Friday, March 15, 2013

பொறுமையும்...மாணவர் போராட்டமும்...




பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது ஒரு சொலவடை.ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லை உணடு அல்லவா?

அந்த எல்லை இப்போது வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.குட்டக் குட்ட குனிந்து, தமிழன் இப்போது பூமியை தொடும் அளவிற்குக் குனிந்து விட்டான்.அதற்கு மேல் குனிய முடியாததால்..இப்போது எழுச்சி அவனிடம் காணப்படுகிறது.

அதுவும், மாணவ சமுதாயம் எழுச்சியைக் காட்டிவிட்டால்..சம்பந்தப் பட்ட ஆட்சியாளர்கள் அழிவது நிச்சயம்.

உதாரணம்..இந்தி எதிர்ப்பு போராட்டம்...இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்திற்குப் பின், காங்கிரஸால் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சிக்கு வர இயலவில்லை.நாற்பத்தைந்து வருடங்களாக, அக்கட்சி..திராவிடக் கட்சிகள் எதனுடனாவது கூட்டு வைத்தே சில எம்.எல்.ஏ., எம்.பி., இடங்களைப் பெற்று வந்தது.இன்றுவரை அக்கட்சியால் தமிழகத்தில் தலை நிமிர முடியவில்லை.

1965 நிகழ்ந்தது போன்று ஒரு நிகழ்வு, மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது போல இப்போது தெரிகிறது.இப்போதாவது விழித்துக் கொண்டு, தமிழக மக்களும், இந்தியர்கள் தான், அவர்கள் குறைகளுக்கும் செவிசாய்க்கலாம், அவர்கள் தேவையை பூர்த்தி செய்வோம்.. என மைய அரசு நினைத்து ஆவண செய்ய வேண்டும்.

தவிர்த்து வாளா இருக்குமானால்...கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் இழக்க நேரிடும்.அதனுடன் கூட்டு வைக்கும் மாநிலக் கட்சியும் மக்கள் ஆதரவை இழக்க நேரும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசியல் புரிபவர்கள் நடந்து கொண்டால் ..நல்லது..

இல்லையெல் கண்டிப்பாக 1965 நிகழ்ச்சிகள் மீண்டும் உருவாவதை தடுக்க முடியாது.

மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்...என்பதை மறக்க வேண்டாம்.

No comments: