தமிழ் சினிமாக்களில் ஒரு கட்டத்தில்..கதாநாயகன் மீதோ, நாயகி மீதோ இரக்கம் வரவேண்டுமெனில் அவர்களுக்கு கேன்சர் என்று சொல்லிவிட்டு..இறுதியில் அவர்களை சாகடித்துவிடுவதுண்டு.
அதிகம் இப்படி ஆரம்ப காலங்களில் பாலசந்தர் படங்கள் இருந்ததுண்டு.
அவர் கதை,வசனத்தில் வந்த நீலவானம் பட நாயகிக்கு கேன்சர்..அப்படத்திற்கு விளம்பரமும்..."ஆறில் சாகலாம்..அறியாத வயசு..அறுபதில் சாகலாம் அனுபவித்த வயசு..இருபதில் சாவது..?' என்று இருந்தது.
அடுத்து அவரது நீர்க்குமிழி நாடகத்திலும்/படத்திலும் நாகேஷ் பாத்திரம்..கேன்சரில் மடியும்.
அதே போன்று சிவசங்கரியின் நண்டு படமும்..
அக்காலகட்டத்தில்..பாலசந்தர் படம் ஒன்றை விமரிசித்த குமுதம்..இனி இவர் 'பு.பாலசந்தர்' என்றது.
அதே போன்று..விகடனும் ..இனி கேன்சர் பற்றி கதைகள் இனி விகடனில் வராது என அறிவித்திருந்தது.(இப்போது விகடன் டெலிவிஸ்டாசின் ஒரு மெகாசீரியலில் ஒரு பாத்திரம் புற்றுநோயால் தவிக்கிறது..தனி விஷயம்)
இப்படி புற்றுநோய் என்றாலே..மரணம்தான் என்பது எழுதப்படாத விதியாக உருவாக்கப்பட்டது.
ஏன்..சிறுநீரகம்..சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் இல்லையா?
ரத்த அழுத்தத்தால்..மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதில்லையா?
எந்த வியாதி மனிதர்களுக்கு வந்தாலும்..ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் குணமாகிவிடும்..புற்றுநோயும் இதற்கு விலக்கல்ல.
ஆகவே..இன்று பல விஷயங்கள் இணைய தளம் மூலமும், அனுபவத்திலும், படிப்பிலும் அறிந்துள்ள நாம்..நமக்கும்..நம்மை நெருங்கியவர்களுக்கும் வரும் நோயின் அறிகுறியை சில முன்னறிவிப்புகளிலேயே அறிந்து விடலாம்..உடனே சரியான சிகிச்சைக்கும் சென்றிடலாம்.எப்பேர்பட்ட நோய்க்கும் இது பொருந்தும்.
எல்லோரும் மனதில் வைக்க வேண்டிய ஒன்று..
சிறிய காயம் வந்து மரித்தவர்களும் உண்டு..
தீராத வியாதி வந்து பிழைத்தவர்களும் உண்டு...
என்பதைத்தான்.
மனோதைரியம், நம்பிக்கை, முயற்சி இவை மூன்றும் இருந்தால் எதுவும் நம்மை ஒன்றும்செய்யாது.