Sunday, December 30, 2018

2018...திரும்பிப் பார்க்கின்றேன்


(இறைவன் கொடுத்த வரம்" நாடகத்தில் பங்கு பெற்ற நன்பர்களுடன்)
2018

இந்த ஆண்டு எனக்கு எப்படி அமைந்தது...

வாழ்க்கை ஏட்டினை புரட்டுகின்றேன்..

சென்ற ஆண்டு எனது கதை, வசனம், இயக்கத்தில் சௌம்யா குழுவினர் அரங்கேற்றிய "இறைவன் கொடுத்த வரம்" சிறந்த கதைக் கருவினைக் கொண்ட நாடகமாக மைலாப்பூர் அகடெமியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு விருது வழங்கப்பட்டது.

இதே நாடகத்தில் நடித்த ஃபாத்திமா பாபு, பி டி ரமேஷ் சிறந்த நடிகை, நடிகருக்கான விருதினை மைலாப்பூர் அகடெமியினரால் மேற்சொன்ன நாடகத்திற்காகப் பெற்றனர்.

ஆண்டாளைக் குறித்து பிரச்னைப் பேச்சுகள் எழ..."நாச்சியார் திருமொழி"யை நூலாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட "திருமொழி" நூலாக வெளி வந்தது

அமெச்சூர் நாடகங்களின் பிதாமகர் என்றழைக்கப்படும் அமரர் திரு ஒய் ஜி பார்த்தசாரதியின், யூஏஏ குழுவினரின் 66 ஆண்டுகளின் சாதனையை ,ஒய்ஜிபியின் நூற்றாண்டு நிகழ்வுகளின் போது நூலாக வெளியிடும் எண்ணம் எனக்கு உண்டாக, அதை மகேந்திரனிடம் நான் கூறினேன்.

மகேந்திரனின் ஒப்புதல்களுடன்,நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் திரைப்பட நடிகர் சிவகுமார் "யூஏஏ எனும் ஆலமரம்" என்ற பெயரில் நூல் வெளியானது.

2008ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்ற "மாண்புமிகு நந்திவர்மன்:" எனும் அரசியல் நையாண்டி நாடகத்தை "மீண்டும் நந்திவர்மன்" என ரசிகர்கள் எண்ணும் படியாக நாடகமாக்கி மேடையேற்றினேன்

நண்பர்கள் அம்பி ராகவன், கிரீஷ் வெங்கட்ஆகியோர் புதிதாக நாடகக் குழுவினை ஆரம்பித்தனர்.தமிழ் நாடகங்களில் இளைஞர்கள் பங்கு அதிகமாக ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தபடியால்..இவர்களை ஊக்குவிக்கும் முறையில் "பௌர்ணமி நிலவில்" என்ற நாடகத்தை இவர்களுக்காக எழுதி அவர்களையே இயக்கச்சொன்னேன்.. 

2018ல் என்னால் நாடக உலகிற்கு செய்ய முடிந்தது இவைதான்.

2019ல்..

நிறைய செய்ய ஆவல் உள்ளது..
பார்ப்போம்...எந்த அளவில் மனமும்..உடலும் ஒத்துழைக்கப் போகிறது என்று..

2018ஏ உனக்குப் பிரியா விடை அளிக்கின்றோம்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிகிறோம்..
2019ஏ உன்னை அன்புடன் வரவேற்கின்றோம்.

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

No comments: