Wednesday, July 21, 2010

தொழில் வளர்ச்சி: முதலிடம் நோக்கி தமிழகம்

அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும், தொழில் வளர்ச்சியில் முதலிடத்தை நோக்கி பீடுநடை போட்டு வருவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கொரியாவின் முன்னணி சாக்லேட் நிறுவனமான லோட்டே கன்பெக்ஷனரி பிரபல தமிழக சாக்லேட் நிறுவனமான பாரி கன்பெக்ஷனரி நிறுவனத்தை கடந்த 2004ம் ஆண்டு வாங்கியது.

காபிபைட், கேரமில்க், லோட்டோகிங், எக்ளர்ஸ், சாக்கோ, சான்விச் பிஸ்கெட், லோட்டே சாக்கோ பை என்ற உள்ளிட்ட பிரபல வகைகளை இந்நிறுவனம் இந்தியாவில் விற்று வருகிறது.

இதில் இந்த சாக்கோ பை சாக்லேட் உற்பத்தி்க்காக சென்னையை அடுத்த நேமம் பகுதியில் புதிய தொழிற்சாலையை இந்த நிறுவனம் கட்டியுள்ளது.

மாதத்துக்கு 500 டன் சாக்கோ பை சாக்லேட்டை இங்கு உற்பத்தி செய்ய முடியும. இந்த தொழிற்சாலையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, புதிய சாக்லெட் வகைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையி்ல், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த லோட்டே நிறுவனம் இந்தியாவில் பல்வேறு தொழில் முதலீடுகளை செய்து வருகிறது.

கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அந்த நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய், சாம்சங், லோட்டே, எல்ஜின், குவாசின், போஸ் ஹூண்டாய் ஆகியவை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ளன.
சென்னையில் மட்டும் 160 கொரிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 8,400 கொரிய மக்கள் வசிக்கின்றனர். அதில் சென்னையில் மட்டும் 3,000 பேர் வாழ்கின்றனர்.

சென்னைக்கு அருகே தென் கொரியாவின் சிறு, குறு நிறுவனங்களின் தொழில் முனையம் ஒன்றை தமிழக அரசு அமைக்கவுள்ளது.

தகவல் தொடர்பு, வாகன உற்பத்தி, ஜவுளி, மின்னணு, தோல் பொருட்கள் உற்பத்தியில் சென்னை ஏற்கனவே முன்னிலையில் உள்ளது. தற்போது உணவுப் பதப்படுத்தும் தொழிலிலும் தமிழகம் முக்கிய மையமாக வளர்ந்துள்ளது.
தொழில் துறையில் தமிழகம் புகழ் மிக்க கடந்த காலத்தையும், எழுச்சி மிகு நிகழ்காலத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டுள்ளது. நாட்டிலேயே தற்போது தொழில்மயமாவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

இந்தியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

அமெரிக்காவின் மிகப் பிரபலமான வால்ஸ்ட்ரீட் ஜர்னல், சென்னை புதிய டெட்ராய்ட்டாக உருவெடுத்து வருகிறது என்று புகழ்ந்துரைத்துள்ளது. தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி காண வேண்டும் என கருதி சிறப்பு சலுகைகளை வழங்கி தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

குறிப்பாக தென் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக அண்மைக் காலத்தில் அப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கணிசமான முதலீடு வந்துள்ளது.

கடந்த வாரம் கூட தூத்துக்குடியில் ரூ.2,500 கோடியில் கூட்டு முயற்சியிலான உணவு பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் என் முன்னிலையில் கையெழுத்தானது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது.

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த தொழிலில் முதலீடு செய்ய கொரிய நிறுவனங்கள் உள்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் லோட்டே இந்தியா நிறுவனத் தலைவர் யாங் டாக் கிம், நிர்வாக இயக்குனர் மியுங் கி மின், துணைத் தலைவர் டாங் பின் சென், தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

(நன்றி தட்ஸ்தமிழ் )

16 comments:

கோவி.கண்ணன் said...

தமிழ் நாட்டில் ஸ்டேசனரி தொழில் கொடிகட்டிப் பறக்குதாம்.

அப்படி என்றால் தமிழ்நாட்டில் எந்த கம்பெணிகள் மிகுந்திருக்குன்னு சொல்லுங்க.

:)

vasu balaji said...

இனிப்பான சேதி:)

Prasanna said...

எப்படியோ கொரியா காரங்களுக்கு நம்மை 'பிடித்து' விட்டது போல :)

Vidhya Chandrasekaran said...

உருப்பட்டா சரி.

சிநேகிதன் அக்பர் said...

அந்நிய நாட்டு முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால்...

சென்னை மட்டுமா தமிழ்நாடு ஐயா?

மற்ற மாவட்டங்களுக்கும் தொழில்சாலைகளை அமைத்தால்தானே சீரான முன்னேற்றம் ஏற்படும்.

பிறகு சென்னையில் ஜனத்தொகை கூடாமல் என்ன செய்யும்.

க.பாலாசி said...

கேக்கறதுக்கு சந்தோஷமாத்தான் இருக்கு...

அக்பர் சொல்வதும் சரிதான்....

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///கோவி.கண்ணன்...
தமிழ் நாட்டில் ஸ்டேசனரி தொழில் கொடிகட்டிப் பறக்குதாம்.

அப்படி என்றால் தமிழ்நாட்டில் எந்த கம்பெணிகள் மிகுந்திருக்குன்னு சொல்லுங்க///

என்ன லெட்டர் பேட் கட்சிகள், மன்னிக்கவும் லெட்டர் பேட் கம்பெனிகள்!

சரியா?

கோவி.கண்ணன் said...

//என்ன லெட்டர் பேட் கட்சிகள், மன்னிக்கவும் லெட்டர் பேட் கம்பெனிகள்!

சரியா?//

மிகச் சரி,

காலையில் இருந்து யாருமே சரியான விடைச் சொல்லவில்லை, நாமே வந்து சொல்லலாம் என்று இருந்தேன்.
:)

நன்றி !

Karthick Chidambaram said...

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்றான் பாரதி. தொழில் வளருது.உழவையும் கவனிக்கணும்.

அனாலும் இது இனிப்பான செய்தி.

கோவி, Letter pad கட்சிகளால் இப்படி ஒரு லாபம் இருக்கா ... ?

அபி அப்பா said...

மிக்க சந்தோஷமான செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி டி வி ஆர் அய்யா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

கொரியாவின் லோட்டே நிறுவனம் லெட்டெர் பேட் கம்பெனி என கருத்து தெரிவித்த கோவிக்கு வணக்கம்

Jerry Eshananda said...

அண்ணே ..எல்லாம் சரிதான்,இங்க மதுரையில கரண்டு தொல்லைக்கு ஒரு வழி சொல்லுங்கண்ணே.

Unknown said...

தமிழகம் தொழில் வளர்ச்சியில் குஜராத்திற்கு அடுத்த நிலைக்கு வேகமாக முன்னேறுகிறது.. என்ன உடன்பிறப்புகள் நிறுவனங்கள்தான் முன்னணியில் இருக்கின்றன

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தன். said...
அண்ணே ..எல்லாம் சரிதான்,இங்க மதுரையில கரண்டு தொல்லைக்கு ஒரு வழி சொல்லுங்கண்ணே.//

கூடியவிரைவில் மின் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைவோம் என நம்புவோம்.
வருகைக்கு நன்றி ஜெரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்