Wednesday, June 25, 2014

குறுந்தொகை - 22



குடும்ப பட்ஜெட் பற்றாக்குறை. செலவை ஈடுகட்ட வெளியூரிலோ, வெளிநாட்டிலோ வேலை கிடைக்கிறது.மனைவியை விட்டு அந்த ஊருக்குச் செல்ல வேண்டும்.கணவன், மனைவி இருவரும் இதுநாள் வரை ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததில்லை.தன்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என மனைவி நினைக்கிறாள்.இது, இன்று பல இல்லங்களில் நடந்து வரும் நிகழ்ச்சி.இதுபோல அந்த காலத்திலும் நடந்துள்ளதை இப்பாடல் நூலம் தெரியவருகிறது.

தலைவன் தன்னை பிரிந்து செல்லப்போகிறான் என்பதை முன்னரே உணர்ந்துவிட்டாள் தலைவி..அதனால் கண்ணீர் சிந்துகிறாள்.அதைக்கண்ட தோழி, வருந்தாதே..அவர் உன்னையும் உடன் அழைத்துச் செல்வார் என ஆறுதல் கூறுகிறாள்

இனி பாடல்-

 பாலைத் திணை -  பாடலாசிரியர்- சேரமானெந்தை


 
நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
   
யாரோ பிரிகிற் பவரே சாரற்
   
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
   
வேனி லஞ்சினை கமழும்

தேமூ ரொண்ணுத னின்னொடுஞ் செலவே.

                              -  சேரமானெந்தை



இனி உரை -

மலைப்பிரதேசமானது ,வேனிற் காலத்தில் தனக்கு அழகாக இருக்கும் அழகிய வெண் கடப்ப மலரை உடைய அழகிய மரத்தின் கிளைகளிடத்தில் பரப்புகின்ற மணத்தை விளக்குவது போன்ற நெற்றியை உடைய  (தலைவன் பிரிவதால்)
துயரத்தால் கண்ணீர் விடும் கண்ணை உடைய உன்னை தனியாகத் தங்க பிரிந்து செல்லும் ஆற்றல் உடையவர் யார்?
(தலைவன் உன்னையும் அழைத்தேச் செல்வான்.)

No comments: