Tuesday, May 19, 2020

நானும் ரௌடிதான் - 5

அடுத்தநாள் பள்ளியில் உணவு இடைவேளை ஆர்ம்பம்.

அப்போது பள்ளியின் பியூன் வேலை செய்யும் சுப்பு வந்து, "உன்னைப் பார்க்க வெளியே ஒருத்தர் வந்திருக்கிறார்" என்றார்.

நான் கையில் அம்மா கொடுத்திருந்த தூக்கு டிஃபன் பாக்சை அப்போதுதான் திறந்திருந்தேன்.தயிர்(மோர்?) சாதம்.அதன் ந்டுவே காக்கா கக்கா போனாற்போல கருப்பு நிறத்தில் பச்சிமிளகாயை அரைத்து வைத்து ஒரு சட்னி.

அதை மூடிவிட்டு வெளியே வந்தேன்.

கையில் காலெண்டர் சுற்றியது போல ஒரு பார்சலுடன் நின்றிருந்தார் பாபு அங்கிள்.அவரைப் பார்த்து, "என்ன அங்கிள்?" என்றேன்.

"இந்தா மாசால்தோசை..நீ நேத்துகூட மசால்தோசைக்குத்தான் என்னோட நோட்டீஸ் கொடுக்க வந்தியாம்.குள்ள கோவிந்தன் சொன்னான்.பாவம்..அந்தப் பையன் ஏமாந்து போயிருப்பான்.பாபு..நீங்க நாளைக்கு ஸ்கூல் லஞ்ச் டயத்துக்குப் போய் அவனுக்கு ஒரு மசாலா தோசை வாங்கிக் கொடுத்துடுங்க என்றான்.அதுதான் வாங்கி வந்தேன்" என்று சொல்லியபடியே அப்பார்சலை என் கையில் தந்தார் பாபு அங்கிள்.

ஒரு நிமிடம் என் கண்கள் கலங்கிவிட்டது.எவ்வளவு நல்ல மனிதர் இந்த குள்ள கோவிந்தன்.அவரைப் போய்..எல்லாரும் ஏன் கெட்டவராகவேப் பார்க்கிறார்கள்? என எண்ணினேன்.

பாபு அங்கிளிடமிருந்து பார்சலை வாங்கிக் கொண்டவன், "அங்கிள்..இன்னிக்கு சாயங்காலம் சைக்கிள் எடுக்க குப்பால் கடைக்கு வருவேன்..அப்போ கோவிந்தனைப் பார்ப்பதாகச் சொல்லுங்கள்"என்றேன் .

அன்று ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பத்து பைசா சைக்கிள்விட வேண்டும் என வாங்கிக் கொண்டு குப்பால் கடைக்குப் போனேன்.

அங்கு என் கதாநாயகன் குள்ள கோவிந்தன் உட்கர்ந்திருந்தார்.அவர் என்னைப் பார்த்ததும் கையை நீட்டினார்.நான் அவர் கையைப் பற்றிக் கொண்டேன்.பின், "தேங்கஸ்" என்றேன்.

"எதுக்கு,  டேங்ஸ் எல்லாம் சொல்ற..நீ ஆசைப்பட்ட தோசையைவாங்கிக் கொடுத்தேன்.ஒரு தோசைக்கு எதுக்கு டேங்க்ஸ்.ஆமாம்..அந்த நாராயணப் பிள்ளை..அப்பாகிட்ட உன்னைப் போட்டுக் கொடுத்துட்டாரா?" என்றார்.

"இல்லை "என்றேன் நான்.பின்னர்.."தேர்தல் என்னிக்கு ?"என குப்பாலிடம் கேட்டேன்.

"வர ஞாயிற்றுக் கிழமை.பாபுதான் குப்தா ஸ்கூல்ல நம்ம ஏரியாவுக்கு கட்சியோட பூத் ஏஜன்ட் .அவர்கூட எப்படியும் உன்னை உட்கார வைச்ச்டறேன்.ஆனா..அன்னிக்கு மட்டும் நீ எப்படியாவது பெரிய மனுஷன் போல ஃபுல் பேன்டோ இல்ல வேஷ்டியோ கட்டிண்டு வந்துடு.முழுநாளும் டிஃபன்,காஃபியோட சாப்பாடு உண்டு" என்றான்.

"சரி" என தலையாட்டிவிட்டுக் கிள்மபினேன்.ஆனால், மனம் முழுதும் அப்பா கிட்ட எப்படி பர்மிஷன் வாங்குவது என்ற எண்ணத்துடன்.

No comments: