Monday, March 19, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மழுப்புகிறார் பிரதமர் - ஜெ



 அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான பிரதமரின் விளக்கம் மழுப்பலாகவும், பயன் இல்லாததாகவும் உள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப் படுகொலைகளை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசு அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கி அவர்கள் சிங்களர்களுக்கு சமமாக, கண்ணியமாக வாழ வகைசெய்யும் வரை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தீர்மானம் ஒன்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி இருந்து வந்தது.

இந்தத் தருணத்தில், ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படும் என இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கருத்துகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. உடனே அது குறித்து எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த பிப்ரவரி 29ம் தேதி கடிதம் எழுதினேன்.

இந்தக் கடித்ததுக்கு பதில் வராத நிலையில், இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அரசு, 'ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காது, உலக அளவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு பொதுவாக ஆய்வு செய்யும் அடிப்படையில்தான் இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்' என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

உடனே மீண்டும் இந்த மாதம் 3-ம் தேதி பிரதமருக்கு இது குறித்துக் கடிதம் எழுதி ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும், இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.


மார்ச் 19ம் தேதி மக்களவையில் பிரதமர் பேசும்போது, "அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளது. அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும்' என்றுதான் தெரிவித்துள்ளார். இந்த பதிலில் பிரதமர் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பான, பயனில்லாத பதில்.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல் தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று கண்டித்துள்ளார் ஜெயலலிதா

(நன்றி தட்ஸ்தமிழ்)

டிஸ்கி- பிரதமரின் அறிக்கையைப் பார்த்தால் நமக்கும் அது ஒரு விளக்கெண்ணெய் அறிக்கையாகவே தோன்றுகிறது.


2 comments:

ஹேமா said...

http://lulurathi.blogspot.com/2012/03/17.html

aotspr said...

எல்லாம் பதவி பண்ணும் வேலை ஒன்னும் செய்ய முடியாது..........



"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"