Sunday, June 29, 2014

குறுந்தொகை -26



தோழி கூற்று
(தலைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள்.அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் என கட்டுவிச்சி(குறி சொல்பவள்) சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல்.அவளது தலைவனோடு ந்ட்புடன் இருந்தால்..இதற்கு அந்த இடத்தில் இருந்த ஆண்குரங்கு சாட்சி )

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெள்ளி வீதியார்.

இனி பாடல் -
 
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
 
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
 
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
 
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
 
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
 
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
 
கடுவனு மறியுமக் கொடியோ னையே.

                     -வெள்ளி வீதியார்.

உரை-

அரும்புகள் இல்லாமல் மலரும் கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது, அதன் மலரைப் பறிக்கும் மகளிரைப் போல தோன்றுவதற்கு இடமான நாட்டை உடைய தலைவன், இவளுக்கு தகுதியானவன் அல்ல என்பதுபோல கட்டுவிச்சி(குறி சொல்பவள்) தீது கூறினும், தேமாவின் கனியை உண்ணும் . முள்ளைப் போன்ற கூறிய பற்களையும், சிவந்த வாயையும் உடைய, மலைகளில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கும் அந்த கொடியவனான தலைவனை அறியும்.அது தனது கண்ணால் கண்டதை பொய் என சொல்லாது.(என்கிறாள் தோழி)
(ஆகவே தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே ஆகும்.

இப்பாடலில் தலைவியின் நோய்க்குக் காரணம் ஒன்றிருக்க , அது அறியாமல் தாய் குறி கேட்டு, குறி சொல்பவளும் இது தெய்வக்குற்றம் என சொல்வது...இன்றும் பல குடும்பங்களிடேயே காணப்படும், ஜோதிடம் பார்த்தல், குறி சொல்லுதல் ஆகியவற்றைக் காண்கையில்...மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை என்பது ஆச்சரியத்தைக் குறிக்கிறது

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விளக்கம்! வாழ்த்துக்கள்!