Sunday, July 13, 2014

குறுந்தொகை - 39



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்?” என்று தான் ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் ஔவையார்
 
இனி பாடல்-

   
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
   
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்
   
மலையுடை யருஞ்சுர மென்பநம்
   
முலையிடை முனிநர் சென்ற வாறே.

                   _ ஔவையார்

உரை-

எனது நெஞ்சில் தலைவைத்து உறங்குவதை வெறுத்தவன் பிரிந்து சென்ற வழியானது வெம்மையான வலிமையுடைய காற்றானது
மரக்கிளையிலே வீசுதலால் வாகை மரத்தினது பசுமை இழந்து முற்றிய காயானது ஒலித்ததற்குஇடமாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய சுரமாகும் எனக் கூறுவர் .(அந்த இடம் சென்றவனை நினைத்து எவ்வாறு கவலைப்படாமல் இருக்கமுடியும்? என தலைவி தோழிக்கு உரைக்கிறாள்.

 (கருத்து) தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்து நான் ஆற்றேனாயினேன்.

(அவள் காமம் தணிக்க தலைவன் அருகில்  இல்லை.தனிமையை மட்டுமின்றி, உடலின் தனிமையையும்,அவள் நெஞ்சில் உறங்க ஆளில்லை.அவளை தலவன் வந்து அணைக்கையில்தான் அவள் சுமை குறையும்.




No comments: