Thursday, June 5, 2014

குறுந்தொகை --- மூன்றாம் பாடல்




குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,

(குறிஞ்சி)

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

காதலைப் பாடாத இலக்கியங்கள் இல்லை.இன்றுவரை காதல் பல வடிவெடுத்து பாடப்பட்டுள்ளது.ஆனால்..அதை வடிவப்படுத்த முடியுமா? முடியும் என்கிறார் இப்பாடலை எழுதியுள்ள புலவர்.

தலைவியிடம் தோழி சீண்டிப் பார்க்க எண்ணி..அவனைப் பற்றி இழிவாகக் கூறுகிறாளாம்.அதனை ஏற்காத தலைவி தங்கள் காதல் எத்தகையது எனக் கூறுகிறாள்.அதுவே இப்பாடல்.

பாடலின் பொருள்

குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு, மலைப்பகுதியில் பெரிய தேனை வண்டுகள் தொகுத்தற்கு இடனாகிய நாட்டையுடைய தலைவனோடு நான் கொண்ட நட்பு,
சொல்லப்புகுங்கால் நிலத்தைவிட அகலமானது,
நினையப் புகுங்கால் வானத்தைவிட உயரமானது,
உள்புகுந்து எல்லை காணப்புகுங்கால் கடலைவிட ஆழமானது. என்பதே இப்பாடலின் பொருளாகும்.

சுருங்கச் சொல்லின்.....

காதலின் அகலம் நிலத்தின் அளவு.
காதலின் உயரம் வானத்தின் அளவு.
காதலின் ஆழம் கடலின் அளவு.
ஆகுமாம்.

No comments: