Saturday, August 9, 2014

குறுந்தொகை - 72


தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி வந்த தலைமகன்பாற் காணப்பட்ட வேறுபாடுகளை நோக்கி, "இவை நினக்கு எதனால் வந்தன?" என வினவிய பாங்கனுக்கு, "மலைச்சாரலிலுள்ளதொரு தினைப்புனத்திற் குருவியோட் டுவாளொரு மகளது அழகு கண்டு மயங்கி யான் இக்காம நோயுற்றேன்" என்று கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மள்ளனார்.

இனி பாடல்-


பூவொத் தலமருந் தகைய வேவொத்
 
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
 
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
 
பரீஇ வித்திய வேன்ற்

குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே.

                               - மள்ளனார்.

உரை-

இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோளினையும் உடைய, பருத்தியை இடையிலே விதைத்த தினைமுதிர்ந்த புனத்தின்கண் ,அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டுகின்றவளது பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள் பூவினைப் போல அழகில் ஒத்துச் சுழலும் தன்மையையுடையன.ஆயினும் கொடிய தொழிலால் அம்பினை ஒத்து, உன்னைப் போன்ற யாவரும் அறியுமாறு எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.

   (கருத்து) நான் ஒரு மலைவாழ் மகள்பால் நட்பு பூண்டு காமநோய் உற்றேன்.

அவளது விழிகள் அம்புபாய்ந்து அதனால் ஏற்பட்ட புண் யாவரும் அறியும் வண்ணம் ஆயிற்றாம்(அவனது காம நோய்)


தினை வளர்ந்த இடத்திற் பருத்தியை விதைத்து அத்தினை முதிர்ந்து கொய்யப்பட்ட பின்னர்ப் பருத்தி விளைய அதனைக் கொள்ளுதல் மலைவாழ் மக்கள் வழக்கம். 

No comments: