Monday, October 25, 2010

வடகரை வேலன் எழுதாதது ஏன்? -தன்னிலை விளக்கம்

வடகரை வேலன்..பதிவுலகிலிருந்து விலகியுள்ளார்..அவரை மீண்டும் எழுதச் சொல்லி..ஒரு இடுகை இட்டேன்.அந்த இடுகை இங்கே.
அதற்கு பதிலாக எனக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளார்.அதை என் வலைப்பூவிலும் போடச்சொன்னார்.
அந்த மின்னஞ்சலே இது.


அன்பின் TVRK சார்,


முதலில் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு நன்றிகள் பல.


நீங்கள் உரிமை எடுத்துக் கொண்டு ராஜேந்திரன் என்றழைப்பதுதான் எனக்கும்
பிடித்திருக்கிறது. தொடருங்கள்.


ஏன் எழுதவில்லை என உரிமையுடன் கேட்டிருக்கிறீர்கள். பலரும் கேட்டதுதான்.
என்றாலுமதை ஒரு புன்னகையுடன் கடந்திருக்கிறேன். நீங்கள் பதிவாகவே
போட்டிருப்பதால் பதில் சொல்வது, தங்கள் மீதிருக்கும் மரியாதையைச்
சொல்லும் முகமாகவும், அவசியமாகிறது.


நான் தற்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் வேலை எனக்குக் கிடைத்ததற்கு
நான் பிளாக் எழுதுகிறேன் என்பதும் ஒரு காரணம். ஏனெனில் என் பணிகளில்
ஒன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் (செர்ச் என்ஜின் ஆப்டிமைசேசன், கூகிள்
ஆட் வேர்ட்ஸ் கேம்பைன், சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் ). எனவே ஒரு
பிளாக்கராக இருந்ததும் பேஸ்புக்கிலும் ஆர்க்குட்டிலும் டிவிட்டரிலும்
இருந்தது சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்குக்கு பயனளிக்கிறது. என்
பிளாக்கை அலுவலகத்தில் அனைவரும் விரும்பிப் படிப்பது வழக்கம்.


இதே நேரத்தில்தான் பதிவர் அரவிந்த் - சாந்தி விவகாரம் வெடித்தது. அதில்
அநாவசியமாக என் பெயர் இழுக்கப் பட்டு தவறான விதத்தில் பரப்பப்பட்டது.
எனது அலுவலக நிர்வாகிள் அதை விரும்பவில்லை.


மேலும் வடகரை வேலன் என்பது என் தந்தையின் புனைப் பெயர். வடகரை வேலன் ஒரு
ஆணாதிக்கவாதி பெண்களை இழிவு படுத்துபவன் என்பது போன்ற ஆதாரமற்ற / இட்டுக்
கட்டிய குற்றச்சாட்டுக்கள் என் தந்தையின் பெயருக்கு களங்கம்
விளைவிக்கும்விதமாக இருந்தன.


எனவே இனி எழுதவேண்டாம்; குறைந்தபட்சம் வடகரை வேலன் என்ற பெயரில் எழுத
வேண்டாம் என முடிவு செய்தேன்.


ஆனால் என் பிளாக் வேறு விதத்தில் உபயோகமாக இருந்திருக்கிறது என்பது
பலரது அழைப்பில் இருந்து உணர்ந்து கொண்டேன். எனது "கதம்பம்" பதிவுகள்
மூலம் நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் பிறர் கண்டுகொள்ள உதவியாக
இருந்திருக்கிறேன். இரண்டாவதாக எனது பிளாக்கில் இருந்த பிளாக்ரோல் மூலம்
நல்ல பதிவுகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கவும் முடிந்திருக்கிறது. நல்ல
விதமாக பயன் தந்திருக்கிறேன் என்ற திருப்தி போதும்.



சிறு சிறு பிரச்சினைகளை இருபக்கமும் பேசித் தீர்த்து வைத்த அனுபவம்
தற்போதைய வேலையில் மிகவும் பயன்படுகிறது. இரு ஊழியருக்கிடையிலோ,
கஸ்டமருடனோ அல்லது சப்ளையருடனோ ஏற்படும் விவகாரங்களை சுமுகமாகத்
தீர்த்து வைக்க உதவுகிறது. எனவே நிர்வாகிகளிடம் நல்ல பெயரும்
சம்பாதித்திருக்கிறேன்.


2008 மே மாதம் எழுத வந்தேன் கிட்டத் தட்ட இரு வருடங்கள் நானும் ஏதோ எழுதி
இருக்கிறேன். என்றாலும் பதிவுலகின் மூலம் கிடைத்த நட்பு மதிப்பு மிக்கது.
இப்பொழுதும் நான் அந்த உறவுகளைத் தொடர்கிறேன். இந்தப் பதிலைக் கூட
அபிஅப்பா வீட்டில் இருந்துதான் எழுதுகிறேன். என்னுடைய வீடு போல நான்
உணரும் சிலரது வீடுகளில் நமது தொல்காப்பியன் வீடும் ஒன்று. இந்த உறவுகள்
போதும் சார். என் உறவினர் வீடுகளில்கூட இல்லாத உரிமையும் பரிவும்
எனக்குக் கிடைக்கிறது. திருப்தியாக, சந்தோஷமாக இருக்கிறேன்.


இந்த வேலையில் கூட என்னுடைய டார்கெட்டை அச்சீவ் செய்ய பதிவர்கள் சிலர்
கொடுக்கும் லீடுகள் மிக உதவியாக இருக்கின்றன. சிதம்பரத்தில் ஒரு ஆர்டர்
விஷயமாக வந்தவன் அபி அப்பா வீட்டில் தங்கி இருக்கிறேன். குறை ஒன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா என்ற ராஜாஜியின் பாடல்தான் ஞாபகம் வருகிறது.


தற்பொழுது பஸ்ஸில் மட்டுமே இருக்கிறேன். அதிலும் எழுதுவதில்லை
குறிப்பிட்ட சிலரை மட்டும் பாலோ செய்து கொண்டு அங்கு நடக்கும் நல்ல
ஆரோக்கியமான விவாதங்களில் பங்கு கொள்கிறேன். தம்பி ஜீவ்ஸுடன் கம்ப ராமாயண
விவாதம் அவ்வகைகளில் ஒன்று.



பொதுவாக பதிவர் உலகம் எப்படியாவது புகழ் பெறத் துடிப்பவர்களாலும்,
பிறரது பிரபலத்தில் வயிறு எரிபவர்களையும் கொண்டிருக்கிறது. மற்றவர்களை
அவர்கள் எழுத்தில் வெல்ல முடியாதவர்கள் இந்தக் கும்பல். எனவே அவர்கள்
இத்தகைய கீழ்த் தரமான செயல்களில் இறங்குகிறார்கள். இப்படிப் பிரபலமாக
அவர்கள் கொடுக்கும் விலை சமயங்களில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது;
நம்பிக்கைத் துரோகம் செய்தல், குடும்ப உறவைச் சிதைத்துக் கொள்ளுதல்
போன்றவை அதற்கான விலை என்பது இயல்பான ஒன்றாகி விட்டது. வெகு
குறைவானவர்களே இத்தகைய மனப் பிறழ்வுகளில் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள்
என்றாலும் அவர்கள் செய்யும் அலப்பறை அயர்ச்சியை உண்டாக்குகிறது. நல்ல
இலக்கியத் தேடல் உள்ள சிலர்கூட இந்தப் பிரபல ஆசையினால் மனசாட்சிக்கு
விரோதமான காரியங்களில் ஈடுபடுவதும் அதன் பிறகு அதை நியாயப் படுத்துவதும்
கேடு கெட்ட செயல். சரி அது அவர்கள் இஷ்டம்.


ஆனால் என்ன/எப்படி எழுதவேண்டும் என்பதை ஒரு சிலர் முடிவு செய்யும் நிலை
அராஜகமாக இருக்கிறது



இந்த நிலை மாறும்வரை சற்று அமைதியாக இருப்பது என் தற்போதைய முடிவு.


தங்களுக்கும், தங்களைப் போலவே என் மீது உரிமை பாராட்டுபவர்களுக்கும் என்
சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்


வடகரை வேலன்

13 comments:

நசரேயன் said...

மெதுவா வாங்க அண்ணாச்சி காத்துகிட்டு இருக்கேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
மெதுவா வாங்க அண்ணாச்சி காத்துகிட்டு இருக்கேன் //

இருக்கோம்

அரசூரான் said...

அபி அப்பா வீட்டுல விருந்தா? நடக்கட்டும் நடக்கட்டும். தொல்ஸ் உங்களை மீண்டும் எழுத சொல்லுவார்ன்னு எதிர்பார்க்கிறேன்... நாங்களும்.

துளசி கோபால் said...

'இதுவும் கடந்து போகும்' என்றுதான் நினைக்கிறேன்.

இதுக்குத்தான் 'பூனைப்பெயர்' எல்லாம் வச்சுக்கக்கூடாது. நம் சொந்தப்பெயரில் எழுதுனா பிரச்சினை இல்லை பாருங்க:-)

ராஜேந்திரன்.வாங்க திரும்பவும் .

காலம் எல்லாவற்றையும் ஆற்றும்!

அபி அப்பா said...

ஆகா அண்ணாச்சி இதை தான் சீரியசா அடிச்சுகிட்டு இருந்தீங்களா?

@அரசூரான்! பொதுவாவே வீட்டில் எப்போதும் பதிவுலகை பத்தி பேசிப்பது இல்லை. அதனால அண்ணாச்சிகிட்டயும் ஏன் எழுதலை என கேட்கவில்லை. அவருக்கு தெரியாத நல்லது கெட்டதா? அப்படின்னு நினைச்சு விட்டுட்டேன். ஆனா டிவிஆர் அய்யா அவரை விட மூத்த அனுபவஸ்தர். அவர் எழுத சொல்லி பதிவு போட்ட போது வந்து சகட்டுமேனிக்கு வழிமொழிந்தேன்!

மங்குனி அமைச்சர் said...

உங்கள் பணி பாதிக்கப் படுவது நிமித்தமாக ஒதுங்கி இருந்தால் பரவாஇல்லை , மீண்டும் சரியாக இருக்கும் போது வாருங்கள் ...

ஹுஸைனம்மா said...

//மற்றவர்களை
அவர்கள் எழுத்தில் வெல்ல முடியாதவர்கள் இந்தக் கும்பல்//

பதிவுலகின் நிலைகுறித்துச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிகக் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

Anonymous said...

பதிவுலகில் இருந்து கொண்டே அவர்களை எதிர்க்கலாம்

Unknown said...

அண்ணே மீண்டும் எழுதுங்க ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அண்ணாச்சி.., எல்லாம் நல்லதாகவே நடக்கும். எழுத வாங்க..

Prathap Kumar S. said...

:(( :))

நிகழ்காலத்தில்... said...

அண்ணாச்சிக்கு..

நீ ரொம்பவுமே பிறருடைய கருத்துக்கு மதிப்பளித்து குழம்புவதாக என் மனதிற்குப்படுகிறது.

உங்களை அவமதித்தவர்களையும் பொருட்படுத்தி அவர்கள் நோக்கம் நிறைவேற உதவிவிட்டீர்கள்.

அலுவலக நண்பர்கள் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தொழில் சூழ்நிலைகருதி யோசிக்க வைக்கிறது.

தடைகளை தாண்டி நண்பர்களோடு கலந்து மகிழ் வலைப்பதிவு ஒரு கருவிதானே.

பலரையும் சமாதானப்படுத்தும் தாங்கள் உங்களோடு சமாதானமாகப் போனால் என்ன.

விரைவில் வலைப்பதிவைத் தொடங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.


நிகழ்காலத்தில்..
நிகழ்காலத்தில் சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி