Friday, November 9, 2012

இலவசம்..இலவசம்..தேவையா?

பக்கத்து வீட்டிற்கு வந்த செய்தித்தாளை இரவல் வாங்கி படிக்கும் போதுதான்..அந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்தேன்.இலவசங்கள் தேவையா? என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை யாக வேறு இருந்ததால்..என்னை நண்பன் ஒருவன் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்..அவனுடன் சாப்பிட்டவாறே இப்போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவன் கண்டிப்பாகக் கலந்துக் கொள் என்றான்..அப்போதுதான் மேசையில் கிடந்த பேனாவைப் பார்த்தேன்.அதைக் கையில் எடுத்து அதையும், நண்பனையும் மாறி மாறி பார்த்தேன்.வேணுமானால் வைத்துக் கொள் என்றான்.பதிலுக்கு 'நன்றி' என்றவாறே என் சட்டையில் அப்பேனாவைக் குத்திக்கொண்டேன்.

அடுத்த நாள்..அலுவலகம் வந்ததும்..மேசையைத் திறந்து இரண்டு வெள்ளைத்தாள்களை எடுத்தேன்.

'இலவசம்' பற்றி என்ன எழுதுவது..என்று யோசித்த படியே..பக்கத்து மேசை ரகுவைப் பார்த்தேன். தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஆடாக மாறி இருந்தான்.அவனிடம் சென்று..இரண்டு வெற்றிலையையும்,சீவலையும் எடுத்து வாயில் போட்டு மென்றவாறே என் இருப்பிடம் வந்து கற்பனை ஆமையை (எவ்வளவுநாள் குதிரை என்று சொல்வது..மேலும்..எனது கற்பனை மெதுவாகவே வருவதால்..ஆமை என்பதே சரி) தட்டிவிட்டேன்.

பொங்கலுக்கு அரசு இலவசமாகத் தரும் வேஷ்டி..சட்டைப் பற்றி எழுதலாமா? இல்லை நண்பகல் இலவச உணவு பற்றி..வேண்டாம் ..வேண்டாம் ..அது குழந்தைகளுக்கு..அதில் கை வைக்க வேண்டாம்.இலவச சைக்கிள் ,இலவச டி.வி., இலவச நிலம் ..எதைப் பற்றி எழுதுவது?

ஆமை ஓட மறுத்தது..

அந்த சமயம் அலுவலகம் கொடுக்கும் இலவச தேநீர் வந்தது.அதைக் குடித்துவிட்டு..வெளியே வந்தேன்..வெளியே நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிகரெட் ஓசி வாங்கினேன்..அவனே பற்றவும் வைத்தான்.சிறிது நேரம் அரட்டை அடித்தேன் அவனிடம்.திரும்ப மேசைக்கு வந்தேன்.

எண்ணம் இலவசம் பற்றியே இருந்ததால்..அலுவலக வேலை ஓட மறுத்தது..மதியம் ஒரு மணி..

பக்கத்து மேசை ரகு..சாப்பிடப் போகலாமா? என்றான்.உடன் தலையாட்டினேன்.ஏனெனில்..அவன் யாரிடமும் எதையும் இலவசமாக பெறமாட்டான்..நான் ஹி..ஹி..ஹி..

அதைத் தவிர ரகு..அவனோடு யார் வந்தாலும்..அவர்களுக்கு செலவு செய்வான்..(பிழைக்கத் தெரியாதவன்)

சாப்பிட்டுவிட்டு..வந்ததும் மேலதிகாரி கூப்பிட்டு வங்கிக்குச் சென்று..கவனிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றைச் சொன்னார்.'மிகவும் அவசரம்..வண்டியில் சென்று விடுங்கள்'என்றார்.

'சார்..நான் இன்று வண்டி கொண்டுவரவில்லை' என ஒரு சின்ன பொய்யைச் சொன்னேன்.'சரி..சரி..ஆட்டோவில் சென்று விடுங்கள்' என்றார்.அப்பாடா..நூறு ரூபாய் கிளைம் பண்ணலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.வங்கி வேலைகளை முடித்துவிட்டு..திரும்ப மணி நாலாகிவிட்டது.இனி எழுதினாற்போலத்தான்..என எண்ணிய போது..நண்பன் ஒருவன் தொலைபேசினான்.அன்று மாலை திரைப்படம் ஒன்றிற்கு இரண்டு டிக்கட் இருப்பதாகவும்..வருகிறாயா? என்றான்..

கரும்பு தின்னக் கூலியா? 'சரி' என்றேன்.அலுவலகம் விட்டு கிளம்பும் போது ஞாபகமாக வெள்ளைத்தாள்களை எடுத்துக் கொண்டேன்.

சினிமா..இரவு டின்னர் எல்லாம் நண்பன் செலவில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்..எழுதத் தொடங்கினேன்...

"ஏழைகளுக்கு..இலவசம்..இலவசம் என்று கொடுத்து அரசு அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டது..' என ஆரம்பித்தேன்....

8 comments:

ப.கந்தசாமி said...

ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது இப்படித்தானா?

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கு வாழ்க்கையே இலவசம் தான்...!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

simply superb story

மாதேவி said...

ஹா...ஹா.

தீபாவளிக்கு பட்சணம் பட்டாசு இலவசமாக தருகிறார்களா? :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தமைக்கு நன்றிபழனி.கந்தசாமி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தமைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தமைக்கு நன்றி ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தமைக்கு நன்றி மாதேவி