Monday, September 9, 2013

நலம்..நலம் அறிய ஆவல்...




பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகள்லே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்தோட நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.


Thursday, September 5, 2013

உண்மையும்...பொய்யும்...


எல்லோரும் ஊழல்வாதிகள்...உண்மையாய் நாட்டுக்கு உழைப்பவர் இன்று யாரும் இல்லை..இப்படி
பல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.
இன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
பொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.
அலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.
தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.
5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா?
தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,
சுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.
நாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...
தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.

ஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.
உடனே பீர்பால்'நான்கு விரற்கடை வித்தியாசம்'என்றாராம்.
நான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.
அதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.
ஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..
'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே!!!!

Wednesday, September 4, 2013

கனிப்பேச்சு SPB..


 சூபர் சிங்கர் 4..
இதைப் பற்றி பேசாதவர்களோ..நிகழ்ச்சியைப் பாராதவர்களோ மிகச் சிலரே இருப்பர் என எண்ணுகிறேன்.
என்னமாய் பாடுகிறார்கள் இளைஞர்கள்.
கடந்த மூன்று நாட்களாக சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் , இசையப்பாளர் S.P.பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்.
பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார் வள்ளுவர்.
பாலசுப்பிரமணியிடம், அது காணப்பட்டது.
சில பாடகர்கள் பாடியதில் உள்ள சிறு குறைகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டிய போதும், இவர்," சூப்பரா பாடின தம்பி.நாங்க எல்லாம் பாடினபோது கூட பல டேக்குகள் வாங்கிய பாடல்களை நீங்க எல்லாம் சுருதி சுத்தமா லைவ்வா எப்படி பாடறீங்க..' என்று வியந்தார்.
எந்த ஒரு போட்டியாளரையும், கடுமையாய் விமரிசித்து...மன வேதனை அடையச் செய்யவில்லை.
சிறு வயதில் தான் செய்த தவறுகளையும் சொன்னார்.
அவர் சிறப்பு விருந்தினராய் இருந்தாலும், போட்டியாளர்களிடம் ஒரு தந்தைக்குறிய பாசத்துடன் செயல்பட்டார்.
காய் கவராத கனியாய் இருந்தது அவர் பேச்சு.
மற்ற நீதிபதிகளும்..போட்டியாளர்களிடம் இவர் காட்டிய மனித நேயத்தைக் காட்டுவார்களா? 

Tuesday, September 3, 2013

வாய் விட்டு சிரிங்க...



1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?


உடல், மனம் ஆரோக்கியம் அடைய நினைக்க வேண்டியன - பாரதியார்




நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

Monday, September 2, 2013

மிருகங்களே...மனித ஆசை தவிர்...



நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

Friday, August 30, 2013

பொன்மொழிகள் ஐந்து...




..1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

Sunday, August 25, 2013

கொஞ்சி விளையாடும் தமிழ்..- 27




காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.


ஒரு தினசரியில், திரு இரா.ராமமூர்த்தி எழுதியது இது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.ஆகவே இப்பதிவு.

Thursday, August 22, 2013

வாய் விட்டு சிரிங்க... தலைவர் ஜோக்ஸ்..



1) எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னைப் பார்த்தால் பயம்....நான் என்ன சிங்கமா அல்லது புலியா
  சேச்சே...அது எல்லாம் எவ்வளவு சாதுவான மிருகங்கள்...

2)தலைவர் இன்று வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போறாராம்...
 யார் தலைமை..? யார் முன்னிலை..??
 அவர் மச்சான் தலைமையிலே..மாமா முன்னிலையிலே..அவர் மகன் வரவேற்புரை நிகழ்த்தியதும்..பேசுவார்

3)தலைவர் ஏன் எப்பவும் கைகளில் 'கிளவ்ஸ்' போட்டுக்கிட்டு இருக்கார்?
  தன் கை அவ்வளவு சுத்தம்னு சிம்பாலிக்கா சொல்றாராம்.

4)நம்ம தலைவர் டிபாசிட் இழந்துட்டார்??
 எந்தத் தொகுதியில் போட்டியிட்டு..?
 நான் சொல்றது..அவர் டிபாசிட் போட்டு வைத்திருந்த ஃபைனான்ஸ் கம்பெனியை மூடிட்டதால..

5)குறவர்கள்கிட்ட ஓட்டுக் கேட்கப் போன தலைவர், 'அவர்கள் முதாதையர்கள் தமிழுக்குச் செய்த சேவைக்கு பாராட்டு தெரிவித்தாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை இவர்கள்தான்னு தப்பா நினைச்சுட்டார்..

6)தலைவா! உங்கப் பெயர் குற்றப்பத்திரிகையிலே வந்திருக்கு..
 அந்தப்பத்திரிகை சர்குலேஷன் எவ்வளவு.


Tuesday, August 20, 2013

குறள் போற்றுவோம் -5



ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்)

கண் போன போக்கில் எல்லாம் மனிதன் போகலாமா? என்று ஒரு பாடல் உண்டு.அதாவது, நம் கண்கள் பார்த்து, ஆசைப்பட்டு அதன் வழியில் எல்லாம் நடந்தால், அது சிக்கலில்தான் கொண்டு விடும். கண்கள் பார்த்தாலும், மனம் சிந்தித்து நல்லது, கெட்டது உணர்ந்து செயல் பட வேண்டும்.(புலன் - கண்)

நம்மில் கோபம் ஏற்பட்டால் , இடம் மறந்து..வாயில் வந்ததை எல்லாம் உரக்கக் கூறி, அதுவரை நம்மைப் பற்றி நல்லபடியே நினைப்பவர்கள் எண்ணங்களை மாற்றி விடுவோம்.அது சரியா? பிறர் பற்றி புறம் கூறுவோம்..அது சரியா(புலன்-மெய்)

கெட்டவற்றைக் கேட்காத செவி வெண்டும்.நல்லவற்றையே நாளும் கேட்க வேண்டும்.(புலன்-செவி)

வாசனையைத் தரும் பொருள்கள், உணவு போன்றவைக்கூட ஆசையைத் தூண்டும்.ஆனால் அவை உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு விளைவிப்பவை என உணர வேண்டும். (மூக்கு -புலன்)

நமக்கு புலனடக்கம் இல்லாவிடில், நம் பெயர், புகழ், வாழ்வு எல்லாம் கெடும்.மனிதனாய் பிறந்தோர் அனைவருமே..தங்கள் ஐம்புலன்களை அடக்கினால், வையத்தில் சந்தோசமாக வாழ்வாங்கு வாழலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை..ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவனைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு    (28)

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் .

சிரிப்போம்..சிந்திப்போம்...




வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Wednesday, August 14, 2013

சுதந்திரம் எப்போ கிடைச்சது?! வாய் விட்டு சிரிங்க..



1) அப்பா..நாளையிலிருந்து நாம பணக்காரரா ஆயிடலாம்
   எப்படி
  நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயா மாத்தறதுன்னு சொல்லிக்கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்

2)இன்னிக்கு தலைவருக்கு எடைக்கு எடை பேனா கொடுக்கிறார்களாம்
 ஏன்...
 பிரதமருக்கு அப்பப்ப கடிதம் எழுத பேனா வேண்டியிருக்குமே

3)நீங்க நடிச்சப்படம்..வெற்றியடையணும்னு நாமே முயற்சி செய்யணுமா? புரியலையே..
 படம் வெளிவரும் நாள் அன்று ஏதெனும் கிளர்ச்சி பண்ணவைச்சு படம் வெளிவராம தடுக்கணும்

4)சுதந்திரம் எப்ப கிடைச்சுது
 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி
 என்ன சொல்ற
 அன்னிக்குத்தானே என் மனைவி கோச்சுண்டு பிறந்த வீடு போனா

5)வர வர ஆஃபீஸிலிருந்து ஏன் லேட்டா வரீங்க
  எந்த பயலும் கிளம்பும்போது எழுப்பாமல் போயிடறான்

6)உன்னைவிட உன் பையன் தைரியசாலியா? எப்படி சொல்ற
  என் மனைவியை எதிர்த்து பேசறானே

  (பதிவர்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துகள்)


Tuesday, August 13, 2013

சூரியனுக்கே டார்ச்...



(வண்ணதாசனின் கவிதை ஒன்றை பாராட்டி என் கவிதை)


வண்ணத்துப் பூச்சி
விரலிடுக்கில்
வண்ணத்தை
விட்டுச் செல்லல் போல்
வண்ணதாசா..
உன் எழுத்தின்
வண்ணம்..மனதில்..
வன்மையாய் ஒட்டிக்கொள்ளும்
வண்ணம்..கோலில்..
விடுப்பது என்ன மை..

Tuesday, July 30, 2013

ஒபாவிற்கு நாளைக்கு இப்படியும் கடிதங்கள் வரலாம்..


மோடிக்கு விசா வழங்கக் கூடாது என ஒபாமாவிற்கு கடிதம் எழுதிய எம்.பி.க்கள் நாளை இதெற்கெல்லாம் கூட கடிதம் எழுதினால் ஆச்சரியப்பட வேண்டாம்.

தமிழக எம்.பி.க்கள் _- கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும்

கேரளா - முதல்வர் மீதான சோலார் ஊழல் புகாரை FBI விசாரைக்க வேண்டும்.

நிதிஷ் குமார் - மதிய உணவில் 23 குழந்தைகம் இறந்ததிற்கு சர்வதேச சதி இருக்கிறதா..அல்லது பி ஜேபி போன்ற  எதிர்க்கட்சிகள் சதியா என விசாரிக்க வேண்டும்.

லாலூ - ராகுலும் வேண்டாம். மோடியும் வேண்டாம். அடுத்த பிரதமராக நீங்கள் வருவதானால் எங்கள் கட்சி ஆதரிக்கும்.

மன்மோகன் சிங்- அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் சோனியாவிடம் பேசி..பிரதமர் பதவியை எனக்கு வாங்கித் தர வேண்டும்.

கர்நாடக முதல்வர் - காவிரி தண்ணீரை துளியும் தரமுடியாது அன அறிவித்ததும் , அந்த அறிவிப்பை மழை கெடுத்தது.உங்கள் அனுமதியின்றி வந்த மழை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மோடி- பிரதமர் பதவி என் காருக்கு முன் ஓடும் நாய்க்குட்டி போல.அடிபட்டாலும் எனக்கு லாபம்.பிழைத்தாலும் எனக்கு லாபம்.இதற்கும் விசாவிற்கும் சம்பந்தமில்லை.வீடியோ கான்ஃபிரன்ஸிற்கு தடை போட வேண்டாம்.

அத்வானி - எனக்கு அழுகை அழுகையாய் வருது.ஏன் எனத் தெரிந்தால் உடனே தெரிவிக்கவும்.


Thursday, July 11, 2013

குறள் போற்றுவோம் - 4



மழை...வாழ்வாதாரங்களில் முக்கியமானது.

இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும்.

மழை.....பெய்யத் தவறினால்....விவசாயம் மட்டுமா பதிக்கப்படும்? மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்...நதிகள் வேண்டுமானல்..அந்நீரை...தன் புகலிடமான கடலில் கொண்டு சேர்க்கும்.ஆனால்..மக்கள் வாழும் பகுதிகளில்..வெள்ளம் புரண்டோடி உயிர்களில் வாழ்வைக் கெடுத்து..பல உயிர்களை பறித்துச் செல்லும்.

இக்கருத்தை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார்?

"கெடுப்பதூஉங்  கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
 எடுப்பதூஉம் எல்லாம் மழை"  - 15

பொருள் - பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.


Wednesday, July 10, 2013

குறள் போற்றுவோம் - 3



இந்தியா...

தனது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம்.

ஆனால் கடல் நீரால் என்ன பயன்?.நதிகளில் தண்ணீர் இல்லை.கடல் நீர் விவசாயத்திற்கு பயன் படுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

ஆனால்..ஒரு அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறோம்.

அந்த கடல்தான் தன் நீரை ஆவியாக்கி, மழைமேகமாக்கி மழையை தருவிக்க மூல காரணமாய் உள்ளது.ஆனால் அந்த கடல் நினைக்கும் இடத்தில் மழை பொழிய வாய்ப்பில்லை.

ஆகவே..கடல் நீர்  சூழ்ந்த உலகமாயினும்..அதிலிருந்த்து தோன்றும் மழை தேவையான இடங்களில் பெய்யாது பொய்த்துவிடின் விளைச்சல் இல்லை...நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுகிறது.

வள்ளுவரும்..வான்சிறப்பில் சொல்லுவது என்ன.....

'விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி'  - 13

பொருள் - கடல்நீர் சூழ்ந்த உலகமாய் இருந்தாலும், மழைநீர் பொய்த்து விட்டால், பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


குறள் போற்றுவோம்..- 2



இன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன.

அதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை.

நமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும்.

காரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.அவன் விளைச்சலுக்கு அவனால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.அப்படியும் விவசாயம் செய்யலாம் என்றால், மழையில்லை. அதனால் நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.தண்ணீரிலும் அரசியல்.ஆகவே கிடைத்த விலைக்கு விளைநிலத்தை விற்று விட்டு, நகரம் நோக்கி நகர்கிறான்.நகரத்தில் கூலி வேலையாவது செய்து பிழைக்கலாம் என்று.

விவசாயியின் வளம் குறைய மழை பிரதானக் காரணம்.இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்..

 'ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
 வாரி வளங்குன்றிக் கால்'

இதன் பொருள்......

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத்தொழில் குன்றிவிடும்.

மழையை விவசாயியின் வருவாய் என அவர் குறிப்பிட்டது இக்குறளின் சிறப்பு.

Monday, July 8, 2013

குறள் போற்றுவோம்..- 1



திருக்குறள்..

ஒன்றே முக்கால் அடியில், பல கருத்துகளை தன்னுள் அடக்கியுள்ள நூல்..

உலகம் போற்றும் தமிழ் மறை..

அதில் இருந்து நாள் தோறும் ஒரு குறளுக்கு விளக்கம் சொல்ல முடிவெடுத்துள்ளேன்.

இன்று..

வான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்..

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை....    -12

இது சாதாரணமாக...திருக்குறள் தெரியுமா?  எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
இக்குறளுக்கான பொருள் என்ன? பார்ப்போம்..

இது என்ன  துப்பாக்கி ..என்கிறீர்களா?

அந்தத் துப்பாக்கி ஏந்தி வரும் அர்த்தம் என்ன?..

இன்று  பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்...என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..

மழை...மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.

அதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.

இப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை...நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.

இனி....மேற் சொன்ன குறளுக்கான உரை-

மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.

(பின் குறிப்பு- இது அக்குறள் கூறும் பொருள். இதை ஒவ்வொரு சொல்லுக்குமான பொருள் கொண்டு நோக்க வேண்டாம் )


Wednesday, July 3, 2013

புற்றுநோயும்..விளம்பர படங்களும்....



இப்போதெல்லாம் விளம்பரங்களுக்கு என்னதான் செய்வது என்று இல்லாமல்..சற்று எல்லை மீறியே வருகின்றன.

குறிப்பாக, முடி கொட்டுவதற்கான ஒரு தைல விளம்பரத்தில், பெரியவர்களுக்குத் தெரியாத ஒன்றை..பள்ளி சிறுவர்களுக்குத் தெரிந்திருப்பது போல காட்டப்படுகிறது.

அதுவாவது பரவாயில்லை..பதினைந்தே வயது நிரம்பியுள்ளது போன்ற ஒரு பெண், தந்தைக்கு சாக்லேட் கொடுக்க, தந்தை அதற்காக மேலும் இரண்டு சுற்று ஓட வேண்டும் என்கிறார்.அவரை அனுப்பி விட்டு தனது பாய் ஃப்ரண்டுக்கு விசில் அடித்து கூப்பிடுகிறாள் அப்பெண்.இது பிரபல சாக்லெட் நிறுவன விளம்பரம்.(இந்த சாக்லேட் அப்பாவை ஏமாற்ற என்கிறார்களோ)

அதைவிட கொடுமை...

ஒரு தனியார் மருத்துவமனை விளம்பரப்படம்.

புற்று நோய்க்கு வைத்தியம் பார்க்கிறார்களாம் சிறப்பாக..அதற்கான விளம்பரத்தில்..

ஒரு சிறுவனுக்கு (அவனுக்கு பத்து வயதிருக்குமா) புற்று நோய் என குடும்ப வைத்தியர் கூறி, அந்த குறிப்பிட்ட மருத்துமனையை சிபாரிசு செய்கிறாராம்.

யாருக்கு உடம்பிற்கு வந்தாலும் வருத்தமே..ஆனால் ஒரு சிறுவனுக்கு (குழந்தை என்று சொல்லலாமா) புற்று நோய் வந்துள்ளது எனக்காட்டுவது..மனம் ஆறவில்லை.அவனை பெற்றோர் கவலையுடன், கண்கள் கலங்க அம்மருத்துவமனையில் சேர்க்கிறார்களாம்.அங்கு வைத்தியர்..புற்று நோய் தடுப்பு வீரன் என்ற பேட்ஜ் குத்திவிட..அவன் ஒரு போர் வீரனாக நடிக்கிறான்.அவனைப் பெற்றோர் கண் கலங்க கைதட்டுகின்றனர்.

இது என்ன விளம்பரம்.ஒரு மருத்துவ மனை , கிட்டத்தட்ட ஆட்கொல்லி நோய்க்கு... சிறந்த மருத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி.ஆனால் அதை விளம்பரமாக்கி, அதையும் ஒரு சிறுவனைக்காட்டுவது..

சே....கோபம் வருகிறது..கூடவே..விளம்பர நோக்குக் கொண்ட அந்த மருத்துவமனை மீது அருவெறுப்பும் வருகிறது.

Tuesday, July 2, 2013

தமிழுக்கு கொம்பு விளைவித்தவர்



தமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்

கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.

நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)

இந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.

அதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..

னை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.