Wednesday, February 12, 2020

நன்னூல் - நூலின் அழகு 


எப்படி அழகாக எழுதுவது?  ஒரு சிறந்த நூல் எப்படி இருக்க வேண்டும்? அலுவலகத்தில் கூட, நிறைய "presentation" தர வேண்டி இருக்கும். அவை எப்படி இருக்க வேண்டும். இன்று, "Steve Jobs" presentation உலகத் தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.  நம்மவர்கள், ஒரு சிறந்த நூலோ, அல்லது presentation ஓ எப்படி இருக்க வேண்டும் என்று வரையறை செய்து விட்டுப் போய் இருக்கிறார்கள். நாம் இதைப் படிப்பதை விட்டு விட்டு, "ஆ" என்று மேல்நாட்டாரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அழகான எழுத்து, புத்தகம், presentation எப்படி இருக்க வேண்டும்?

பாடல்

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.

பொருள்


சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் = இது முதல் சூத்திரம். எதையும் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.  வள வள என்று எழுதிக் கொண்டோ பேசிக் கொண்டோ இருக்கக் கூடாது. அதற்காக, ரொம்பவும் சுருக்கி என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் போகும் படியும் இருக்கக் கூடாது.


நவின்றோர்க் கினிமை = யாருக்கு சொல்கிறோமோ, அவர்களுக்கு அது இனிமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கேட்க மாட்டார்கள்.


நன்மொழி புணர்த்தல் = நல்லவற்றை சொல்ல வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்றவற்றை சொல்லக் கூடாது.

ஓசை யுடைமை = சந்த நயம் இருக்க வேண்டும். ஒலி அழகு இருக்க வேண்டும்.


யாழமுடைத் தாதல் = ஆழம் உடைத்தாதல். ஆழமான பொருள் இருக்க வேண்டும். சும்மா நுனிப் பபுல் மேயக் கூடாது

முறையின் வைப்பே = சொல்வதை முறைப்படுத்திச் சொல்ல வேண்டும். ஒரு ஒழுங்கு வேண்டும். முன்னுக்கு பின் அலைக்கழிக்கக் கூடாது.  உயர்ந்தவற்றை முதலில் சொல்லி, மற்றவற்றை பின்னால் சொல்ல வேண்டும். ஆசிரியரும் மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும். மாறாக, மாணவர்களும் ஆசிரியரும் வந்தார்கள் என்று சொல்லக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைமையில் மாதாவுக்கு முதல் இடம், தெய்வத்துக்கு நாலாவது இடம். முதல் அமைச்சர் அவருடைய செயலாளரோடு வந்தார் என்று சொல்ல வேண்டும். செயலாளர், முதலமைச்சரோடு வந்தார் என்று சொல்லக் கூடாது.



யுலகமலை யாமை  = உலகம் மலையாமை?  உலகமே மலைக்கும் படி சொல்லக் கூடாது. மலைத்தல் என்றால் , 'இது எப்படி இப்படி இருக்க முடியும் " என்று திகைக்க வைக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி ஒரு பெரிய பொருளை  விளங்கச் செய்ய வேண்டும்.

விழுமியது பயத்தல்  = சிறப்பானவற்றை சொல்ல வேண்டும். ஒரு நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை சொல்கிறோம் என்றால், இந்த வருடம் என்ன சாதித்தோம் என்று சொல்ல வேண்டும், என்ன புதிதாக செய்தோம் என்று சொலல் வேண்டும்.. ஒரு பொருளை விற்கிறோம் என்றால், அந்தப் பொருளின் சிறப்பு என்ன என்று சொல்ல வேண்டும்.

விளங்குதா ரணத்ததாகுதல்  = விளங்கு உதாரணத்து ஆகுதல். அதாவது, கடினமான ஒன்றை எளிய உதாரணம் மூலம் சொல்லி விளக்க வேண்டும்.

னூலிற் கழகெனும் பத்தே. = நூலினிக்கு அழகெனும் பத்தே. இந்த பத்தும் ஒரு நூலுக்கு அழகு சேர்ப்பவை.

நூல் என்றால் நூலோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. பேச்சு, presentation என்று  அதை நீட்டிக் கொள்ளலாம்.

அடுத்த முறை பேசுவதற்கு முன்போ, ஏதாவது ரிப்போர்ட் அனுப்பும் முன்போ, presentation தருவதற்கு முன்போ, இந்த 10 விதிகளும் கடை பிடிக்கப் பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒவ்வொரு தடவையும் இவற்றைக் கொண்டு சரி  பார்த்துக் கொண்டே இருந்தால், நாளடைவில் அழகாக எழுதுவது என்பது தானே வந்து விடும்.


சொன்னால் மட்டும் போதாது. அழகாகவும் சொல்ல வேண்டும்.

இது நல்லா இருக்கா ?

No comments: