Sunday, March 22, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 87



யாரிடம் எப்படிப் பேச வேண்டுமோ..அப்படி..அப்படி அவர்களிடம் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


"அறிவுள்ளவர்கள் முன் அறிவோடு பேச வேண்டும். அறிவில்லாதவர்கள் முன் ஒன்றும் தெரியாதவர் போல இருக்க வேண்டும்"

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல் (714)

அறிவாளிகளுக்கு முன்னால் அறிவாளியாய் இருக்க வேண்டும்.அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்புப் போல தன்னையும் அறிவற்றவராய்க் காட்டிக் கொள்ள வேண்டும்

அவை அறிதல் என இதற்கென ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார்.

ஆமாம்..வான்சுதை என சுண்ணாம்பைச் சொல்கிறார்.

சுண்ணாம்பு வெண்மை நிறம்.

இருப்பதிலேயே மிக மிக வெளிறிப்போன நிறம் வெள்ளை நிறம்தான்.

ஆகவேதான் அறிவற்றவர்களை சுதையுடன் ஒப்பிட்டார். 

அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்தினால்
 அந்தச் சொற்களின் வகையும் தெரியாது..பேசும் திறமையும் கிடையாது.

மேலும் ஒரு குறளில் சொல்கிறார்..

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம் போல வீணாகிவிடும்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல் (720)




No comments: