Tuesday, July 14, 2015

குறுந்தொகை-217



தோழி கூற்று
(‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழிதலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் தங்கால் முடக்கொல்லனார்


இனி பாடல்


தினைகிளி கடிகெனிற் பகலு மொல்லும்
   
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
   
யாங்குச்செய் வாமெம் மிடும்பை நோய்க்கென
   
ஆங்கியான் கூறிய வனைத்திற்குப் பிறிதுசெத்

தோங்குமலை நாட னுயிர்த்தோன் மன்ற
   
ஐதே காமம் யானே
   
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.


                        -தங்கால் முடக்கொல்லனார்

   

 தினையின்கண் படியும்கிளிகளை ஓட்டுவீர்களாக என்று கூறி எம் தாய் எம்மைப்போதரவிடின், பகற்காலம் நின்னோடுஅளவளாவுதற்குப் பொருந்தும், அங்ஙனம் இன்மையின்,இராக் காலத்து நீ வருதலினால்,  வழியின்கண் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவேன்,  துன்பத்தைத் தரும் எமதுகாமநோயை நீக்குதற்கு, எவ்வாறுபரிகாரம் செய்வேம், என்று அவ்வாறு யான் சொன்ன அதற்கு,  உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன்,வேறு ஒன்றை நினைத்து,அந்நினைவினால் வெய்துயிர்த்தான்;  காமநோய் நுண்ணியது; அவனது குறிப்பை உணர்ந்தயான், நீ நினைத்தவாறு செய்தல்மிக்க அறிவுடைமையும், பழிக்குக் காரணமும்ஆம், என்றேன்.


 
கருத்து - தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.


பொருள் எளிய நடையில்-
     ‘இப்பொழுது தினை காவலை ஒழிந்தேமாதலின் பகற்குறி வாயாது; இரவுக் குறியோ ஆற்றூறஞ்சும் நிலையினது; ஆதலின் அதனையும் விரும்பேம். இந்நிலையில் யாது செய்வேம்!’ எனக் கவன்றேன். அதற்குரிய பரிகாரம் ஒன்றை நினைந்த தலைவன் அதனை வாய்விட்டுக் கூற அஞ்சிப் பெருமூச்சு விட்டான். காமம் எவ்வளவு நுண்ணியது! யான் அவன் குறிப்பை உணர்ந்தேன். அவன் நினைந்ததே தக்க விரகாகத் தோற்றியது. ‘நீ நினைந்தது அறிவுடைமையே ஆகும்; ஆயினும் ஊரினர் பழி கூறுதற்கு இடமாம்’ என்றேன்” என்று தோழி கூறினாள். இதனால் தலைவன் உடன்போக்கு நயக்கின்றான் என்பதையும், அதனையன்றி வேறு பரிகாரம் இல்லை என்பதையும், அங்ஙனம் செய்தலே அறிவுடைமைக்கு ஏற்றது என்பதையும், பழிக்கு அஞ்சி அறிவுடைய செயலை விலக்குதல் தகாது என்பதையும் புலப்படுத்தித் தலைவியை உடம்படச் செய்தாள்.(தோழி)