Monday, June 9, 2014

குறுந்தொகை - ஏழாம் பாடல்



(பாலைத் திணை)



வில்லோன் காலன கழலே; தொடியோள்

மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்

யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,

வாகை வெண் நெற்று ஒலிக்கும்

வேய் பயில் அழுவம் முன்னியோரே.


எழுதியவர் - பெரும்பதுமனார்,
(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)


வாகை மரங்களின் முதிர்ந்த காய்கள் நிறைந்த பாலைவனப் பகுதி ,அதில் நடக்கையில் அந்த முதிர்ந்த காய்கள் (நெற்றுகள்)உடைந்து சபதம் எழுப்புகின்றன.அந்த ஓசையானது கழைக் கூத்தாடி, கயிற்றில் நடக்கையில் அடிக்கும் பறையைப் போன்று உள்ளது.அப்பகுதியில் தலைவி, தலைவனுடன் நடக்கிறாள்.ஆனால் அவர்களுக்கு மணமாகவில்லை என்பதை தலைவியின் பெற்றோர் அணிவித்த காற்சிலம்பை அவள் கழற்றாமல் இருப்பதிலிருந்து தெரிகிறது.தலைவனோ வில்லை உடைய வீரக்கழல் அணிந்தவன்.தலைவி மென்மையான அடி வைத்து நடப்பவள்.அவளால் இப்பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும் என அவர்களைப் பார்க்கும் நல்லோர், இவர்கள் யாரோ என இரங்குகின்றனர்.
(பின் குறிப்பு:
மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்;)

No comments: