Sunday, April 22, 2012

விதவைகளாக தமிழ் இளம்பெண்கள்





தமிழர் பகுதியில் 45 ஆயிரம் போர் விதவைகளைப் பார்த்து அனைவருமே கண்ணீர் விட்டோம் என்று இலங்கை சென்று திரும்பியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

அண்மையில் 12 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழு இலங்கைக்கு சென்று அங்குள்ள தமிழர் நிலைக்குறித்து ஆராய்ந்தது.
அதில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, கடந்த 16ம்தேதி முதல் 21ம்தேதி மதியம் வரை இலங்கையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ் மக்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது என்றார்.

எந்த இடத்திலும் தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களோடும் வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம். அவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாணிக்கம் தோட்டம், செட்டிக்குளம் பகுதியில் தமிழ் மக்களோடு கலந்து உரையாடினோம். மட்டக்களப்பு பகுதியில் 45 ஆயிரம் விதவைகளை பார்த்தோம்.

அவர்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இவர்களை பார்த்து நான் மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜ் உள்பட குழுவினர் அனைவரும் கண்ணீர் விட்டோம்.

யாழ்ப்பாணம் பகுதியில் கோவில்களில் ராணுவங்கள் முகாமிட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்று மக்களும் வலியுறுத்தினார்கள்.

நாங்களும் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினோம்.

தமிழர்கள் பகுதியில் ராணுவத்தினரை திரும்ப பெற்று விட்டு ஆட்சியாளர்கள் மூலம் அன்றாட பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

கடந்த முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்று வந்த பிறகு தற்போது தமிழர் வாழும் பகுதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு இன்னும் ஏராளமான குறைகள் உள்ளன. கல்வி, குடியிருப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் என்று குறைகள் இருக்கிறது.

இவ்வாறு டிகே.ரங்கராஜன் கூறினார்.


(வெப்துனியா)

செய்திகள் - இலங்கை- நிகழ்வு

2 comments:

சசிகலா said...

45 ஆயிரம் மிகவும் வருத்தத்திற்கு ஆளானேன் .

rara said...

kadavul enge ?