Thursday, November 24, 2016

கலைஞர்



திரைப்பட வசனகர்த்தா, காதாசிரியர்,பாடலாசிரியர், படத்தயாருப்பாளர்,நாடக நடிகர்,இலக்கியவாதி,அரசியல்வாதி, பத்திரிகையாளர், மனித நேயம் மிக்கவர்..அப்பப்பா...இவருக்குத்தான் எத்தனை முகங்கள்
எதற்கெடுத்தாலும் நேரமில்லை என சோம்பித்திரியும் பலரை நாம் அறிவோம்.இயற்கை அவர்களுக்கு அளித்துள்ள ஒரு நாளுக்கான இருபத்தி நான் கு மணி நேரத்தைத்தான் கலைஞருக்கும் வழ்னகி இருக்கிறது.ஆனால், அதை வைத்துக் கொண்டு அவர் வாழ்நாளில் அவர் சாதித்துவரும் சாதனைகள்...இதை எண்ணும்போது பிரமிப்பாய்த்தான் இருக்கிறது
நாகப்பட்டிணம் மாவட்டம், திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் முத்துவேல், அஞ்சுகம் தம்பதியருக்கு பிறந்தது ஒரு ஆண் மகவு.அக்குழ்ந்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர் இடப்பட்டது.அக்குழ்ந்தையே பின்னாளில் பல சாதனைகள் புரிந்த கலைஞர் கருணாநிதி ஆவார்.
1947ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படம் மூலம் அவரது திரையுலக பிரவேசம் நடந்திருந்தாலும், அவரது எழுத்தாற்றல் 14 வயதிலேயே கையெழுத்துப் பிரதி பத்திரிகை நடத்தும் அளவிற்கு இருந்தது
அவரது வயது ஏற ஏற..எழுத்தாற்றலும் வளர்ந்தது.பகுத்தறிவு, திராவிடம் ஆகிய கருத்துகளின் அடிப்படையில் கதைகள், கட்டுரைகள், அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு முதலிய பத்திரிகைகளில் வந்தன
நாடகத் துறையிலும் அவரது பேனா சென்றது.பழநியப்பன் என்ற நாடகத்தில் ஆரம்பித்து தூக்கு மேடை,மணிமகுடம்,விமலா அல்லது விதவையின் கண்ணீர்,அம்மையப்பன், வாழமுடியாதவர்கள் என அவர் எழுதிய நாடகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்
தூக்குமேடை நாடகத்திற்கு வந்த எம் ஆர் ராதா, கருணாநிதிக்கு, கலைஞர் என்று பட்டமளித்து பாராட்டினார்.
அதுவே அவரது பெயராகக் குறிப்பிட ஆரம்பித்துவிட்டது எனலாம்
தமிழ்த் திரைப்ப்ட உலகில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கிய அவரின் எழுத்துக்கள், வீரம்,காதல்,சோகம், நையாண்டி,தத்துவம் என அணைத்து பரிமாணங்களிலும் விளையாடியது,தன் திரைப்பணி மூல்மாக சமுக மாற்றத்தை ஏற்படுத்தியவர் எனலாம்
வெறும் கதை, வசனகர்த்தாவாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராக மேகலா பிக்சர்ஸ்,அஞ்சுகம் பிக்சர்ஸ்,கலையெழில் கம்பைன்ஸ்,பூம்புகார் புரடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலமாக 29 படங்களை கலைஞர் தயாரித்துள்ளார்.
60 ஆண்டுகளில் 75 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்பட ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவர் இவர்.
நூற்றாண்டு கண்ட திரையுலகில் 70ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர்.வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும், ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், தென் பாண்டி சிங்கம் என சாதனை புரியும் சாதனையாளர்
திரையுலகின் தாதா சாகேப் பால்கே விருது, இந்த மாமனிதருக்கு இன்னமும் வழ்ங்கப்படாதது துரதிருஷ்டமே.
திரையுலகின் மூத்த பெருமகனான இவருக்கு அந்த விருது கிடைத்திட...இப்பதிவைக் காணும் அனைவரும் ஷேர் செய்யவும்.திரையுலகைச் சேர்ந்தவர்கள்..சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்லவும்.
முடிந்தால்..கலைஞர் பாணியிலேயே மைய அரசுக்கு கடிதங்களையும் எழுதலாம் ஆயிரக்கணக்கில்

Sunday, October 9, 2016

ஓடிடிவோம்..ஓடிடிவோம்

                 


ஓடிடிவோம்..ஓடிடிவோம்
விரைவாய் ஓடிடிவோம்
அ்டைத்திட சித்த ராமய்யா வரார்
வத்த வைக்க வட்டள் வரார்
தேமென்னு கிடக்க வேண்டிய தேவே வரார்
எட்டிக்காய் எட்டிடு வரார்

நாம் இவர்கள் சொத்தா
இயற்கையின் சொத்து
தேவை உள்ளோர்க்கு
உதவிடுவோம்
வீணில் பேசுவோரான
அவர்களை ஓடவிட்டு
ஓ்டிடுவோம் ஓடிடுவோம்
தெற்கு நோக்கி...

ஓடிடுவோம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

திருக்குருகூர் என்ற திருத்தலத்தில் நம்மாழ்வார் அவதரித்தார். அத்தலத்திற்கு அருகில் உள்ள திருக்கோளூரில் மதுரகவியாழ்வார் தோன்றினார். சைவத்தில், வேளாளர் குலத்தில் தோன்றிய திருநாவுக்கரசரை, வேதியர் குலத்தில் பிறந்த அப்பூதியடிகள் குருநாதராகக் கொண்டார். அது போல், வைணவத்தில், வேதியர் குலத்தவராகிய மதுரகவி ஆழ்வார், வேளாளர் குலத்தில் தோன்றிய நம்மாழ்வாரை, குருநாதராகக் கொண்டார். திருக்கோளூரில் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயருடன் திருமால் எழுந்தருளியுள்ளார். உடையவராகிய இராமானுஜர் வைத்தமாநிதிப் பெருமாளை, சேவிக்கத் திருக்கோளூருக்கு எழுந்தருளினார்.
இராமானுஜர் ஊருக்குள் நுழைந்த நேரத்தில், ஒரு பெண்மணி திருக்கோளூரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தாள். அவளைக் கண்ட இராமானுஜர், “தாயே! அடியேன் ஊருக்குள் வரும்பொழுது, தாங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள்?” என்றார். “சுவாமி! தங்களைப் புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை” என்றாள் அப்பெண்மணி.
காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும், அவர்கள் செய்தவை மகத்தானவை என்றும் கூறினாள். அத்துடன், அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் கூறினாள். இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கவிதை வடிவில் கூறினாள்.
அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை அக்கவிதை அடிகளில் வெளிப்படுத்தினாள். மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி, அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள். வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள்.
இராமானுஜரும் திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர். அப்பெண்மணியை இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார். அப்பெண்மணியின் இல்லத்திற்கும் இராமானுஜர் எழுந்தருளித் திருவமுது செய்தார்.
அப்பெண்மணியை, ‘திருக்கோளூர், பெண்பிள்ளை’ என்று குறிப்பிடுவர். அவள் இயற்றிய நூலை, ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று போற்றுகின்றனர். திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வரலாற்றிலும் ஒவ்வொரு ரகசியம் (மறைபொருள்) அடங்கியுள்ளது.

அவள் சொன்ன 81 செயல்கள்

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!
2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!
3. தேகத்தை விட்டேனோ ரிஷி பத்னியைப் போலே!
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே!
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே!
9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே!
10.முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!
11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12.எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!
13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14.அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15.ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!
16.யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18.அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20.அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!
21.தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22.தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23.ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24.ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25.அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!
26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29.கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!
31.குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33.இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!
34.இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35.இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
37.அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38.அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39.அனுப்பி வையுமென்றேனோ வசிஷ்டரைப் போலே!
40.அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41.மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45.வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!
46.வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47.அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48.அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49.இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50.இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!
51.இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52.இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே!
53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54.கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55.இருகையும் விட்டேனோ திரெளபதியைப் போலே!
56.இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57.இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58.நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!
61.அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே!
62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63.அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!
66.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67.அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே!
68.கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!
71.சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!

73.உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74.என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75.யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!
76.நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79.வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே!
80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!
81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

இனி ஒவ்வொன்றைப் பற்றியும் பார்ப்போம்

Thursday, September 8, 2016

கலைமாமணி விருதும்...தமிழக அரசும்

கலைமாமணி விருதும்...தமிழக அரசும்


இயல், இசை, நாடகம் ஆகிய வற்றில்     நீண்ட நாள் தொண்டாற்றியவர்கள், கலைஞர்கள், திரைப்படத்தைச் சார்ந்தோர் ஆகியோர்க்கு ,தமிழக அரசு சார்பில், இயல்-இசை-நாடக  மன்றம் "கலைமாமணி' விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம்

நாட்டிய/நாடகக் கலைஞர்களில் பலர் அந்தந்த கலையின் மீதான  பற்று காரணமாகவே அதில் இடுபட்டுள்ளனர்.

குறிப்பாக நாடகக் கலைஞர்கள், அதுவும் அமெச்சூர் நடிகர்கள் நாடகங்கள் அழியாது காத்து வருகின்றனர் என்றால் மிகையல்ல

இவர்களால் நாடகங்களில் பொருள் ஈட்ட முடியாது..ஆயினும் தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வரக் காரணம், இவர்களுக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுதல்களும் மற்றும் கிடைத்து வரும் சில விருதுகளும் தான்

ஒரு கலைஞனுக்கு, அவனுக்குரிய அங்கீகாரம் குறித்த காலத்தில் கிடைத்தால்தான், அவனது எஞ்சிய வாழ்நாளில் மகிழ்ச்சியுடன் இருப்பான்

அதை    விடுத்து அவன் முதுமையடைந்து...இன்னும் சில ஆண்டுகளே அவன் வாழ்நாள் என்ற நிலையில்..அவனுக்கு கிடைக்கும் விருதுகளால் அவனுக்கு என்ன பலன்

தமிழக அரசு வழ்ங்கிவந்த "கலைமாமணி" விருது, க்லைத்துறையில் தனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என மகிழும் கலைஞர்கள் எவ்வளவு பேர்!!

ஆனால்,  தமிழக    அரசு சில ஆண்டுகளாக இவ்விருதை யாருக்கும்  வழங்காமல் இருந்து வருகிறது.

கலையுலகினர்   (திரைப்படம்/நாடகம்/நாட்டியம்/நாட்டுப்புற கலைஞர்கள்) அனைவரின் சார்பிலும், தமிழக அரசு மீண்டும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை ஆண்டு தோறும் வழங்கிட வேண்டும் என வேண்டுகிறேன்

காலாகாலத்தில் கிடைக்காத எதற்கும் மதிப்பில்லை..என்பதை உணர்ந்து...    தகுதியுள்ள கலைஞர்களை அவர்கள் வாழ்நாளிலேயே கௌரவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்

(பத்திரிகை நண்பர்கள்...இவ்வேண்டுகோளை அரசின் காதுகளுக்கு எட்டச் செய்திட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்)

Saturday, July 30, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள்- 4


காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

ஆதலினால் காதல் செய்வீர்
--------------------------------------------------

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

Friday, July 29, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள் 3

பேசும் முன் யோசியுங்கள்
--------------------------------------------


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை ஒரு ரூபாய் இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் ஒரு ரூபாயை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

Thursday, July 28, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள்- 2

நலம் நலம் அறிய அவா>>

பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகளிலே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்துடன் நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 7

                                               
ஏ.எஸ்.ஏ.சாமி

ஏ.எஸ்.ஏ. சாமி என அழைக்கப்பட்ட ஏ.சூசை அந்தோணி சாமி, தமிழ்நாடு குருவிக்குளம் என்ற கிராமத்தைச் சேற்ந்தவர்.இவர் பெற்றோர் இலங்கைச்  சென்று கொழும்பு நகருக்குக் குடி பெயர்ந்தனர்.இவர் இளம் வயதில் பி.ஏ.(ஹானர்ஸ்) ஆக்ஸ்ஃபோர்ட்  பல்கலைக் கழகம், லண்டனில் படித்தார்,பின் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்த போது இவரது குடும்பம் திருநெல்வேலி பாளயம்கோட்டைக்கு வந்தது.

பில் ஹணன் என்ற நாடகம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.ஜூபிடர் சோமு இந்நாடகத்தை படமாக்கினார்.


பின் வால்மீகி, ஸ்ரீமுருகன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.ஸ்ரீமுருகன் படத்தை இயக்கினார்.

ராஜகுமாரி எனும் படத்தில் எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக அறிமுகமானார்.

அபிமன்யூ, மருமகள், நீதிபதி போன்ற படங்களுக்கு கதை ,வசனம் எழுதினார்.

கற்புக்கரசி என்ற படம் தயாரிப்பில் இருந்த போது அதன் இயக்குநர் மறைந்துவிடவே..அப்படத்தை இயக்கும் வாய்ப்பை சாமி பெற்றார்.

தங்கப்பதுமை,அரசிளங்குமரி,ஆனந்தஜோதி ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வந்த வெற்றி படங்கள் எனலாம்.

தவிர்த்து, கடவுளைக்கண்டேன்,ஆசை அலைகள், துளிவிஷம் ஆகிய படங்களையும் இவர் இயக்கினார்.

Wednesday, July 27, 2016

TVR ன் ஒரு பக்கக் கட்டுரைகள் - 1 - நீண்ட நாட்கள் வாழ

நீண்ட நாட்கள் வாழ
உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)
உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.
சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.
மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.
மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.
நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.
இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.
எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?
தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்
இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்
ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.
இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு...வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

Thursday, July 21, 2016

நீங்கள் மேடைப் பேச்சாளர் ஆக வேண்டுமா?



நமக்கெல்லாம்..மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட வேண்டும் என்றும் உள்ளூர ஒரு விருப்பம் இருக்கும்.

பேசுவது என்பதே ஒரு கலை.அதற்காக பேசுவதையெல்லாம் கலை என்று சொல்லிவிட முடியாது.அதுவும்..மேடையில் பேசுவது என்பது...!!! எளிய நடையில் பலர் முன் நின்று மேடையில்..உயர் கருத்துகளைச் சிறந்த முறையில்..கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும்.

மேடைப்பேச்சை 'சொற்பொழிவு' என்பர்.சொற்களைத் தேடிப் பிடித்து..எளிய நடையில்..அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.

மழை பொழிகிறது என்கிறோம்....மழை நீர்த் துளிகள்..ஒன்றன் பின் ஒன்றாக சீராக..நேராக..அமைதியாக பெய்வது தான் 'பொழிதல்' எனப்படுவது.அழகாக ஒன்றன் பின் ஒன்றாக வரம்பு மீறாமல் இருப்பதுதான்.வரம்பு கடந்தால் மழை பொழிதலும்..மழை அடித்தல், மழை கொட்டல் என்றெல்லாம் ஆகிவிடும்.

அதுபோலவே தான் சொற்பொழிவும்..வரம்பு கடந்தால்..மக்களிடமிருந்து..கிண்டல்,கத்தல்,திட்டுதல் என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டு விடும்..

ஒருவர் பேசும் சொற்கள் அனைத்தும் நல்ல சொற்களாக, பண்பட்டவைகளாக இருந்தாக வேண்டும் என்ற கவலை சொற்பொழிவாற்றுவோருக்கு இருக்க வேண்டும்.சொற்கள் பற்றி வள்ளுவன்
சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு

ஆக்கமும், அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால்..எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராது கவனமாக இருக்க வேண்டும்...என்கிறார்.

நாம் சொல்வதை பிறர் எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை விட..நாம் என்ன பேசினோம் என்பது மக்களுக்குப் புரிகிறதா என்பதே முக்கியம்.

நாம் கற்றதை ..பிறர் உணரும் வண்ணம் சொல்லத் தெரியாதவர்..கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லா மலருக்கு ஒப்பாவர்..(யாருக்கும் பயன் தரா மலர்) என்கிறார் வள்ளுவர்.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

ஒருவனின் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவது அவன் வாய்ச் சொற்களே..மற்ற அனைத்தும் போலித் தோற்றங்கள்.ஆகவே..பிறரிடம் பேசும்போது..அதிலும் குறிப்பாக மேடையில் பேசும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும்..இல்லையேல்..நமக்கு வீழ்ச்சியே ஏற்படும்.

எதைக் காப்பாற்றாவிடினும் நாக்கை காப்பாற்ற வேண்டும்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும்..நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.


நல்ல கருத்துகள் சொற்பொழிவுக்கு அவசியம்.நாம் பேசுவது மக்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால்..அவை நல்ல கருத்துகள் கொண்டதாய் இருக்க வேண்டும்.பண்பற்ற..பயனில்லா சொற்களை மறந்தும் பேசக் கூடாது.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும்..பண்பற்றதுமான சொற்களை பலர்முன் சொல்வது மகிழ்ச்சியைக் குலைத்து..நன்மையை மாய்க்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பேச்சுக்கு கருத்துகளை எப்படி அமைப்பது.அதற்கு ஒரு வழி..

முதலில்..இன்று நாம் எதைப்பற்றி பேச வேண்டும்..என்னென்ன பேச வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.முதல் கேள்விக்கான விடை தலைப்பாகவும்..அடுத்தக் கேள்விக்கான பதில் கருத்தாகவும் அமையும்.

அதை ஒரு சிறு அட்டையில் குறித்துக் கொண்டு 1, 2 என இலக்கமிட்டு முறைப்படுத்தி மனனம் செய்துக் கொள்ள வேண்டும்.பின் மேடை ஏறியதும் மனப்பாடம் செய்ததை வரிசைப் படுத்தி பேச வேண்டும்.இது வெற்றிகரமான பேச்சாக அமையும்.ஆரம்ப பேச்சாளர்கள்..இரண்டு அல்லது மூன்று கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு..ஐந்தாறு நிமிடங்களுக்குள் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் இது நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

குறிப்புகள் எடுக்கையில் பேச வேண்டிய கருத்துகள் ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு சொற்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.அதுதான் மனதில் பதியும்.மனதில் பதிந்ததைப் பேசி முடித்ததும்..நம் குறிப்பை எடுத்து..எல்லாம் பேசி விட்டோமா என்று பார்க்கலாம்.ஏதேனும் விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.ஏனெனில் நம் பேச்சை கேட்டவர்களுக்கு அது தெரியப் போவதில்லை.
தொடக்கப் பேச்சாளர்கள்..எழுதியிருக்கும் குறிப்பை இடையிடையே பார்த்து பேசலாம்..ஆனால் இதுவே பழகிவிடக் கூடாது.

மேடைப் பேச்சில் எழுதிப் படிக்கிறார்களே பொறுப்பானவர்கள் என்று கேட்கலாம்..பொறுப்பான பதவியில் உள்ளவர்கள்..வேறு ஏதும் பேசிவிடக் கூடாதே என்பதற்காக கையாளும் முறை இது.ஆனால் பேச்சாளர்களுக்கு ஏற்றதல்ல இது.பார்த்து படிப்பது படிப்பதாகவே இருக்குமேயன்றி..அது பேச்சாக இராது.அதில் உணர்ச்சியும் இராது..

இப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாக ஆகவே முடியாது




Thursday, July 14, 2016

கர்மவீரர் காமராஜர்


1)காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அனைக்கட்டுகள் கட்டப்பட்டன.பேச்சிப்பாறை,மணிமுத்தாறு,வைகை,ஆழியாறு,பரம்பிக்குளம்,குந்தா,கீழ்-மேல் பவானி,கிருஷ்ணகிரி,சாத்தனூர்,கோமுகி அணைகள் கட்டப்பட்டன. அவர் அதனால் அணைகளின் நாயகன் எனப்பட்டார்.

2)காமராஜர் தனது 27 ஆவது வயதில் முதன்முறையாக சிறை சென்றார்.1930ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் பல முறை சிறை சென்றுள்ளார்.தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.தவிர்த்து..நாட்டின் விடுலை எண்ணத்திலேயே இருந்து தன் திருமணத்தை புறந்தள்ளியவர்.

3)அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சன் இந்தியா வந்த போது காமராஜரைப் பற்றி கேள்விப் பட்டு அவரை சந்திக்க விரும்பினார்..ஆனால் காமராஜர் அதற்கான நேரத்தை ஒதுக்கவில்லை.உதவியாளர் 'ஐயா உலகே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே வலிய வந்து பார்க்கத் துடிக்கும் போது...'என இழுத்தார்.
காமராஜர் அவருக்கு பதில் அளித்தார்..'அவர் பெரிய ஆளா இருக்கலாம்னேன்..ஆனா நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனப்போ நிக்சனைப் பார்க்க விருப்பப்பட்டார்..நிக்சன் பார்க்கமுடியாதுன்னு சொல்லிட்டார்.நம்ம ஊர்க்காரரை பார்க்க விரும்பாதவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றார் த்ன்மானத் தலைவர்.

4)பள்ளியில் படிக்கவரும் மாணவர்கள்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடையில் வருவதால் அவர்கள் மனதில் வேற்றுமை ஏறபடும் என்பதால், குழந்தைகள் மனதில் பணக்காரன்,ஏழை என்ற ஏற்றத்தாழ்வு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என எண்ணிய காமராஜரின் சிந்தனையில் உதித்ததுதான் இலவச சீருடைத் திட்டம்

5)ரஷ்யா செல்லும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது..மாஸ்கோவில் குளிர் வாட்டி எடுத்தும், அவர் கோட் அணியாது எளிய கதர் வேட்டி,சட்டையுடன் இருந்தார்..'நான் எந்நேரத்திலும் எந்நிலையிலும் ஓர் ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன்' என்றார்.

6)1956ல் பள்ளியில் இலவச உணவு திட்டமும்..1960ல் பள்ளியில் இலவச கல்வியும் இவர் காலத்தில்தான் அமுலாக்கப்பட்டது.

7)காமராஜர் கடைசிவரை எம்.டி.டி. 2727 என்ற எண்ணுள்ள ஒரே சவர்லே காரை உபயோகித்தார்...சென்னையில் வாடகை வீட்டிலேயுமே இருந்தார்..தன்னலமற்ற தலைவர் அவர்.

8)காமராஜர் பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது

Tuesday, July 12, 2016

மழை பார்த்தல்...

                                 
                     


 மழை பிரமிப்புதான்

முதல் மழை என்று பார்த்தேன்?

நினைவில் இல்லை

பார்க்கும் மழையெல்லாம்

முதல் மழைதான்

மனதில் மணம் நிரப்பி

நாசியிலும் ருசிக்க வைக்கிறது

எப்பணியாயினும்..

மழை வந்திடின்

அதைப் பார்த்தலே

முதல் பணி எனக்கு


Thursday, March 17, 2016

கலைஞரின் பன் முகங்கள்



நான் எழுதி வரும் "தமிழ் நாடக வரலாறு' நூலில்..கலைஞர் பற்றிய குறிப்பு
(புத்தகத்தின் ஒரு முன்னோட்டம் என்று கூறலாமா?)

"திராவிடக் கழகக் கொள்கைகளை நாட்டு மக்களுக்குப் பரப்புவதில் அண்ணாவிற்கு இணையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த கலைஞரின் "பராசக்தி" மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம்.

கடவுள் பெயரைக் கூறி இழிவான செயல் புரிபவர்களின் பித்தலாட்டங்களை வெளிக் கொணர்ந்தது "பராசக்தி" நாடகம்.பின்னர் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சஹஸ்ரநாமம் நடிக்க படமாக வந்து. மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

பெண்களின் உரிமைக்காக இவரால் எழுதப்பட்ட நாடகம் "நச்சுப் பொய்கை"

கலைஞர் எழுதிய "தூக்கும் மேடை". ஒரே முத்தம்" பழக்கூடை" "வெள்ளிக் கிழமை" ,"காகிதப்பூ", போர்வாள்", ஆகிய அனைத்துமே சீர்திருத்த நாடகங்கள் ஆகும்.காகிதப் பூ நாடகத்தில் கலைஞரும் நடித்தார்.

இணையற்ற நாடக ஆசிரியர், இலக்கியவாதி, பாடலாசிரியர்,கதை வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர்,நாவலாசிரியர்,தொல்காப்பிய பூங்கா சமைத்தவர், குறளோவியம் கண்டவர், என அனைத்துத் துறையிலும் கோலோட்சி நின்றதுடன்...இணையில்லா மக்கள் தலைவராகவும் திகழ்கிறார்.

இந்த அதிசயம் வேறு எந்த எழுதாளர்களுக்கோ...தலைவர்களுக்கோ கிடைக்காத பேறு எனலாம் 

Friday, February 26, 2016

வள்ளுவன் வாக்கு



நமக்கு நெருங்கிய உறவினர்..அவர் நம்மிடம் மிகவும் அருமையாக உறவுடன் இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், மனதிற்குள்..நம்மைப் பற்றி வன்மம் பாராட்டுகிறார்..இப்படியிருப்பதால் நமக்கு என்றேனும் ஒருநாள் அவரால் கேடு உண்டாகும்..இதற்கு உதாரணம் சொல்வதானால்...இப்போதெல்லாம்  தண்ணீர் பாக்கெட் கிடைக்கிறது.வெயிலில் அலையும் நாம் தாகத்திற்கு அதை வாங்கி அருந்துகிறோம்.அது பார்க்க தெளிவாக, இனிமையாகத் தெரிந்தாலும்..அந்த நீர் சாக்கடைக்கு அருகில் இருக்கும் குழாய் ஒன்றிலிருந்து அப்படியே பிடித்து அடைக்கப் பட்ட கிருமிகள் அதிகம் உள்ள நீர்.இதை அருந்துவதால் தீமைதான் உடலுக்கு உண்டாகும்.அதே போன்றதுதான் சுற்றத்தினர் உட்பகையும்..தீங்கு விளைவிக்கும்.

இதையே உட்பகை என்னும் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்கிறார்...

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்



நீர் என இரு இடங்களிலும், இன்னா என்பது நான்கு இடத்திலும் சொல்லி சொல் விளையாட்டு விளையாடுகிறார் வள்ளுவர்.

இதன் பொருள்- இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும் கூடக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்..

Tuesday, February 23, 2016

இருந்தால் நன்றாயிருக்கும்...(சிறுகதை)



தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.

Saturday, February 20, 2016

ஆதலினால் அன்புடன் இருப்பீராக!



காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

Thursday, February 18, 2016

நலம்...நலம் அறிய ஆவல்



பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகளிலே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்துடன் நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.

Wednesday, February 17, 2016

அரசு ஊழியர் வேலைநிறுத்தம்



சாதாரணமாகவே பொது மக்களிடம் அரசு ஊழியர்க்கு ஆதரவு கிடையாது.
எந்தக் காரியம் நடக்க வேண்டுமானாலும் சம்திங் சம்திங் கொடுக்க வேண்டும்.
இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று.
கேட்டால் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களிடம் பலிக்காது.அப்படியே பலிக்கும் என்று சொல்பவர்கள் இருந்தால் ஒரு விழுக்காடு இருக்கலாம்.
இந்நிலையில், இந்த அரசின் காலம் முடியும் நேரத்தில், அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்களின் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் எல்லாம், தவறாகவே பார்க்கப்படும். இதனால் கொஞ்ச நஞ்ச ஆதரவு மக்களிடையே இருந்தாலும், அது மாறும்.
ஆகவே...அனைத்து சாராரும்...போராட்டங்கள் செய்வதையெல்லாம் நிறுத்திவிட்டு...இந்த அரசு பிடிக்கவில்லையெனில், ஜனநாயக முறைப்படி வரும் தேர்தலில் தூக்கி எறியட்டும்.
அதைவிடுத்து, போராட்டங்கள் செய்வதெல்லாம், அனுதாப அலைகளை உருவாக்கி, இந்த அரசுக்கு ஆதரவாகவே அமையும்  . 

Tuesday, February 16, 2016

பேசும் முன் யோசியுங்கள்


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை ஒரு ரூபாய் இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் ஒரு ரூபாயை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

Monday, February 15, 2016

கருத்துக் கணிப்புகள்



இந்தக் கருத்துக் கணிப்புகள்...துல்லியமாய் இருக்கும் என் சொல்லமுடியாது.

சுமார் ஐந்தரைக் கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் 5000 பேரிடம் கருத்துக் கேட்டு, இந்தக் கட்சிக்கு ஆதரவு..அந்தக் கட்சிக்கு ஆதரவு என்றெல்லாம் சொல்வது மக்களை திசை திருப்புவது போலத்தான்.

பிகாரில், சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாபகம் இருக்கிறதா...

பிஜேபி யே வெல்லும் எனக் கருத்துக் கணிப்புகள் சொல்லியது.வாக்குகள் எண்ணத் தொடங்கி சில மணிகளில், பிஜேபி அதிக இடங்களில் முன்னணியில் இருந்ததால், அக்கட்சியினர் வெற்றி உறுதி என பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.

ஆனால்....வாக்குகள் எண்ணப்பட, எண்ணப்ப்ட ..பிஜேபி பரிதாபத் தோல்வியும், நிதீஷ்-லாலூ கூட்டணி மகத்தான வெற்றியும் பெற்றது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்....

கருத்துக் கணிப்புகள் எல்லாம், யாரையாவது திருப்தி படுத்தவே எடுக்கப் படுவதாகத் தோன்றுகிறது.

இது உண்மை என அத்தலைவர்களுக்கும் தெரியும்.

இதனால், மக்கள் நிலைப்பாட்டையும் மாற்றமுடியாது.  இதுவும் அவர்களுக்கு தெரியும்.

கடைசியாக யாரோடு யார் கூட்டணி வைத்தாலும்....எக்கட்சியும் சேராது...தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மக்கள் கையிலேயே வெற்றி..தோல்வியைத் தீர்மானிக்கும் திறன் உள்ளது.

இதுதான் உண்மை 

Sunday, February 14, 2016

தி.மு.க.,. காங்கிரஸ் கூட்டணி


இது சரியா...தவறா என பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் சுட்டிக் காட்டி சில ஊடகங்களும், முகநூல் நண்பர்களும், டுவிட்டர் செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன.
இவர்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
எதிரிக்கு..எதிரி நண்பன் என்பார்கள்.
இப்போது அனைத்துக் கட்சிகளும் முதல் எதிரியாய் நினைப்பது அதிமுக வைத்தான்.அந்த எதிரியை வீழ்த்த கட்சிகள் அவரவர்க்கேற்ப வியூகங்களை வகுத்து வருகின்றன.திமுக ...காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் நிலைப்பாடை எடுத்துள்ளது.
வீம்புக்காவது, நான் தனித்து நிற்பேன்...வெல்லுவேன் என்பதெல்லாம் , காகிதத்தில் வெல்லம் என எழுதி, அது இனிப்பாய் இருக்கிறதா...என நக்குவதைப் போலத்தான்.
திமுக ஆதரவாளனான எனக்கும் ...திமுகவின் இந்த நிலைப்பாடு மனவலியைத்தான் கொடுக்கிறது.
ஆனால்...மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட முடிவுகள் தவிர்க்க முடியாது.
அரசியல் கட்சி என்ற நிலைப்பாடு ஒன்றை எண்ணினால் கலைஞரின் இந்த முடிவு சரியானதாகத்தான் தோன்றும்.
(சிபிஎம் காங்கிரஸுடன் கூட்டணி மேற்கு வங்கத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இங்கு ஒரு நிலைப்பாடு...அந்த மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு.ஏன்?
அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப் படுகிறது அரசியல் கட்சிகளால்.திமுகவும் ஒரு அரசியல் கட்சிதானே!)

Wednesday, February 3, 2016

படித்ததில் பிடித்தது



ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப் பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.

அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன். 'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும் முயற்சிக்கிறேன்'னான். 'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.

மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு "சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி தெரியலை' ன்னான்.

அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு தெரியலை' ன்னான்.

சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும் சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.

அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம் என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு, 'உன் அறிவை மெச்சுகிறேன்..இந்தா என்னுடைய விலையுயர்ந்த  முத்துமாலை' னு பரிசளித்தான்.

ஆனா மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத் தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு இப்போ தோணுது' என்றான்.

அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே.." என்றார்.

அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான்  இருந்தாலும் அந்த ஒளியைப் பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா? அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட உயர்வானதுன்னு தோணுது.

கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும் தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட அதுதான் உயர்வானதுன்னு தோணுது..

தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான்.ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும் ஆடைகள்த்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்

அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.

Sunday, January 31, 2016

உணவும்....செரிமானமும்




நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

Wednesday, January 27, 2016

இனிக்கும் தமிழ்



மேன்மக்கள் விரும்பாத சொற்களைக் கூறமாட்டார்கள்.எந்த ஒரு துயரம் வந்தாலும் தன் நிலை மாறாதிருப்பர்.புறங்கூற மாட்டார்கள்.இதைத்தான், "கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பார் மூதுரையில் ஔவையார்.

பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அது தன் சுவையில் குன்றாது.அதுபோல எவ்வளவு துன்பங்களில் இருந்தாலும் நற்பண்புகள் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவே இருப்பர்.அது எப்படிப்பட்டது என்றால் வெண்மை நிறத்தில் உள்ள சங்கு தீயில் எவ்வளவு சுட்டாலும் வெண்மையாகவே இருக்கும் அதுபோல., என்கிறார்.


என்னவொரு அழகான உவமை

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

( நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்
நண்பர்களாக மாட்டார்கள்.  நம் நிலை தாழ்ந்தாலும்
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு
எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது.
தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்
போன்றது அவர் நட்பு.)

இதையே வள்ளுவர் எப்படி சொல்கிறார்..தெரியுமா?

சாதாரணமாக ஒரு பயிரைக் கண்டதுமே அந்து எப்பேர்ப்பட்ட நிலத்தில் விளைந்தது என்பதை ஒரு விவசாயி கூறிவிடுவான்.அதுபோல ஒருவர் பேசுவதை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்திட முடியும் என்கிறார்.

இதை வைத்துதான், ஒருவன் செயல் வீரனா அல்லது வாய்ச்சொல் வீரனா என்பதையும் சொல்லி விடலாம்.

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

(விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என்பதி கண்டுபிடித்து விடலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச்சொல்லை வைத்தே அவர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தவர் என்பதை உணரலாம்)

Friday, January 22, 2016

மக்களுக்காக......


மக்களுக்குச் செய்கிறேன்
மக்களுக்கு உழைக்கிறேன்
மக்களுக்காக எதையும் செய்வேன்
மக்களுக்கே என் உடல் பொருள்
தலைவன் பேசி முடித்ததும்
தொண்டர்களின் விண்ணதிரும்
கைதட்டல்கள்..
மக்கள் எனில்
மகன்..மகள் என்பதை
மறந்ததேன் தொண்டன்

Thursday, January 21, 2016

அஷ்டாவதானி கே.என்.சிவராமன்



கர்ணனின் கவசமா, சகுனியின் தாயமா, மாஃபியா ராணிகளா..
இன்ன வேண்டும் என்று சொல்லிவிட்டால்...அதை
சூடாக வாசகர்களுக்கு அளித்திட சிவராமன் தயார்.
இன்று..தினகரன் வெள்ளிமலரில் அவரது சினிமா சம்பந்தக் கட்டுரைகள் ....
முழுதும் சினிமாவே சம்பந்தப்பட்ட பத்திரிகை என்றாலும்....பக்கங்களை நிரப்பும் திறமையை நிரூபித்துள்ளது.
ஒரு எழுத்தாளன்..
ஒன்று சிறுகதை எழுதுவான்  அல்லது
தொடர் கதை எழுதுவான் அல்லது
அமானுஷ்ய தொடர் எழுதுவான்
சரித்திரத் தொடர் எழுதுவான்
சினிமா நட்சந்திரங்கள் வாழ்க்கையை எழுதுவான்
சினிமா துணுக்குகளை எழுதுவான்
விமரிசங்களை எழுதுவான்

ஆனால் இந்த சிவராமன் ..எமகாதகன்...

எதையும் எழுதத் தயார் என்கிறான்

அவனை அஷ்டாவதானி என்று சொல்வதைத்தவிர வேறு எந்த சொல்லும் ஞாபகத்தில் வரவில்லை

(சற்று உரிமை எடுத்துக் கொண்டு அவன்..இவன்..என்று சொல்வதற்கு சிவராமன் மன்னிப்பாராக)

Wednesday, January 20, 2016

ஆம் ஆத்மியில் இணைந்த தலைவர்

அரசியல் தலைவர் நந்திவர்மன், திடீரென ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
அவரது நெருங்கிய நண்பர் அதற்கானக் காரணத்தைக் கேட்க நந்திவர்மன் சொன்னார்..
"எனது பிரச்னை கெஜ்ரிவாலால் தீர்ந்தது அதனால் தான்" .
நண்பருக்குப் புரியவில்லை...நந்திவர்மனே தொடர்ந்தார்..
"எனக்கு இரண்டு மனைவிகள்.முதல்மனைவி வீட்டுக்குப் போனால் இரண்டாவது மனைவி கோபிக்கிறாள்.
இரண்டாவது மனைவி வீட்டுக்குப் போனால்...முதல்மனைவி என் மீது பீப் சாங்  பாடுகிறாள்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன எனத் தெரியாது இருந்தேன்.
இந்நிலையில்,கெஜ்ரிவால், தில்லியில்..ஒத்தப்படை எண் கார் ஒருநாளும், இரட்டைப்படை கார் ஒருநாளும்  என்ற திட்டத்தைக் கொணர்ந்தார்.
உடனே எனக்கும் என் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிட்டது.
முதல் மனைவி வீட்டுக்கு ஒருநாள்..அடுத்தநாள் இரண்டாம்மனைவி வீட்டிற்கு என அதே கெஜ்ரிவால் பாணியில் முடிவெடுத்தேன்.
என் பிரச்னைக்குத் தீர்வு காட்டிய கெஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லும் விதமாக..அவரது கட்சியில் சேர்ந்து விட்டேன்" என்றார்.

Tuesday, January 19, 2016

நீண்ட நாட்கள் வாழ....



இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.

சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.

நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.

சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.

நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.

அளவான சாப்பாடு

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)

உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.

மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.

மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.

நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?

தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்

இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்


ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.

Saturday, January 16, 2016

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.,

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.,

தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.தி.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.

ஜெயலலிதா-
எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.

ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு காமராஜ்தான்
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.


(இது ஒரு மீள் பதிவு)

Wednesday, January 13, 2016

வைரமுத்துவின் வரிகளில் மீசைக்கவிஞன்


பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

Monday, January 11, 2016

வாள்...வாள்..எனக் கத்துபவரா நீங்கள்?



அப்படிப்பட்ட ஒருவர் நோய்வாய்ப் பட்டார்.அவர் பார்க்காத வைத்தியம் இல்லை.

ஒருநாள் அவர் மனைவி அவரை ஒரு நல்ல வெட்னரி மருத்துவரைப் பார்க்கச் சொன்னாள்

'என்னது மிருக டாக்டர் கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?'ன்னு சீறினான் கணவன்.

'எனக்கொண்ணும் மூளை கெட்டுப் போகலே! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலங்காத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னால எழுந்துக்கிறீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சுட்டு, குரங்கு மாதிரி 'லபக் லபக்' னு ரெண்டு வாய் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமா ஓடி ஆஃபீசுக்கு போறீங்க.! அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்க மேல கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆஃபீஸ் விட்டவுடனே, ஆடுமாடுங்க மாதிரி பஸ்ல அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா, நாள் பூரா வேலை செஞ்ச களைப்பில, நாய் மாதிரி என் மேல சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை 'சரக் சரக்' ன்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க! மறுபடியும் விடிஞ்சா அதேமாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவ்ங்களை மனுஷ டாக்டர் எப்படீங்க குணப்படுத்த முடியும்? அதனால தான் சொல்றேன் நாளைக்கே ஒரு கால் நடை டாக்டரைப் போய்ப் பாருங்க" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, - 'கோட்டான் மாதிரி முழிக்காதீங்க" என்றாள் மனைவி 

Sunday, January 10, 2016

விவாக ரத்து ஏன்?




 சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்கள்.

விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில் சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள் உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.

அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும் பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும் என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.

இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.

தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.

அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)

Thursday, January 7, 2016

எல்லாம் இன்பமயம்




நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...பின்  .........பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

Wednesday, January 6, 2016

எது நகைச்சுவை?



என்னிடம் ஒரு குணமுண்டு..

அது வேடிக்கையாய் பேசுவது. நண்பர்களும் அவற்றை ரசிப்பதுண்டு.

உதாரணத்திற்கு, நண்பர் ஒருவர் தன் வீட்டில் செய்த இனிப்பு ஒன்றைக் கொடுத்தார்.நன்றாய் இருந்தது.நண்பர், 'எப்படி இருக்கிறது "என்றார். வழக்கமான நக்கல் தலைகாட்ட நான்,'நன்றாய் இருக்கிறது..ஆனால் சற்று உப்பு குறைவு' என்றேன்.சுற்றியிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.நண்பரின் முகமும் சுருங்கிவிட்டது.

மற்றொரு நண்பர் டிரட் மில் வாங்கியிருந்தார்.ஒருநாள் எங்கள் அனைவரையும் கூட்டிக் காட்டினார்.என்னால் காலையில் வாக் போக முடிவதில்லை.ஆகவே வீட்டிலேயே செய்திடுவேன் என்றார்.ஆனால்..அவர் அப்படி செய்யவில்லை.ஒரு சமயம் ஊரிலிருந்து வந்த அவர் உறவினர், 'டிரட் மில்லில் தினம் நடக்கிறாயா?' என்றார்.நான் சும்மா இருக்கக் கூடாது.அதுதான் நம் பழக்கம் இல்லையே , அதனால்' உங்களுக்குத் தெரியாதா? இந்த டிரட் மில் அதற்காக வாங்கவில்லை.அது வாங்கிய கடையில் இடமில்லாததால்..இதை இங்கே கடைக்காரர் போட்டு வைத்துள்ளார்.' என்றேன்.நண்பர் நெளிந்தார்.

இப்படி எனது நா காக்காததால்..பல நண்பர்களை இக்கட்டில் ஆழ்த்தியுள்ளேன்..நகைச்சுவை என்ற பெயரில்.

ஒருநாள் ஒருவரிடம் இப்படி செய்யப்போக அவர் மிகவும் வருந்தினார்.அப்போதுதான் எனக்கு தெரிந்தது.இது போல எவ்வளவு நண்பர்களை வருத்தப்பட வைத்திருக்கிறேன் என்று.

நாம் நகைச்சுவை என்று நினைத்து சொல்வது, பிறரை வருத்தப்பட வைத்துள்ளதே ..அது கூட எனக்குத் தெரியவில்லையே! என.வருந்தினேன்.

இனி யாரிடமும் இப்படி நடக்கக்கூடாது என தீர்மானித்து விட்டேன்.

சமீபத்தில் ஒரு நண்பர், 'வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை' என்றார்..கீழே வாழைப்பழத்தோல் வழுக்கி(!!) விழுந்தவரைக் கண்டு நான் நகைக்காததால்..பிறர் துயர் நமக்கு நகைச்சுவை என அவர் எண்ணியதால்.

பிறர் புண்பட பேசுவது, பிறர் துயர் கண்டு நகைப்பது, பிறர் செயலை எள்ளி நகையாடுவது போன்றவை நகைச்சுவை என்றால்..அந்த உணர்வு என்னை விட்டு சாகட்டும்.

யாரையும் புண் படுத்தாத நகைச்சுவை உணர்வு  நம் அனைவரிடமும் வளரட்டும்.

Monday, January 4, 2016

இனிக்கும் தமிழ்


சாதாரணமாக கவிஞர்கள் அந்த நாளில் அரசனைப் பாடிப் பொன்னும் பொருளும் பெறுவர்.வறுமையில் அவர்கள் வாடினாலும், அவர்களின் தமிழில் பாடப்படுபவரைப் பற்றி நக்கலும், கிண்டலும் கூட இருக்கும்.அப்படி, பாடி பரிசு பெற எண்ணி அரசன் ஒருவனை இராமசந்திர கவிராயர் பாடுகிறார்.(இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்).  பாடி முடித்ததும் அந்த அரசன் பரிசு ஏதும் தரவில்லை.அந்த மனச் சலிப்பை இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

கல்லாத வொருவனைநான் கற்றா யென்றேன்
காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்
பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்
போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்
மல்லாரும் புயனென்றேன் சூம்பற் றோளை
வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்
இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே !



(கல்லாத ஒருவனை நான் மெத்தப்படித்த மேதை என்றேன்;
காட்டை அழைத்துச் செழிக்கும் ஒருவனை நாடாளும் மன்னனே என்றேன் ;
தீயவனை நல்லான் என்று புகழ்ந்துரைத்தேன் ;
போர்க்களத்தையே பார்த்திராத கோழையை வேங்கையை ஒத்த வீரன் என்றேன்;
சூம்பிய தோள்களைக் கொண்ட நோஞ்சானை மல்யுத்தத்துக்கு ஏற்ற திடம் கொண்ட தோளன் என்றேன்;
எச்சில கையால் காகம் ஓட்டாதவனை வள்ளல் என்றேன்;
இப்படி இல்லாததைச் சொல்லி புகழ்ந்த எனக்கு, அவன் இல்லை எனச் சொல்லி விட்டான்).

Monday, December 28, 2015

நம்ம தலைவர்




நம்ம தலைவர் திருவள்ளுவரை பின்பற்றுபவர்
எப்படிச் சொல்ற...
யாராயிருந்தாலும் இரண்டு அடிதான்

2)தலைவருக்கு பிடித்த குறள் எது தெரியுமா?
 எது
 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉ மழை

3) நம்ம டிவியெல்லாம் பார்க்கிறோமே..அது யாரால
   அதுதான் தலைவர் சொல்லிட்டாரே "கூகுளாலன்னு"

4) தலைவர் போதையில என்ன பேசறார்
  மதுவிலக்கு அமல் படுத்தணூமாம்

5) தலைவருக்கு பிடிக்காத வார்த்தை என்ன தெரியுமா
  "அம்மா"

6) தலைவருக்கு மாடுகளைப் பிடிக்காது..ஏன் தெரியுமா?
  அவை அம்மான்னு கத்துமாம்

Thursday, December 24, 2015

கதை அல்ல நிஜம்...


அமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு  திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
கணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன்  சென்னை வந்தனர்.

அவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.

உடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு அனுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.

இச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.

பெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர்ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.

ஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.

நான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.

மேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.


வயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகளிடையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.

கணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.

இன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில்  கேடுதான் விளையும்.

Wednesday, December 23, 2015

M.G.R.,


தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.தி.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.

ஜெயலலிதா-
எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.

ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு காமராஜ்தான்
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.

பெரியாரின் பெருந்தன்மை



கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.

ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.

மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.

திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.

கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.

பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.

அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.

அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.

இது கல்கியின் பெருந்தன்மை.


Sunday, December 20, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 4



1967ல்..பாமா விஜயம் என்னும் நகைச்சுவைப் படம் பாலசந்தர் கதை, வசனம், இயக்கத்தில் வந்து சக்கைப் போடு போட்டது.இப்படத்தில் டி.எஸ்.பாலையா,நாகேஷ்,முத்துராமன், சுந்தரராஜன், காஞ்சனா,சௌகார் ஜானகி, ராஜஸ்ரீ, ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

நிம்மதியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில். அவர்கள் இல்லத்தின் அருகே வரும் ஒரு நடிகையின் பிரவேசம்..அந்த வீட்டின் மூன்று மகன்களையும், மருககள்களையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை சிரித்து..சிரித்து மகிழுமாறு கொடுத்திருந்தார் இயக்குநர்.தவிர்த்து, பேராசை பெரு நஷ்டம் என்ற படிப்பினையையும் இப்படம் உணத்தியது.

பாலசந்தர் படங்களில் எல்லாமே, வெளியே தெரியாமல். சற்று ஆழ்ந்து பார்த்தால் சமுதாயத்திற்கு ஒரு செய்தி இருக்கும்.அவற்றை அவ்வப்போது அந்தப் படங்கள் பற்றி எழுதுகையில் பார்க்கலாம்.

பாமாவிஜயத்தில் குடும்பத்தின் தலைவனாக பாலையாவின் நடிப்பு மிகவும் பாராட்டுதலைப் பெற்றது.தவிர்த்து, வீட்டு குழந்தைகளுடன் அவரும் "வரவு எட்டணா..செலவு பத்தணா" பாடலில் குரல் கொடுத்ததும், அதன் படப்பிடிப்பு நேர்த்தியும் அருமை.இப்படத்தின், மற்றொரு சிறந்த பாடலாக"ஆனி முத்து வாங்கி வந்தேன்' என்பதையும் குறிப்பிடலாம்.

இதே ஆண்டு வெளிவந்த மற்றொரு நகைச்சுவைப் படம் "அனுபவி ராஜா அனுபவி"

பாலசந்தருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில தலைவர்களுடன் பரிச்சயம் இருந்தது.அவர்களில் குறிப்பித்தக்க ஒருவர் அரங்கண்ணல்.அவர் கதை எழுதி தயாரித்த  படம் "அனுபவி ராஜா அனுபவி". இதற்கான திரைக்கதையும், இயக்கமும் நம் பாலசந்தருடையது.

இப்படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்தார்.அவரது நகைச்சுவை நடிப்பிற்கு ஈடு கொடுத்து முத்துராமன் நாயகனாக நடித்தார்.மற்றும், ராஜஸ்ரீ, மனோரமா ஆகியோரும் இருந்தனர்.இப்படப்பாடல்களும் புகழ் பெற்றன.இப்படிச் சொன்னதும் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

டி.எம்.சௌந்தரராஜனும், மனோரமாவும் இணைந்து .தூத்துக்குடி தமிழில் பாடியிருந்த "முத்துக் குளிக்க வாரீயளா?" அனைத்து ரசிகனையும் பல ஆண்டுகள் முணுமுணுக்க வைத்தது.

தவிர்த்து, "அழகிருக்குது உலகிலே, ஆசை இருக்குது மனசுலே .அனுபவி ராஜா அனுபவி' என்ற பாடல்..

அன்றைய மதராஸில் இருந்த ஏமாற்று பேர் வழிகள், போலி வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் வகையில் கவியரசு எழுதிய "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடல்...இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தன என்றால் மிகையில்லை.

மொத்தத்தில்  இரண்டு நகைச்சுவை படங்களும் பாலசந்தருக்கு பெரும் வெற்றியைத் தந்தன எனலாம்.

Friday, December 18, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் = 3



தமிழ்த் திரைப்படங்களில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் 'சபாபதி' எனலாம்.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என ஏ.டி.கிருஷ்ணசாமி கூற அவருடன் சேர்ந்து ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இயக்கி, தயாரித்த படம் இது.

1941ல் வெளிவந்த இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரன், காளி என்.ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர்.அந்நாளில் காளி என்.ரத்தினமும், சி.டி.ராஜகாந்தம் இருவரும் இணைந்த காமெடி..என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர்க்கு இணையாக பேசப் பட்டது.

ஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர் கதாநாயகியாக நடித்தார்.

நாயகன் பெயரும்,வேலைக்காரன் பெயரும் 'சபாபதி' என ஒன்றாய் இருப்பதை வைத்து நல்ல காமெடி செய்திருப்பர்.தமிழ் வாத்தியாராக சாரங்கபாணி நடித்திருப்பார்.இந்தப் படம் இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒலி/ஒளி பரப்பானால் அதைப் பார்க்கும் மக்கள் அன்று அதிகம் இருப்பர்.இப்படக் காமெடி வசனங்கள் இன்றும் மாறி..மாறி வேறு படங்களில் வந்த வண்ணம் உள்ளன.

இப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி" என்பர்.

இப்படம் மொத்தம் 40000 ரூபாயில் எடுத்து முடிக்கப் பட்ட படமாகும்.கதாநாயகன் சம்பளம் மாதம் 35 ரூபாய் ஆகும்

Thursday, December 17, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 2



இத் தொடரின் ஆரம்பப் பதிவில் அடுத்த வீட்டுப் பெண் படம் பற்றி பார்த்தோம்.

இப்பதிவு மற்றொரு மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படம் பற்றியது..

தமிழ்த்திரையுலகில்..இதுவரை வந்த நகைச்சுவை படங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது 'காதலிக்க நேரமில்லை' திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீதர் கதை,வசனம்,இயக்கத்தில் அவர் சொந்த நிறுவனமான சித்ராலயா தயாரிப்பு இப்படம்.

இப்படத்தில் முத்துராமன்,பாலையா,நாகேஷ்,ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிச்சந்திரனின் முதல் படம்.

கதாநாயகிகளாக காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்.

கண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் அருமை.

என்ன பார்வை உந்தன் பார்வை' 'நெஞ்சத்தை அள்ளித் தா' உங்க பொன்னான கைகள்' அனுபவம் புதுமை' நாளாம் நாளாம் ஆகிய பாடல்கள் இனிமை என்றாலும், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போன்ற இனிமை..'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலும், சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய 'காதலிக்க நேரமில்லை' பாடலும்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.பி.பி.ஸ்ரீநிவாஸ்,ஜேசுதாஸ்,சுசீலா ஆகியோர் கலக்கியிருப்பார்கள்

இப்படம் வெள்ளிவிழா கண்டது.இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.

.நாகேஷ், பாலையா பற்றி குறிப்பிடாவிடின்..இந்த இடுகை முற்று பெறாததாகவே இருக்கும்.

இருவர் நடிப்பும் அருமை.குறிப்பாக நாகேஷ் தான் எடுக்கப் போகும் படத்தின் கதையை பாலையாயிடம் கூறும் இடம்..உம்மணாமூஞ்சிகளையும் வாய் விட்டு சிரிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட நகைச்சுவைப் படம் ஒன்று மீண்டும் தமிழில் வருமா?

காலம்தான் பதில் சொல்லும்.

Tuesday, December 15, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்



தமிழில் முழுநீள நகைச்சுவை படங்கள் எனக் கணக்கெடுத்தால்...இருகைவிரல்களில் அடக்கிவிடலாம்.

அப்படிப்பட்ட சில படங்கள் குறித்துப் பார்ப்போம்

முதலாவதாக...மறக்கமுடியாத படம், அஞ்சலி பிக்சர்ஸ் 'அடுத்த வீட்டுப் பெண்'

1960ஆம் ஆண்டு இப்படம் வந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,தங்கவேலு,சாரங்கபாணி,ஃப்ரண்ட் ராமசாமி.ஏ.கருணாநிதி..ஆகிய சிரிப்பு நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்ததுடன்..இப்படத்தின் தயாரிப்பாளராயும் இருந்தார்.படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும்..இன்றும் பார்த்தால் ரசிக்கவைக்கும் படம்.

கதாநாயகன்..அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிக்கும் படம்.அவளைக் கவர தான் ஒரு பாடகன் என்று சொல்லி..தான் வாயை அசைக்க..நண்பனை பாட வைக்கும் யுக்தி முதலில் இப்படத்திலேயே காட்டப்பட்டது.பின்னாளில் இதே போன்ற காட்சி பல படங்களில் காபி அடிக்கப்பட்டது.

ஆதி நாராயண ராவ் இசையில்..தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்த அனைத்துப் பாடல்களும் அருமை.

பி.சுசீலா பாடிய, 'கன்னித் தமிழ் மனம் வீசுதடி' 'மலர்க்கொடி நானே' ஆகியபாடல்களும்

பி.பி.எஸ்.பாடிய, 'மாலையில் மலர்ச் சோலையில்' வாடாத புஷ்பமே' ஆகிய பாடல்கள் தேனாய் இனிப்பவை.

'கண்ணாலே பேசி..பேசி' என்ற பாடலில் ராமையாதாஸ் சொல் விளையாட்டு விளையாடி இருப்பார்..
கொல்லாதே..செல்லாதே,துள்ளாதே
வாடுதே,ஓடுதே,ஆடுதே
அழகிலே,நினைவிலே,மலரிலே,வலையிலே
என்றெல்லாம்..அருமை..அருமை..

இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இயக்குநர் வேதாந்தம் ராகவையா..

இன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.

அடுத்த இடுகையில் வேறொரு நகைச்சுவை படம் பற்றி பார்ப்போம்.

Sunday, December 13, 2015

தலைவர் போகாத சிறை



1)நான் கடைசியா எழுதிய புத்தகத்தை படித்து விட்டீர்களா?
உங்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்ததும் , இது அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..ஆனால் எண்ணம் நிறைவேறவில்லையே

2)அந்த எழுத்தாளரின் நாலாவது படைப்பு சிம்ப்ளி சூபர்ப்
அப்படியா..அந்த புத்தகம் பெயர்..
நான் அவரது நாலாவது பெண் சுஜாதாவைச் சொன்னேன்

3)தலைவர்- (மேடையில்) நம் நாட்டில் எத்தனையோ சிறைச்சாலைகள் உள்ளன.ஆனால் நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இது வரை ஒரு சிறைச்சாலைக்கு போனது இல்லை
தொண்டர்-போகாத அந்த ஒரு சிறைச்சாலை எது தலைவா?

4)உங்க உடம்பை முழுதும் சோதனை பண்ணியாச்சு...நோய்க்கான காரணம் தெரியலை..ஆமாம்..புகையிலை போடற பழக்கம் உண்டா?
அஞ்சாறு ஏக்கரிலே போட்டிருக்கேன்..

5)அந்த டைலர் கிட்ட எதைக் கொடுத்தாலும் பிடிக்கிற மாதிரி தைத்துடறார்..அதற்குத் தான் சண்டை போட்டுட்டு வரேன்..
 பிடிச்சா மகிழ்ச்சி அல்லவா அடையணும்..ஏன் சண்டை போடறே!

Friday, December 11, 2015

மனிதரில் இத்தனை வகையா!!!!!



மனிதர்கள் பலவிதம்..ஒருவர் போல ஒருவர் இருப்பதில்லை.சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சிலர்..தேர்ந்தெடுத்து சொற்களை வெளியிடுவார்கள்.ஒரு சிலரோ...வாயைத் திறந்தாலே..முத்து உதிர்ந்துவிடும் போல எண்ணி வாயைத் திறக்க மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர்..பெயர் வேண்டாமே..எதிலும் குறை சொல்பவராகவே இருப்பார்.நண்பர்கள் பற்றியோ..அரசியல் பற்றியோ பேசும் போது..எளிதில் உணர்ச்சி வசப்பட்டு..கடுமையாக தாக்கிப் பேசுவார்.இதனால்..நண்பர்கள் இவரை விட்டு..அவ்வப்போது விலகுவர்.

வேறு ஒரு நண்பர்..இவர் பத்திரிகைகளில் அரசியல் விமரிசகர்.அவரிடம்..'உன்னால் எப்படி..குடைந்து..குடைந்து பார்த்து அரசியல்வாதிகள் பற்றி எழுத முடிகிறது?'என்றபோது, அவர்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'(?!) என்றார்.

சில நண்பர்கள்..தங்கள் சுய லாபத்திற்காக பழகுவர்.அவர்கள் நினைத்த காரியம் முடிந்ததும்..நம்மை கழட்டி விட்டு விடுவார்கள்.

சிலர் எப்போதும் ..விரக்தியாகவே..இருப்பார்கள்.இவர்கள் வாயைத்திறந்தாலே..'எல்லாம் மோசம்..நாடு பாழாகிக் கொண்டிருக்கிறது.நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது' என்று பேசுவார்கள்.

வேறு சிலர்..தான் தவறு செய்தாலும்..அதை மறைத்து பழியை பிறர் மீது போடுவார்கள்.இவர்கள் தங்கள் காரியத்தை சாதிக்க..பிறரை பலிகடா ஆக்கவும் தயங்க மாட்டார்கள்.

ஒரு சிலர்..பழகவே..கூச்சப் படுவர்.சிலரோ..எதோ பறிகொடுத்தாற்போல சோகத்திலேயே இருப்பர்.சிலர் வேலை செய்யாமலேயே..நெளுவெடுப்பர்.சிலர் பயந்த சுபாவத்துடன் இருப்பர்.

இதையெல்லாம் எப்படி போக்குவது...நண்பர்கள் உயிர் காப்பான் என்பார்களே..அது பொய்யா?

மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

Wednesday, December 9, 2015

கணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா


தில்லி மிருகக்காட்சிசாலையிலிருந்து இரண்டு சிங்கங்கள் தப்பித்துச் சென்றன

சில மாதங்கள் கழித்து யமுனை நதிக்கரையில் அவை மீண்டும் சந்தித்துக்கொண்டன.ஒரு சிங்கம் மிக ஒல்லியாக ஒடிந்து புல்லிலும், கல்லிலும் தடுக்கிக்கொண்டிருந்தது.
மற்றது புஷ்டியாக இருந்தது.அது, "நண்பா, ஏன் இப்படி இளைத்து விட்டாய்" என்று கேட்டது.

"என்ன செய்வது! எனக்குச் சாமர்த்தியம் போதவில்லை.பகலெல்லாம் பதுங்கி இரவெல்லாம் அலைந்தேன்.ஆகாரம் ஏதும் அகப்படவில்லை.வேட்டையாடும் சாமர்த்தியம் எனக்கு மறந்துவிட்டது.நீ மட்டும் எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறாய்?" என்றது

"பைத்தியமே! ரொம்ப சிம்பிள்.செகரடேரியட் போய் இரவோடு இரவாக ஃபைல்களுக்குப் பின் ஒளிந்து கொண்டேன்.அவ்வப்போது ஒரு அண்டர் செக்ரட்டரி , ஒரு டெபுடி செக்ரட்டரி என்று அந்தப் பக்கம் செல்பவர்களை இழுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.ஒருவரும் கவனிக்கவில்லை"

"பின் ஏன் அந்த சுகத்தை விட்டு வந்துவிட்டாய்?"

"கடைசியில் ஒரு தப்புப் பண்ணிவிட்டேன்.டீ கொண்டுவரும் பையன் ஒருவனை ஒருநாள் சாப்பிட்டுவிட்டேன். உடனே கண்டுபிடித்துவிட்டார்கள்"