Thursday, August 14, 2014

குறுந்தொகை -77



தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி, “வழிப்போவார் இறத்தற்குக் காரணமாகிய வெம்மையையுடைய பாலை நிலத்தின் துன்பத்தை நினைந்து என் தோள்கள் தலைவர்திறத்து மெலிந்தன” என்று கூறியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் மதுரை மருதன் இளநாகனார்

இனி பாடல்-
   
அம்ம வாழி தோழி யாவதும்
   
தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத்
   
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை
   
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்

அரிய கானஞ் சென்றோர்க்
   
கெளிய வாகிய தடமென் றோளே.

                      - மதுரை மருதன் இளநாகனார்,

உரை-

தோழி ஒன்று சொல்வேன் கேட்பாயாக! வெவ்விய அருவழியில் இறந்த வழிபோக்கர்களுடைய உடலை மறைத்த, தழையைச் செயற்கையாக இட்ட குவியலானது, உயர்ந்த நல்ல யானைக்கு இட்ட நிழலைத் தருதற்குரிய பொருளாய்ப் பயன்படும்.,கடத்தற்கரிய பாலைநிலத்தில் என்னைப் பிரிந்து சென்ற தலைவரிடம், மெலிந்தவனாகிய பரந்த என் தோள்கள் தவறுடையனவெனக் கூறின் சிறிதும் தவறு அல்ல.

கருத்து - பாலை நிலத்துள் பயணம் மேற்கொண்டுள்ள தலைவனின் துன்பம் கண்டு வருந்தி என் தோள்கள் மெலிந்தன
.
 

No comments: