Friday, October 2, 2015

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத்தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... “முடியும்’’ என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும் .உறுதியும், நம்பிக்கையும் தலைமைப் பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.”தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது என மாணவர்கள் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது.

Tuesday, July 28, 2015

குறுந்தொகை-221




தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை மலர்ந்தது; கார்காலம் வந்து விட்டது; அவர் வந்திலர்; யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?” என்று தலைவி கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் உறையூர் முதுகொற்றன்

இனி பாடல்-
 
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
   
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
   
பாலொடு வந்து கூழொடு பெயரும்
   
யாடுடை யிடைமகன் சென்னிச்

சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே.

                     -உறையூர் முதுகொற்றன்

 

 முல்லைகளும்மலர்ந்தன; பறியோலையை உடையகையினை உடையார்,  குட்டிகளைஉடைய ஆட்டின் திரளோடு சென்று தங்க,  பாலைக் கொணர்ந்து வந்து பாற்சோற்றைப் பெற்று மீண்டு செல்கின்ற,  ஆடுகளை உடைய இடையன், தன் தலையில் அணிந்து கொண்டன யாவும், சிறிய செவ்வியை உடைய அம்முல்லையின் அரும்புகளே ஆகும்;  அத்தலைவர் இன்னும் வாராராயினர்.

     (முடிபு) முல்லையும் பூத்தன; இடைமகன் சூடியவெல்லாம்முகையே; அவர் வாரார்.

     (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.

     முல்லை பூத்தல் கார் காலத்திற்குஅடையாளம்.

     மாலைக் காலத்தில் ஆட்டை மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில்தங்க இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான். பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவுக்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றானெனலும் ஒன்று. இடையர் பாலை விற்றல் வழக்கம்; அவன் செல்லும் வழியில் பூத்த முல்லைப் பூக்களைப் பறித்துத் தன் தலையில் சூடினான்.

Sunday, July 19, 2015

குறுந்தொகை-220




தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.)


முல்லை திணை - பாடலாசிரியர் ஓக்கூர் மாசாத்தி

இனி பாடல்-
 
பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
   
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
   
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
   
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்

குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
   
வண்டுசூழ் மாலையும் வாரார்
   
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.


                          -ஓக்கூர் மாசாத்தி.

   

 தோழி-,  பொருள் ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்ததலைவர்,  பழைய மழையினால் தழைத்த, புனத்தில் உள்ள புதிய வரகினது, ஆண் மான்மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள்,  சேர்ந்த பக்கத்தில்,  மலர்ந்த முல்லைக் கொடியினது,  காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தைஉடைய, செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள், மலர்ந்த, நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில்,  வண்டுகள்அம் மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக்காலத்திலும் வாராராயினார்,  இதனைக் கருதுவாயாக.



     (கருத்து) தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வந்தும் வந்திலர்.

Friday, July 17, 2015

குறுந்தொகை-219





தலைவி கூற்று

(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக் கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.)


நெய்தல் திணை - பாடலாசிரியர் வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்

இனி பாடல்-


பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
   
நாரி னெஞ்சத் தாரிடை யதுவே
   
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
   
ஆங்கட் செல்க மெழுகென வீங்கே

வல்லா கூறி யிருக்கு முள்ளிலைத்
   
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
   
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே.


                              -வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்


    தோழி--, பசலையானது எனது மேனியின் கண்ணது;  காதல் அவரது அன்பற்றநெஞ்சமாகிய செல்லுதற்கரிய இடத்தின்கண்ணது; எனது அடக்கமும்,  நெடுந்தூரத்தில்.நீங்கியது;  எனது அறிவு,  தலைவர் உள்ள இடத்திற்கே செல்வேம் அதன்பொருட்டு எழுவாயாக என்று, நம்மால் மாட்டாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும்; எந்தத் தன்மையில் உள்ளீரோ என்றுபரிவு கூர்ந்து வினாவிக் குறைதீர்ப்பராயின், முள் அமைந்த இலையை உடைய, பருத்த அடியை உடைய தாழையை உடையகடற்கரைத் தலைவருக்கு,  இது தக்க செவ்வியாகும்.



     (கருத்து) தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.

     (வி-ரை.) பகற்குறிக்கண் நிகழும் இடையீட்டால் வருந்திய தலைவி,தலைவன் வரைந்து கோடலை விரும்பிக் கூறியது இது. இதன்கண் தன்நிலையைப் புலப்படுத்தி, இது நீங்குதற்குரிய செவ்வி இதுவென்றுதலைவன் உணரும்படி கூறினாள், அவன் அதனை உணர்ந்து விரைவில் வரைந்து கொள்வான் என்பது கருதி.

Wednesday, July 15, 2015

குறுந்தொகை-218



தலைவி கூற்று
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர்நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்போதும்பொருந்தும் வன்மையிலேம்; இத்தகைய நம்மை அவர் மறந்து ஆண்டேஇருப்பாராயின் அவர் பொருட்டுக் கடவுளைப் பராவுதலும் நிமித்தம்பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறியது.)


பாலை திணை - பாடலாசிரியர் கொற்றன்

இனி பாடல் -


விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
   
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
 
புள்ளு மோராம் விரிச்சியு நில்லாம்
 
உள்ளலு முள்ளா மன்றே தோழி

உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின்
   
றிமைப்புவரை யமையா நம்வயின்
   
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.


                          -கொற்றன்



 தோழி-, நம் உயிருக்கு உயிரைப் போன்றவராதலின், தம்மை யின்றி,  இமைப் பொழுது அளவேனும், பிரிந்திருத்தலைப் பொருந்தாத,  நம்மை, மறந்து விட்டுத் தாம் சென்ற அவ்விடத்தே தங்குதலில்வல்ல தலைவர் திறத்தில்,  பிளப்பையும் குகைகளையும் உடைய மலைப் பக்கத்தில்  வெற்றி பொருந்திய துர்க்கைக்கு, பலிக் கடன் கழித்தலைச் செய்வோம்; கையில் காப்பு நூலைக் கட்டோம் நிமித்தத்தையும் பாரோம்; நற் சொல்லைக் கேட்டற்குச் சென்று நில்லோம்; நினைத்தலையும் செய்யோம்.


     (கருத்து) நம் அன்பு நிலை தெரிந்து விரைந்து வருதல் தலைவர் கடமையாகும்/

 
     ‘ஒருகணப் பொழுதேனும் அவரைப் பிரிந்து அமையேமாகிய நம்மைப் பிரிந்து, தாம் சென்ற இடத்தே நம்மை மறந்து இருக்கும் மனவலியை உடையர் தலைவர். அவர் நம் உயிருக்கு உயிர் போன்றவராதலின், நம் நிலையை உணர்ந்து விரைவில் வரும் கடப்பாடுடையர். அங்ஙனம் அவர் செய்யாராயின் நாம் கடவுளை வழிபட்டுப் பயன் என்?' என்று தலைவி கூறினாள்.

Tuesday, July 14, 2015

குறுந்தொகை-217



தோழி கூற்று
(‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழிதலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் தங்கால் முடக்கொல்லனார்


இனி பாடல்


தினைகிளி கடிகெனிற் பகலு மொல்லும்
   
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
   
யாங்குச்செய் வாமெம் மிடும்பை நோய்க்கென
   
ஆங்கியான் கூறிய வனைத்திற்குப் பிறிதுசெத்

தோங்குமலை நாட னுயிர்த்தோன் மன்ற
   
ஐதே காமம் யானே
   
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.


                        -தங்கால் முடக்கொல்லனார்

   

 தினையின்கண் படியும்கிளிகளை ஓட்டுவீர்களாக என்று கூறி எம் தாய் எம்மைப்போதரவிடின், பகற்காலம் நின்னோடுஅளவளாவுதற்குப் பொருந்தும், அங்ஙனம் இன்மையின்,இராக் காலத்து நீ வருதலினால்,  வழியின்கண் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவேன்,  துன்பத்தைத் தரும் எமதுகாமநோயை நீக்குதற்கு, எவ்வாறுபரிகாரம் செய்வேம், என்று அவ்வாறு யான் சொன்ன அதற்கு,  உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன்,வேறு ஒன்றை நினைத்து,அந்நினைவினால் வெய்துயிர்த்தான்;  காமநோய் நுண்ணியது; அவனது குறிப்பை உணர்ந்தயான், நீ நினைத்தவாறு செய்தல்மிக்க அறிவுடைமையும், பழிக்குக் காரணமும்ஆம், என்றேன்.


 
கருத்து - தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.


பொருள் எளிய நடையில்-
     ‘இப்பொழுது தினை காவலை ஒழிந்தேமாதலின் பகற்குறி வாயாது; இரவுக் குறியோ ஆற்றூறஞ்சும் நிலையினது; ஆதலின் அதனையும் விரும்பேம். இந்நிலையில் யாது செய்வேம்!’ எனக் கவன்றேன். அதற்குரிய பரிகாரம் ஒன்றை நினைந்த தலைவன் அதனை வாய்விட்டுக் கூற அஞ்சிப் பெருமூச்சு விட்டான். காமம் எவ்வளவு நுண்ணியது! யான் அவன் குறிப்பை உணர்ந்தேன். அவன் நினைந்ததே தக்க விரகாகத் தோற்றியது. ‘நீ நினைந்தது அறிவுடைமையே ஆகும்; ஆயினும் ஊரினர் பழி கூறுதற்கு இடமாம்’ என்றேன்” என்று தோழி கூறினாள். இதனால் தலைவன் உடன்போக்கு நயக்கின்றான் என்பதையும், அதனையன்றி வேறு பரிகாரம் இல்லை என்பதையும், அங்ஙனம் செய்தலே அறிவுடைமைக்கு ஏற்றது என்பதையும், பழிக்கு அஞ்சி அறிவுடைய செயலை விலக்குதல் தகாது என்பதையும் புலப்படுத்தித் தலைவியை உடம்படச் செய்தாள்.(தோழி)

Wednesday, May 27, 2015

குறுந்தொகை-216



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவிகூறியது.)


பாலை திணை - பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

இனி பாடல்-

அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
   
வாடா வள்ளியங் காடிறந் தோரே
   
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப
   
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே

அன்ன ளளிய ளென்னாது மாமழை
   
இன்னும் பெய்ய முழங்கி
   
மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.


                      -கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

 

 தோழி, தலைவர், கேடில்லாத உயர்ந்த செல்வத்தை, கொணரும் பொருட்டு, பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; நான்--,  தொகுதியார்ந்த விளக்கத்தைஉடைய வளைகள் நெகிழும்படி,  கவலையுற்று, படுக்கையின் கண் வீழ்ந்து,  துன்பம் மிக்கேன்;  இவள் இரங்கத் தக்காள், என்று எண்ணாமல், மாமழை இன்னும்மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து,  எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக்குறித்து,  மின்னா நின்றது.

.

    (கருத்து) கார்காலம் வந்தும் தலைவன் வராததால் நான் துன்புறு வேனாயினேன்.

   

Friday, May 22, 2015

குறுந்தொகை-215



தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)


பாலை திணை- பாடலாசிரியர் மதுரையளக்கர் ஞாழர்  மகனார் மள்ளனார்

இனி பாடல்-

 
படரும் பைபயப் பெயருஞ் சுடரும்
   
என்றூழ் மாமலை மறையு மின்றவர்
   
வருவர்கொல் வாழிதோழி நீரில்
   
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை

குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக்
   
கொடுவரி யிரும்புலி காக்கும்
   
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே.

                      -மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்



    துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும்;  ஒளி விடுகின்றசூரியன்,  பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள் ,குறிய குண்டுக் கற்களுக்கு அருகில், தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், பாதுகாக்கின்ற,  உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள,  பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய, தலைவர், இன்று வருவர். நீ வாழ்வாயாக!


    (கருத்து)தலைவர் இன்று வருவர்.

    

Wednesday, May 20, 2015

குறுந்தொகை-214



காதலனைப் பிரிந்த காதலி ,பித்துப் பிடித்த நிலையில் இருக்கிறாள்.இதை அறியாத அவளது தாய் இது தெய்வக் குற்றம்.என எண்ணி அந்த முருகனுக்கு வேண்டுதலால் பயன் ஏது (வெறியாடுதல்...என்றால் ஆண்டவனை வேண்டி மாலையிடுதல் எனக் கொள்ளலாம்)

தோழி கூற்று
(தலைவியின் வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறி யாட்டெடுத்த இடத்து, “இவளுக்குத் தழையுடையுதவி அன்பு செய்தான் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியெடுப்பதனால் பயனில்லை” என்று தோழி கூறி உண்மையை வெளிப்படுத்தியது.)


குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கூடலூர் கொழார்

இனி பாடல்-

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
 
பிறங்குகுர லிறடி காக்கும் புறந்தாழ்
 
அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி
 
திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவிச்

செயலை முழுமுத லொழிய வயல
 
தரலை மாலை சூட்டி
 
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே.


                    -கூடலூர் கிழார்.

’.

 மரங்களை வெட்டியகுறவன்,  கொல்லையை உழுதுவிதைத்த, விளங்குகின்ற கதிரைஉடைய தினையை,  காவல் செய்யும்,  புறத்தின் கண்ணே தாழ்ந்த அழகிய சிலவாகியகூந்தலையும், மெலிந்த சாயலையும் உடைய, தலைவியினது,  செவ்விதாகஅமைத்த ஆபரணத்தை அணிந்த,  பெரிய தழையாகிய உடையை அளித்து, அசோகினது பெருத்த அடி மரம் ஒழிந்துநிற்ப, அதனோடு தொடர்பு இன்றி அயலதாய்நின்ற,  அலரி மாலையை முருகனுக்குச்சூட்டி வெறியெடுத்து, இந்த ஆரவாரத்தைஉடைய ஊரானது,  மயக்க முற்றது.



    (கருத்து) தலைவிக்குத் தழையுடை அளித்த அன்பன் ஒருவன்உளன்.


 வெறியாடுவார் அரலை மாலையை முருகக் கடவுளுக்குச் சூட்டுதல்வழக்கம்  அரலை என்பது இப்போது அரளி என வழங்கும்.

 
    இதனால், ‘தலைவனொருவன் தலைவி தினைப்புனங் காக்கும் காலத்தில் அங்கு வந்து அசோகந் தழையுதவி அவளோடு அளவளாவிச் சென்றான்’ என்பதைத் தோழி உணர்த்தினாள்.

Wednesday, April 29, 2015

குறுந்தொகை-213




தோழி கூற்று
(தலைவனைப் பிரிந்த காலத்து, “நம்பாலுள்ள விருப்பத்தினால் தலைவர் தாம் சென்ற வினையை நிறைவேற்றாமல் வந்து விடுவாரோ?”என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் விலங்கினமும் தமது கடமையை ஆற்றும் காட்சி கண்டு தாமும் தம் கடனாற்றத் துணிவராதலின் மீளார்”என்று தோழி கூறியது.)

பாலை திணை- பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

இனி பாடல்-
 
நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
   
கவைத்தலை முதுகலை காலி னொற்றிப்
   
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
   
ஒழியி னுண்டு வழுவி னெஞ்சிற்

றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
   
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
   
இன்றுயின் முனிநர் சென்ற வாறே.


                              -கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.



 தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நம்மோடு செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்துசென்ற அவர்,  போன வழியில், விரைவாக, கிளைத்த கொம்பைஉடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான்,  காலால் உதைத்து, பசி நோயைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வளைத்த,பருத்த பெரிய மரப் பட்டை,  தனது குட்டி உண்டபின் எஞ்சினால் தான் அதைஉண்டு,  குற்றம் இல்லாத நெஞ்சினோடு, துள்ளி நடத்தலாகிய இயல்பினைஉடைய,  தனது குட்டிக்கு நிழலாகி நின்று வெயிலை நீக்கும், என்று கூறுவர்.



    (கருத்து) தலைவர் தம் கடமையை உணர்ந்து, மீளாது சென்றுபொருள் தேடி வருவர்.

 

    தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன் குட்டியின் பசியை முதலில் நீக்கியும், தன்மேல் படும் வெயில் வெம்மையைக் கருதாமல் குட்டிக்கு நிழலாகியும் செயபடும்.அதுபோல

    “தலைவர் நசை நன்குடையரேயாயினும், தன்னலத்தையும் பேணாது ,  இல்லறம் புரியும் கடமையை நினைந்து அதற்கு உரிய பொருள் தேடச்சென்று அதூடிந்ததும் மீள்வர்” என்பது தோழியின் கருத்து.

Monday, April 27, 2015

குறுந்தொகை-212



தோழி கூற்று
(தலைவனது குறையைத் தலைவி நயக்கும்படி, “தலைவனது தேர்வந்து வறிதே பெயர்வதாயிற்று; அவன் விருப்பம் கழிந்தது. அது கருதி வருந்துகின்றேன்” என்று தோழி கூறியது.)
   
நெய்தல் திணை-பாடலாசிரியர் நெய்தற் கார்க்கியன்

இனி பாடல்-
 
கொண்க னூர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
   
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்
   
காண வந்து நாணப் பெயரும்
   
அளிதோ தானே காமம்

விளிவது மன்ற நோகோ யானே.




                          -நெய்தற் கார்க்கியன்.



 தலைவன் ஏறிச் சென்ற, கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது, தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண், தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி,  நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி, மீண்டு செல்லா நிற்கும்; காமம் இரங்கத் தக்கது;  நிச்சயமாக அழியக்கடவதாகும்;  இவை கருதி யான் வருந்துவேன்.



    (கருத்து) தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.

   

    கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன்நடப்படுவது; தேரூரும் தலைவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வதுவழக்கம்; “தம்பால்நயந்து வந்தோரது குறையைப் போக்குதல் அறநெறியாளர் கடனாதலின்,அதனைச் செய்யாமையால் வறிதே தலைவன் மீண்டது நாணத்தைத்தருவதாயிற்று; “

Friday, April 17, 2015

குறுந்தொகை-211





தோழி கூற்று
(தலைவன் பிரிந்தகாலத்தில், ‘‘சுரத்திடையே தம் துணையைப் பிரிந்த விலங்கும் பறவையும் கவல்வது கண்டு நாமும் அங்ஙனம் கவல்வோமென நினைந்து தலைவர் மீள்வரோ?” என ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் அத்தகைய அருள் உடையவரல்லர். நம்மைப் பிரிந்த வன்மையையுடை யார். ஆதலின் மீளார்” என்று தோழி கூறியது.)
   

பாலை திணை- பாடலாசிரியர் காவன்முல்லைப் பூதனார்

இனி பாடல்-

அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
   
நேர்ந்துநம் மருளார் நீத்தோர்க் கஞ்சல்
   
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத்
   
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை

வேனி லோரிணர் தேனோ டூதி
   
ஆராது பெயருந் தும்பி
   
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே.


                       -காவன்முல்லைப் பூதனார்.
   குறைந்து, வேனிலால் வெம்பிய மராமரத்தினது,  ஓங்குதலையுடைய வெவ்விய கிளையின்கண், வேனிற் காலத்து மலர்ந்த ஒற்றைப்பூங்கொத்தை,  தேனென்னும் சாதிவண்டோடு ஊதி, அதன்கண் ஒன்றுமின்மையின் உண்ணாமல் மீள்கின்ற, தும்பியென்னும் வண்டுகளையுடைய,நீரில்லாத இடங்களையுடைய, பாலைநிலத்தைக் கடந்தோரும்,  அழகிய சிலவாகியகூந்தலையுடைய நினது,  அழகியவளைகள் நெகிழும்படி,  நம் விருப்பத்திற்குஉடம்பட்டு,  நம்பால் அருள் செய்யாராகி, நம்மைப் பிரிந்து சென்றோருமாகிய தலைவர்பொருட்டு,  அஞ்சுதலை நீங்கினேம்.

    (

    (கருத்து) தலைவர் மீளார்.

 

   ( “அவர் இரங்கும் நெஞ்சுடையராயின் வளை நெகிழும்படி நமக்குஉளதாகும் துன்பத்தையும், நீரில் வைப்பிற் சுரம் போகுங்கால் தமக்குஉளதாகும் துன்பத்தையும் எண்ணிப் பிரியார். அவர் பிரிந்தமையின்இடைச்சுரத்தே இரங்கி மீளா வலிய நெஞ்சினராவர்” என்று தோழிகூறினாள்.)

Wednesday, April 15, 2015

குறுந்தொகை-210



சாதாரணமாக நம் வீட்டுப் பெரியவர்கள் காகம் கரைந்தால்...இன்று யாரோ விருந்தினர் வருவார்கள்..என்று சொல்வதைக் கேட்கிறோம்.

இந்த நம்பிக்கை அப்போதே...சங்க காலங்களிலேயே இருந்திருக்கிறது.

குறுந்தொகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முல்லை திணை பாடலில் அதைச் சொல்கிறார் பாடலாசிரியர் நச்செள்ளையார்.

தலைவன், தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான்.தலைவி அவனது வரவை எதிர்பார்த்திருக்கிறாள்.அப்போது காகம் கரையும் போதெல்லாம்..."பார்த்தாயா..இன்று உன் தலைவன் வந்துவிடுவான் என்று கூறி தலைவியைத் தோழி சமாதானப் படுத்துகிறாள்.

தலைவன் திரும்ப வந்து, தான் வராத நேரத்தில், தலைவியை ஆறுதல் கூறித் தேற்றியதற்காக தோழியைப் பாராட்டுகிறான்.தோழியோ, நான் பெரியதாக ஏதும் செய்யவில்லை.அச்செயலைச் செய்தது காகம் தான்.அது கரையும் போதெல்லாம் "நீர் வருவீர்" என்று மட்டுமே ஆறுதல் கூறினேன் என்கிறாள்.

இனி பாடல்-

தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)



திண்டேர் நள்ளி கானத் தண்டர்
 
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
 
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
 
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி

பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
 
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.


                                -காக்கை பாடினியார் , நச்செள்ளையார்.


 திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது,  காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு,  தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றும் ஒருங்கே விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை,  ஏழு பாத்திரங்களில்ஏந்திக் கொடுத்தாலும்,  என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு,  விருந்தினர் வரும்படி,  கரைதலைச் செய்த காக்கைக்கு இட்ட உணவே, சிறந்தது ஆகும்
 

    (கருத்து) காக்கை கரைதலால் நீர் வருவீர் என தலைவியை ஆற்றுவித்தேன்.

Friday, April 10, 2015

எனது புதிய நாடகம் "நூல் வேலி"



கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 26ஆம் ஆண்டு கோடை நாடக் விழாவில், எனது கதை, வசனம், இயக்கத்தில் நூல் வேலி என்ற நாடகம் நடைபெற இருக்கிறது.

நாடகத்தின் தலைப்பு..நாடகத்தை இறுதிவரை மறக்காத  இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் நினைவாக வைக்கப் பட்டுள்ளது.

இன்று சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்டுள்ள இந்நாடகம், 24-4-15 அன்று மாலை 7 மணியளவில் சென்னை நாரத கான சபா அரங்கில் நடைபெறுகிறது.

அனுமதி இலவசம்.

நாடக ரசிகர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


Thursday, April 9, 2015

குறுந்தொகை-209



பாலை திணை-பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

இனி பாடல்-

அறம் தலைப்பட்ட நெல்லி அம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே
குறு நடை பல உள்ளலமே நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே.

குறு நடையுடன் நடக்கும்  பெண்ணே!  வலுவான புலிக்குட்டிகள், பாதையில் செல்வோர்க்கு உதவும்படி, மரத்திலிருந்து உதிரும், அழகிய பசுமையான நெல்லிக் கனிகளை உண்ணும் பாதையில் நான் வரும்பொழுது, பலவற்றைப் பற்றி நான் எண்ணவில்லை.  வளைந்த கிளைகளையுடைய வெட்சி செடிகளின் அரும்பு அவிழ்ந்து மலரும் பொழுது உள்ள நறுமணத்தை உடைய கருமையான அழகிய கூந்தலை உடைய இளம் பெண்ணின் நட்பைப் பற்றி மட்டுமே நினைத்தேன்.

குறுந்தொகை-208




தலைவி கூற்று
(திருமணத்திற்காக பொருளீட்ட தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்” என்றதோழிக்கு அவள், “நான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும் நொதுமலர் வரையப்புகுவரேல் என் செய்வதென ஆற்றேனாயினேன்”என்றது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

 இனி பாடல்-
   
ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப்
   
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
   
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
   
நின்றுகொய மலரு நாடனொ

டொன்றேன் றோழி யொன்ற னானே.


                             -கபிலர்.

 

 தோழி...நான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையேனல்லேன்; பொருந்தும் இயல்பினேன்; ஆயினும்,  நொதுமலர் வரைவொடு புகுவதாகியதொரு காரணத்தினால்,  மலையினிடத்து,
 ஒன்றோடொன்று பொருதகளிறுகளால் மிதிக்கப்பட்ட, நெரிந்த அடியையுடைய வேங்கைமரம்,  குறமகளிர், தம்முடைய கூந்தலின்கண்ணே அணிந்துகொள்ளும்பொருட்டு, ஏறவேண்டாமல் நின்ற படியே மலர்களைக் கொய்யும்படி,  தாழ்ந்துமலர்தற்கிடமாகிய, - நாட்டையுடைய தலைவனோடு,  பொருந்தேன்.

 

    (கருத்து) தலைவர் வரவு நீட்டித்தலின் நொதுமலர் வரையப்புகுவரென்று நான் ஆற்றேனாயினேன்.

 

    (பொருத களிறு மிதித்தலால் வேங்கைமரம் சாய்ந்து மகளிர் ஏறாமேலே மலர் பறித்தற்கு எளிதாக மலர்ந்தது. )
 

Wednesday, April 8, 2015

குறுந்தொகை-207





தலைவி கூற்று
(தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது,“இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.)

பாலை திணை- பாடலாசிரியர் உறையன்

இனி பாடல்-
   
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
   
றத்த வோமை யங்கவட் டிருந்த
   
இனந்தீர் பருந்தின் புலம்புகொ டெள்விளி
   
சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணை யாகும்

கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
   
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
   
சென்றெனக் கேட்டநம் மார்வலர் பலரே.



   

 நம்முடைய செலவைத்தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின்,  செல்லுதல் அரிதாகும்,  என்று கூறி, பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தினது,  அழகிய கிளையின்கண் இருந்த,  இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது, தனிமையைப் புலப்படுத்தலைக் கொண்ட தெளிந்த ஓசை,  அருவழியிற்செல்லும் மனிதர்களுக்கு,உசாத்துணையாக அமைதற்கு இடமாகிய,  கற்களையுடைய மலையினது அயலதாகிய,  யாவரும் நடக்கும் பழையதாகிய சிறியவழியில்,- தம் நல்ல அடிகள் சுவடு செய்ய,தாவி, சென்றாரென்று,  கேட்ட நம்முடைய அன்பர் பலராவர்.


    (கருத்து) தலைவர் செலவை யான் முன்னரே அறிந்தேன்.



    (“என்பால் அன்புடையார் பலர் கேட்டு இதனை எனக்கு முன்னரேதெரிவித்தனர். நீ இப்பொழுது தெரிவித்தலால் ஆகும் பயன் யாது?எல்லோரையும் போல நீ கேட்டாயன்றி அவன் செல்லாமல் தடுக்கவில்லை" எனத் தோழியின் இயலாமையைச் சுட்டித் தலைவி இரங்கினாள்.)

Tuesday, April 7, 2015

குறுந்தொகை-206






தலைவன் கூற்று
(பாங்கன் தன்னை இடித்துரைத்தபோது, “அறியாமையால் நான் காமநோயுற்றேன். இனிச் செய்யுமாறு யாது? நீவிர் அங்ஙனம் செய்யற்க”என்று தலைவன் கூறியது.)

மருதம் திணை -பாடலாசிரியர் ஐயூர் முடவன்

இனி பாடல்-
   
அமிழ்தத் தன்ன வந்தீங் கிளவி
   
அன்ன வினியோள் குணனு மின்ன
   
இன்ன வரும்படர் செய்யு மாயின்
   
உடனுறை வரிதே காமம்

குறுக லோம்புமி னறிவுடை யீரே.



_                         - ஐயூர் முடவன்
அறிவையுடையவரே,  அமிழ்தத்தைப்போன்ற,  அழகிய இனிய சொற்களையுடைய,  மனத்தாலுணர்தல் மாத்திரையே யியன்ற அத்தகைய இனிமையையுடையோளது,  குணமும்,  இத்தகைய,  இன்னாதனவாகிய துன்பங்களை உண்டாக்குமாயின், ஒருங்கு வாழ்தற்கு அரிது;ஆதலின், அதனை அணுகுதலைப்பரிகரிக்கவும்.

 

    (கருத்து) காமம் என்னால் தாங்கற்கரியது.

 
   ( ‘நான் அறிவின்மையால் இந்நோய் தலைக் கொண்டேன். இதனால் விளைந்த துன்பம் தீர்த்தற்கரிதாயிற்று. அறிவுடையீராகிய நீர் செல்லுதலை ஒழிமின்’ என்று தலைவன் தன் நிலைமையை ஒருவாறு புலப்படுத்தினான் நண்பனுக்கு)

Monday, April 6, 2015

குறுந்தொகை-205




நெய்தல் திணை -பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்;-


மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க

விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு
,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,

கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,

இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;

யாங்கு அறிந்தன்றுகொல் தோழி! என்

தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?


                                   -உலோச்சன்

மழைமேகங்கள் அன்னம் சிறகை விரித்தது போல நகர்ந்து கொண்டு இருக்கின்றன. தலைவன் என்னுடன் கூடியபின்,கடலலைச் சரலால் நனைந்த சக்கரங்களைக் கொண்டத் தேரில் ஏறி இங்கிருந்து சென்று விட்டான்.இது எப்படி எனது நெற்றிக்குத் தெரிந்தது.அது பசலையால் அழகிழந்துத் தெரிகிறதே!(எனத் தோழியிடம் உரைக்கின்றாள்)

Thursday, April 2, 2015

குறுந்தொகை-204



பாங்கன் கூற்று
(தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மிளைப்பெருங் கந்தன்

இனி பாடல்-
 
காமங் காம மென்ப காமம்
   
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
   
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
   
மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே.


                       -மிளைப்பெருங் கந்தன்.
    பெரிய தோளையுடையதலைவ,  காமம் காமமென்று அதனைஅறியார் இகழ்ந்து கூறுவர்; அக்காம மானது, வருத்தமும் நோயும் அன்று ,பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில்தழைத்த,  முதிராத இளைய புல்லை,முதிய பசு,  நாவால் தடவி இன்புற்றாற்போல,  நினைக்குங் காலத்து,  அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும்.

 

    (கருத்து) காமம் நம்முடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டது.

    (இளம்புல்லைத் தடவிய அளவில் முதிய பசு இன்புற்றதற்குக் காரணம்அப் புல்லின் சுவையன்று; பசுவின் ஆர்வமே. அதன் ஆர்வத்தளவுஅவ்வின்பம் நிற்றலைப் போலக் காமமானது நமது நினைப்பினளவிற்புதுமை யின்பத்தைத் தருவதாகின்றது.)