Saturday, February 8, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 36

பெருமையுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.

மற்றவர்களைவிட பணத்தில் , அறிவில்,சமுதாயத்தில் சிறந்து விளங்கும் ஆசை அனைவரிடமும் உள்ளது. 


ஆனால், எப்படி அந்தப்  பெருமையை பெறுவது? அதற்கு என்ன வழி?

முதலில், ஒருமை மகளிர் பற்றி நாம் அறிந்து கொள்வோம்

திருமணம் ஆன பின், கணவன் எப்படி இருந்தாலும், பெண்கள் அவனை விட்டு விட்டு இன்னொருவனை மணந்து கொள்ள விரும்புவதில்லை. 

கணவன்  எப்படி இருந்தாலும், வ்ட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள். அவனை விட்டு விட்டு இன்னொருவனை மனதில் நினைக்க மாட்டார்கள். அதுவே கற்பு என்று கூறப் படுகிறது. நமக்கு இவன் தான் என்பதில் மிக உறுதியாக இருப்பார்கள்.

அவர்களை வள்ளுவர் "ஒருமை மகளிர்" என்கிறார். ஒன்றைத் தவிர வேறு எதையும் நினைக்க மாட்டார்கள்.

அது போல, பெருமை வேண்டுபவர்கள், கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தத் துறையை எடுத்தாலும், அதில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து மாறக் கூடாது. ஒன்றை செய்யும் போதே, மனம் அதை விட்டு விட்டு இன்னொன்றுக்குத் தாவ விடக் கூடாது.

இதையே..

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு (974)

தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும், பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.



(பெருமையை அடைய கொண்ட குறிக்கோளில், ஒழுக்கமான வழியில் இருந்து மாறக் கூடாது.

எவ்வளவு துன்பம் வந்தாலும், கற்புடைய மகளிர் எப்படி தங்கள் கணவனை , அவன் எப்படி இருந்தாலும் விட மாட்டார்களோ, அது போல குறிக்கோளை விடக் கூடாது).

No comments: