Saturday, August 30, 2014

குறுந்தொகை - 92



தலைவி கூற்று
(மாலைப்பொழுது வந்ததுகண்டு தலைவி, “பறவைகள் தம் குஞ்ச்கலுக்குரிய இரையை வாய்க்கொண்டு தம் கூடுகளை நோக்கிச் செல்கின்றன” என்று கூறி, “இனிஆற்றேன்” என்பதுணர்த்தியது.)

நெய்தல் திணை= பாடலாசிரியர் தாமோதரன்

இனி பாடல்-
   
ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
   
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
   
இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
   
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய

இரைகொண் டமையின் விரையுமாற் செலவே

                      _ தாமோதரன்

உரை-

கதிரவன் மறைந்த அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில், வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த
வளர்ந்த கடம்ப மரத்தில் உள்ள கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் உள் வாயினுள்ளே செருகும் பொருட்டு இரையை தன் அலகில் எடுத்துக் கொண்டமையால் விரைந்து செல்லும்.அவை இரங்கத்தக்கன.


 (கருத்து) மாலைக்காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்.

   
(இதனால் தலைவி மாலைப்பொழுது வந்ததையறிந்து காமநோய் மிகப்பெற்று ஆற்றாளாயினளென்பது மறைபொருள்)

Thursday, August 28, 2014

உவமைகளை ரசியுங்கள் (கொஞ்சி விளையாடும் தமிழ்)



உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர்.

உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், 'தெரிவிக்க விரும்பும் பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு 'போல' போன்ற இணைப்புச் சொற்களால் ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர்.

ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்...

பாரதிதாசன் 'குடும்ப விளக்கில்' குழந்தையின் புருவத்தை இப்படிச் சொல்கிறார்..

"எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்'

எறும்புகளின் வரிசையை அரும்பிவிட்ட புருவத்திற்கு உவமைப்படுத்தியுள்ளார்.

புலவர் நா.காமராசன் முதுமை பற்றி கூறுகையில்.

"தண்ணீரில் இருக்கும் மீனைத்தேடி
தூண்டில் வந்தது போல்..
என்னைத் தேடி
முதுமை வந்தது"   என்கிறார்.

அதே போன்று அவர்...

'ரோஜாவையும், மல்லிகையையும்
ஒரே நேரத்தில்
கூந்தலில் வைத்துக் கொள்ளும்
பெண் சிறுமி போல
சூரியனையும் சந்திரனையும்
விடியலின் மெல்லிய வெளிச்சத்தில்
சூடிக் கொண்டிருக்கும் வானம்'     என்கிறார்.

ரோஜாவையும்,மல்லிகையையும், சிறுமியையும் முறையே சூரியன், சந்திரன்,வானத்திற்கு ஒப்பிடுகிறார்.

மு.மேத்தா...'சரியாடி பராசக்தி' என்னும் கவிதையில்..

"தண்ணீர்க் குடம்போல்
தனித்துக் காட்சி தரும்
சின்னஞ்சிறிய சிங்களத்தில் தமிழர்களின்
கண்ணீர்க் குடமன்றோ
கவிழ்க்கப்பட்டு விட்டது'   என்கிறார்

தண்ணீர்க்குடம் தனியாகக் கிடப்பது போல சிங்களம் தனியாக நாற்புறமும் நீரினில் அமைந்துள்ளது என்றும் தமிழர்கள் கண்ணீரில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வைரமுத்து..ஏ.இரண்டாயிரமே என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் அன்னம் என்ற சொல் நெல்லிற்கும்..பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அன்னப் பறவையையும் குறிக்கிறது.அன்னப் பறவை காணாமல் போனதுபோல் காவிரி ஆறும் காணாமல் போகிவிடுமா? என்கிறார்.இக்கவிதை உவமையால் பொருளை வெளிக் கொணர்கிறது எனலாம்.

இதயத்தின் மணம்

                   


இதய நறுமணத்தை

நுகர்ந்ததுண்டா?

மென்மையான

ரோஜா மலராய்

இதயம் இருந்தால்

நீங்கள் நுகர்ந்திருப்பீர்


குறுந்தொகை - 91



தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று மீண்டுவந்த தலைவன் தலைவியினது உடம்பாட்டை வேண்டி நின்றவிடத்து அவன்பால் ஊடலையுடைய வளாயினும் தன் நெஞ்சம் அவன்பாற் செல்வதையறிந்த தலைவி, “நீ அவன்பால் அன்புடையையாகி இருப்பின் பலநாள் துஞ்சாதுறையும் துன்பத்தையடைவாய்” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்  


அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
   
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
   
தண்டுறை யூரன் பெண்டினை யாயிற்
   
பலவா குகநின் னெஞ்சிற் படரே

ஓவா தீயு மாரி வண்கைக்
   
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
   
கொன்முனை யிரவூர் போலச்
   
சிலவா குகநீ துஞ்சு நாளே.

                          -ஔவையார்

உரை-
ஒன்றோடொன்று பிணங்கு தலையுடைய பிரப்பங்கொடியின் புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை, ஆழமாக நீரையுடைய குளத்திலுள்ள கெண்டை மீன் கவ்வுதற்கிடமாகிய தண்ணிய நீர்த் துறைகளையுடைய ஊர்த்தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பின் நின் உள்ளத்தில் துன்பம் பலவாக ஆகுக.காலமும். இடமும் பெறுவார் தகுதியும் நோக்கி யொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும், மேகம் போன்று கைமாறு கருதாத வண்மையையுடைய கையினையும், விரைந்த செலவையுடைய ஆண்யானைகளையும் ,உயர்ந்த தேர்களையும் உடைய அதியமான் அஞ்சியெனும் உபகாரியினது அச்சத்தைச் செய்யும் போர்க்களத்தில் உள்ள இரவையுடைய ஊரிலுள்ளோர் போல நீ துயிலும் நாட்கள் சிலாஆகுக!


    (கருத்து) தலைவன்பால் இரங்கி இப்பொழுது உடம்பட்டாலும் பின்னும் தன் ஒழுக்கத்தினின்றும் அவன் மாறுபடான்.


.(கெண்டைமீன் பிரப்பம் பழத்தைக் கவர்ந்து உண்ணும் குளங்கள் சூழ்ந்த நாட்டை உடையவன் தலைவன். அவனது மனைவி நீ ஆயின் இரவூர் போல நீ துஞ்சும் நாள் சிலவாகுக. உன் நெஞ்சம் அவன் என்னைக் கவர்ந்து உண்டதை நினைந்து நினைந்து வருந்தும் நாள் பலவாகுக - இவ்வாறு பரத்தை தலைவிக்குச் சொல்லும் பாடல் இது.
கெண்டைமீன் பிரம்புப் பழத்தைக் கௌவும் என்றது தலைவன் பரத்தையைக் கௌவிக்கொண்டதை உணர்த்தும் உள்ளுறை.)

இரவூர் என்னும் ஊரை அதியமான் நெடுமான் அஞ்சி தன் யானைப்படையுடன் சென்று தாக்கினான். அதுமுதல் இரவூர் மக்கள் சில நாட்களே உறங்கினர். பலநாள் அவன் தாக்கியதை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகி வருந்தினர்.

Wednesday, August 27, 2014

குறுந்தொகை - 90



தோழி கூற்று
(தலைவன் திருமணம் செய்யாது நெடுங்காலம் தலைவியோடு பழகியபோது ஒருநாள் அவன் வேலிப்புறத்திலே வந்துநிற்ப அவன் கேட்கும்படி தலைவியை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவனது கேண்மையினால் நின் மேனிக்கு வாட்டம் நேர்ந்ததேனும் நீ அன்பிற் குறைந்தாயல்லை” என்று தலைவியின் நிலையைத் தோழி புலப்படுத்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் சேந்தன் பூதன்.

இனி பாடல்-


எற்றோ வாழி தோழி முற்றுபு
   
கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய
   
மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
   
கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி

வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம்
   
குன்ற நாடன் கேண்மை
   
மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.

                         - சேந்தன் பூதன்.

    உரை-

சூல் முற்றி மிளகுக்கொடி வளர்ந்திருக்கும் மலையடுக்கத்தில் இரவெல்லாம் முழங்கிக்கொண்டு மழை பொழிய, கலைமான் சுளையைத் தின்றபின் கோதுமயிரினை உடைய பலாப்பழம் வரைப்பாறையிலிருந்து விழும் அருவியில் மிதந்து வரும் நாட்டை உடையவன் தலைவனது நட்பு உனது மெல்லிய தோள்களை மெலியச் செய்தும் அமைதியைத் தந்தது


 (கருத்து) நீ மெலிந்தாயாயினும் இயல்பு வேறுபட்டாயல்லை.


தலைவன் தலைவியை அடைய வெளிப்புறத்தில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொள்வதில் காலம் கடத்துகிறான். தலைவனுக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள். (தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடையலாம். (இப்போது அடைய முடியாது என்பது கருத்து.)


   

Tuesday, August 26, 2014

குறுந்தொகை - 89



தோழி கூற்று
(தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாளாக, அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றுதலைத் தோழி தலைவன் சிறைப்புறத்திலிருக்கும் பொழுது புலப்படுத்தி, விரைவில் திருமணம் செய்து கொள்ளல் நலமென்பதை உணர்த்தியது.)
 

மருதம் திணை - பாடியவர் பரணர்.

இனி பாடல்-

பாவடி யுரல பகுவாய் வள்ளை
   
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப
   
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
   
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
   
நல்லியற் பாவை யன்னவிம்
   
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.

                        - பரணர்

உரை-

பெரிய அணிகலத்தையுடைய சேரனுக்குரிய , அச்சம் தருதல் மிக்க கொல்லிமலையில் உள்ள கரிய கண்களையுடைய தெய்வம் அம் மலையின் மேற்குப் பக்கத்தில் எழுதிய நல்ல இயலையுடைய பாவையை ஒத்த இந்த மெல்லிய இயல்பையுடைய தலைவி,தன் தலைவனுடைய பெயரைப் பாடி இடிப்பாளாயின், அங்ஙனம் அவள் பரந்த அடியினையுடைய உரலினது பகுவாயிடத்து தானியம் இடிக்கும் போது பாடும் வள்ளைப் பாட்டைக் குறித்து அயலார்கள் குறைகூறுதலையும் செய்வார்கள்.இத்தகைய அறிவின்மையையுடைய ஊரினர் கூறும் சொற்களின் பொருட்டு வருந்துவதால் பயன் என்ன?
.


(கருத்து) ஊரினர், தலைவி ஒரு தலைவன்பால் நட்புடையளென்பதை அறிந்துகொண்டனர்.

   

    வள்ளை உரற்பாட்டு- மகளிர் உரலில் நெல் முதலியவற்றை இடிக்கும்போது அதனால் உண்டாகும் அயர்வு தோற்றாதிருக்கும் பொருட்டுப் பாட்டுப்பாடுதல் இயல்பு; இங்ஙனம் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டெனப்படும்.
    இப்பாட்டு, இடிப்பவர்களுடைய அன்புக்குரியாரைத் தலைவர்களாகப் பெற்றிருத்தல் மரபு;

Monday, August 25, 2014

தவிக்கும் செடி..



                 


மலரில்

அமர்ந்தது வண்டு

செடியின் அனுமதியின்றி

மலரும்

தேனைத் தந்தது..

தேனுண்ட வண்டு

தாவியது அடுத்த மலருக்கு

கையறு நிலையில்

தவித்தது செடி...

மலரோ.

வாட ஆரம்பித்தது..



குறுந்தொகை = 88



தோழி கூற்று

(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடியவர்  மதுரைக் கதக்கண்ணன்

ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்
 
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
 
தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
 
நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே தோழி நாமே.

                - மதுரைக் கதக்கண்ணன்

உரை-

ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன் சிறிய கண்ணையுடைய பெரிய களிறு வலிமையான புலியைத் தாக்கி ,தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே இடையிரவில் வருதலையும் செய்வான்.அங்ஙனம் அவன் வருதலினால் நமக்கு உண்டாகும் ப்ழிக்கு நாம் வெட்கப்பட மாட்டோம்.

(அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிழிந்து நிலப்பரப்பி லுள்ளாருக்குப் பயன்படுவது போலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து பார்ப்பான்)


   (கருத்து) தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.

     (வழியின் ஏதத்துக்கு அஞ்சாமல் அவனே வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல் நாணி மறுத்தல் அழகன்றென்பது தோழியின் நினைவு.)
 இரவுக்குறி _ தலைவன் இரவில் வந்து தலைவியை சந்திக்கும் இடம்
   .

Sunday, August 24, 2014

குறுந்தொகை - 87



தோழி கூற்று
(தலைவன் தெய்வம் உன் உறுதிமொழி அளித்துப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அதனால் அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
 
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
 
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
 
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
 
பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.

என்பது தலைமகள் தெய்வத்திற்குப் பராயது.

                         -கபிலர்.

உரை-

பொதுவிடத்திலுள்ள மராத்தின் கண் தங்கும், பிறருக்கு அச்சம் தரும் முதிர்ந்த தெய்வம் கொடுமையுடையாரை வருத்தம் என்று அறிந்தோர் கூறுவர்.குன்றுகள் பொருந்திய நாட்டுடைய என் தலைவர் சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை உடையவர் அல்லர்.என் நெற்றி நான் அவரை விரும்பியதால் பசலை பெற்றது.என் மனம் அவர் திறத்து நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள் மெலிவுற்றது.

(கருத்து) என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.

 

     தலைவன் தலைவியோடு அளவளாவிய பொழுது கடம்ப மரத்திலுறையும் கடவுள்மேல் ஆணையிட்டு, “நின்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்” என்று உறுதி அளித்தான்.தெளித்தான்; பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள். தன்னுடைய வேறுபாடு களுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின், அக் கொடுமை கருதி அவனாற் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒறுக்கு மென்று அவள் கவன்றனள். ஆதலின் தலைவன் கொடுமையுடையன் அல்லன் எனக் கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டுமென்று தெய்வத்தை வேண்டினாள்.
   

 

Saturday, August 23, 2014

குறுந்தொகை - 86


தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் காலத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெண்கொற்றன்

இனி பாடல்
 
சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்
   
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
   
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
   
தூதை தூற்றுங் கூதிர் யாமத்

தானுளம் புலம்புதொ றுளம்பும்
   
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.


                          -வெண்கொற்றன்.

  உரை -

மழைத்துளி மிக்க, வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்ப்பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந் தோறும் அலைகின்ற (தலையாட்டுதலால்)நா வினால் முழங்குகின்ற கொடிய மணியின் மெல்லிய ஓசையை தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற செம்மையான அரிகளையும்   குளிர்ச்சியையுடைய கண்ணோடும், பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துதளாற் கலங்கி கேட்டு வருந்துவார் என்னையன்றிப் பிறமகளிரும் உள்ளனரோ?

(கூதிர் கலம்
 _ஐப்பசி, கார்த்திகை)

  (கருத்து) தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் நானொருத்தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.

Friday, August 22, 2014

குறுந்தொகை - 85



தோழி கூற்று
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணன், “ தலைவன் மிக்க அன்புடையன்” என்று பாராட்டியபொழுது தோழி, “இவன் சொல்லத்தான் அவர் அன்பு புலப்படுகின்றது.  ஆனால் அவர் செயலால் தெரியவில்லை” என்று கூறி வாயில் மறுத்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் வடமவண்ணக்கன்

இனி பாடல்-

யாரினு மினியன் பேரன் பினனே
   
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
   
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
   
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்
   
யாண ரூரன் பாணன் வாயே.

                 -வடமவண்ணக்கன்

உரை-
  உரினுள் இருக்கும் குருவியின் துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது, கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு பொறை யுயிர்த்தற்குரிய இடத்தை அமைக்கும் பொருட்டு தேன் பொதிதலைக் கொண்ட இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசா வெள்ளிய பூவை கோதியெடுக்கும்.புதிய வருவாயை உடைய ஊருக்குத் தலைவன் பாணனது சொல்லின் அளவில் எல்லாரினும் இனிமை உடையான்/தலைவியினிடம் பெரிய அன்பினை உடையான்.(உண்மையில் அங்ஙனம் இல்லை)

   

(கருத்து) பாணன் தலைவனைப் புகழினும் தலைவன் அன்பிலன்.

Thursday, August 21, 2014

குறுந்தொகை - 84



செவிலித்தாய் கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.)

 பாலைத் திணை - பாடலாசிரியர் மோசிகீரன்

இனி பாடல்-

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள்
 
இனியறிந் தேனது துனியா குதலே
 
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
 
வேங்கையுங் காந்தளு நாறி

ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே.



                                 - மோசிகீரன்

உரை-

உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது. மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான வேங்கை மலரினது மணத்தையும், காந்தள் மலரினது மணத்தையும் வீசி ., ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியுடையளாகிய என் மகள், நான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீண்டும் தழுவும் காலத்து, நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்.அப்படி நான் தழுவியது அவளுக்கு வெறுப்பு உண்டாகக் காரணம், அவள் கூறிய அக்காலத்தே அறியவில்லையாயினும் இப்போது அறிந்தேன்.

 
    (கருத்து) தலைவி என்மேல் வெறுப்புற்று  தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே நான் அறியவில்லை..


     செவிலி அறிந்தது, (“ தலைவனது தழுவலை இன்பமாகக் கருதியவளாதலின் பிறர் தழுவல் வெறுப்புறச் செய்தது” என்பதனை. “முன்பு விருப்பாயிருந்த என் அணைப்பு இப்பொழுது அவளுக்கு வெறுப்பாயிற்று” என்பது குறிப்பு;)

 ஆய்: ஏழுவள்ளல்களுள் ஒருவன். இவனுக்குரியது பொதியின் மலை. மழைதவழ் பொதியிலென்றது, காந்தளும் வேங்கையும் வளம் பெற வளர்தற்குரிய மழையுண்டென்பதைக் குறித்தது.



 


Wednesday, August 20, 2014

குறுந்தொகை - 83


தோழி கூற்று
(திருமணம் செய்யும் முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி, அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் வெண்பூதன்

இனி பாடல்-
 
அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
   
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை
   
தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்
   
தீம்பழந் தூங்கும் பலவின்

ஓங்குமலை நாடனை வருமென் றோளே.

                - வெண்பூதன்


உரை-

தன் வீட்டில் இருந்து, தனது முயற்சியால் ஈட்டிய பொருளில், தம் பாகத்தை உண்டது போன்ற இன்சுவையை தருகின்ற , கிளைகள் தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலா மரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவன், தலைவியை திருமணம் செய்யும் பொருட்டு பொருளோடு வருவான் என கூறியவளாகிய அன்னை, பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாய்,பெரும் புகழுடைய சுவர்க்கத்தை பெறுவாளாக.


     (கருத்து) தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.

(செவிலை எனப்படுபவள் வளர்ப்புத் தாய் ஆவாள்.பல நேரங்களில் தோழியின் தாயே தலைவியின் செவிலித்தாயாக இருப்பதுண்டு)

 

Tuesday, August 19, 2014

குறுந்தொகை - 82


தலைவி கூற்று
(தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கடுவன் மள்ளன்

 இனி பாடல்-

   
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்
   
பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார்
   
யாரா குவர்கொ றோழி சாரற்
   
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்

கொழுங்கொடி யவரை பூக்கும்
   
அரும்பனி யச்சிரம் வாரா தோரே.

                      - கடுவன்மள்ளன்

உரை -

(தோழி)மலைப்பக்கத்திலுள்ள பெரிய தினைப்புனத்திலுள்ள குறவனது, சிறிய தினையரிந்த மறு காலிடத்தில் கொழுவிய அவரைக்கொடி மலர்கின்ற, பொறுத்தற்கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும் வராத தலைவர் நீட்சியையுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து முதுகைச் சார்ந்து ,அழுதலையொழியெனக் கூறி என் அழுத கண் துடைப்பார் முன்பு.இப்பொழுது, எப்படிப்பட்டவராய் இருக்கிறாரோ!


    (கருத்து) தலைவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது அன்பின்றி என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) தான் பிரியுங்கால் தலைவி வருந்துதலை அறிந்த தலைவன் அவள் கூந்தலை உளரியும் கண்ணீரைத் துடைத்தும் தலையளி செய்து பிரிந்தானாதலின் அச்செயல்களை நினைந்து, “அங்ஙனம் செய்த தலையளியை யுடையார் இன்னும் வாராமல் புறக்கணிக்கிறாரே!!” என்று வருந்தினாள். தோழி, தலைவன் பிரியுங்கால் செய்த தலையளியை நினைவுறுத்தி வற்புறுத்தினாளாக, “அங்ஙனம் செய்யினும் இப்பொழுது வாராமையால் அவர் தன்மை வேறுபட்டது போலும்!” என்னும் கருத்துப் படக் கூறினாள்.

    யாரென்றது நம்மோடு தொடர்பிலரென்னும் நினைவிற்று. குறவனுக்குரிய சிறுதினை, தினைக்கதிரை அரிந்தபின் அதன் அடியில் மீட்டும் கிளைத்துக் கதிர் உண்டாகும்; அதனை மறுகாலென்பர்; அம்மறுகாலில் விதைத்த அவரை வளர்ந்தது.
    தலையளி என்பது..முகமலர்ந்து, அன்பு வார்த்தைக் கூறுதல்

Monday, August 18, 2014

குறுந்தொகை -81


தோழி கூற்று
(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

இனி பாடல்-
 
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
   
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
   
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
   
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்

நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
   
கடலுங் கானலுந் தோன்றும்
   
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.

                      -வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

உரை -
தலைவியானவள் குறையுறும் நின் சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை தெளிந்து , பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து, இதுவரை புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான தனிமையையுடையவள். நிலவையும் அதனோடு நின்ற இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதன் கரையிலுள்ள சோலையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுடைய எமது சிறிய நல்ல ஊர் அதோ பார்.இனி எம்மைமறவாது நினைக்க வேண்டும்.


     (கருத்து) இனி எம்மை மறவாது எம்மூருக்கு வந்து பழக வேண்டும்.

 ஞாழல் - நெய்தற் குரியதொரு மரம். தோழியிற் கூட்டம் கூடிய தலைவன் தலைவியோடு கடற்கரையிலுள்ள ஞாழன்மரத்தின் நிழலில் அளவளாவினான் ஆதலால், ‘ஞாழற் பல்சினை யொருசிறைப், புதுநலனிழந்த புலம்புடையள்’ என்றாள்.
 
     அலையின் பிறழ்ச்சியால் வெண்மையாகத் தோற்றும் கடலுக்கு நிலவும், அடர்த்தியால் இருண்டு தோன்றும் கானலுக்கு இருளும் உவமை;
    “தலைவி தானாக விரும்பி இதனைச் செய்திலள்; நான் கூறினமையின் இது செய்தாள். நானும் நீ குறைவேண்டி இரந்தமையின் அவளை நயக்கச் செய்தேன். ஆதலின் அவள் நலனிழந்தமைக்கு நின் முயற்சியே காரணமாவது. இனி நீ அவள் துயருறாவாறு அவ்வூரினிடத்தும் வந்து அளவளாவுக” என்று தோழி கூறினாள்.

Sunday, August 17, 2014

குறுந்தொகை - 80


விலைமகள் கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட விலைமகள் அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்

.  
கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்
 
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
 
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ
 
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர

நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி
 
முனையான் பெருநிரை போலக்
 
கிளையொடுங் காக்கன் கொழுநன் மார்பே.

                         =ஔவையார்



உரை_

எனது கூந்தலில் ஆம்பலின் புறவிதழொடித்த முழுப்பூவைச் செருகி, வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி, அப்புனல்
 விளையாட்டை விளையாடச் செல்வோம்.நான் அப்படி ய்தலைவனுடன் விளையாட தலைவி அஞ்சுவாளானால், வெவ்விய போரில்
பகைவரை நடுநிலை உண்டாகுமாறு பயப்படாமல் எதிரில் நின்று கொல்லும் பல வேற்படையையுடைய எழுனி என்னும் உபகாரியின் போர்முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல தன் கணவர் மார்பை பாதுகாக்கட்டும்  

(தலைவன் என்னை விட்டு வரமாட்டான் என விலைமகள் நம்பிக்கையுடன் கூறுகிறாள்)



     (கருத்து) தலைவன் என்னுடைய விருப்பப்படித்தான் நடப்பான்..தலைவி விரும்பியபடி நடக்கமாட்டான்.

எழினி - அதியமான் அஞ்சி. தன்நாட்டுப் பசுக்களைப் பகைவர் கொண்டு சென்றாராக அவரொடு பொருது அப்பசுக்களை எழினி மீட்டுக் காத்தான்;

Saturday, August 16, 2014

அழகின் ரகசியம்

             

என்

அழகின் ரகசியம்

அன்றாடம்

உபயோகிக்கும்

உத்தமி சோப்பே

நடித்து முடித்த

நடிகைக்கு

ஒருமணி நேரம் ஆனது

ஓரங்குல மேக்கப்

கலைக்க

குறுந்தொகை - 79


தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் குடவாயிற் கீரனக்கன்

இனி பாடல்-

.  
கான யானை தோனயந் துண்ட
   
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
   
அலங்க லுலவை யேறி யொய்யெனப்
   
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்

அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச்
   
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
   
கொல்லே மென்ற தப்பற்
   
சொல்லா தகறல் வல்லு வோரே.

                           -குடவாயிற் கீரனக்கன்

உரை-

(தோழி) யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால் ,சொல்லாமல் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர் காட்டு யானையால் பட்டை விரும்பி உண்ணப்பட்ட பொறந்த அடியையுடைய ஓலைமரத்தினது காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஏறி ஒய்யென தனிமையையும் வருத்ததையும் வெளிப்படுத்தும் குரலையுடையவனாகி ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும் பாலை நிலத்திற் பொருந்திய அழகிய தடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ!


     (கருத்து) தலைவர் இனி மீளாரோ?

     (வி-ரை.) பாலைநிலத்தின் வெம்மையால் யானை ஓமை மரத்தின் தோலை உண்டது.
 
     பாலை நிலத்துள்ள ஆண்புறவு தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ வென்றது, பறவையினங்களும் தம் துணையின்பால் அன்பு வைத்து ஒழுகும் அவ்விடத்தில் தங்கினார் என்றால், அங்கு நடைபேறும் நிகழ்ச்சி என்பால் வந்து சேர்க்கும்.ஏன்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது.
 ஒல்லேம் -  நாம் உடம் படாமையைத் தவறாக நினைத்து அதுபற்றிச் சினந்து அங்கே தங்கி விட்டனரோ வென்பது தலைவியின் ஐயம்.

Friday, August 15, 2014

குறுந்தொகை - 78



பாங்கன் கூற்று
(தலைவனது வேறுபாட்டுக்குக் காரணம் அவன் ஒருத்திபாற் கொண்ட காமமேயென்பதனை உணர்ந்து, “காமம் தகுதியில்லாரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று” என்று பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் நக்கீரர்

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
   
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்
   
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப
   
நோதக் கன்றே காமம் யாவதும்

நன்றென வுணரார் மாட்டும்
   
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.


                    -நக்கீரர்

.

உரை -

பெரிய மலையின் உச்சியில் உள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து பக்க மலையினிடத்து வீழும் மலைகளுடைய தலைவா! காமமானது சிறிதும் நன்மையென உணரும் அறிவில்லாதாரிடத்தும் சென்று தங்குகின்ற பெரும் அறிவின்மையையுடையது.ஆதலின் அது வெறுக்கத்தக்கது.(என்கிறான் தலைவனிடம் பாங்கன்)



     (கருத்து) நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.

பாங்கன் என்பவன் தலைவனின் பாங்கறிந்து ஒழுகுபவன். எப்போதும் தலைவனுடன் இருப்பவன்.


தலைவனுக்கு உறுதுணையாக இருத்தல் மட்டுமல்லாது தலைவனோடு மாறுபட்டு இடித்துரைக்கும் உரிமையும் உள்ளவன் பாங்கன். களவொழுக்கக் காலத்தில் தலைவன் தலைவியின் நினைவாகவே இருக்கும்போதும், கற்பொழுக்கக் காலத்தில் தலைவன் பரத்தையை நாடும்போதும் பாங்கன் இடித்துரைப்பான்.
 மாந்தர்களில் வாயில்களில் ஒருவராக இருந்து செயலாற்றுபவன் பாங்கன். [3]


 மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த தாழ் வரையில் வீழ்ந்தது போல, மிக்க பெருமையையுடைய நீ நின் பெருமை நீங்கிக் காமங்கொண்டாயென்பது குறிப்பு.

Thursday, August 14, 2014

ஆண்டவனேயாயினும்...



எண்ணியவை

எண்ணியவாறு நடக்க

முயற்சிக்க

அல்லாவிடின்

ஆண்டவனேயாயினும்

இயலாது

(கவிதை

குறுந்தொகை -77



தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி, “வழிப்போவார் இறத்தற்குக் காரணமாகிய வெம்மையையுடைய பாலை நிலத்தின் துன்பத்தை நினைந்து என் தோள்கள் தலைவர்திறத்து மெலிந்தன” என்று கூறியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் மதுரை மருதன் இளநாகனார்

இனி பாடல்-
   
அம்ம வாழி தோழி யாவதும்
   
தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத்
   
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை
   
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்

அரிய கானஞ் சென்றோர்க்
   
கெளிய வாகிய தடமென் றோளே.

                      - மதுரை மருதன் இளநாகனார்,

உரை-

தோழி ஒன்று சொல்வேன் கேட்பாயாக! வெவ்விய அருவழியில் இறந்த வழிபோக்கர்களுடைய உடலை மறைத்த, தழையைச் செயற்கையாக இட்ட குவியலானது, உயர்ந்த நல்ல யானைக்கு இட்ட நிழலைத் தருதற்குரிய பொருளாய்ப் பயன்படும்.,கடத்தற்கரிய பாலைநிலத்தில் என்னைப் பிரிந்து சென்ற தலைவரிடம், மெலிந்தவனாகிய பரந்த என் தோள்கள் தவறுடையனவெனக் கூறின் சிறிதும் தவறு அல்ல.

கருத்து - பாலை நிலத்துள் பயணம் மேற்கொண்டுள்ள தலைவனின் துன்பம் கண்டு வருந்தி என் தோள்கள் மெலிந்தன
.
 

Wednesday, August 13, 2014

குறுந்தொகை -76



தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவியிடம் உணர்த்தச் சென்ற தோழியை நோக்கி, "நான் அச்சிரக் காலத்தில் துன்புறும்படி தலைவர் பிரிவாரென்று முன்பே அறிந்தேன்; நீ சொல்வது மிகை" என்று கூறித் தலைவி கூறியது.)


 குறிஞ்சி திணை -76  - பாடலாசிரியர் கிள்ளிமங்கலங்கிழார்

இனி பாடல்-

காந்தள வேலி யோங்குமலை நன்னாட்டுச்
 
செல்ப வென்பவோ கல்வரை மார்பர்
 
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை
 
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇக்

தண்வரல் வாடை தூக்கும்
 
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே.

                   - கிள்ளிமங்கலங்கிழார்



 உரை-

(தோழி) மலைப்பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலுடையவளவிய இலையை, பெரிய யானையினது செவியை ஒப்பத் தோன்றுமாறு, தடவி, தண்ணிய வரவையுடைய வாடைக்காற்று அசைத்தற்குரிய மிக்க பனியையுடைய அச்சிரக்காலத்தில் நடுங்குவத்ற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர் காந்தளை வேலியாகவுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து என்னைப் பிரிந்து போவாரென்று கூறுகின்றனர்,..


(கருத்து) தலைவர் பிரிவை முன்னரே உணர்ந்தேன்; அவர் பிரியின் நான் துன்புறுவேன்.

 இயல்பாக வளர்ந்த காந்தளை வேலியாக உடைய மலைநாடு.  மலைச்சேம்பென்று ஒருவகைச் சேம்பு உண்டு அதன் இலைகளைப் போல யானையின் காதுகளாம்.அச்சிரக்காலம் எனில்முன்பனிக்காலம்.

முன்பனிக்காலத்தில் அவர் பிரிவார் என முன்பே தெரியும்.ஆயினும் அப்பிரிவால் நான் துன்பமுறுவேன்

Tuesday, August 12, 2014

குறை ஒன்று உண்டு



அதிகம் காயப்படுத்தப் படுகிறேன்

நான்

என்னிடமுள்ள ஒரே குறை

பிறரை

அதிகம் நேசிப்பதுதான்

குறுந்தொகை - 75



தலைவி கூற்று
(தலைவனது வரவைப் பாணனால் அறிந்த தலைவி, "நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக" என்று வாழ்த்தியது.)

மருதம் திணை -பாடலாசிரியர் மோசிகீரனார்

இனி பாடல்-

 
நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ
   
ஒன்று தெளிய நசையின மொழிமோ
   
வெண்கோட் டியானை சோணை படியும்
   
பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

                        -மோசிகீரனார்

உரை-

தலைவனது வரவை நீ கண்டாயோ? அல்லது தலைவனை கண்டறிந்தவர் சொல்ல கேட்டறிந்தாயா? அப்படி பிறர் சொல்லி கேட்டிருப்பாயின் யார் சொல்லி கேட்டாய்? உண்மையாக ஒன்றை அறிய விரும்புகிறோம். சொல்வாயாக. சொன்னால்...வெள்ளிய கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் துளைந்து விளையாடும் பொன் மிக்க பாடலிபுத்திர நகரத்தை பெறுவாயாக!


(கருத்து) தலைவர் வரவை உரைத்த நினக்குச் செல்வம் பெருகுவதாகுக,

தலைவன் வரவை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில், அவன் வந்திருக்கிறான் என தூதன் வாயிலாகக் கேட்டவள்..தலைவன் வரவை நீ பார்த்தாயா/ அல்லது யார் சொல்லியாவது கேட்டாயா? அப்படி யாரேனும் சொல்லியிருந்தால் அது யார்? சொல்வது உண்மையானால் பாடலிபுத்திர நகரையே பரிசலிப்பேன் என்கிறாள் தலைவி.

 

Monday, August 11, 2014

குறுந்தொகை - 74


தோழி கூற்று
(தலைவன் தலைவியை விரும்பினானாக, தலைவியிடம், "நம்மால் விரும்பப்படும் தலைவன் நம்மை விரும்பி மெலிகின்றான்" என்று அவள் கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் விட்டகுதிரையார்.

இனி பாடல்=

 
விட்ட குதிரை விசைப்பி னன்ன

விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
   
யாந்தற் படர்ந்தமை யறியான் றானும்
   
வேனி லானே்று போலச்

சாயின னென்பநம் மாணல நயந்தே.

                        - விட்டகுதிரையார்

உரை-

அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போன்ற,வளைத்துப் பின் விட்டமையால் வானத்தைத் தோய்ந்த மூங்கிலையுடைய குன்றத்தையுடைய நாட்டுக்குத் தலைவன், யாம் தன்னை நினைந்து மெலிதலை அறியானாகி தானும் வேனிலின் வெம்மையை ஆற்றாத இடத்தைப் போல நமது மாட்சிமைப்பட்ட நலத்தை விரும்பி மெலிந்தான்.


    (கருத்து) தலைவன் கருத்துக்கு உடம்பட வேண்டும்.

தலைவன், தலைவியை விரும்புவது போல, தலைவியும் அவனை விரும்பி நிற்கிறாள். தான் விரும்புவது தானே வலிய வந்தால் அதை மறுக்காது உடன்பட வேண்டும் (என தலைவி உரைக்கிறாள்)


   மூங்கில் விசைத்தெழுதலுக்கு விட்ட குதிரையின் விசைப்பை உவமை கூறிய சிறப்பினால் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் விட்டகுதிரையார் என்னும் பெயர் பெற்றனர்.

Sunday, August 10, 2014

குறுந்தொகை - 73



(தோழி கூற்று)
(தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து பின்னர் அதனையும் மறுத்து தோழி, தலைவன், தலைவியைமணம் செய்து கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்=

 
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
   
அழியல் வாழி தோழி நன்னன்
   
நறுமா கொன்று நாட்டிற் போகிய
   
ஒன்றுமொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.


                            -பரணர்

உரை-

தலைவனது மார்பையே, நீ விரும்புதலுடையாய்.நன்னனது காவன்மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, அனனது நாட்டினுட்புக்க வஞ்சினத்தையுடைய கோசரைப் போல சிறிதளவு வன்கண்மையையுடைய ஆராய்ச்சியும்  வேண்டும்.அதற்காக வருந்தாதே!


    (கருத்து) பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்தால் தலைவன் விரைவில் மணந்து கொள்வான்.

(வஞ்சினம் என்பதுஇப்படிச் செய்தால் இப்படியாவேன் என சபதம் செய்வதுதாம்.)

தலைவன் நடந்து கொள்ளும் முறைக்கெல்லாம் உட்பட்டால் களவொழுக்கம் குறைவின்றி நடைபெறும்.அந்த துணிவால் அவன் தலைவியை மணம் புரிய மாட்டான்.பகலில் தலைவன் வருவதற்கும் தடை போட்டு , இரவு வருவதற்கும் தடை விதித்தால்..வேறு வழியின்றி தலைவியை மணம் புரிந்து கொள்வான்.ஆகவே இப்படி நடிக்க வேண்டியது முக்கியமாகிறது என்கிறாள் தோழி.

Saturday, August 9, 2014

குறுந்தொகை - 72


தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி வந்த தலைமகன்பாற் காணப்பட்ட வேறுபாடுகளை நோக்கி, "இவை நினக்கு எதனால் வந்தன?" என வினவிய பாங்கனுக்கு, "மலைச்சாரலிலுள்ளதொரு தினைப்புனத்திற் குருவியோட் டுவாளொரு மகளது அழகு கண்டு மயங்கி யான் இக்காம நோயுற்றேன்" என்று கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மள்ளனார்.

இனி பாடல்-


பூவொத் தலமருந் தகைய வேவொத்
 
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
 
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
 
பரீஇ வித்திய வேன்ற்

குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே.

                               - மள்ளனார்.

உரை-

இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோளினையும் உடைய, பருத்தியை இடையிலே விதைத்த தினைமுதிர்ந்த புனத்தின்கண் ,அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டுகின்றவளது பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள் பூவினைப் போல அழகில் ஒத்துச் சுழலும் தன்மையையுடையன.ஆயினும் கொடிய தொழிலால் அம்பினை ஒத்து, உன்னைப் போன்ற யாவரும் அறியுமாறு எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.

   (கருத்து) நான் ஒரு மலைவாழ் மகள்பால் நட்பு பூண்டு காமநோய் உற்றேன்.

அவளது விழிகள் அம்புபாய்ந்து அதனால் ஏற்பட்ட புண் யாவரும் அறியும் வண்ணம் ஆயிற்றாம்(அவனது காம நோய்)


தினை வளர்ந்த இடத்திற் பருத்தியை விதைத்து அத்தினை முதிர்ந்து கொய்யப்பட்ட பின்னர்ப் பருத்தி விளைய அதனைக் கொள்ளுதல் மலைவாழ் மக்கள் வழக்கம். 

Friday, August 8, 2014

குறுந்தொகை - 71


தலைவன் கூற்று
(பொருளை ஈட்டுதற்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணிய நெஞ்சை நோக்கி, "இத்தலைவி நம் காமநோய்க்கு மருந்தும், இன்பம் பெறுதற்குச் செல்வமும் ஆதலின் இவளைப் பிரிதல் இயலாது" என்று தலைவன் கூறியது.)

 பாலைத் திணை - பாடலாசிரியர் கருவூர் ஓதஞானி.


மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
   
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்
   
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்
   
கல்கெழு கானவர் நல்குறு மகளே.

                         -கருவூர் ஓதஞானி.
   
உரை-

(நெஞ்சே) தோற்றிய தேமலையுடைய, அழகிய பெருமையையுடைய இளைய மார்பகங்களையும், பெரிய தோளையும், சிறுத்த இடையையும் உடைய கற்கள் பொருந்திய காட்டையுடையவர் பெற்ற மகள், என் காம நோய்க்கு பரிகாரம் வேண்டுமென்று கருதும் போது எனக்கு பரிகாரம் ஆவாள்.போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதின் எனக்குச் செல்வமும் ஆவாள்.

     (கருத்து) இவளைப் பிரிந்து பெறும் செல்வம் வேறொன்று இல்லை.

(இவளைப் பிரிந்தால் தன் காம நோய்க்கு மருந்தில்லை,அம்மருந்தும்.. வாழ்வில் இன்புற்றிருக்க தேடிச் செல்லும் செல்வமும் இவளே ஆவாள்)

Thursday, August 7, 2014

குறுந்தொகை - 69



தோழி கூற்று
(இரவில் தலைவியைக் காண விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வராதே!" என்று தோழி மறுத்துக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கடுந்தோட் கரவீரன்.

இனி பாடல்-

கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக்
   
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
   
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
   
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சார னாட நடுநாள்
   
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
                       
                           -கடுந்தோட் கரவீரன்.

   உரை-

கரிய கண்ணையும், தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்துவிட்டால், கைம்மைத் துன்பத்தைப் போக்கமுடியாத பெண்குரங்கானது, மரமேறுதல் போன்ற வற்றை அறியாத தனது வலிய குட்டியை, சுற்றத்தினிடம் ஒப்படைத்து, ஓங்கிய மலைப்பக்கத்தில் தாவி உயிரைப் போக்கிக் கொள்ளும் சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே, நள்ளிரவில் வராதே! நீ வந்தால் தீங்கு உண்டாகும் என எண்ணி நாங்கள் வருந்துவோம்.நீ தீங்கின்றி வாழ்வாயாக!


        (கருத்து) நீ இரவில் வருதலைத் தவிர்.
;
 


குறுந்தொகை - 70



தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று நீங்கும் தலைவன், "இவள் ஐம்புலனுக்கும் இன்பத்தைத் தருபவளாயினாள்; இவளைப் புகழுமாற்றியேன்" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறி மகிழ்ந்தது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஓரம்போகியார்

இனி பாடல்-

ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்
   
நறுந்தண் ணீர ளாரறணங் கினளே
   
இனைய ளென்றவட் புனையள வறியேன்
   
சிலமெல் லியவே கிளவி

அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.

                       -ஓரம்போகியார்

உரை-

(நெஞ்சே) ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலையும், ஒள்ளீய நுதலையும் உடைய தலைவி மணத்தையும், தண்மையையும் உடைய தன்மையினள்.ஆனாலும், பிரிந்த காலத்துப் பொறுத்ததற்கரிய வருத்தத்தையும் தருபவள்.அவளை, இத்தகையவள் என்று(சொல்லமுடியவில்லை), அவள் சொற்கள் சின்மையையுடையன,மென்மையுடையன.. நான் அவளை அணைக்கும் போது பஞ்சணை போன்ற மென்மையை உடையவள்.

   (கருத்து) இவள் ஐம்புலனுக்கும் இன்பந்தருபவள்.

    (வி-ரை.) ஒடுங்கீரோதி யென்றது, ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை.புனையப் புனைய மேலும் புனையத் தோன்றுவதன்றி இவ்வளவே என வரையறுத்து நிறுத்தலாகாமையின், புனையள வறியேனென்றான்.

காட்சி இன்பமும்,கேள்வி இன்பமும்,ஊற்றின்பமும், உயிர்ப்பின்பமும்,சுவை இன்பமும் ஒருங்கே பெற்றவள்

Wednesday, August 6, 2014

குறுந்தொகை - 68


தலைவி கூற்று
(தலைவன் பிரிவினால் வருந்திய தலைவி முன்பனிப்பருவத்தும் அவன் வாராமையால் துன்புற்று, "இப்பனியின் துன்பத்தைத் தீர்ப்பது தலைவருடைய மார்பேயாகும்; ஆதலின் அவர் வாராவிடின் இதனை ஆற்றுதல் அரிது" என்கிறாள்.)


குறிஞ்சி திணை -பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்
   
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்
   
அரும்பனி யச்சிரந் தீர்க்கும்
   
மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே.

                     -அள்ளூர் நன்முல்லை..

உரை-

குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற செவ்விய காலையுடைய உழுந்தினது மிக முதிர்ந்த காய்களை மான்கூட்டங்கள் தின்னும் பொருட்டுக் கூடும் பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனிக்காலத்தில் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் மருந்து ,என்னை மணந்த அவரது மார்பைத் தவிர வேறு ஏதும் இல்லை.

 
 (கருத்து) அவர் உடன் இல்லாததால் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.(என்கிறாள் தலைவி)

(உளுந்தின் வேர் சிறிது மேலே தெரிந்தவண்ணம் முன்பனிப் பருவத்தில் முதிரும்.அதைத் தின்ன முன்பனிக்கால, பொறுக்கமுடியா பனியை பொறுத்து மான் கூட்டங்கள் கூடும்.ஆனால்..எனக்கு அப்பனிக்கொடுமையைப் போக்கும் மருந்து என் தலைவன் மார்புதான் (என்கிறாள் தலைவி)


Tuesday, August 5, 2014

குறுந்தொகை - 67


தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "பிரிந்து சென்ற தலைவர் என்னை நினைக்கவில்லையா?நினைத்திருந்தால் வந்திருப்பாரே! என்று கூறியது)

பாலைத் திணை - பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல் -


உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
 
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
 
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
 
பொலங்கல வொருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.

                    -அள்ளூர் நன்முல்லை

உரை-

(தோழி) கிளி வளைந்த அலகினிடத்திலே கொண்ட வேம்பினது ஒள்ளிய பழமானது, புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லனது, முனை மாட்சிமைப்பட்ட கூரிய கைந்நகத்திற் கொண்ட பொன்னாபரணத்திற்குரிய ஒரு காசு போல இருக்கும் நிலம் கரிந்துள்ள கள்ளியையுடைய பாலை நிலத்தை கடந்து சென்றதலைவர் என்னை நினைக்கமாட்டாரோ?!


 

    (கருத்து) தலைவர் என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள்.


Monday, August 4, 2014

குறுந்தொகை - 66



தோழி கூற்று
(கார்காலம் வந்தபின்பும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை நோக்கி, "இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்வது; இதைக் கார்காலத்துக்குரியதல்ல கார்காலம் என எண்ணி மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. ஆதலின் இது கார்ப்பருவமென்று நீ வருந்தாதே" என்று தோழி கூறியது.)

முல்லை திணை- பாடலாசிரியர் கோவதத்தன்

இனி பாடல்-

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
   
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
   
பருவம் வாரா வளவை நெரிதரத்
   
கொம்புசேர் கொடியிண ரூழ்ந்த

வம்ப மாரியைக் காரென மதித்தே.

                          -கோவதத்தன்

உரை-

கற்கள் விளங்கும் பாலைநிலத்து கடினமான வழியைக்கடந்து சென்ற தலைவர், மீண்டும் வருவேன் என்று சுட்டிக் கூறிய கார்ப்பருவம் வராத காலத்திலே, பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை கார் காலத்து மழையென்று கருதி
நெருங்குமாறு சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துகளை புறப்பட விட்டன..ஆகவே..பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள் நிச்சயமாக பேதைமையுடயன.

 

    (கருத்து) இது கார்ப்பருவம் அன்று; ஆதலின் நீ வருந்தாதே

கார்காலம் வரவில்லை எனத் தெரியாமலேயே பருவம் மாறி பெய்த மழையை கார்காலமழை என எண்ணி கொன்றை மலர்கள் பூத்துவிட்டனவாம்.அதைப் பார்த்து கார்காலத்தில் தலைவன் வருவேன் என்று சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது , தலைவன் வரவில்லையே என வருந்தாதே!. .(என்கிறாள் தோழி)

Sunday, August 3, 2014

குறுந்தொகை - 65



தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்ததையறிந்த தலைவி, தலைவன் வாராமையால் வருந்தி "இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்களோ? என்று கேட்பதுபோலக் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்; இனி என் செய்வேன்!" என்று தோழியிடம் வருந்திக் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் கோவூர் கிழார்.

இனி பாடல்-


வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன்
   
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
   
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
   
வாரா துறையுநர் வரனசைஇ

வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே.


                          - கோவூர் கிழார்.

உரை-(தலைவி உரைத்தது)

வலிய பருக்கைக் கற்களினிடத்தேயுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்தற்குரிய தனது பெண்மானோடு களிப்பினாள் துள்ளி விளையாடாமல் நிற்கவும், இங்கு வராமல் சென்ற இடத்திலேயே தங்கிய தலைவர், மீண்டும் வரவேண்டும் என விரும்பி மிக வருந்தித் தங்கும் பொருட்டு உயிரை வைத்துக் கொண்டிருந்தீரோ என்று கேட்டதற்கு மழைத்துளியைத் தரும் குளிர்ந்த கார் பருவம் வந்தது.

(கருத்து) கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வரவில்லை

    (வி-ரை.) மான் தன் துணையோடு விளையாடும்படி கார்ப் பருவம் வரவும், தலைவர் தம் துணையோடு மகிழும்படி வந்து சேர்ந்திலர் என்னும் குறிப்புத் தோன்றுகின்றது. 'கார்ப்பருவம் வந்த பின்பும் ,அவர் வராமல் நாம் உயிரோடு இருத்தல் தவறு' என்னும் நினைவினளாதலின் அக்கருத்தை அப்பருவம் கேட்பதாக அமைத்தாள். இனி அவர் விரைவில் வாராவிடின் உயிர் வாழ்தல் அருமை என்பதும் புலப்பட்டது.

Saturday, August 2, 2014

கரு உருவாகுமுன் (கவிதை)


                           


கவிதை எழுத

வெள்ளைத் தாளில்

நேர்க்கோடிட்டேன்

ஆகா..அற்புதம்

கவிதை அற்புதம்

என்றிட்டான் ஒருவன்

மற்றவனோ

நேர்மையை வலியுறுத்தும்

பாங்கு அருமை என்றான்

அடுத்தவன்

வாழ்வில் நிமிர்ந்து நில்

வளமாய்ச் சொல்கிறது

என்றான்

நானோ

கவிதையின் கரு தேடி

விட்டத்தைப் பார்த்தேன்

குறுந்தொகை - 64



தலைவி கூற்று
(தலைவன் பிரிவை பொறுக்கமுடியா தலைவியை நோக்கி, "அவர் உன் துன்பத்தையறிவார்; ஆதலால் விரைவில் திரும்புவார்" என்று தோழி கூற, "அவர் அறிந்தவராயிருந்தும் இன்னும் வரவில்லையே" என்று தலைவி கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் கருவூர்க் கதப்பிள்ளை

இனி பாடல்-
 
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
   
புன்றலை மன்ற நோக்கி மாலை
   
மடக்கட் குழவி யணவந் தன்ன
   
நோயே மாகுத லறிந்தும்

சேயர் தோழி சேய்நாட் டோரே.

               - கருவூர்க் கதப்பிள்ளை

உரை-

பல பசுக்கள் நெடிய வழியில் நீங்கிச் சென்றன.அவை தங்கியிருத்தற்குரிய புல்லின் இடத்தையுடைய மன்றத்தை நோக்கி.மாலைநேரத்தில் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள், தலையெடுத்துப் பார்த்து வருந்தினாற் போன்ற தம் வரவு நோக்கிய துன்பத்தையுடையேமாதலை அறிந்திருந்தும் நெடுந்தூரத்தேயுள்ள நாட்டுக்குச் சென்ற தலைவர் இன்னும் நெடுந்தூரத்திலே உள்ளார்.


(கருத்து) தலைவர் நாம் துன்புறுவோமென்பதை அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்,

 மேயச் சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் ஊருக்கு மீண்டும் வந்து தான் தங்குமிடம் புகுவது வழக்கம்; அதனால் மாலையில் கன்றுகள் தம் தாய்ப் பசுக்களை எதிர்நோக்கியிருந்தன;    பிரிந்து சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் மீண்டு வருதலை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்றலைப்போல, பிரிந்து சென்ற தலைவனது வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கியிருப்பேனென்று தலைவனுக்கு தெரிந்திருந்தும் அவர் வரவில்லையே என தலைவி வருந்துகிறாள்.

Friday, August 1, 2014

சிரிக்கின்றாய்...நீ..சிரிக்கின்றாய் (கவிதை)


                       





நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

குறுந்தொகை -63



தலைவன் கூற்று
(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் உகாய்க்குடிகிழார்

இனி பாடல்-


ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
 
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
 
கம்மா வரிவையும் வருமோ
 
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே

                       - உகாய்க்குடிகிழார்

               
உரை

தலைவன் கூற்று

இரவலர்க்குக் கொடுத்தலும், இன்பங்களை அனுபவித்தலும், பொருளில்லா வறியவர்க்கு இல்லையென கருதி, பொருள் செய்தற்குரிய செயல்களை மிக எண்ணாமல் நின்றாய்.அச்செயல் செய்வதற்குத் துணையாக, அழகிய மாந்தளிர் நிறத்தையுடைய தலைவியும் வருவாளோ?எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ? சொல்லிடு என் நெஞ்சே!


(கருத்து) இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.

பொருள் ஈட்ட முயற்சி செய்யாது இல்லத்திலேயே தங்கியிருப்பது யாருக்காக.நீ பொருள் ஈட்ட வேற்று நாட்டுக்குச் சென்றால், உடன் அங்கு தலைவியும் வருவாளோ?வாராவிடின் நான் மட்டும் போக வேண்டும்? இவளைப் பிரிந்து நான் எப்படி செல்வேன்? என அவள் மீது தனக்கு இருக்கும் அன்பை சொல்கிறான் தன் நெஞ்சிற்கு! ( அதனால் பொருள் ஈட்ட செல்ல மாட்டான் என்று பொருள் கொள்ளக்கூடாது)