Sunday, October 28, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 3 (பகுதி-2)



நாடகங்கள் மீது தணியாத மோகம் கொண்டவர் வரதராஜன்

1994ல் யுனைடெட் விசுவல்ஸ் எனும் குழுவினைத் தொடங்கி கிட்டத்தட்ட 23 நாடகங்களைத் தயாரித்துள்ளார்

நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளை அழகாக அதேசமயம் விரசமில்லா நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லும் நாடகங்கள் இவரின் தனி முத்திரை எனலாம்

இவரது குழுவின் முதல் எழுத்தாளர் சிறகு ரவிசந்திரன்."ஜோடி பொருத்தம்" இவர் எழுதியதே.வேதம்புதிது கண்ணன் இவருக்காக 8 நாடகங்களை எழுதியுள்ளார்.அடுத்து இவருக்கு அதிக நாடகம் எழுதியவர் சந்திரமோகன் ஆவார்

 எல்கேஜி ஆசை, மற்றும் பலர், ஆசைக்கும் ஆஸ்திக்கும்,மெகா சீரியல்,வாஸ்து வாசு,பிளாஸ்டிக் கடவுள்,ரீல் (ரியல்) எஸ்டேட், காசளவு நேசம்,
ஐபிஎல் குடும்பம். நேரடி ஒளிபரப்பு  ஆகியவை இவரின் நாடகங்களில் சில

சோ அவர்கள் வரதராஜனின் கலை ஆர்வத்தைக் கண்டு, "என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்' என்ற தன் பிரபல நாடகத்தை மீண்டும் இவர் அரங்கேற்றம் செய்ய அனுமதித்தார்.சோ தனது நாடகத்தில் ஏற்ற நாரதர் வேடத்தை வரதராஜனும் ஏற்று பிரமாதப்படுத்தினார்.

பின்னர் "துக்ளக்" சத்யா இவருக்காக "இது நம்ம நாடு" என்ற முழுநீள அரசியல் நையாண்டி நாடகத்தை எழுதினார்.

பிரபல பத்திரிகையாளரும், விமர்சகருமான வீஎஸ்வீ அவர்கள் எழுதிய ஸ்ரீதியாகராஜரை இவர் நாடகமாக்கினார்.பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் இசையமைக்க வரதராஜன் தியாகராஜராக நடிக்க "ஸ்ரீதியாகராஜர்" நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்தது.சந்திரமோகனும் இந்நாடகத்திற்கு வசனம் எழுதுவதில் உதவினார்

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்நாடகம் அமைந்தது.

அடுத்து "துக்ளக் தர்பார்" எனும் நாடகத்தை அரங்கேற்றி..அந்நாடகத்தில் "சோ" அவர்கள் வருவது போல ஒரு பாத்திரத்தைப் படைத்து அமர்க்களப் படுத்தினார்..(துக்ளக் சத்யா..கதை,வசனம்).நாடகம் பார்த்தோர் மீண்டும் சோ உயிர் பெற்று வந்து விட்டாரோ என் எண்ணும்படி ரமேஷ் என்பவர்க்கு அப்பாத்திரத்தை வழங்கினார்.அந்நடிகர் இப்போது.."சோ" ரமேஷ் எனும் பட்டப்பெயருடன் நடித்து வருகிறார்.
 
தன் மனைவி உஷா நினைவாக ஒரு டிரஸ்ட் அமைத்து..இவர் மற்ற கலைஞர்களின் நாடகங்களுக்கும் அதன் மூலம் ஆதரவு அளித்து வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல்

இவர் டிவி செய்தி வாசிப்பில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை சொல்லலாம்.1983ல் கபில்தேவ் தலைமையில் இந்தியா கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற நிகழ்ச்சியை செய்தியில் வாசித்தவர் இவர்.தவிர்த்து அப்போட்டியில் இவர் செய்தி வாசித்த நாட்களில் எல்லாம் இந்தியா வென்றது.இவர் வாசிக்காத இரண்டு நாட்கள் போட்டியில் இந்தியா தோற்றது.

தொலைக்காட்சியில் "கல்யாணத்துக்கு கல்யாணம்"."சொல்லடி சிவசக்தி" ஆகிய தொடர்களை தயாரித்து இயக்கியுள்ளார் இவர்.

பற்பல சாதனைகளை படைத்து வரும் இவர் மேன்மேலும் தமிழ் நாடகமேடைக்கு தொண்டு ஆற்றிட அனைத்து கலைஞர்கள் சார்பிலும் வாழ்த்துகள்   




No comments: