Saturday, January 26, 2019

"பத்ம" விருதும்..கலைஞனும்

இந்த ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும், இவ்விருதுகள் அறிவிப்பு வருகையில் இந்த மாபெரும் கலைஞன் ஞாபகத்தில் வருவான்..

ஆம்..கடைசி வரை தனக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என மனம் வருந்தியவன் அவன்.

ஆம்..அக்கலைஞனின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் இல்லை..

அக்கலைஞன் மாபெரும் நகைச்சுவை கலைஞன் மட்டுமல்ல,சிறந்த குணசித்திர நடிகன், வில்லன்..

அக்கலைஞன் தான் நாகேஷ்.

ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும்

வாழை மரமும் சவுக்கு மரமும்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க
அருமையான வார்த்தைகள்...‬

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் அவர்கள் சொன்னது:

வானொலிக்காரர்கள் கேட்ட கேள்வி:: நியாயமாக உங்களுக்கு
வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது
உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம்
கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு
வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது
ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம்
மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே
போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும்
சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்..

No comments: