சென்னை சைதாப்பேட்டையில் இன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக தலைவரும், முதலவருமான கருணாநிதி இக்கூட்டத்தில் பேசும்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்காட்டும் ஒரே சான்று. இந்திய தலைமை அதிகாரியின் அறிக்கை. இதே தனிக்கை அதிகாரியின் அறிக்கை பாஜக ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு ராசாவை கைது செய்ய வேண்டும் இல்லாவிட்டால்
பாராளுமன்றத்தையே நடத்தவிடமாட்டோம் என்று தங்களது ஜனநாயக கடமையை கூட நிறைவேற்ற மறுத்து தொடர்ந்து வலியுறுத்தி, அதனை செயல்படுத்தி காட்டி அதிலே வெற்றி பெற்றவர்களும்,
இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கூட்டுக்குழு விசாரணையே வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.
இந்திய உச்சநீதிமன்றத்தின் பொதுநல வழக்குகளை அடிப்படையாக வைத்து இந்திய புலனாய்வுத்துறை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் காலக்கெடு நிர்ணயித்து, புலனாய்வு தீவிரமாக நடந்துவருகிறது.
இந்த வழக்கில் புலனாய்வுத்துறையினரால் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு மட்டும்தான் விசாரணை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதும், நாடாளுமனற நடவடிக்கைகளை 22 நாட்கள் முடக்கியதும் ஜனநாயக விரோத நடவடிக்கையாக இப்பொதுக்குழு கருதுகிறது.
ராசா மீது குற்றம் இருப்பது உண்மை என்று நிரூபிக்காவிட்டால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுவிட்டதாலேயே அவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
திராவிட முன்னேற்றக்கழகம் ஒரு திறந்த புத்தகமாக உள்ளது.
தம்பி ராஜா இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று செய்திருக்கிற குற்றம் என்னவென்று பார்த்தால் - ஏழையெளிய மக்களுக்கு இந்தத் தொலைபேசியை - இதுவரையில் பணக்காரர்கள் மாத்திரம், சீமான் வீட்டுப் பிள்ளைகள் - சீமாட்டிகள் மாத்திரம் பயன்படுத்திய இந்தத் தொலைபேசியை - நடவு நட்டுக் கொண்டிருக்கின்ற நாகம்மாளும், தயிர் விற்றுக் கொண்டிருக்கின்ற தையல் நாயகியும் - போகும்போதே ஒரு கையிலே கலயம், தலையிலே சும்மாடு - அந்தச் சும்மாட்டின் மேலே தயிர் பானை, பால் பானை - காதிலே இந்தத் தொலைபேசி - அதிலே “மோர் வாங்கலியோ, மோர்” என்ற கூச்சலுக்குப் பதிலாக, “ஹலோ, ஹலோ” என்று இங்கிருந்து தொலைபேசி வழியாக இன்னொரு பகுதியிலே உள்ள அம்மையாரையோ, சொந்தக்காரர்களையோ, நண்பர்களையோ அழைத்துப் பேசுகிற அளவிற்கு - மிக மிகக் குறைந்த விலையில், குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கான ஒரு நிலையை - கோடானு கோடி மக்கள் அந்த வாய்ப்பைப் பெறுகின்ற அளவிற்கு ஒரு நிலைமையை ஏற்படுத்திய பெருமை - டில்லியிலே கைதாகியிருக்கின்ற நம்முடைய தம்பி ராஜாவுக்கு உண்டு.
நான் இங்கிருந்தவாறே, இந்த மக்களின் சார்பாக டில்லிச் சிறைச்சாலையிலே இருக்கின்ற தம்பி ராஜாவைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் - வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த ஏழை
மக்கள், எளிய மக்கள் - அவரவர்கள் பயன்படுத்துகின்ற இந்தத் தொலைபேசி இவ்வளவு அதிகமாக இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அவர்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது என்றால், இந்தச் சாதனை புரிந்தவர் தம்பி ராஜா-- என்று பேசினார் .
(நன்றி -நக்கீரன் )
