர் கிரேட்"

இப்போதெல்லாம் என்னவாயிற்று உங்களுக்கு..

நான்  பழைய மணிரத்தினம்தான் என்பதை எங்களுக்கு மீண்டும் தரமான படைப்புகள் மூலம் நிரூபியுங்கள்.

நான் அறிவுஜீவி..நான் எடுப்பதையெல்லாம் மக்கள் பார்ப்பார்கள்..என்று நினைக்கும் இயக்குநர்களில் ஒருவராக ஆவதை தவிர்ப்பீர்களாக...

Saturday, March 23, 2013

ஆனந்தவிகடனும்...ஓவியங்களும்...

                 
                         (சாவியின் 'வாஷ்ங்டனில் திருமணம்' தொடருக்கு கோபுலுவின் ஓவியம்)

வார, மாத இதழ்களில்..பல கதைகளைப் படிக்கும் முன் , அக்கதைகளுக்கு வரையப்பட்ட ஒவியங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்தால், உடனடியாக வாசித்துவிடும் இயல்புடையவன் நான்.அப்படி தத்ரூபமாக வரையும் ஒவியத்தையும், ஓவியர்களையும் என்னைப்போல ரசிப்பவர்கள் பலர் இருக்கக் கூடும்.

நான் சிறுவனாக இருக்கையில், .வரையப்பட்ட ஓவியத்தில் இருந்த ஓவியர் பெயரை மறைத்துக் கொண்டு, அந்த ஓவியத்தை வரைந்தவர் யார் எனக் கேட்டால் சரியாக சொல்லிவிடுவேன்.

அப்படி மனம் கவர்ந்த ஓவியர்களில், கோபுலு ஒருவர்.தில்லானா மோகனாம்பாளுக்கு இவர் வரைந்த மோகனாவும், ஷண்முக சுந்தரமும் இன்னமும் கண்களில் நிற்கின்றன.ஜெயகாந்தனின் 'பாரீசுக்குப் போ' வில் கோபுலுவின் சித்திரப் பங்கும் பேசப்பட்டது.

அதேபோன்று, பொன்னியின் செல்வனுக்கு, மணியம் வரைந்த ஓவியங்களும், பின்னர் அதேத்தொடர் வந்தபோது மணியன் செல்வன் வரைந்த ஓவியங்களும் மறக்க முடியாதவை.

கல்கியில், நா.பா. கதைகளுக்கும், கி.ராஜேந்திரன் கதைகளுக்கும்..வினு போட்ட ஓவியங்கள் சிறப்பு.வினு வரைந்த அனுமார் ஓவியம் ஒன்று, இன்னமும் பல வீடுகளின் பூஜை அறையை அலங்கரித்துள்ளது.

மாயா, லதா, கல்பனா, சிம்ஹா, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது, .ஓவியங்களை நினைக்கையில். குமுதத்தில்,வர்ணம் வரைந்த ஓவியங்களில்...யதார்த்தம் இருக்கும்.பின்னர் இதே பத்திரிகையில் சுஜாதா கதைகளுக்கு ஜெயராஜ் ஒவியங்கள் மெருகூட்டின.மாருதி வரைந்த பெண்கள் அழகோ அழகு.

இப்படி..சங்கீதம் மட்டுமல்ல, தொடர்கதைகள் மட்டுமல்ல..ஒவியங்களும் நம்மை மனம் கவர வைத்தவை.

கலைமகளில்..ஜி.கே.மூர்த்தியின் லைன் டிராயிங்க் அருமை.

கல்கண்டில்..தமிழ்வாணன் கதைகளுக்கு..'ராகி' வரைந்த ஓவியங்களில் ''சங்கர்லால்' உண்மையான பாத்திரமாக திகழ்ந்தார்.

இன்றைய பத்திரிகைகளிலும்..பலர் சிறப்பாக அப்பணியை ஆற்றிவருகின்றனர்.ஆனால்...இந்த வார விகடனில்...கண்னைக் கவ
ர்ந்த வகையில்..'தள்ளாடும் தமிழகம்..திண்டாடும் டாஸ்மாக்' கட்டுரைக்கும், ராஜுமுருகனின்'வட்டியும் முதலுக்கும்' ஓவியம் தீட்டியுள்ள ஹாசிப் கானின் ஓவியங்கள் எவ்வளவு தத்ரூபமானவை.புத்தகத்தை மடித்து வைத்தாலும்..இவை..கண்களை விட்டு அகல மறுக்கின்றன.

ஹேட்ஸ் ஆஃப்...ஹாசிப் கான்.

(டிஸ்கி...தெய்வப் படங்களையும், கோவில்களையும், ஓவியம் மூலம் கண்முன் கொணர்ந்த ஓவியர்களை இவ்விடுகையில் ஸேர்க்கவில்லை)

வார இதழ்கள்- ஓவியம்

Friday, March 22, 2013

எருதின் நோய்


எருதின் நோய்

காக்கை அறிய வாய்ப்பில்லை

இழப்பின் வலி

இழந்தவரே அறிவார்..

பாறாங்கல்லிலும் ஈரம் இருக்குமாம்

அதனைவிடக் கடினமானவர்க்கு

கனிவென்றால் தெரியுமா?

பதவி தந்த சுகம்..

பல்லாயிரம் உயிர் நாசம் அறியுமா?

இன்றைய சரித்திரம் படிக்கும்

நம் வாரிசுகள்...

எள்ளி நகைக்கட்டும்

எண்ணி எண்ணி நம் தலைவர்கள்

சுயநலத்தை...

Wednesday, March 20, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் -12




இளம் தம்பதிகள் ..ஓருயிர் ஈருடல் என இருப்பவர்கள்..ஒருவர் இன்றி மற்றவரால் வாழமுடியாது என்னும் நிலையில் உள்ளவர்கள்..

கணவன் காலை அலுவலகம் செல்கிறான்..மாலை ஆறு மணிக்குள் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு..

புது இடம்..வீட்டில் தன்னந்தனியாக மனைவி..பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை..என்ன செய்வாள் பொழுதைக் கழிக்க..

புத்தகம் படிப்பாள்..சிநேகிதிகளுடன் அலைபேசியிலோ..தொலை பேசியிலோ உரையாடுவாள்..மாலை ஆறு மணி ஆனதுமே கணவனின் வருகையை எண்ணி வழி மீது விழி வைத்து காத்திருப்பாள்..

ஏழு,எட்டு.ஒன்பது........பத்து மணி ஆயிற்று ..சென்றவன் வரவில்லை..அவனுக்கு என்ன ஆயிற்றோ எனக் கவலை..அதே சமயம்..அலை பேசி இருக்கிறது,தொலைபேசி இருக்கிறது..விவரம் தெரிவிக்கலாம் அல்லவா? நான் ஒருத்தி தனியாய் இருக்கிறேன் என்ற கவலையே இல்லையே..வரட்டும்...வேண்டாம்..வேண்டாம்..அவர் வந்தால் என்ன..வராவிட்டால் என்ன..என்னைப் பற்றி கவலைப் படாதவர் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும்..என அவனிடம் ஊடல் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்..

ஆனால் இதுவே சங்க காலத்துப் பெண்ணுக்கு நேர்ந்திருந்தால்..அவள் ஆற்றாமையை தெரிவிக்க ..அவளது உதவிக்கு வருவது தோழி மட்டுமே..வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராத தலைவனைப் பற்றி சொல்கிறாள்..

(முல்லைத்திணை-தலைவி கூற்று)

வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப்பைம்போ துளரி, புதல
பீலி ஒன்பொறிக் கருவிகளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையோடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே
என்னா யினல்கொல் என்னா தோரே...
- கிள்ளி மங்கலங்கிழார்

மழைக்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்ற தலைவன் வெகுநாட்களாயும் வராததால் அவனைத் திட்டி தோழியிடம் சொன்னவை இவை..

இதற்கான அர்த்தம்..

அவர் இனி வராவிட்டாலும், வந்தாலும் அவர் இனி எனக்கு யாரோதான்.நீரில் மலரும் மொட்டுகளை மலர்த்தி, மயில்தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கைமர அரும்புகளை விரித்து,, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ? என்று வருந்தாதவன் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?

பாடலில் மலர்களின் துன்பத்தைக் கூறுவதன் மூலம்..இவளும் குளிரிலும்,மழையிலும்,வருந்துகிறாளாம்.

குறுந்தொகையில் வரும் பாடல் இது.


Tuesday, March 19, 2013

வாய் விட்டு சிரிங்க...




நிருபர்-(நடிகரிடம்) தொடர்ந்து உங்க படங்க தோல்வி அடையுதே..உங்க தோல்வியின் ரகசியம் என்ன?

2)தலைவர்-(வாக்கு சேகரிக்கும் வீட்டில்) நான் உங்க வீட்டுப் பிள்ளை
வாக்காளர்-ஐயோ..வேணாம்யா..ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்

3)மன்னர்-(அமைச்சரிடம்) மந்திரியாரே!..யானை ஏற்றம் தெரியும்..குதிரை ஏற்றம் தெரியும்..ஆனால்..விலைவாசி ஏற்றம் என்கிறார்களே...அப்படி என்றால் என்ன

4)கோமா நிலையில் உள்ள நம்ம தலைவர் திடீர்னு எழுந்தா என்ன ஆகும்
'கோமா வெற்றி கொண்டான்'னு பட்டம் தரச்சொல்லி..பாராட்டுவிழாவும் நடத்தச் சொல்லுவார்

5)தயாரிப்பாளர்-(கதாசிரியரிடம்) உங்க கதையைச் சொல்லுங்க
கதாசிரியர்-கதாநாயகி ஒரு ஏழை..உடுத்தக் கூட கந்தல் துணிதான்..அதுல அவ அரை நிர்வாணமாத்தான் தெரிவாள்..
தயாரிப்பாளர்-அடடா..ஆரம்பமே..அசத்தலான கதை சார் இது

6)லீவு வேணும்னு கைல காயம்னு கட்டு கட்டிண்டு போனியே..என்ன ஆச்சு..
என் மேலதிகாரி..'காயமே இது பொய்யடா' ன்னு சொல்லிட்டார்

7)டாக்டர்..போலி மருந்துகள் அதிகம் வர ஆரம்பிச்சுடிச்சே..
போலி மருத்துவர்கள், போலி மருந்துகள்..ம்..ம்..வர வர மருத்துவமே போலி ஆயிடுச்சு..நாட்டில போலி மருத்துவக் கல்லூரிக் கூட எங்கயாவது இருக்கலாம்..அது எப்போ வெளியே வரப்போவுதோ?

Saturday, March 16, 2013

முடி கொடுத்து லட்டு தின்ன ஆசையா...?




தலைமுடியை பக்தர்கள் ஆண்டவனுக்குக் காணிக்கையாகத் தருவது பல கோவில்களில் நடைபெறுகிறது.முடி காணிக்கையில், திருப்பதி முதலிடம் வகிக்கிறது.

முடி காணிக்கை மூலம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு 100 முதல் 150 கோடி வரை கிடைக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் முதல், நீளமான முடியைக் கொடுக்கும் பக்தர்களுக்கு, அதாவது 31 அங்குலம் நீள முடியைக் கொடுக்கும் பக்தர்களுக்கு..லட்டு பிரசாதம் இலவசமாக வழங்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.அதற்கான டோக்கன்கள் வழங்கப்படுமாம்.ஒரு டோக்கனுக்கு ஐந்து லட்டுகள் இலவசமாகக் கொடுக்கப்படுமாம்.

நீளமான தலைமுடியை காணிக்கையாய் செலுத்தும் பக்தர்களுக்காக , திருமலையில், சுதர்சனம் சத்திரம் வளாகத்தில்,தனியாக முடிக்காணிக்கை செலுத்த, சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறதாம்..

கண்ணா..லட்டு தின்ன ஆசையா....

Friday, March 15, 2013

பொறுமையும்...மாணவர் போராட்டமும்...




பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது ஒரு சொலவடை.ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லை உணடு அல்லவா?

அந்த எல்லை இப்போது வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.குட்டக் குட்ட குனிந்து, தமிழன் இப்போது பூமியை தொடும் அளவிற்குக் குனிந்து விட்டான்.அதற்கு மேல் குனிய முடியாததால்..இப்போது எழுச்சி அவனிடம் காணப்படுகிறது.

அதுவும், மாணவ சமுதாயம் எழுச்சியைக் காட்டிவிட்டால்..சம்பந்தப் பட்ட ஆட்சியாளர்கள் அழிவது நிச்சயம்.

உதாரணம்..இந்தி எதிர்ப்பு போராட்டம்...இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்திற்குப் பின், காங்கிரஸால் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சிக்கு வர இயலவில்லை.நாற்பத்தைந்து வருடங்களாக, அக்கட்சி..திராவிடக் கட்சிகள் எதனுடனாவது கூட்டு வைத்தே சில எம்.எல்.ஏ., எம்.பி., இடங்களைப் பெற்று வந்தது.இன்றுவரை அக்கட்சியால் தமிழகத்தில் தலை நிமிர முடியவில்லை.

1965 நிகழ்ந்தது போன்று ஒரு நிகழ்வு, மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது போல இப்போது தெரிகிறது.இப்போதாவது விழித்துக் கொண்டு, தமிழக மக்களும், இந்தியர்கள் தான், அவர்கள் குறைகளுக்கும் செவிசாய்க்கலாம், அவர்கள் தேவையை பூர்த்தி செய்வோம்.. என மைய அரசு நினைத்து ஆவண செய்ய வேண்டும்.

தவிர்த்து வாளா இருக்குமானால்...கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் இழக்க நேரிடும்.அதனுடன் கூட்டு வைக்கும் மாநிலக் கட்சியும் மக்கள் ஆதரவை இழக்க நேரும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசியல் புரிபவர்கள் நடந்து கொண்டால் ..நல்லது..

இல்லையெல் கண்டிப்பாக 1965 நிகழ்ச்சிகள் மீண்டும் உருவாவதை தடுக்க முடியாது.

மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்...என்பதை மறக்க வேண்டாம்.

வெற்றியும், சாதுர்ய பேச்சும்..(ஒரு பக்கக் கட்டுரை)




ஒரு மனிதனின் வெற்றி..அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
கதையாய் இருந்தாலும்..சாவித்திரியின் சாதூர்யம் தான் அவளது கணவனது வாழ்வை காப்பாற்றியது.
பலமுறை அரசரின் மரணதண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்கு சாதூர்யம் காப்பாற்றியிருக்கிறது.
பீர்பாலின் சாதூர்ய பேச்சு கதைகளையும் நாம் அறிவோம்.ஹேமனாத பாகவதரை மதுரையிலிருந்து துரத்தி அடித்தது சிவனின்(?)சாதூர்யம்.
நம் ஊர்களில்..குப்பை பொருள்களையும்..சாதூர்யமாகப் பேசி நம் தலையில் கட்டிவிடும் விற்பனை பிரதிநிதிகளை நாம் அறிவோம்.
நம்மை பற்றி நம் பெற்றோர்கள் கவலைப்படும்போது சொல்லக்கூடிய வார்த்தை'கொஞ்சம் கூட சாமர்த்தியம் போறாது இவனுக்கு" என்பதுதான்.

இப்போது ஒரு சிறு கதை.

ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
கடைசியில் ஒருவன் கேட்டான்
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும்