Sunday, March 8, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 73

நற்பண்பு
--------------------
ஒருவர் பேசுவதை வைத்தே, அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லிவிட முடியுமாம்.

அது எப்படியாம் என்றால்..

சாதாரணமாக ஒரு பயிரைக் கண்டதுமே அந்து எப்பேர்ப்பட்ட நிலத்தில் விளைந்தது என்பதை ஒரு விவசாயி கூறிவிடுவான்.அதுபோல ஒருவர் பேசுவதை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்திட முடியும் என்கிறார்.
இதை வைத்துதான், ஒருவன் செயல் வீரனா அல்லது வாய்ச்சொல் வீரனா என்பதையும் சொல்லி விடலாம்.
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
(விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச்சொல்லை வைத்தே அவர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தவர் என்பதை உணரலாம்)
மேன்மக்கள் விரும்பாத சொற்களைக் கூறமாட்டார்கள்.எந்த ஒரு துயரம் வந்தாலும் தன் நிலை மாறாதிருப்பர்.புறங்கூற மாட்டார்கள்.

இதைத்தான், "கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பார் மூதுரையில் ஔவையார்.
பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அது தன் சுவையில் குன்றாது.அதுபோல எவ்வளவு துன்பங்களில் இருந்தாலும் நற்பண்புகள் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவே இருப்பர்.அது எப்படிப்பட்டது என்றால் வெண்மை நிறத்தில் உள்ள சங்கு தீயில் எவ்வளவு சுட்டாலும் வெண்மையாகவே இருக்கும் அதுபோல., என்கிறார்.
என்னவொரு அழகான உவமை
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

நற்பண்புடைவனாக நாமும் இருப்போமாக!

No comments: