Saturday, August 27, 2022

இனிக்கும் தமிழ்

 


நள வெண்பா - நெஞ்சும் போயிற்று 


குழந்தை உறங்குகிறதே...கடைக்கு சென்று திரும்பி விடலாம் என எண்ணி ஒரு தாய் வெளியே போகிறாள்.

இடைப்ப்ட்ட நேரத்தில் குழந்தை விழித்துக் கொண்டு அழுகின்றது.
கடையில் இருக்கும் தாய்க்கு..உள்ளுணர்வில் குழந்தை அழுவதுபோல தெரிகிறது. 


கணவன் வெளியூர் போயிருப்பான். போன இடத்தில் ஏதோ கொஞ்சம் உடல் நிலை சரி இல்லாமல் போயிருக்கும். இங்கு, மனைவிக்கு மனசு என்னமோ செய்யும். அவருக்கு என்னமோ என்று கிடந்து தவிப்பாள். அங்கே அவருக்கு ஒன்று என்றால், இங்கே இவளுக்கு எப்படித் தெரியும். உடல் இங்கே இருக்கிறது. மனம் அவன் கூடவே போகிறது.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியையே . புகழேந்தி, நளவெண்பாவில் காட்டுகிறார்.

தமயந்தியை காண நளன் வந்தான். அவளோடு பேசி சந்தோஷமாக இருந்த பின், பிரிந்து சென்றான். அவன் கூடவே, தமயந்தியின் மனமும் சென்று விட்டது. தன் மனம் அவன் பால் சென்ற பின், பாவம் அவள் தான் என்ன செய்வாள்?

பாடல்

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்
வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து.

பொருள்

தூதுவந்த காதலனைச்  = தேவர்களுக்காக தன்னிடம் தூது வந்த காதலனை (நளனை )

சொல்லிச் = பேசி

செலவிடுத்த = செல்லும் படி விட்ட

மாது = (மாது)தமயந்தி

வந்து பின்போன = தன்னிடம் வந்து பின் போன

வன்னெஞ்சால் = வன்மையான நெஞ்சால். (இத்தனை நாள் தன்னோடு இருந்து விட்டு, அவனைக் கண்டவுடன், அவன் கூடவே போனதால், அதை வன்நெஞ்சு என்கிறாள்.)

யாதும் = அனைத்தும்

அயிர்த்தாள் = =பதறினாள்

உயிர்த்தாள் = உயிர் பிரிந்து போன மாதிரி தவித்தாள்

அணிவதனம் = ஆபரணம் அணிந்த முகம்

எல்லாம் = எல்லாம்

வியர்த்தாள் = வியர்த்தாள்

உரைமறந்தாள் = பேச மறந்தாள்

வீழ்ந்து = கால்கள் தள்ளாடி தரையில் வீழ்ந்தாள்


காதலன் போன பின், அவன் கூடவே அவள் மனமும் போய் விட்டது.


No comments: