Friday, June 6, 2014

குறுந்தொகை - நான்காம் பாடல்




காமஞ்சேர் குளத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.  குறுந்தொகை 4 எண் கொண்ட பாடல் இவரது ஒரே ஒரு பாடல்.. பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர்.

கண்ணைக் காமக் கண்ணீர் நிறைந்த குளமாக்கிக் காட்டிய புதுமையால் இவர் இப் பெயர் பெற்றார்.

நான் கண்ணீருடன் வாழவேண்டும் என்பதற்காகவே எனது அன்புக்குரியவர் அமைந்துள்ளார்.ஆனால்...நான் இல்லாமல் அவருக்கு அப்படி அமையும் என அவர் நினைக்கவில்லை..என்று..காதலனை எண்ணி வருந்துகிறாளாம் காதலி.

சுருங்கச் சொல்லின்....தான் அவன் மீது கொண்ட அன்பை..அவன் தன் மீது கொள்ளவில்லை என எண்ணுகிறாள்.

பாடல்[---
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

பாடல் செய்தி-

கண் ஒரு குளம். அதில் காமக்கண்ணீர் நிறைந்திருக்கிறது.  கண்ணில் தேங்கும் காமக் கண்ணீர் கண் குளத்துக் கரையாகிய இமையைத் தீய்த்துச் சுட்டெரிக்கும்.(சாதாரணமாக குளத்து நீர் கரையை செம்மைப் படுத்தும்.ஆனால்...காமக்கண்ணீரோ இமை எனும் கரையை சுட்டெரிக்கும்)

இந்தக் கண்ணீரொடு வாழ்வதற்காகவே என் காதலர் எனக்கு அமைந்துள்ளார். ஆனால் அவருக்கு அந்தக் காமக்கண்ணீர்க் குளம் அமையவில்லை.

நெஞ்சே! நொந்து தொலைந்து போ!
நெஞ்சே! நொந்து தொலைந்து போ.
நெஞ்சே! நொந்து தொலைந்து போ.!

No comments: