Thursday, December 19, 2019

போராட்டத்தில்
ஈடுபட்ட
மகளை
லத்தியில் அடித்து
காயப்படுத்திய
காவலர்
காயத்திற்கு
கடையில்
கண்களில் நீருடன்
மருந்து வாங்கிச் சென்றார்.

Tuesday, December 17, 2019

கிறுக்கல் கவிதைகள்

விடியலில்
எங்கோ
ஒரு சேவல் கூவுகிறது
பால் கொணர்பவனைப்
பார்த்து
நாய் குரைக்கின்றது
கோலப்பொடியில் அமர்ந்து
காகம் கரைகிறது
கடமைகளை
மறப்பதில்லை இவை
படுக்கையில்
புரண்டபடியே
எண்ணுகின்றான் இவன்.

2
வீடுகளில்
இப்போதெல்லாம்
நிழல்கள்தான்
பேசுகின்றன..
நிஜங்களோ
வாய் மூடிக்
கேட்டுக்
கொண்டிருக்கின்றன

Monday, December 9, 2019

இருப்பதும்..இல்லாததும்

1)இருப்பது
இல்லை போலும்
இல்லாதது
இருப்பது போலும்
தோன்றுவது ஏன்?

2)இதயத்திற்கு
சிறகு முளைத்து
பறக்கின்றது

3)மண்ணுக்குள்
மண்ணாய்
மக்கச் செய்யும்
மண்தானே
சிறு விதையையும்
பிரசவித்து
மண்ணில்
மக்களுக்காக
அனுப்புகிறது

Friday, November 22, 2019

ஆதி பகவன் முதற்று உலகு
இறைவனுக்கு
 அடுத்து..
இறைவனுக்கு அடுத்தா..?
ஆம்..
அடுத்தது
அது மழையாகும்
ஆகவேதான்
வள்ளுவன்
கடவுள் வாழ்த்தை
அடுத்து
வான் சிறப்பை
வைத்தான்

Monday, November 4, 2019

மழை
அடித்து ஓய்ந்ததும்
மழைத்துளிகள் மீது
கோபம் வரத்தான் செய்கிறது..
யார் அனுமதியுமில்லாமல்
மரத்தின் இலைகளையும்,
பூக்களின் இதழ்களையும்
அனுமதியின்றி
முத்தமிட்டுக் கொண்டிருப்பதைக்
காணுகையில்..

Wednesday, October 30, 2019

நிலா முகம்
அதில் சிறுபரு
நிலை கொண்டிருக்கும்
லேண்டர்

Monday, October 28, 2019

சிறகடித்து
பறக்கும்
பறவையைப்
பார்த்திட
பரவசம்..
நம் மீது
எச்சமிடாத வரையில்...

Sunday, August 25, 2019

நாடகப்பணியில் நான் - 1

என் நாடக அனுபவங்களை எழுத வேண்டிய அளவிற்கு, தமிழ் நாடக உலகில் என்ன சாதித்துவிட்டேன் என்ற கேள்வி, இத் தொடரை ஆரம்பிக்கும் முன் எனக்குத் தோன்றியது.

அதே நேரம், ஆயிரக்கணக்கான வானரங்களுடன், ஸ்ரீராமன் சேது பாலம் அமைத்த போது, தான் மண்ணில் உருண்டு, அதனால் ஒட்டிய மணலை பாலம் கட்டும் மணலுடன் சேர்த்ததால், தன் முதுகில் ஸ்ரீராமனால் தடவிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே அணில்களின் மேல் இன்றும் காணப்படும் கோடுகள் என்று கதை உண்டு.தவிர்த்து,அதுவே, பெரும் காரியங்களில், ஒரு சிறு உதவியினை நாம் செய்தாலும், அணில் பங்கு என போற்றப்பட்டது

 தமிழ் நாடகக் கடலில் ஒரு துளியான நான் என் அணில் பங்கு அனுபவங்களைக் கூறுவதில் தவறில்லை என எனக்கு உணர்த்தியது..

இனி என் அனுபவங்கள்

நாடகம் எனும் போதைக்கு நான் எப்போது அடிமை ஆனேன்.என் எண்ணச் சிறகை நாடக வானில் பறக்க விட்டேன்.

அப்போது என் வயது 11..அம்பத்தூர் சர் இராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.எங்களது பக்கத்து வீட்டில் ராகவேந்திரன் என்னும் இளைஞர் ஒருவர் இருந்தார்.
அவரை நாங்கள் எல்லாம் "ராகவேந்திர அண்ணா" என்றே அழைப்போம்.அவர் அவ்வப்போது அம்பத்தூர் குப்தா பள்ளியில் நாடகம் போட்டு வந்தார்.அவரது நாடகங்களுக்கு எங்கள் குடும்பம் முழுவதற்கும் இலவச பாஸ்.(அன்றே ஓசியில் நாடகம் பார்க்கத் தொடங்கியது, இன்று வரை தொடர்கிறது)

அவர் ஒருநாள் என்னிடம்,"தம்பி, உனக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறதா?" என வினவினார்.

அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை எனக்கு.உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், படிப்பைத் தவிர வேறு எது செய்தாலும் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் தலையைவலம் இடமாகவும் மேலும் கீழுமாக ஆட்டினேன்.அந்த அண்ணன் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும் என.

அந்த அண்ணனுக்கு என்ன புரிந்ததோ, ஆனால் என்னிடம், "உங்க அப்பா கிட்ட நானே கேட்கிறேன்" என்றார்.அத்துடன் நில்லாது, எனது தந்தை அன்று அலுவலகத்திலிருந்து திரும்பியதுமே"சார், உங்க பையனை நான் அடுத்ததாகப் போடப்போகும் நாடகத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாமா?" என்று கேட்டார்

கோபத்துடன் என்னைப் பார்த்த அப்பா, சாந்தத்துடன் அவரிடம், "படிக்கிற வயசுலே அவனுக்கு இதெல்லாம் வேண்டாம் " என்று சொல்லிவிட்டார்.

அந்த அண்ணனுக்கு  ஏமாற்றம்.எனக்கும் ஏமாற்றம்.கூடவே அம்மாவைப் பார்த்தேன்.அம்மாவிற்கும் ஏமாற்றம் என முகம் சொல்லியது.

தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஆவலை ஏற்படுத்தியதே என் அப்பா, அம்மாவின் ஆதரவு தான்.குடும்பப் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லையாயினும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கண்ணன், கல்கண்டு என பத்திரிகைகளை வாங்கிக் குவித்தவர்கள் அவர்கள்.அந்த வயதிலேயே, அமரதாராவையும், மலைச்சாரல் மாதவியையும், தில்லானா மோகனாம்பாளையும், உன் கண்ணில் நீர் வழிந்தாலையும் படித்து தேர்ந்தவன் நான் .

இரு நாட்களாக நான் சோகமாக இருப்பதைப் பார்த்த அப்பாவிற்கு என்ன தோன்றியதோ.'உனக்கு நடிக்க ஆசை இருந்தால் , இந்த ஒரு நாடகத்தில் நடி பரவாயில்லை.ஆனால் படிப்பு கெடக்கூடாது" என அனுமதி அளித்தார்

நான் உடனே ஓடிப் போய் , ராகவேந்திர அண்ணனிடம் சொல்ல, அவரின் "பிரேமாவின் சபதம்" என்ற நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்.

என்ன பாத்திரம் என் கிறீர்களா. கதாநாயகி பிரேமாவின்..பதின்ம பருவப் பாத்திரம் .

ஆம்..எனது முதல் நாடகத்தில், பெண் வேடம் பூண்டு நடித்தேன்

(தொடரும்)

Monday, August 19, 2019

துனை நடிகை

நாயகியைச் சுற்றி
நடனமாட
துணை நடிகைகள்
துடிப்புடன்...
அவர்கள்
தொப்புளை
நெருக்கத்தில் காட்டுங்கள் - என
இயக்குநர்
இயம்ப
புகைப்படக் கருவி
நெருங்குகிறது அதனிடம்...
எக்ஸ்ரே கருவியெனில்
காலியாய்
இருக்கும்
இரப்பையைக்
காட்டியிருக்கும்

Sunday, July 14, 2019

குறுந்தொகை பாடல் ஒன்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே 

(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)
(யாய் = என்தாய்; ஞாய் = உன்தாய்; எந்தை = என்தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல்நீர் = மழைநீர்)
முன்பின் தெரியாத ஒருவனிடத்து உள்ளத்தைப் பறிகொடுத்தாள் தலைவி. இவன் நம்மை மணப்பானோ அல்லது விட்டுவிடுவானோ என உள்ளம் கலங்குகிறாள். அவளைத் தேற்றுகிறான் தலைவன்.
“என்தாயும், உன்தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல் நீர்போல ஒன்று கலந்துவிட்டன.”
இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. இவ்விரண்டையும் இனிப் பிரிக்க முடியாது. இவ்வாறே தலைவன், தலைவி காதலையும் பிரிக்க இயலாது. முன்பின் அறியாத் தலைவன் தலைவியின் மனத்தில் நம்பிக்கையை உண்டாக்குவதற்கு அருமையான உவமையைப் பயன்படுத்தி உள்ளது பாராட்டத் தக்கது.

Monday, April 15, 2019

குறள் போற்றுவோம் - 8

உணவும் செரிமானமும்

நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

Friday, April 5, 2019

குறள் போற்றுவோம் - 7

நாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.
அதைப் பார்த்த பின்னரும்...நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
நம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை செய்த அவரை நண்பன் என்ற நிலையில் இருந்து மறந்து விட வேண்டும் என்றுதானே எண்ணுவோம்.
ஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார் தெரியுமா?
பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்
இதில் ஆச்சரியம் என்ன வெனில் நாம் எதைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும், வள்ளுவன் அதைக் குறித்தும்...அதற்கான அறிவுரையும் கூறியுள்ளார்

Wednesday, April 3, 2019

குறள் போற்றுவோம் - 6

நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்

Tuesday, April 2, 2019

குறள் போற்றுவோம் - 5


மழை...வாழ்வாதாரங்களில் முக்கியமானது.

இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும்.

மழை.....பெய்யத் தவறினால்....விவசாயம் மட்டுமா பதிக்கப்படும்? மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்...நதிகள் வேண்டுமானல்..அந்நீரை...தன் புகலிடமான கடலில் கொண்டு சேர்க்கும்.ஆனால்..மக்கள் வாழும் பகுதிகளில்..வெள்ளம் புரண்டோடி உயிர்களில் வாழ்வைக் கெடுத்து..பல உயிர்களை பறித்துச் செல்லும்.

இக்கருத்தை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார்?

"கெடுப்பதூஉங்  கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
 எடுப்பதூஉம் எல்லாம் மழை"  - 15

பொருள் - பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

Sunday, March 31, 2019

குறள் போற்றுவோம்-4


யானையின் பலம் எதிலே
தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே
நம்பிக்கையிலே

இப்படி ஒரு சினிமா பாடல் உண்டு.மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில் முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.ஒரு சின்னக் கதை

இரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த பாலில் விழுந்து விட்டன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்கமுடியாது என்று நம்பியது ஒரு தவளை.இது அவ நம்பிக்கை கொண்ட தவளை.
பாலில் அடிப்பாகம் சென்று அங்கேயே செத்து மடிந்தது.

ஆனால் அடுத்த தவளையோ நம்பிக்கை உள்ளது.

பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்தது.உதைத்தது.நீச்சல் போட்டது.உந்தி உந்தி கலக்கியது.பால் கலங்க ஆரம்பித்து ஆடை படர்ந்தது.மேலும் மேலும் நீந்தியது.சிறிது சிறிதாகத் திரண்ட வெண்ணெய் பாலில் மிதந்தது.

நம்பிக்கை இழக்கா தவளை வெண்ணெய் மீது அமர்ந்துக் கொண்டது.வெளியே தாவி பாய்ந்து தப்ப சிறிது ஓய்வு கிடைத்தது.

பால் பாத்திரத்தை விட்டு தாவி குதித்து ஓடியது..இது நம்பிக்கை.

பாலின் அடியில் சென்றது செத்து மடிந்தது அவநம்பிக்கை.

நம்மை ஒரு துன்பம் சூழும் போது துவண்டுவிடாமல்..அதிலிருந்து வெளிவரும் நம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.

இதையே வள்ளுவர்..

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்

என்கிறார்..

துன்பம் சூழும் போது துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

Monday, March 25, 2019

குறள் போற்றுவோம் - 3

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை....    -12

இது சாதாரணமாக...திருக்குறள் தெரியுமா?  எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
இக்குறளுக்கான பொருள் என்ன? பார்ப்போம்..

இது என்ன  துப்பாக்கி ..என்கிறீர்களா?

அந்தத் துப்பாக்கி ஏந்தி வரும் அர்த்தம் என்ன?..

இன்று  பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்...என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..

மழை...மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.

அதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.

இப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை...நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.

இனி....மேற் சொன்ன குறளுக்கான உரை-

மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.

(துப்பார்க்கு = உண்பார்க்கு துப்பாய = உணவு ஆகி துப்பு ஆக்கி = உடலை வலிமைப் படுத்துகிறது. துப்பார்க்கு = அனுபவிக்கும் அறிவுள்ளார்க்கு துப்பாய = பொலிவு வலிமையுடன் தூய்மையான உடலையும் உண்டாக்குகிறது. துவும் மழை = தூய்மையாகப் பெய்கிற மழை. சொல் விளக்கம்: துப்பார் = உண்பவர், துப்பு = அறிவு, அனுபவம், உணவு, தூய்மை, நன்மை, பொலிவு, வலிவு; துப்புஆக்கி - என்பதே துப்பாக்கி ஆயிற்று, து =து என்றால் தூய்மை; உம் - ஒரு சிறப்புப் பொருள். முற்கால உரை: உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாவது மழையாகும். தற்கால உரை: உண்பவர்க்கு வேண்டிய உணவுப் பொருளை உண்டாக்கி உண்பவர்க்குக் குடிநீர் என்னும் உணவாகி இருப்பதும் மழையேயாம்)

Tuesday, March 19, 2019

குறள் போற்றுவோம் - 2


அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.

சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

Sunday, March 17, 2019

குறள் போற்றுவோம் - 1



ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்)

கண் போன போக்கில் எல்லாம் மனிதன் போகலாமா? என்று ஒரு பாடல் உண்டு.அதாவது, நம் கண்கள் பார்த்து, ஆசைப்பட்டு அதன் வழியில் எல்லாம் நடந்தால், அது சிக்கலில்தான் கொண்டு விடும். கண்கள் பார்த்தாலும், மனம் சிந்தித்து நல்லது, கெட்டது உணர்ந்து செயல் பட வேண்டும்.(புலன் - கண்)

நம்மில் கோபம் ஏற்பட்டால் , இடம் மறந்து..வாயில் வந்ததை எல்லாம் உரக்கக் கூறி, அதுவரை நம்மைப் பற்றி நல்லபடியே நினைப்பவர்கள் எண்ணங்களை மாற்றி விடுவோம்.அது சரியா? பிறர் பற்றி புறம் கூறுவோம்..அது சரியா(புலன்-மெய்)

கெட்டவற்றைக் கேட்காத செவி வெண்டும்.நல்லவற்றையே நாளும் கேட்க வேண்டும்.(புலன்-செவி)

வாசனையைத் தரும் பொருள்கள், உணவு போன்றவைக்கூட ஆசையைத் தூண்டும்.ஆனால் அவை உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு விளைவிப்பவை என உணர வேண்டும். (மூக்கு -புலன்)

நமக்கு புலனடக்கம் இல்லாவிடில், நம் பெயர், புகழ், வாழ்வு எல்லாம் கெடும்.மனிதனாய் பிறந்தோர் அனைவருமே..தங்கள் ஐம்புலன்களை அடக்கினால், வையத்தில் சந்தோசமாக வாழ்வாங்கு வாழலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை..ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவனைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு    (28)

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் .

Tuesday, January 29, 2019

தினம் ஒரு தகவல் - 2


வள்ளுவன் வாக்கு

சாதாரணமாகவே. ஏதேனும் ஒரு துறையில் வல்லுனராக உள்ளவர்களுக்கு சற்று அகந்தை இருக்கும்.

பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களை சற்று (வித்யா)கர்வத்துடன் பார்ப்பான்


உயர் அதிகாரி, தன் கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்கையில், அதைத் தட்டிக் கேட்கும் போது...தான் அவர்களுடன் உயர்ந்தவன் என்ற அகந்தையை அடைவார்.


பக்கத்துவீட்டுக் காரர் கார் வாங்கிவிட்டால், நேற்றுவரை சகஜமாகப் பேசியவர், இன்று கண்டும் காணாமல் போவார்.


இதெல்லாம் சில உதாரணங்களே..


மனிதனாய் பிறந்த அனைவருமே, ஏதேனும் ஒரு கோட்டில் சற்று அகந்தைப் பிடித்தவர்களாகவே இருப்பார்கள்.


மனிதர்களே இப்படியெனில்..அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு எவ்வளவு அகந்தை இருக்கும்.அது என்ன அகந்தை? என்பதை வள்ளுவர் சொல்கிறார்.


"நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்துவ் வுலகு"
(இந்த உலகமானது, நேற்றுவரை உயிருடன் இருந்தவனை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைக் கொண்டதாகும்)

Saturday, January 26, 2019

"பத்ம" விருதும்..கலைஞனும்

இந்த ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும், இவ்விருதுகள் அறிவிப்பு வருகையில் இந்த மாபெரும் கலைஞன் ஞாபகத்தில் வருவான்..

ஆம்..கடைசி வரை தனக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என மனம் வருந்தியவன் அவன்.

ஆம்..அக்கலைஞனின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் இல்லை..

அக்கலைஞன் மாபெரும் நகைச்சுவை கலைஞன் மட்டுமல்ல,சிறந்த குணசித்திர நடிகன், வில்லன்..

அக்கலைஞன் தான் நாகேஷ்.

ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும்

வாழை மரமும் சவுக்கு மரமும்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க
அருமையான வார்த்தைகள்...‬

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் அவர்கள் சொன்னது:

வானொலிக்காரர்கள் கேட்ட கேள்வி:: நியாயமாக உங்களுக்கு
வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது
உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம்
கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு
வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது
ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம்
மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே
போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும்
சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்..

தினம் ஒரு தகவல் - 1 ------------------------------------ (வள்ளுவனின் வாக்கிலிருந்து)


நம் நண்பர்களில் பலர், அவ்வப்போது.."எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைகள் வருகிறது" என்றும், "எனக்கு அதற்குக் கொடுப்பினை இல்லை" என்றும் எப்போதும் எதிர்மறையாகவே பேசிக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பதை நாம் காணலாம்.
உண்மையைச் சொல்வதானால், இவர்கள் வாழத் தெரியாதவர்கள்.
ஆண்டவன் இருக்கின்றான் என நம்பும் இவர்கள்,அந்த நம்பிக்கையே நம்மை வாழ்வில் உயர்த்திவிடும் என எண்ணாமல்..வாழ்வில் உயர நம்பிக்கையும், அதற்கான உழைப்பும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
தனக்கு இணையாக வாழும் நண்பன், தன்னைவிட வசதிகள் படைத்தவனாய் இருந்தால், தனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் இல்லை என பிதற்றுவர்.ஆனால், அந்த வசதியை அடைய அவன் பட்ட துன்பங்கள், வாழும் நெறி ஆகியவற்றை மறந்துவிடுவார்கள்.,எப்போதும் சோம்பித் திரிவர்.சோம்பல் படுபவன் வாழ்வில் உயர இயலாது.
வள்ளுவர் சொல்கிறார்..
"இலமென் றசையி இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்"
(வாழவழியில்லையே என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி செய்வாளாம்)

Thursday, January 10, 2019

பொங்கலோ பொங்கல்




சுழன்றும் ஏர் பின்னது உலகம்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை..

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் விவசாயி

இப்படி உழைச்சு அவன் கொடுக்கற

அரிசியையும் பருப்பையும், கரும்பையும்

உழைப்பின்றி

இலவசமாக வாங்கி

பொங்கல் வைத்து

"பொங்கலோ பொங்கல்"

என

கூப்பாடு போடுவது

நியாயமா? நண்பனே!