Tuesday, March 17, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 82

நன் மக்கட்பேறு
----------------------------

இல்வாழ்க்கையில் சிறந்த பேறு அறிவில் சிறந்த பிள்ளைகளைப் பெறுவது என்னும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்..

அப்படிப்பட்ட பிள்ளைகள் பண்புடையவர்களாக இருப்பார்களேயானால் ஏழேழு தலைமுறைக்கும் எந்தத் தீமையும் தீண்டாதாம்.

அப்படிப்பட்ட நம் குழந்தைகள் தங்கள் கைகளால் கூழினைக் கொடுத்தாலும் அது அமிழ்தம் போலவாம்.அந்தக் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது,உடலுக்கு இன்பத்தையும், அவர்கள் மழலை செவிக்கு இன்பத்தையும் தருமாம்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தந்தை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் (67)

தந்தை தன் மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்லுதவி அவர்கள் அறிஞர் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே யாகும்.
 அப்படி செய்கையில், தம் பிள்ளைகள் தங்களைவிட புத்திசாலியாக இருப்பின் அது அக மகிழ்ச்சியினை அளிக்கும்.

ஆனால்..பெற்ற தாய்க்கோ..அவள் அவனைப் பெற்றெடுத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட,ஊரார் பாராட்டும்போது அதிக மகிழ்ச்சி ஏற்படுமாம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

பெற்றோர்கள் தன் கடமையினை முடித்து விட்டார்கள்.ஆனால்  இதற்கெல்லாம் மகன் செய்யும் கைம்மாறு என்னவாம் தெரியுமா?

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல் (70)

ஆஹா..இவனை மகனாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பேறு என் அஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்

No comments: