Thursday, September 25, 2014

குறுந்தொகை- 115



தோழி கூற்று
(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்
 
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
 
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
 
புலவி தீர வாளிமதி யிலைகவர்
 
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்

மென்னடை மரையா துஞ்சும்
 
நன்மலை நாட நின்னல திலளே.

                -கபிலர்

உரை-


அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண் மெல்லிய நடையையுடைய மரையா இலைகளை விரும்பி உண்டு துயிலுதற்கிடமாகிய நல்ல மலை நாட்டையுடைய தலைவ, பெரிய நன்மை ஒன்றை ஒருவர் நமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உள்ளாரோ?(யாவரும் போற்றுவர்)அது சிறப்பன்று.சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாக இருக்கும் காலத்திலும் விருப்பம் மாட்சைமைப்பட்டு நீங்கும் வண்ணம் இவளை பாதுகாப்பாயாக!இவள் உன்னை அன்றி வேறு பற்றுக்கோடு இல்லாள்.


      (கருத்து) இவள்பால் இன்று போல என்றும் அன்பு வைத்துப் பாது காப்பாயாக.

( ‘‘இவள் நினக்குப் பலவகையிலும் இன்பம் தரும் நிலையில் இருக்கின்றாள்; இவள்பால் இப்பொழுது நீ அன்பு பூண்டு பாதுகாத்தல் பெரிதன்று; பெரிய உபகாரம் செய்தாரைப் பாதுகாத்தல் உலகில் யாவர்க்கும் இயல்பே. ஆதலின் இவளால் இப்பொழுது பெறும் இன்பத்தை அடைய முடியாத முதுமைப் பருவத்திலும் இவளுக்கு நின் பாலுள்ள அன்பொன் றையே கருதிப் பாதுகாத்து வருவாயாக. இவளைப் பாதுகாப்பதற்கு வேறு யாரும் இலர்” என்று தோழி கூறித் தலைவியைத் தலைவனுடன் விடுத்தாள்.)

 
     மரையா(ஒருவகை விலங்கு) தனக்குப் பயன்படாது ஓங்கி வளர்ந்த மூங்கில்களையுடைய சாரலாயினும் தனக்குப் பயன்படும் இலைகளைத் தேடியுண்டு அதன்கண் அன்புவைத்துத் துயில்வதுபோல நினக்குப் பயன்படாத மூப்புடையளாயினும் நினக்கு உவந்த நல்லியல்பு கண்டு இன்புற்று இவள்பால் அன்பு வைத்தொழுகு வாயாக வென்பது குறிப்பு.

No comments: