Sunday, May 1, 2011

கே.பாலசந்தரும்...நான் பெற்ற பால்கே விருதும்..


இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு  தாதா சாஹேப் பால்கே விருது கிடத்தமைக்கு பாராட்டுகள்.

தமிழ்த்திரையுலகில் எம்.ஜி.ஆர்., படமான 'தெய்வத்தாய்' , சிவாஜிகணேசன் நடித்த "நீலவானம்" ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாலசந்தர்.

தமிழ் நாடக உலகில் இருந்து..படிப்படியாய் உயர்ந்து ..இயக்குநர் சிகரம் என்ற அளவில் போற்றப் பட்டவர்.

இவரது நாடகமான 'சர்வர் சுந்தரம்' ஏ.வி.எம்., தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம்.

இவர் இயக்கத்தில் வந்த ஏ.கே.வேலன் தயாரித்த நீர்க்குமிழியே முதல் படம்.அதற்கு பின் எதிர்நீச்சல்,நவக்கிரகம்,நாணல், மேஜர் சந்தரகாந்த் போன்ற நாடகங்கள் திரைப்பட மாயின.

எம்.ஜி.ஆரை.வைத்து எந்தப் படமும் இயக்காத இவர், சிவாஜியை வைத்து இயக்கிய ஒரே படம் 'எதிரொலி'

இவரது பெரும்பான்மையான படங்களில் ஜெமினி கணேசன் நடித்திருப்பார்.

வேற்று மொழிப் படங்கள் வெற்றி பெற்றால் அதைத் தமிழில் எடுக்கத் தயங்க மாட்டார்.உதாரணம்..ஹிந்தி படமான சத்யகம்..தமிழில் புன்னகை ஆயிற்று.தாமரை நெஞ்சம் வங்காளப்படம் ஒன்றின் கதை.காவியத் தலைவியும் ஒரு ஹிந்தி படக்கதையே.இவரின் மரோசரித்ராவும்..பின் ஹிந்தியில் வெளிவந்த ஏக் துஜே கேலியே வும் இன்றும் அனைத்து ரசிகர்களால் மறக்கமுடியா காவியங்கள்.

மற்றவர்கள் எழுதிய தமிழ் நாடகங்களையும் இவர் வெள்ளித்திரையில் உலவ விட்டுள்ளார்..

உதாரணம்..கோமல் சுவாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்' ஜோசப் ஆனந்தின் 'இரு கோடுகள்'

விசுவின் நாடகங்கள் பார்த்து..அவற்றை விசுவின் இயக்கத்திலேயே படமாக தயாரித்தவர்.அதே போன்று மௌலியின் அண்ணே அண்ணே படமும் மௌலியின் நாடகமே.கிரேசி மோகனின் நாடகமே 'பொய்க்கால் குதிரை'யானது.

இவரது இமாலய வெற்றிக்கு இவரது உதவியாளராய் இருந்த..அனந்து என்பவரின் பங்கும் அளப்பறியது.

கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி இருந்தாலும் ..இவர் படங்களில்தான் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது.

ரஜினிகாந்தை..'அபூர்வ ராகங்களில்' அறிமுகப் படுத்தியவர்.பின் சில படங்களில் அவரை வில்லனாக்கி அழகுப் பார்த்து..பின்னர் கதாநாயகன் ஆக்கியவர்.

எண்ணற்ற..நடிக, நடிகையரை அறிமுகப் படுத்தியவர்.

கவிதாலயா என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி..ரஜினி நடிக்க..வேறு வேறு இயக்குநர்கள் இயக்க பல வெற்றி படங்களைத் தயாரித்தவர்.

ரஜினிக்கு ஜப்பான் ரசிகர்களை..இவர் தயாரித்த முத்து படம் ஏற்படுத்தியது.

ரயில் சிநேகம்,பிரேமி போன்ற பல தொடர்களை சின்னத் திரையில் இயக்கியுள்ளார்.

இப்படி பன்முகம் கொண்ட பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தமைக்கு ஒரு நாடக நடிகன்..நாடகத் தயாரிப்பாளன் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இனி தலைப்பிற்கு வருவோம்...

எனது சௌம்யா நாடகக் குழுவின் ஆயிரமாவது நாடக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எனக்கு நினைவுப் பரிசினை 1989ல் வழங்கினார் இயக்குநர் சிகரம்.இதையே நான் பெற்ற பால்கே விருதாய் எண்ணுகிறேன்.





- இந்த சமயத்தில் ஏனோ...எஸ்.எஸ்.வாசன் நினைவில் வருகிறார்
டிஸ்கி

6 comments:

Nagasubramanian said...

கே.பி சார் அதற்கு உரித்தானவர்.
தாங்கள் நாடகத் தயாரிப்பாளர் என்பதை இன்று தான் நான் அறியலானேன். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அடடடடா உங்களின் இன்னொரு முகம் இப்போதான் தெரியுது....!!!!

MANO நாஞ்சில் மனோ said...

பாலசந்தர் மாபெரும் திரை சிற்பி....

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் இருவருக்கும் :)

vasu balaji said...

பால்கே வாங்கிய அவருக்கும் பாலா.கே. வாங்கிய உங்களுக்கும் வாழ்த்துகள்.:))

செந்தில்குமார் said...

இந்த விருதை பெற ...

தகுதியான மனிதர் திரு.கே.பாலசந்தர்..

வாழ்த்துக்கள்....உங்களுக்கும்