Tuesday, August 26, 2014

குறுந்தொகை - 89



தோழி கூற்று
(தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாளாக, அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றுதலைத் தோழி தலைவன் சிறைப்புறத்திலிருக்கும் பொழுது புலப்படுத்தி, விரைவில் திருமணம் செய்து கொள்ளல் நலமென்பதை உணர்த்தியது.)
 

மருதம் திணை - பாடியவர் பரணர்.

இனி பாடல்-

பாவடி யுரல பகுவாய் வள்ளை
   
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப
   
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
   
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
   
நல்லியற் பாவை யன்னவிம்
   
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.

                        - பரணர்

உரை-

பெரிய அணிகலத்தையுடைய சேரனுக்குரிய , அச்சம் தருதல் மிக்க கொல்லிமலையில் உள்ள கரிய கண்களையுடைய தெய்வம் அம் மலையின் மேற்குப் பக்கத்தில் எழுதிய நல்ல இயலையுடைய பாவையை ஒத்த இந்த மெல்லிய இயல்பையுடைய தலைவி,தன் தலைவனுடைய பெயரைப் பாடி இடிப்பாளாயின், அங்ஙனம் அவள் பரந்த அடியினையுடைய உரலினது பகுவாயிடத்து தானியம் இடிக்கும் போது பாடும் வள்ளைப் பாட்டைக் குறித்து அயலார்கள் குறைகூறுதலையும் செய்வார்கள்.இத்தகைய அறிவின்மையையுடைய ஊரினர் கூறும் சொற்களின் பொருட்டு வருந்துவதால் பயன் என்ன?
.


(கருத்து) ஊரினர், தலைவி ஒரு தலைவன்பால் நட்புடையளென்பதை அறிந்துகொண்டனர்.

   

    வள்ளை உரற்பாட்டு- மகளிர் உரலில் நெல் முதலியவற்றை இடிக்கும்போது அதனால் உண்டாகும் அயர்வு தோற்றாதிருக்கும் பொருட்டுப் பாட்டுப்பாடுதல் இயல்பு; இங்ஙனம் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டெனப்படும்.
    இப்பாட்டு, இடிப்பவர்களுடைய அன்புக்குரியாரைத் தலைவர்களாகப் பெற்றிருத்தல் மரபு;

Monday, August 25, 2014

தவிக்கும் செடி..



                 


மலரில்

அமர்ந்தது வண்டு

செடியின் அனுமதியின்றி

மலரும்

தேனைத் தந்தது..

தேனுண்ட வண்டு

தாவியது அடுத்த மலருக்கு

கையறு நிலையில்

தவித்தது செடி...

மலரோ.

வாட ஆரம்பித்தது..



குறுந்தொகை = 88



தோழி கூற்று

(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடியவர்  மதுரைக் கதக்கண்ணன்

ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்
 
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
 
தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
 
நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே தோழி நாமே.

                - மதுரைக் கதக்கண்ணன்

உரை-

ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன் சிறிய கண்ணையுடைய பெரிய களிறு வலிமையான புலியைத் தாக்கி ,தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே இடையிரவில் வருதலையும் செய்வான்.அங்ஙனம் அவன் வருதலினால் நமக்கு உண்டாகும் ப்ழிக்கு நாம் வெட்கப்பட மாட்டோம்.

(அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிழிந்து நிலப்பரப்பி லுள்ளாருக்குப் பயன்படுவது போலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து பார்ப்பான்)


   (கருத்து) தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.

     (வழியின் ஏதத்துக்கு அஞ்சாமல் அவனே வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல் நாணி மறுத்தல் அழகன்றென்பது தோழியின் நினைவு.)
 இரவுக்குறி _ தலைவன் இரவில் வந்து தலைவியை சந்திக்கும் இடம்
   .

Sunday, August 24, 2014

குறுந்தொகை - 87



தோழி கூற்று
(தலைவன் தெய்வம் உன் உறுதிமொழி அளித்துப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அதனால் அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
 
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
 
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
 
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
 
பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.

என்பது தலைமகள் தெய்வத்திற்குப் பராயது.

                         -கபிலர்.

உரை-

பொதுவிடத்திலுள்ள மராத்தின் கண் தங்கும், பிறருக்கு அச்சம் தரும் முதிர்ந்த தெய்வம் கொடுமையுடையாரை வருத்தம் என்று அறிந்தோர் கூறுவர்.குன்றுகள் பொருந்திய நாட்டுடைய என் தலைவர் சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை உடையவர் அல்லர்.என் நெற்றி நான் அவரை விரும்பியதால் பசலை பெற்றது.என் மனம் அவர் திறத்து நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள் மெலிவுற்றது.

(கருத்து) என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.

 

     தலைவன் தலைவியோடு அளவளாவிய பொழுது கடம்ப மரத்திலுறையும் கடவுள்மேல் ஆணையிட்டு, “நின்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்” என்று உறுதி அளித்தான்.தெளித்தான்; பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள். தன்னுடைய வேறுபாடு களுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின், அக் கொடுமை கருதி அவனாற் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒறுக்கு மென்று அவள் கவன்றனள். ஆதலின் தலைவன் கொடுமையுடையன் அல்லன் எனக் கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டுமென்று தெய்வத்தை வேண்டினாள்.
   

 

Saturday, August 23, 2014

குறுந்தொகை - 86


தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் காலத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெண்கொற்றன்

இனி பாடல்
 
சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்
   
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
   
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
   
தூதை தூற்றுங் கூதிர் யாமத்

தானுளம் புலம்புதொ றுளம்பும்
   
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.


                          -வெண்கொற்றன்.

  உரை -

மழைத்துளி மிக்க, வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்ப்பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந் தோறும் அலைகின்ற (தலையாட்டுதலால்)நா வினால் முழங்குகின்ற கொடிய மணியின் மெல்லிய ஓசையை தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற செம்மையான அரிகளையும்   குளிர்ச்சியையுடைய கண்ணோடும், பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துதளாற் கலங்கி கேட்டு வருந்துவார் என்னையன்றிப் பிறமகளிரும் உள்ளனரோ?

(கூதிர் கலம்
 _ஐப்பசி, கார்த்திகை)

  (கருத்து) தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் நானொருத்தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.

Friday, August 22, 2014

குறுந்தொகை - 85



தோழி கூற்று
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணன், “ தலைவன் மிக்க அன்புடையன்” என்று பாராட்டியபொழுது தோழி, “இவன் சொல்லத்தான் அவர் அன்பு புலப்படுகின்றது.  ஆனால் அவர் செயலால் தெரியவில்லை” என்று கூறி வாயில் மறுத்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் வடமவண்ணக்கன்

இனி பாடல்-

யாரினு மினியன் பேரன் பினனே
   
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
   
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
   
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்
   
யாண ரூரன் பாணன் வாயே.

                 -வடமவண்ணக்கன்

உரை-
  உரினுள் இருக்கும் குருவியின் துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது, கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு பொறை யுயிர்த்தற்குரிய இடத்தை அமைக்கும் பொருட்டு தேன் பொதிதலைக் கொண்ட இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசா வெள்ளிய பூவை கோதியெடுக்கும்.புதிய வருவாயை உடைய ஊருக்குத் தலைவன் பாணனது சொல்லின் அளவில் எல்லாரினும் இனிமை உடையான்/தலைவியினிடம் பெரிய அன்பினை உடையான்.(உண்மையில் அங்ஙனம் இல்லை)

   

(கருத்து) பாணன் தலைவனைப் புகழினும் தலைவன் அன்பிலன்.

Thursday, August 21, 2014

குறுந்தொகை - 84



செவிலித்தாய் கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.)

 பாலைத் திணை - பாடலாசிரியர் மோசிகீரன்

இனி பாடல்-

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள்
 
இனியறிந் தேனது துனியா குதலே
 
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
 
வேங்கையுங் காந்தளு நாறி

ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே.



                                 - மோசிகீரன்

உரை-

உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது. மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான வேங்கை மலரினது மணத்தையும், காந்தள் மலரினது மணத்தையும் வீசி ., ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியுடையளாகிய என் மகள், நான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீண்டும் தழுவும் காலத்து, நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்.அப்படி நான் தழுவியது அவளுக்கு வெறுப்பு உண்டாகக் காரணம், அவள் கூறிய அக்காலத்தே அறியவில்லையாயினும் இப்போது அறிந்தேன்.

 
    (கருத்து) தலைவி என்மேல் வெறுப்புற்று  தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே நான் அறியவில்லை..


     செவிலி அறிந்தது, (“ தலைவனது தழுவலை இன்பமாகக் கருதியவளாதலின் பிறர் தழுவல் வெறுப்புறச் செய்தது” என்பதனை. “முன்பு விருப்பாயிருந்த என் அணைப்பு இப்பொழுது அவளுக்கு வெறுப்பாயிற்று” என்பது குறிப்பு;)

 ஆய்: ஏழுவள்ளல்களுள் ஒருவன். இவனுக்குரியது பொதியின் மலை. மழைதவழ் பொதியிலென்றது, காந்தளும் வேங்கையும் வளம் பெற வளர்தற்குரிய மழையுண்டென்பதைக் குறித்தது.



 


Wednesday, August 20, 2014

குறுந்தொகை - 83


தோழி கூற்று
(திருமணம் செய்யும் முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி, அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் வெண்பூதன்

இனி பாடல்-
 
அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
   
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை
   
தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்
   
தீம்பழந் தூங்கும் பலவின்

ஓங்குமலை நாடனை வருமென் றோளே.

                - வெண்பூதன்


உரை-

தன் வீட்டில் இருந்து, தனது முயற்சியால் ஈட்டிய பொருளில், தம் பாகத்தை உண்டது போன்ற இன்சுவையை தருகின்ற , கிளைகள் தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலா மரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவன், தலைவியை திருமணம் செய்யும் பொருட்டு பொருளோடு வருவான் என கூறியவளாகிய அன்னை, பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாய்,பெரும் புகழுடைய சுவர்க்கத்தை பெறுவாளாக.


     (கருத்து) தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.

(செவிலை எனப்படுபவள் வளர்ப்புத் தாய் ஆவாள்.பல நேரங்களில் தோழியின் தாயே தலைவியின் செவிலித்தாயாக இருப்பதுண்டு)

 

Tuesday, August 19, 2014

குறுந்தொகை - 82


தலைவி கூற்று
(தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கடுவன் மள்ளன்

 இனி பாடல்-

   
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்
   
பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார்
   
யாரா குவர்கொ றோழி சாரற்
   
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்

கொழுங்கொடி யவரை பூக்கும்
   
அரும்பனி யச்சிரம் வாரா தோரே.

                      - கடுவன்மள்ளன்

உரை -

(தோழி)மலைப்பக்கத்திலுள்ள பெரிய தினைப்புனத்திலுள்ள குறவனது, சிறிய தினையரிந்த மறு காலிடத்தில் கொழுவிய அவரைக்கொடி மலர்கின்ற, பொறுத்தற்கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும் வராத தலைவர் நீட்சியையுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து முதுகைச் சார்ந்து ,அழுதலையொழியெனக் கூறி என் அழுத கண் துடைப்பார் முன்பு.இப்பொழுது, எப்படிப்பட்டவராய் இருக்கிறாரோ!


    (கருத்து) தலைவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது அன்பின்றி என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) தான் பிரியுங்கால் தலைவி வருந்துதலை அறிந்த தலைவன் அவள் கூந்தலை உளரியும் கண்ணீரைத் துடைத்தும் தலையளி செய்து பிரிந்தானாதலின் அச்செயல்களை நினைந்து, “அங்ஙனம் செய்த தலையளியை யுடையார் இன்னும் வாராமல் புறக்கணிக்கிறாரே!!” என்று வருந்தினாள். தோழி, தலைவன் பிரியுங்கால் செய்த தலையளியை நினைவுறுத்தி வற்புறுத்தினாளாக, “அங்ஙனம் செய்யினும் இப்பொழுது வாராமையால் அவர் தன்மை வேறுபட்டது போலும்!” என்னும் கருத்துப் படக் கூறினாள்.

    யாரென்றது நம்மோடு தொடர்பிலரென்னும் நினைவிற்று. குறவனுக்குரிய சிறுதினை, தினைக்கதிரை அரிந்தபின் அதன் அடியில் மீட்டும் கிளைத்துக் கதிர் உண்டாகும்; அதனை மறுகாலென்பர்; அம்மறுகாலில் விதைத்த அவரை வளர்ந்தது.
    தலையளி என்பது..முகமலர்ந்து, அன்பு வார்த்தைக் கூறுதல்

Monday, August 18, 2014

குறுந்தொகை -81


தோழி கூற்று
(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

இனி பாடல்-
 
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
   
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
   
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
   
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்

நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
   
கடலுங் கானலுந் தோன்றும்
   
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.

                      -வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

உரை -
தலைவியானவள் குறையுறும் நின் சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை தெளிந்து , பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து, இதுவரை புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான தனிமையையுடையவள். நிலவையும் அதனோடு நின்ற இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதன் கரையிலுள்ள சோலையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுடைய எமது சிறிய நல்ல ஊர் அதோ பார்.இனி எம்மைமறவாது நினைக்க வேண்டும்.


     (கருத்து) இனி எம்மை மறவாது எம்மூருக்கு வந்து பழக வேண்டும்.

 ஞாழல் - நெய்தற் குரியதொரு மரம். தோழியிற் கூட்டம் கூடிய தலைவன் தலைவியோடு கடற்கரையிலுள்ள ஞாழன்மரத்தின் நிழலில் அளவளாவினான் ஆதலால், ‘ஞாழற் பல்சினை யொருசிறைப், புதுநலனிழந்த புலம்புடையள்’ என்றாள்.
 
     அலையின் பிறழ்ச்சியால் வெண்மையாகத் தோற்றும் கடலுக்கு நிலவும், அடர்த்தியால் இருண்டு தோன்றும் கானலுக்கு இருளும் உவமை;
    “தலைவி தானாக விரும்பி இதனைச் செய்திலள்; நான் கூறினமையின் இது செய்தாள். நானும் நீ குறைவேண்டி இரந்தமையின் அவளை நயக்கச் செய்தேன். ஆதலின் அவள் நலனிழந்தமைக்கு நின் முயற்சியே காரணமாவது. இனி நீ அவள் துயருறாவாறு அவ்வூரினிடத்தும் வந்து அளவளாவுக” என்று தோழி கூறினாள்.

Sunday, August 17, 2014

குறுந்தொகை - 80


விலைமகள் கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட விலைமகள் அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்

.  
கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்
 
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
 
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ
 
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர

நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி
 
முனையான் பெருநிரை போலக்
 
கிளையொடுங் காக்கன் கொழுநன் மார்பே.

                         =ஔவையார்



உரை_

எனது கூந்தலில் ஆம்பலின் புறவிதழொடித்த முழுப்பூவைச் செருகி, வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி, அப்புனல்
 விளையாட்டை விளையாடச் செல்வோம்.நான் அப்படி ய்தலைவனுடன் விளையாட தலைவி அஞ்சுவாளானால், வெவ்விய போரில்
பகைவரை நடுநிலை உண்டாகுமாறு பயப்படாமல் எதிரில் நின்று கொல்லும் பல வேற்படையையுடைய எழுனி என்னும் உபகாரியின் போர்முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல தன் கணவர் மார்பை பாதுகாக்கட்டும்  

(தலைவன் என்னை விட்டு வரமாட்டான் என விலைமகள் நம்பிக்கையுடன் கூறுகிறாள்)



     (கருத்து) தலைவன் என்னுடைய விருப்பப்படித்தான் நடப்பான்..தலைவி விரும்பியபடி நடக்கமாட்டான்.

எழினி - அதியமான் அஞ்சி. தன்நாட்டுப் பசுக்களைப் பகைவர் கொண்டு சென்றாராக அவரொடு பொருது அப்பசுக்களை எழினி மீட்டுக் காத்தான்;

Saturday, August 16, 2014

அழகின் ரகசியம்

             

என்

அழகின் ரகசியம்

அன்றாடம்

உபயோகிக்கும்

உத்தமி சோப்பே

நடித்து முடித்த

நடிகைக்கு

ஒருமணி நேரம் ஆனது

ஓரங்குல மேக்கப்

கலைக்க

குறுந்தொகை - 79


தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் குடவாயிற் கீரனக்கன்

இனி பாடல்-

.  
கான யானை தோனயந் துண்ட
   
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
   
அலங்க லுலவை யேறி யொய்யெனப்
   
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்

அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச்
   
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
   
கொல்லே மென்ற தப்பற்
   
சொல்லா தகறல் வல்லு வோரே.

                           -குடவாயிற் கீரனக்கன்

உரை-

(தோழி) யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால் ,சொல்லாமல் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர் காட்டு யானையால் பட்டை விரும்பி உண்ணப்பட்ட பொறந்த அடியையுடைய ஓலைமரத்தினது காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஏறி ஒய்யென தனிமையையும் வருத்ததையும் வெளிப்படுத்தும் குரலையுடையவனாகி ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும் பாலை நிலத்திற் பொருந்திய அழகிய தடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ!


     (கருத்து) தலைவர் இனி மீளாரோ?

     (வி-ரை.) பாலைநிலத்தின் வெம்மையால் யானை ஓமை மரத்தின் தோலை உண்டது.
 
     பாலை நிலத்துள்ள ஆண்புறவு தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ வென்றது, பறவையினங்களும் தம் துணையின்பால் அன்பு வைத்து ஒழுகும் அவ்விடத்தில் தங்கினார் என்றால், அங்கு நடைபேறும் நிகழ்ச்சி என்பால் வந்து சேர்க்கும்.ஏன்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது.
 ஒல்லேம் -  நாம் உடம் படாமையைத் தவறாக நினைத்து அதுபற்றிச் சினந்து அங்கே தங்கி விட்டனரோ வென்பது தலைவியின் ஐயம்.

Friday, August 15, 2014

குறுந்தொகை - 78



பாங்கன் கூற்று
(தலைவனது வேறுபாட்டுக்குக் காரணம் அவன் ஒருத்திபாற் கொண்ட காமமேயென்பதனை உணர்ந்து, “காமம் தகுதியில்லாரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று” என்று பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் நக்கீரர்

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
   
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்
   
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப
   
நோதக் கன்றே காமம் யாவதும்

நன்றென வுணரார் மாட்டும்
   
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.


                    -நக்கீரர்

.

உரை -

பெரிய மலையின் உச்சியில் உள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து பக்க மலையினிடத்து வீழும் மலைகளுடைய தலைவா! காமமானது சிறிதும் நன்மையென உணரும் அறிவில்லாதாரிடத்தும் சென்று தங்குகின்ற பெரும் அறிவின்மையையுடையது.ஆதலின் அது வெறுக்கத்தக்கது.(என்கிறான் தலைவனிடம் பாங்கன்)



     (கருத்து) நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.

பாங்கன் என்பவன் தலைவனின் பாங்கறிந்து ஒழுகுபவன். எப்போதும் தலைவனுடன் இருப்பவன்.


தலைவனுக்கு உறுதுணையாக இருத்தல் மட்டுமல்லாது தலைவனோடு மாறுபட்டு இடித்துரைக்கும் உரிமையும் உள்ளவன் பாங்கன். களவொழுக்கக் காலத்தில் தலைவன் தலைவியின் நினைவாகவே இருக்கும்போதும், கற்பொழுக்கக் காலத்தில் தலைவன் பரத்தையை நாடும்போதும் பாங்கன் இடித்துரைப்பான்.
 மாந்தர்களில் வாயில்களில் ஒருவராக இருந்து செயலாற்றுபவன் பாங்கன். [3]


 மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த தாழ் வரையில் வீழ்ந்தது போல, மிக்க பெருமையையுடைய நீ நின் பெருமை நீங்கிக் காமங்கொண்டாயென்பது குறிப்பு.

Thursday, August 14, 2014

ஆண்டவனேயாயினும்...



எண்ணியவை

எண்ணியவாறு நடக்க

முயற்சிக்க

அல்லாவிடின்

ஆண்டவனேயாயினும்

இயலாது

(கவிதை

குறுந்தொகை -77



தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி, “வழிப்போவார் இறத்தற்குக் காரணமாகிய வெம்மையையுடைய பாலை நிலத்தின் துன்பத்தை நினைந்து என் தோள்கள் தலைவர்திறத்து மெலிந்தன” என்று கூறியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் மதுரை மருதன் இளநாகனார்

இனி பாடல்-
   
அம்ம வாழி தோழி யாவதும்
   
தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத்
   
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை
   
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்

அரிய கானஞ் சென்றோர்க்
   
கெளிய வாகிய தடமென் றோளே.

                      - மதுரை மருதன் இளநாகனார்,

உரை-

தோழி ஒன்று சொல்வேன் கேட்பாயாக! வெவ்விய அருவழியில் இறந்த வழிபோக்கர்களுடைய உடலை மறைத்த, தழையைச் செயற்கையாக இட்ட குவியலானது, உயர்ந்த நல்ல யானைக்கு இட்ட நிழலைத் தருதற்குரிய பொருளாய்ப் பயன்படும்.,கடத்தற்கரிய பாலைநிலத்தில் என்னைப் பிரிந்து சென்ற தலைவரிடம், மெலிந்தவனாகிய பரந்த என் தோள்கள் தவறுடையனவெனக் கூறின் சிறிதும் தவறு அல்ல.

கருத்து - பாலை நிலத்துள் பயணம் மேற்கொண்டுள்ள தலைவனின் துன்பம் கண்டு வருந்தி என் தோள்கள் மெலிந்தன
.
 

Wednesday, August 13, 2014

குறுந்தொகை -76



தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவியிடம் உணர்த்தச் சென்ற தோழியை நோக்கி, "நான் அச்சிரக் காலத்தில் துன்புறும்படி தலைவர் பிரிவாரென்று முன்பே அறிந்தேன்; நீ சொல்வது மிகை" என்று கூறித் தலைவி கூறியது.)


 குறிஞ்சி திணை -76  - பாடலாசிரியர் கிள்ளிமங்கலங்கிழார்

இனி பாடல்-

காந்தள வேலி யோங்குமலை நன்னாட்டுச்
 
செல்ப வென்பவோ கல்வரை மார்பர்
 
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை
 
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇக்

தண்வரல் வாடை தூக்கும்
 
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே.

                   - கிள்ளிமங்கலங்கிழார்



 உரை-

(தோழி) மலைப்பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலுடையவளவிய இலையை, பெரிய யானையினது செவியை ஒப்பத் தோன்றுமாறு, தடவி, தண்ணிய வரவையுடைய வாடைக்காற்று அசைத்தற்குரிய மிக்க பனியையுடைய அச்சிரக்காலத்தில் நடுங்குவத்ற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர் காந்தளை வேலியாகவுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து என்னைப் பிரிந்து போவாரென்று கூறுகின்றனர்,..


(கருத்து) தலைவர் பிரிவை முன்னரே உணர்ந்தேன்; அவர் பிரியின் நான் துன்புறுவேன்.

 இயல்பாக வளர்ந்த காந்தளை வேலியாக உடைய மலைநாடு.  மலைச்சேம்பென்று ஒருவகைச் சேம்பு உண்டு அதன் இலைகளைப் போல யானையின் காதுகளாம்.அச்சிரக்காலம் எனில்முன்பனிக்காலம்.

முன்பனிக்காலத்தில் அவர் பிரிவார் என முன்பே தெரியும்.ஆயினும் அப்பிரிவால் நான் துன்பமுறுவேன்

Tuesday, August 12, 2014

குறை ஒன்று உண்டு



அதிகம் காயப்படுத்தப் படுகிறேன்

நான்

என்னிடமுள்ள ஒரே குறை

பிறரை

அதிகம் நேசிப்பதுதான்

குறுந்தொகை - 75



தலைவி கூற்று
(தலைவனது வரவைப் பாணனால் அறிந்த தலைவி, "நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக" என்று வாழ்த்தியது.)

மருதம் திணை -பாடலாசிரியர் மோசிகீரனார்

இனி பாடல்-

 
நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ
   
ஒன்று தெளிய நசையின மொழிமோ
   
வெண்கோட் டியானை சோணை படியும்
   
பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

                        -மோசிகீரனார்

உரை-

தலைவனது வரவை நீ கண்டாயோ? அல்லது தலைவனை கண்டறிந்தவர் சொல்ல கேட்டறிந்தாயா? அப்படி பிறர் சொல்லி கேட்டிருப்பாயின் யார் சொல்லி கேட்டாய்? உண்மையாக ஒன்றை அறிய விரும்புகிறோம். சொல்வாயாக. சொன்னால்...வெள்ளிய கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் துளைந்து விளையாடும் பொன் மிக்க பாடலிபுத்திர நகரத்தை பெறுவாயாக!


(கருத்து) தலைவர் வரவை உரைத்த நினக்குச் செல்வம் பெருகுவதாகுக,

தலைவன் வரவை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில், அவன் வந்திருக்கிறான் என தூதன் வாயிலாகக் கேட்டவள்..தலைவன் வரவை நீ பார்த்தாயா/ அல்லது யார் சொல்லியாவது கேட்டாயா? அப்படி யாரேனும் சொல்லியிருந்தால் அது யார்? சொல்வது உண்மையானால் பாடலிபுத்திர நகரையே பரிசலிப்பேன் என்கிறாள் தலைவி.

 

Monday, August 11, 2014

குறுந்தொகை - 74


தோழி கூற்று
(தலைவன் தலைவியை விரும்பினானாக, தலைவியிடம், "நம்மால் விரும்பப்படும் தலைவன் நம்மை விரும்பி மெலிகின்றான்" என்று அவள் கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் விட்டகுதிரையார்.

இனி பாடல்=

 
விட்ட குதிரை விசைப்பி னன்ன

விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
   
யாந்தற் படர்ந்தமை யறியான் றானும்
   
வேனி லானே்று போலச்

சாயின னென்பநம் மாணல நயந்தே.

                        - விட்டகுதிரையார்

உரை-

அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போன்ற,வளைத்துப் பின் விட்டமையால் வானத்தைத் தோய்ந்த மூங்கிலையுடைய குன்றத்தையுடைய நாட்டுக்குத் தலைவன், யாம் தன்னை நினைந்து மெலிதலை அறியானாகி தானும் வேனிலின் வெம்மையை ஆற்றாத இடத்தைப் போல நமது மாட்சிமைப்பட்ட நலத்தை விரும்பி மெலிந்தான்.


    (கருத்து) தலைவன் கருத்துக்கு உடம்பட வேண்டும்.

தலைவன், தலைவியை விரும்புவது போல, தலைவியும் அவனை விரும்பி நிற்கிறாள். தான் விரும்புவது தானே வலிய வந்தால் அதை மறுக்காது உடன்பட வேண்டும் (என தலைவி உரைக்கிறாள்)


   மூங்கில் விசைத்தெழுதலுக்கு விட்ட குதிரையின் விசைப்பை உவமை கூறிய சிறப்பினால் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் விட்டகுதிரையார் என்னும் பெயர் பெற்றனர்.

Sunday, August 10, 2014

குறுந்தொகை - 73



(தோழி கூற்று)
(தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து பின்னர் அதனையும் மறுத்து தோழி, தலைவன், தலைவியைமணம் செய்து கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்=

 
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
   
அழியல் வாழி தோழி நன்னன்
   
நறுமா கொன்று நாட்டிற் போகிய
   
ஒன்றுமொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.


                            -பரணர்

உரை-

தலைவனது மார்பையே, நீ விரும்புதலுடையாய்.நன்னனது காவன்மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, அனனது நாட்டினுட்புக்க வஞ்சினத்தையுடைய கோசரைப் போல சிறிதளவு வன்கண்மையையுடைய ஆராய்ச்சியும்  வேண்டும்.அதற்காக வருந்தாதே!


    (கருத்து) பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்தால் தலைவன் விரைவில் மணந்து கொள்வான்.

(வஞ்சினம் என்பதுஇப்படிச் செய்தால் இப்படியாவேன் என சபதம் செய்வதுதாம்.)

தலைவன் நடந்து கொள்ளும் முறைக்கெல்லாம் உட்பட்டால் களவொழுக்கம் குறைவின்றி நடைபெறும்.அந்த துணிவால் அவன் தலைவியை மணம் புரிய மாட்டான்.பகலில் தலைவன் வருவதற்கும் தடை போட்டு , இரவு வருவதற்கும் தடை விதித்தால்..வேறு வழியின்றி தலைவியை மணம் புரிந்து கொள்வான்.ஆகவே இப்படி நடிக்க வேண்டியது முக்கியமாகிறது என்கிறாள் தோழி.

Saturday, August 9, 2014

குறுந்தொகை - 72


தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி வந்த தலைமகன்பாற் காணப்பட்ட வேறுபாடுகளை நோக்கி, "இவை நினக்கு எதனால் வந்தன?" என வினவிய பாங்கனுக்கு, "மலைச்சாரலிலுள்ளதொரு தினைப்புனத்திற் குருவியோட் டுவாளொரு மகளது அழகு கண்டு மயங்கி யான் இக்காம நோயுற்றேன்" என்று கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மள்ளனார்.

இனி பாடல்-


பூவொத் தலமருந் தகைய வேவொத்
 
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
 
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
 
பரீஇ வித்திய வேன்ற்

குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே.

                               - மள்ளனார்.

உரை-

இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோளினையும் உடைய, பருத்தியை இடையிலே விதைத்த தினைமுதிர்ந்த புனத்தின்கண் ,அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டுகின்றவளது பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள் பூவினைப் போல அழகில் ஒத்துச் சுழலும் தன்மையையுடையன.ஆயினும் கொடிய தொழிலால் அம்பினை ஒத்து, உன்னைப் போன்ற யாவரும் அறியுமாறு எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.

   (கருத்து) நான் ஒரு மலைவாழ் மகள்பால் நட்பு பூண்டு காமநோய் உற்றேன்.

அவளது விழிகள் அம்புபாய்ந்து அதனால் ஏற்பட்ட புண் யாவரும் அறியும் வண்ணம் ஆயிற்றாம்(அவனது காம நோய்)


தினை வளர்ந்த இடத்திற் பருத்தியை விதைத்து அத்தினை முதிர்ந்து கொய்யப்பட்ட பின்னர்ப் பருத்தி விளைய அதனைக் கொள்ளுதல் மலைவாழ் மக்கள் வழக்கம். 

Friday, August 8, 2014

குறுந்தொகை - 71


தலைவன் கூற்று
(பொருளை ஈட்டுதற்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணிய நெஞ்சை நோக்கி, "இத்தலைவி நம் காமநோய்க்கு மருந்தும், இன்பம் பெறுதற்குச் செல்வமும் ஆதலின் இவளைப் பிரிதல் இயலாது" என்று தலைவன் கூறியது.)

 பாலைத் திணை - பாடலாசிரியர் கருவூர் ஓதஞானி.


மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
   
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்
   
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்
   
கல்கெழு கானவர் நல்குறு மகளே.

                         -கருவூர் ஓதஞானி.
   
உரை-

(நெஞ்சே) தோற்றிய தேமலையுடைய, அழகிய பெருமையையுடைய இளைய மார்பகங்களையும், பெரிய தோளையும், சிறுத்த இடையையும் உடைய கற்கள் பொருந்திய காட்டையுடையவர் பெற்ற மகள், என் காம நோய்க்கு பரிகாரம் வேண்டுமென்று கருதும் போது எனக்கு பரிகாரம் ஆவாள்.போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதின் எனக்குச் செல்வமும் ஆவாள்.

     (கருத்து) இவளைப் பிரிந்து பெறும் செல்வம் வேறொன்று இல்லை.

(இவளைப் பிரிந்தால் தன் காம நோய்க்கு மருந்தில்லை,அம்மருந்தும்.. வாழ்வில் இன்புற்றிருக்க தேடிச் செல்லும் செல்வமும் இவளே ஆவாள்)

Thursday, August 7, 2014

குறுந்தொகை - 69



தோழி கூற்று
(இரவில் தலைவியைக் காண விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வராதே!" என்று தோழி மறுத்துக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கடுந்தோட் கரவீரன்.

இனி பாடல்-

கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக்
   
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
   
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
   
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சார னாட நடுநாள்
   
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
                       
                           -கடுந்தோட் கரவீரன்.

   உரை-

கரிய கண்ணையும், தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்துவிட்டால், கைம்மைத் துன்பத்தைப் போக்கமுடியாத பெண்குரங்கானது, மரமேறுதல் போன்ற வற்றை அறியாத தனது வலிய குட்டியை, சுற்றத்தினிடம் ஒப்படைத்து, ஓங்கிய மலைப்பக்கத்தில் தாவி உயிரைப் போக்கிக் கொள்ளும் சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே, நள்ளிரவில் வராதே! நீ வந்தால் தீங்கு உண்டாகும் என எண்ணி நாங்கள் வருந்துவோம்.நீ தீங்கின்றி வாழ்வாயாக!


        (கருத்து) நீ இரவில் வருதலைத் தவிர்.
;
 


குறுந்தொகை - 70



தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று நீங்கும் தலைவன், "இவள் ஐம்புலனுக்கும் இன்பத்தைத் தருபவளாயினாள்; இவளைப் புகழுமாற்றியேன்" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறி மகிழ்ந்தது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஓரம்போகியார்

இனி பாடல்-

ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்
   
நறுந்தண் ணீர ளாரறணங் கினளே
   
இனைய ளென்றவட் புனையள வறியேன்
   
சிலமெல் லியவே கிளவி

அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.

                       -ஓரம்போகியார்

உரை-

(நெஞ்சே) ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலையும், ஒள்ளீய நுதலையும் உடைய தலைவி மணத்தையும், தண்மையையும் உடைய தன்மையினள்.ஆனாலும், பிரிந்த காலத்துப் பொறுத்ததற்கரிய வருத்தத்தையும் தருபவள்.அவளை, இத்தகையவள் என்று(சொல்லமுடியவில்லை), அவள் சொற்கள் சின்மையையுடையன,மென்மையுடையன.. நான் அவளை அணைக்கும் போது பஞ்சணை போன்ற மென்மையை உடையவள்.

   (கருத்து) இவள் ஐம்புலனுக்கும் இன்பந்தருபவள்.

    (வி-ரை.) ஒடுங்கீரோதி யென்றது, ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை.புனையப் புனைய மேலும் புனையத் தோன்றுவதன்றி இவ்வளவே என வரையறுத்து நிறுத்தலாகாமையின், புனையள வறியேனென்றான்.

காட்சி இன்பமும்,கேள்வி இன்பமும்,ஊற்றின்பமும், உயிர்ப்பின்பமும்,சுவை இன்பமும் ஒருங்கே பெற்றவள்

Wednesday, August 6, 2014

குறுந்தொகை - 68


தலைவி கூற்று
(தலைவன் பிரிவினால் வருந்திய தலைவி முன்பனிப்பருவத்தும் அவன் வாராமையால் துன்புற்று, "இப்பனியின் துன்பத்தைத் தீர்ப்பது தலைவருடைய மார்பேயாகும்; ஆதலின் அவர் வாராவிடின் இதனை ஆற்றுதல் அரிது" என்கிறாள்.)


குறிஞ்சி திணை -பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்
   
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்
   
அரும்பனி யச்சிரந் தீர்க்கும்
   
மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே.

                     -அள்ளூர் நன்முல்லை..

உரை-

குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற செவ்விய காலையுடைய உழுந்தினது மிக முதிர்ந்த காய்களை மான்கூட்டங்கள் தின்னும் பொருட்டுக் கூடும் பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனிக்காலத்தில் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் மருந்து ,என்னை மணந்த அவரது மார்பைத் தவிர வேறு ஏதும் இல்லை.

 
 (கருத்து) அவர் உடன் இல்லாததால் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.(என்கிறாள் தலைவி)

(உளுந்தின் வேர் சிறிது மேலே தெரிந்தவண்ணம் முன்பனிப் பருவத்தில் முதிரும்.அதைத் தின்ன முன்பனிக்கால, பொறுக்கமுடியா பனியை பொறுத்து மான் கூட்டங்கள் கூடும்.ஆனால்..எனக்கு அப்பனிக்கொடுமையைப் போக்கும் மருந்து என் தலைவன் மார்புதான் (என்கிறாள் தலைவி)


Tuesday, August 5, 2014

குறுந்தொகை - 67


தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "பிரிந்து சென்ற தலைவர் என்னை நினைக்கவில்லையா?நினைத்திருந்தால் வந்திருப்பாரே! என்று கூறியது)

பாலைத் திணை - பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல் -


உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
 
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
 
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
 
பொலங்கல வொருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.

                    -அள்ளூர் நன்முல்லை

உரை-

(தோழி) கிளி வளைந்த அலகினிடத்திலே கொண்ட வேம்பினது ஒள்ளிய பழமானது, புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லனது, முனை மாட்சிமைப்பட்ட கூரிய கைந்நகத்திற் கொண்ட பொன்னாபரணத்திற்குரிய ஒரு காசு போல இருக்கும் நிலம் கரிந்துள்ள கள்ளியையுடைய பாலை நிலத்தை கடந்து சென்றதலைவர் என்னை நினைக்கமாட்டாரோ?!


 

    (கருத்து) தலைவர் என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள்.


Monday, August 4, 2014

குறுந்தொகை - 66



தோழி கூற்று
(கார்காலம் வந்தபின்பும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை நோக்கி, "இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்வது; இதைக் கார்காலத்துக்குரியதல்ல கார்காலம் என எண்ணி மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. ஆதலின் இது கார்ப்பருவமென்று நீ வருந்தாதே" என்று தோழி கூறியது.)

முல்லை திணை- பாடலாசிரியர் கோவதத்தன்

இனி பாடல்-

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
   
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
   
பருவம் வாரா வளவை நெரிதரத்
   
கொம்புசேர் கொடியிண ரூழ்ந்த

வம்ப மாரியைக் காரென மதித்தே.

                          -கோவதத்தன்

உரை-

கற்கள் விளங்கும் பாலைநிலத்து கடினமான வழியைக்கடந்து சென்ற தலைவர், மீண்டும் வருவேன் என்று சுட்டிக் கூறிய கார்ப்பருவம் வராத காலத்திலே, பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை கார் காலத்து மழையென்று கருதி
நெருங்குமாறு சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துகளை புறப்பட விட்டன..ஆகவே..பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள் நிச்சயமாக பேதைமையுடயன.

 

    (கருத்து) இது கார்ப்பருவம் அன்று; ஆதலின் நீ வருந்தாதே

கார்காலம் வரவில்லை எனத் தெரியாமலேயே பருவம் மாறி பெய்த மழையை கார்காலமழை என எண்ணி கொன்றை மலர்கள் பூத்துவிட்டனவாம்.அதைப் பார்த்து கார்காலத்தில் தலைவன் வருவேன் என்று சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது , தலைவன் வரவில்லையே என வருந்தாதே!. .(என்கிறாள் தோழி)

Sunday, August 3, 2014

குறுந்தொகை - 65



தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்ததையறிந்த தலைவி, தலைவன் வாராமையால் வருந்தி "இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்களோ? என்று கேட்பதுபோலக் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்; இனி என் செய்வேன்!" என்று தோழியிடம் வருந்திக் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் கோவூர் கிழார்.

இனி பாடல்-


வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன்
   
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
   
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
   
வாரா துறையுநர் வரனசைஇ

வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே.


                          - கோவூர் கிழார்.

உரை-(தலைவி உரைத்தது)

வலிய பருக்கைக் கற்களினிடத்தேயுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்தற்குரிய தனது பெண்மானோடு களிப்பினாள் துள்ளி விளையாடாமல் நிற்கவும், இங்கு வராமல் சென்ற இடத்திலேயே தங்கிய தலைவர், மீண்டும் வரவேண்டும் என விரும்பி மிக வருந்தித் தங்கும் பொருட்டு உயிரை வைத்துக் கொண்டிருந்தீரோ என்று கேட்டதற்கு மழைத்துளியைத் தரும் குளிர்ந்த கார் பருவம் வந்தது.

(கருத்து) கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வரவில்லை

    (வி-ரை.) மான் தன் துணையோடு விளையாடும்படி கார்ப் பருவம் வரவும், தலைவர் தம் துணையோடு மகிழும்படி வந்து சேர்ந்திலர் என்னும் குறிப்புத் தோன்றுகின்றது. 'கார்ப்பருவம் வந்த பின்பும் ,அவர் வராமல் நாம் உயிரோடு இருத்தல் தவறு' என்னும் நினைவினளாதலின் அக்கருத்தை அப்பருவம் கேட்பதாக அமைத்தாள். இனி அவர் விரைவில் வாராவிடின் உயிர் வாழ்தல் அருமை என்பதும் புலப்பட்டது.

Saturday, August 2, 2014

கரு உருவாகுமுன் (கவிதை)


                           


கவிதை எழுத

வெள்ளைத் தாளில்

நேர்க்கோடிட்டேன்

ஆகா..அற்புதம்

கவிதை அற்புதம்

என்றிட்டான் ஒருவன்

மற்றவனோ

நேர்மையை வலியுறுத்தும்

பாங்கு அருமை என்றான்

அடுத்தவன்

வாழ்வில் நிமிர்ந்து நில்

வளமாய்ச் சொல்கிறது

என்றான்

நானோ

கவிதையின் கரு தேடி

விட்டத்தைப் பார்த்தேன்

குறுந்தொகை - 64



தலைவி கூற்று
(தலைவன் பிரிவை பொறுக்கமுடியா தலைவியை நோக்கி, "அவர் உன் துன்பத்தையறிவார்; ஆதலால் விரைவில் திரும்புவார்" என்று தோழி கூற, "அவர் அறிந்தவராயிருந்தும் இன்னும் வரவில்லையே" என்று தலைவி கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் கருவூர்க் கதப்பிள்ளை

இனி பாடல்-
 
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
   
புன்றலை மன்ற நோக்கி மாலை
   
மடக்கட் குழவி யணவந் தன்ன
   
நோயே மாகுத லறிந்தும்

சேயர் தோழி சேய்நாட் டோரே.

               - கருவூர்க் கதப்பிள்ளை

உரை-

பல பசுக்கள் நெடிய வழியில் நீங்கிச் சென்றன.அவை தங்கியிருத்தற்குரிய புல்லின் இடத்தையுடைய மன்றத்தை நோக்கி.மாலைநேரத்தில் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள், தலையெடுத்துப் பார்த்து வருந்தினாற் போன்ற தம் வரவு நோக்கிய துன்பத்தையுடையேமாதலை அறிந்திருந்தும் நெடுந்தூரத்தேயுள்ள நாட்டுக்குச் சென்ற தலைவர் இன்னும் நெடுந்தூரத்திலே உள்ளார்.


(கருத்து) தலைவர் நாம் துன்புறுவோமென்பதை அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்,

 மேயச் சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் ஊருக்கு மீண்டும் வந்து தான் தங்குமிடம் புகுவது வழக்கம்; அதனால் மாலையில் கன்றுகள் தம் தாய்ப் பசுக்களை எதிர்நோக்கியிருந்தன;    பிரிந்து சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் மீண்டு வருதலை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்றலைப்போல, பிரிந்து சென்ற தலைவனது வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கியிருப்பேனென்று தலைவனுக்கு தெரிந்திருந்தும் அவர் வரவில்லையே என தலைவி வருந்துகிறாள்.

Friday, August 1, 2014

சிரிக்கின்றாய்...நீ..சிரிக்கின்றாய் (கவிதை)


                       





நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

குறுந்தொகை -63



தலைவன் கூற்று
(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் உகாய்க்குடிகிழார்

இனி பாடல்-


ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
 
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
 
கம்மா வரிவையும் வருமோ
 
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே

                       - உகாய்க்குடிகிழார்

               
உரை

தலைவன் கூற்று

இரவலர்க்குக் கொடுத்தலும், இன்பங்களை அனுபவித்தலும், பொருளில்லா வறியவர்க்கு இல்லையென கருதி, பொருள் செய்தற்குரிய செயல்களை மிக எண்ணாமல் நின்றாய்.அச்செயல் செய்வதற்குத் துணையாக, அழகிய மாந்தளிர் நிறத்தையுடைய தலைவியும் வருவாளோ?எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ? சொல்லிடு என் நெஞ்சே!


(கருத்து) இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.

பொருள் ஈட்ட முயற்சி செய்யாது இல்லத்திலேயே தங்கியிருப்பது யாருக்காக.நீ பொருள் ஈட்ட வேற்று நாட்டுக்குச் சென்றால், உடன் அங்கு தலைவியும் வருவாளோ?வாராவிடின் நான் மட்டும் போக வேண்டும்? இவளைப் பிரிந்து நான் எப்படி செல்வேன்? என அவள் மீது தனக்கு இருக்கும் அன்பை சொல்கிறான் தன் நெஞ்சிற்கு! ( அதனால் பொருள் ஈட்ட செல்ல மாட்டான் என்று பொருள் கொள்ளக்கூடாது)

 

 

Thursday, July 31, 2014

குறுந்தொகை - 62


தலைவன் தனக்கே சொல்லிக்கொண்டது
(இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் தலைவியோடு அளவளாவிய தலைவன் பிற்றைநாளில் முதல்நாள் கண்ட இடத்தில் அவளைத் தலைப்பட்டு இன்புற எண்ணித் தன் நெஞ்சை நோக்கி, "அவள் வாசமும், மென்மையும் நன்னிறமும் உடையள்; இன்றும் அவளைப் பெறுவேம்" என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் சிறைக்குடி யாந்தையார்

இனி பாடல்-

 
கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
   
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
   
ஐதுதொடை மாண்ட கோதை போல
   
நறிய நல்லோண் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே.

                              -   சிறைக்குடி யாந்தையார்

   உரை -

காந்தள் மலரையும், அரும்பிலிருந்து உண்டாகிய செவ்விய மலர்களாகிய முல்லைப் பூக்களையும், மணக்கும் இதழ்களையுடைய குவளை மலர்களோடு இடையிடையே பொருந்தும்படி அழகிதாகத் தொடுத்த மாட்சிமைப்பட்ட மலையைப் போல நல்ல வாசத்தையுடைய தலைவியின் மேனியானது, தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது, தழுவுதற்கும் இனியது.


(கருத்து) தலைவியை முன்பு தழுவி இன்புற்றதுபோல இப்பொழுதும் இன்புறுவேன்.

குறுந்தொகை - 61



தலைவி கூற்று
(விலைமகளிடம் இருந்து பிரிந்த தலைமகனுக்குத் தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி, "தலைவன் இங்கேவந்து தலைவியோடு இன்புறவில்லையாயினும், அவனது நட்பை மனத்தால் நினைந்து அமைதியுற்றுத் தலைவி இருத்தலால் அவள் வளைகள் செறிந்தன; ஆதலின் அவன் வந்து செய்யும் குறையொன்ரும் இல்லை" என்று கூறித் தோழி அனுமதி மறுத்தது.)


மருதம் திணை - பாடலாசிரியர் தும்பிசேர்கீரன்

இனி பாடல்-

தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்துஇன் புறாஅ ராயினும் கையின்

ஈர்ந்துஇன் புறூஉம் இளையோர் போல

உற்றுஇன் புறேஎ மாயினும் நற்றேர்ப்

பொய்கை ஊரன் கேண்மை

செய்துஇன் புற்றனெம் செறிந்தன வளையே

                                   -தும்பிசேர்கீரன்

உரை-

தச்சனால் செய்யப்பட்ட சிறு குதிரை பூட்டப்பெற்ற சிறுவண்டியை ஏறிச் செலுத்து இன்பமடையாராயினும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப் போல மெய்யுற்று இன்பமடையேமாயினும் நல்ல தேர்களையும், பொய்கையையும் உடைய ஊர்க்குத் தலைவனது நட்பை மேன்மேலும் பெருகச்செய்து இன்பம் அடைந்தோம்.அதனால் வளைகள் கழலாமல் இறுகியமைந்தன.

(கருத்து) தலைவர் எம்மை மறந்தாலும் யாம் அவரை மறக்கவில்லை


(மரத்தச்சன் செய்த குதிரை, மரக்குதிரையே ஆனாலும், அதனை ஓட்டும் சிறுவர்கள் அதனை உண்மையானக் குதிரை என்றே எண்ணியே ஓட்டி மகிழ்வர். நல்ல பல தேர்களையும் பல பொய்கைகளையும் கொண்ட ஊரை உடையத் தலைவனது மெய்யோடு மெய்சேர்ந்து இன்பம் பெறாவிட்டாலும், அவனுடன் மனதளவில் நான் கொண்ட காதலால் இன்பமடைந்திருக்கிறேன்.. அதனால் என்னுடைய கை வளையல்கள் நெகிழ்ந்து வீழ்ந்துவிடவில்லை..!! (தலைவனது பிரிவால் கை வளையல்கள் நெகிழ்ந்து விழுமாறு உடல் மெலியும்... ஆனால் அது இப்போது இல்லாமல் போய்விட்டது).








Wednesday, July 30, 2014

எமக்கு என்ன ...


                               



இவனுக்கு இவள்

இவளுக்கு இவன்

பேசி நடத்தியவர்கள்

கோர்ட்டுக்கு

வருவதில்லை

விவாகரத்தின் போது


குறுந்தொகை - 60

தலைவி கூற்று

(தலைவனது பிரிவை தாங்க முடியாத  தலைவி தோழியை நோக்கி, "தலைவர் என்னோடு அளவளாவாமல் இருப்பினும் அவரைக் கண்டதுமே எனக்கு இன்பம் பிறக்கும்; அஃது இப்பொழுது இலதாயிற்று" என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பரணர்

இனி பாடல் -
 
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
   
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
   
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து
   
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
5
நல்கார் நயவா ராயினும்
   
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.

                  - பரணர்

உரை -
உயர்ந்த மலையில் உள்ள குறிய அடியையுடைய கூதளஞ்செடி அசைய (அதில்) பெரிய தேனடையைக் கண்ட , காலில்லா எழுந்தும் நிற்க முடியாத முடவன், உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை குழித்து அம்மலையின் கீழே இருந்தபடியே அத்தேனடையை பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப்போல தலைவர் என்னிடம் பேசவிரும்பாராயினும், அவரைப் பலமுறைப் பார்த்தல் என் நெஞ்சிற்கு இனிமை தரும்.

(கருத்து) தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.


முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாலும், அது கிடைக்காது எனினும், அதைக்கண்டளவிலே இன்பம் அடைவது போல தலைவரிம்ன் தண்ணளியையும், நயப்பையும் பெறாவிடினும் அவரைக் காண்பதே இன்பம் (என்கிறாள் தலைவி)

   

Tuesday, July 29, 2014

குறுந்தொகை - 59




தோழி கூற்று
(தலைவன் பொருள்தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை தாங்காது வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் உன்னை மறவார்; தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் திரும்புவார்" என்று தோழி கூறியது.)

பாலைத்திணை - பாடலாசிரியர் மோசிகீரன்


இனி பாடல்-
 
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
   
அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
   
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
   
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
5
சுரம்பல விலங்கிய வரும்பொருள்
   
நிரம்பா வாகலி னீடலோ வின்றே.

                     - மோசிகீரன்

உரை-

 கண்மாக்கிணையை இயக்கும் தாளத்தையுடைய பறை . பாணர் முதலிய இரவலரைப் பாதுகாக்கவனது அரலையென்னும் குன்றத்தின்கண் உள்ள அகன்றவாயையுடைய ஆழமுள்ள சுனையினிடத்து மலர்ந்த குவளை காட்டுமல்லிகையின் மணம் வீசும் உனது நல்ல நெற்றியை தலைவர் மறப்பாரோ?பலநாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும் பாலைநிலம் பல குறுக்கிட்ட கிடைத்தற்கரிய பொருள் முற்றக் கை கூடாவாதலின் முற்றும் பெற்றே மீள்வே மென்று கருதித் தலைவர் காலம் நீடித்து தங்குதல் இலதாகும்.ஆகவே நீ வருத்தப்படாதே!

    (கருத்து) தலைவர் விரைவில் மீளுவர்.

 

    (வி-ரை.) பதலை - ஒருகண் மாக்கிணையென்னும் பறை. பரிசிலர் கோமானென்றது பரிசிலருக்குப் பரிசில் தந்து பாதுகாக்கும் தலைவன்.

Monday, July 28, 2014

இரு நிலவுகள்

                          



பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

குறுந்தொகை -58




தலைவன் கூற்று
(தன்னை இடித்துக் கூறிய பாங்கனை நோக்கி, “எனது காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று; இதனை நீங்கச் செய்யின் நன்றாகும்” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெள்ளிவீதியார்.

இனி பாடல்-
 
இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
 
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
 
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
 
கையி லூமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெ யுணங்கல் போலப்
 
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

.                        -வெள்ளிவீதியார்

உரை-

இடித்துரைக்கும் நண்பரே! நுமது காரியமாக என் காமநோயை நிறுத்தலைச் செய்தால் மிக நல்லது.என் விருப்பமும் அதுவே! சூரிய வெயில் எறிக்கும் வெம்மையுடைய பாறையினிடத்தே , கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணையைப் போல என்னிடத்தில் உண்டான இக்காமநோய் பரவியது.பொறுத்துக் கொண்டு நீக்குதற்கு அரியதாக உள்ளது.

 (கருத்து) காமநோய் பொறுத்தற்கரியது..

வெண்ணெய் சூரிய வெப்பத்தால் உருகி பரந்ததுபோலக் காமநோய் பரந்தது,அவ்வெண்ணெய் உருகாமல் காக்கும் பொருட்டு கையில்லாத, வாய் பேசமுடியா ஊமை பிறரைக் கூவி அழைத்து பாதுகாக்க செய்யவும் இயலாது போல, காமநோயை அடக்கி பாதுகாக்கும் ஆற்றலை நான் பெறவில்லை.இதனைக் காக்க இயலவில்லை.
 எப்படி ஒரு உவமை சொல்லப்படுகிறது பாருங்கள்.இதுவே இப்பாடலின் சிறப்பு.

Sunday, July 27, 2014

குறுந்தொகை - 57


தலைவி கூற்று
(தாய் முதலியவர்களால் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி, "தலைவரும் யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று" என்று கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்
   
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
   
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
   
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
   
டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந்

திருவே மாகிய வுலகத்
   
தொருவே மாகிய புன்மைநா முயற்கே.

                       -சிறைக்குடியாந்தையார்

உரை-

தோழி. செய்ய வேண்டியவற்றை அறிந்து, பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாக இருவரும் , இவ்வுலகத்தில், பிரிவினால் ஒருவராகிய.துன்பத்தினின்றும் நாம் நீங்கி தப்புதற்கு, பூவானது நம் இடையிலே பட்டாலும், அக்காலம் பல ஆண்டுகள் கடந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய, நீரினிடம் உறைகின்ற மகன்றிற்பறவைகளின் புணர்ச்சியைப் போல பிரிதல் அருமையாகிய நீங்காத காமத்தோடு ஒன்றாக எங்கள் உயிர் போகவே என் விருப்பம்.

    (கருத்து) தலைவரைப் பிரிந்திருத்தலினும் உயிர்நீத்தல் சிறப்புடையது.

மகன்றில் என்பது நீர் வாழ் பறவைகளில் ஒன்று.இப்பறவைகள் ஆணும், பெண்ணும் பிரிவின்றி இணைந்து வாழும் தன்மையுடையன.இவை மலர்களிடையே உடனுறையும் காலம், அப்பூ இடையே வரக்கூடுமாதலால் பூவின் கண் திரியும் மகன்றில் எனச் சொல்வர்

Saturday, July 26, 2014

குறுந்தொகை - 56



தலைவன் கூற்று
(தலைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று விரும்பிய தோழிக்கு உடன்படாது தனியே பிரிந்து சென்ற தலைமகன் பாலைநிலத்தின் தீமையைக் கண்டு, "இத்தகைய கடினமான இடத்தில் தலைவி வருவாளாயின் மிக இரங்கத் தக்காள்!" என்று கூறியது.)


பாலைத்திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்.


இனி பாடல்-


வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்

குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
   
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
   
வருகதில் லம்ம தானே

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

                          -சிறைக்குடியாந்தையார்

    உரை-

வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய காட்டுமல்லிகைப் பூ மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சிலவாகிய நீரை வளையையுடைய கையாளாய் எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு தலைவி வந்தால், என் நெஞ்சில் அமர்ந்த என் தலைவி மிக இரக்கப்பட வேண்டியவள் ஆவாள்.

    (கருத்து) கடினமான பாலை நிலத்தில் தலைவி வருதற்குரியவள் அல்ல,.

(பாலை நிலத்தில் நீரற்ற சுனையைத் தோண்டி வரும் சிறிதளவு தண்ணீரை மக்களும், விலங்குகளும் அருந்துவர்.காட்டுமல்லிகை அருகிலுள்ள மரங்களிலிருந்து  விழுந்து அழுகி நீரில் கொடும் தீய நாற்றத்தை உண்டாக்கும்.தலைவியை பிரிந்திருந்தாலும், அவள் உஅன் வந்திருந்தால் இந்நீரை குடிக்கும் நிலைக்கு ஆளாகி இரக்கப்பட வேண்டியவள் ஆவாள்.ஆகவே, இப்படிப்பட்ட பாலை நிலத்திற்கு வராதது அவளுக்கு நல்லதே!

Friday, July 25, 2014

குறுந்தொகை -55



தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்திலே கேட்கும் அணிமையில் நின்ற காலத்தில், அவன் விரைந்து மண்ந்து கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்துவளாய், “இவ்வூர் சிலநாளே வாழ்வதற்குரியதாகவும், இன்னாமையை யுடையதாகவும் இருக்கின்றது” என்று கூறி, மணக்காவிடின்
 தலைவி உயிர்நீப்பாளென்று தோழி புலப்படுத்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர்  நெய்தற் கார்க்கியர்

இனி பாடல்-

 
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
   
பொங்குபிதிர்த் துவலையொடு மங்கு றைஇக்
   
கையற வந்த தைவர லூதையொ
   
டின்னா வுறையுட் டாகும்

சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.

                      -நெய்தற் கார்க்கியர்


உரை-

இந்த சிறிய நல்ல ஊரானது, கரிய கழியினிடத்திலேயுள்ள நீலமணி போன்ற பூக்கள் குவியும்படி தூய அலையிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு மேகத்தை பொருந்தி, பிரிந்தோர் செயலறும்படி தடவுதலையுடைய வாடைக்காற்றோடு துன்பத்தைத் தரும் மாலைப்பொழுதுடன், (தலைவி)தங்குமிடத்தையுடையதாகின்ற சில நாட்களையுடையது.

 (கருத்து) தலைவன் வாராவிடின் தலைவி இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வாளாதலின் அவன் விரைவில் மணந்து கொள்ள வேண்டும்.(அவளது உயிர் நீடிக்க)

(வி-ரை.) மணிப்பூ என்றமையால் நீலமணி போன்ற முள்ளியையும், . இவை கூம்பவென்றமையின் மாலைப் பொழுதையும் கொள்ள வேண்டும்.

குறுந்தொகை - 54


தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணம் புரியாது நெடுங்காலம் வந்து பழகுங் காலத்தில் அங்ஙனம் பழகுதலால் உண்டாகும் வீண்வம்பையறிந்து வருந்திய தலைமகள் தோழியை நோக்கி, “ தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவன் என்னை மணந்து கொண்டாலன்றி அதனைப் பெறேன்” என்றது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் மீனெறி தூண்டிலார்.


யானே யீண்டை யேனே யென்னலனே

 ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
   
கான யானை கைவிடு பசுங்கழை
   
மீனெறி தூண்டிலி னிவக்கும்

கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.

                            - மீனெறி தூண்டிலார்

உரை-

தோழி! நான் இங்குள்ளேன் என்னோடு முன்பு ஒன்றியிருந்த என் பெண்மை நலன், தினை புனங் காப்பார் விடும் கவண்கல்லின் ஒலிக்கு அஞ்சி காட்டுயானை கைவிட்ட பசிய மூங்கிலானது, மீனை கவர்ந்துகொண்டதூண்டிலைப் போல மேலே செல்வதற்கு இடமாகிய காட்டையுடைய தலைவனோடு நான் பழகிய அவ்விடத்தே நீங்கியது.

    .(கருத்து) தலைவன் பிரிவினால் யான் பெண்மைநலனிழந்தேன்.

கவண் கல்லின் ஒலி கேட்டு அஞ்சி, தான் உண்ணுக் கொண்டிருந்த பசுமையான மூங்கிலை யானை விட்டதும்..அது வளைந்த நிலையிலிருந்து விடுபட்டு உடன் மேலே செல்வது போல (அது எப்படி..இருக்கிறதாம் மீனைப் பிடித்த தூண்டில் மேலே செல்வது போல இருக்கிறதாம்) அன்பு செலுத்தி அன்பற்ற காலத்து பிரிந்து சென்றானாம் தலைவன்.இந்த உவமையின் சிறப்பால் இப்பாடல் ஆசிரியர் நல்லிசைச் சான்றோர் மீனெறி தூண்டிலார் எனப் பெயர் பெற்றார்.

Thursday, July 24, 2014

மூன்றாம் பிறை

                                       
                             

முந்தைய பேருந்தில்

கடைசி இருக்கைகளில்

மூன்றாம் பிறை நிலவுகள்


2)தக்காளி விலை என்ன

என்றவன்

கன்னங்கள் தக்காளியாயின


3)தேங்கிய தண்ணீரில்

டீசல் உண்டாக்கிய

வானவில்


4)சாலையோரப் பூக்களாய்

பறிப்பாரின்றி

முதிர் கன்னிகள்

குறுந்தொகை - 53



தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணப்பேன் என்ற உறுதிமொழி கூறிய பின்பும் நெடுங்காலம் கழிந்தது கண்டு தலைவி வருந்துதலை யறிந்த தோழி தலைவனை நோக்கி, “நீ கூறிய உறுதிமொழிகள் எம்மை வருத்தின; அவை பிறழாமல் நீ இனி விரைவில் மணந்துகொள்ள வேண்டும்” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் கோப்பெருஞ்சோழன்

இனி பாடல்-

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
   
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
   
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
   
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன

எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை
   
நேரிறை முன்கை பற்றிச்
   
சூரர மகளிரொ டுற்ற சூளே.

                       -கோப்பெருஞ்சோழன்.


உரை-.
தலைவனே! முன்னிடத்திலுள்ள அரும்பு முதிர்ந்த புன்னை மரத்தின் மலர்கள் , உதிர்ந்து பரந்து தங்கிய வெள்ளிய மணற்பரப்பினது வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டு எடுக்கும் இடந்தோறும் செந்நெல்லின் வெள்ளிய பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும் மணல்மேடுகள் பொருந்திய எம்முடைய ஊரிலுள்ள அகன்ற நீர்த்துறையில் நுண்ணிய மூட்டுவாயையுடைய முன் கையைப் பிடித்து தெய்வமகளிரை சுட்ட்க் கூறிய சத்தியம் எம்மைத் துன்புறுத்தின.

(கருத்து) நீ உன் உறுதிமொழிக்கேற்ப விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும்.



காதலன், காதலியை மணப்பதாக வாக்குக் கொடுத்து நீண்ட நாள் ஆகிறது.ஆகவே விரைவில் மணம் செய்துகொள்ள வேண்டும் என தோழி உரைக்கிறாள்.

புன்னைமலர்,வெள்ளிய மணற்பரப்பு..நெல்லின் வெள்ளிய பொரி சிதறினாற் போல  மணல் மேடாம்....என்ன ஒரு அற்புத கற்பனை.இப்பாடலின் சிறப்பு அதுதான்.

Wednesday, July 23, 2014

குறுந்தொகை -52



தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கான முயற்சிகளைச் செய்வதை அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான் உண்மையைத் தாயார்க்கு அறிவித்தேன்; அதனால் இஃது உண்டாயிற்று” என்று தோழி உணர்த்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பனம்பாரனார்

இனி பாடல்-

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
   
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
   
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
   
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை

பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே.    

                                   -பனம்பாரனார்

உரை -

நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற கரிய கூந்தலையும், வரிசையான வெள்ளிப் போன்ற பல்லையுமுடைய பெண்ணே! தன்னிடமுள்ள யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி, நீ உன் கற்பிற்கு களங்கம் வருமோ என்று அஞ்சி நடுங்குவதை அறிந்து, உன் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத நான் சிறிது சிறிதாக அப்பொழுதுக்கு அப்போது உனக்காக இரங்கி வருந்தினெனல்லவா?(இப்போது தலைவன் தலைவியை மணக்க முயற்சி செய்து வருகிறேன்)

ஜாதிகள் இல்லை

                               




தனக்கும் நான்கு கால்கள்

என்பதை மறந்து

லேப்ரடாரும்

ஜெர்மன் ஷெப்பர்டும்

மோதிக் கொண்டன

ஜாதிகள் இல்லையென...

தெரு விலங்கு சிரித்தது


குறுந்தொகை-51



தோழி கூற்று
(தலைவன் தலைவையை மணந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்வதால், அவன் விரைந்து வந்து மணக்கவில்லையே என கவலையுற்ற தலைவிக்கு, “நானும் தாயும் தந்தையும் உன்னை அத்தலைவருக்கே மணம் செய்து கொடுக்க விரும்பியுள்ளோம். இந்த ஊரினரும்  உங்கள் இருவரையும் சேர்த்துச் சொல்கின்றார்கள்” என்று தோழி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல்-
 
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
   
நூலறு முத்திற் காலொடு பாறித்
   
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
   
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்

எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
   
அம்ப லூரு மவனொடு மொழிமே.

                     _ குன்றியனார்

உரை-

வளைவாகிய முள்ளையுடைய கழிமுள்ளானது, மிக்க குளிர்ச்சியை உடைய கரிய மலர் நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றாற் சிதறி நீர்த்துறைகளுள்ள இடங்களில் பரவுவதற்கிடமான தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை (நீ மணமுடிக்க) நானும் விரும்புகிறேன்.நம் தாயும் அவனிடம் மிக்க விருப்பமுள்ளதாய் உள்ளாள்.நம் தந்தையும் அவனுக்கு உன்னை மணமுடிக்க விரும்புவான்.(உங்களை இணைத்து)சிலரறிய பழி சொல்லும் ஊரிலுள்ளோரும் அவனுடன் உன்னைச் சேர்த்தே சொல்லுவர்.

(கருத்து - உன்னை மணமுடிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.நீ கவலைப்படாதே)

தலைவணை தலைவி மணமுடிக்க தாய் விரும்புகிறாள்.யார் விரும்பினாலும் அதற்கான உரிமை தந்தைக்கு உண்டு என்பதால் "எந்தையுங் கொடீயர் வேண்டும் என்கிறாள் தோழி

அம்பல் என்பது சிலரறிந்து கூறும் பழிமொழி

Tuesday, July 22, 2014

மின்.....சாரம்

                         


இடி..மின்னல்..

கவிதை எழுதினால்

மழை பொழிகிறது

மின்சாரம் எழுத எண்ணின்

மின்...அதற்குமேல்

சாரம் இல்லை

குறுந்தொகை - 50






தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று பிரிந்த தலைவன் தலைவிக்கு தூது அனுப்புகிறான்.அந்த தூதுவரை நோக்கி தலைவி, “அவர் விளையாடும் துறை அழகு பெற்றது; அவர் மணந்த தோள் மெலிவுற்றது” என்று கூறுகிறாள்)

மருதம் திணை - பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல்-

.  
ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்
   
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
   
துறையணிந் தன்றவ ரூரே யிறையிறந்
   
திலங்குவளை நெகிழச் சாஅய்ப்

புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.

                       _ குன்றியனார்


உரை -

வெண்சிறு கடுகு போன்று சிறு பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து இருக்கும் தலைவனின் ஊரின் இடத்தில் நீர்த்துறையை அழகு செய்தது.(ஆனால்) அவர் முன்பு அளவளாவிய என் தோள், விளங்கும் வளையல்கள்..மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகுழும்படி மெலிந்து..தனிமையையே அழகாகப் பெற்றது.


 (கருத்து) அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.

 ஊரின் அழகு ஞாழல் மரப்பூவும்,மருதமரப்பூவும்..இரண்டும் இணைந்து அழகு பெற்றது.ஆனால்..தலைவன் இல்லாமால் தனித்து இருக்கும் என் தோள்களும், கை மணிக்கட்டும் ..மெலிந்து பொலிவிழந்து காணப்படுகிறது...   

Monday, July 21, 2014

குறுந்தொகை - 49


தலைவி கூற்று
(தலைமகன் விலைகளிடம் சென்று தலைவியை பிரிந்து மீண்டு வந்த காலத்து முன்பிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் அம்மூவனார்.

இனி பாடல்-


அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
   
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
   
இம்மை மாறி மறுமை யாயினும்
   
நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.

                - அம்மூவனார்

உரை-

அணிலின் பல்லைப் போன்ற தாது முதிர்ந்த கூரான முள்ளிச்செடியையும், நீலமணி போன்ற கரிய நீரையும் உடைய கடற்கரை உடைய தலைவா..இப்பிறப்பு நீங்கி, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என் தலைவன் இப்பொழுது என்னிடம் அன்பு செய்த்தொழுகும் நீயே ஆகுக! உன் மனதிற்கேற்ற காதலி இப்போது உன் நெஞ்சு கலந்தொழுகும் நானே ஆகுக!


(கருத்து) நம்முடைய அன்பு பிறவிதோறும் தொடரும் இயல்பின தாகுக!

(முள்ளிச்செடி வெளியில் முற்களோடு தோன்றினும் ,அச் செடியின் மணம் நிறைந்த மலர்களும், அம்மலரின் பூந்தாதும் பெற்றிருப்பதைப் போலத் தலைவன் புறத்தொழுக்கம் எப்படியாயினும், தன்னிடம் அன்பு நிறைந்தவனாகவே இருக்கிறான் என்பத் தலைவியின் கூற்று.

குறுந்தொகை -48



 
(தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதனால் துயருற்ற தலைவியினது மேனியிற் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானமை கண்டு வருந்தி, “தலைவர் இவளை மணந்து கொள்வோம் என்று சொல்லாரோ!” என்று தோழி கூறியது.)

பாலை திணை - பாடலாசிரியர் பூங்கணுத்திரையார்

இனி பாடல் -

தாதிற் செய்த தண்பனிப் பாவை
   
காலை வருந்துங் கையா றோம்பென
   
ஓரை யாயங் கூறக் கேட்டும்
   
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்

நன்னுதல் பசலை நீங்க வன்ன
   
நசையாகு பண்பி னொருசொல்
   
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.

                         - பூங்கணுத்திரையார்


உரை-

பலவகைப் பொடிகளால் செய்யப்பட்ட, மிகக் குளிர்ச்சியை உடைய விளையாட்டுப் பாவையானது, காலைப் பொழுதில் வருந்துவதால் பிறந்த செயலறுதலை ஒழிப்பாயாக என்று ,விளையாட்டையுடைய மகளிர் கூட்டம் சொல்லக் கேட்ட பின்னும் இத்தகைய தன்மையுடைய வருத்தத்தை மிக அடையும் நல்ல நெற்றியினை உடைய தலைவியின் பசலை நீங்கும் படி தலைவரிடம் இவளுக்கு விருப்பமாகும் தன்மையை உடைய அத்தகைய ஒரு சொல்லானது இயலாதோ!


    (கருத்து) தலைவன் இத்தலைவியை வரைந்து கொண்டால் இவள் தன் துன்பத்தினின்றும் நீங்குவாள்.

(மணலில் விளையாடுவது போல பாவையின் பொம்மை செய்து மகளிர் விளையாடும் விளையாட்டு பாவை.இது சங்ககால விளையாட்டுஅம்மகளிர் பலவகைப் பொடிகளால் பொம்மைப் பாவை செய்து விளையாடினர்.அப்பாவையை அப்படியே இரவு முழுதும் விட்டுச் சென்றால், காலையில் இப்பாவை வருந்தும் என தலைவியிடம் தோழிகள் கூற , தலைவி இரவு முழுதும் அதனைக் கை நழுவ விடாது காத்துக் கொண்டு வருந்தினாள்.அப்படிப்பட்ட தலைவியைக் காண நீண்ட நேரம் வராத தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறுகிறாள்.)




Saturday, July 19, 2014

எதிர்பார்ப்பு (சிறிய கவிதை)



வாசமுடன்
மொட்டொன்று மலர்ந்து
மலராகியது
சூடுவோர் இன்மையால்
பிறவிப்பயன் பெறாது
உலர்ந்து
உதிர்ந்து
மீண்டும் வளர்ந்து
மொட்டாய் நிற்கிறது
எதிர்பார்ப்புடன்

குறுந்தொகை - 46



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் நிலைகுறித்து கவலையுற்ற தோழியை நோக்கி, “என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் உள்ள்து.ஆதலால் அவருக்கும் அவற்றால் துன்பம் உண்டாகும்; அதனால் அவர் விரைவில் வருவாரென்று எண்ணி நான் சமாதானமடைகிறேன்” என்று தலைவி கூறியது).

மருதம் திணை - பாடலாசிரியர் மாமலாடன்

இனி பாடல் -

.  
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
   
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
   
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
   
தெருவினுண் டாது குடைவன வாடி

இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
   
புன்கண் மாலையும் புலம்பும்
   
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே.

                         - மாமலாடன்

  உரை -
வாடிய ஆம்பல் மலரைப் போன்ற குவிந்த சிறகுகளையுடைய வீடுகளில் காணப்படும் குருவிகள், முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, பொது இடத்தில் கானும் எருவுன் நுண்ணிய பொடியைக் குடந்து விளையாடி, வீட்டிலுள்ளபிறையில்  தனது குஞ்சுகளுடன் தங்கியிருக்கும்.பிரிந்தாருக்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் , தனிமையும் அத்தலைவர் பிரிந்து சென்ற நாட்டிலும் இல்லையோ? (இருக்கும். அதனால் அவர் விரைவில் வருவார்)
 
 
 (கருத்து) என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்புறுவர் ஆதலின் விரைந்து வருவர்.

  இப்பாடலின் கருத்துக்கும், குருவிக்கும் என்ன சம்பந்தம்.?

குருவி, தன் குஞ்சுகளுடன் ஒன்றாக இருப்பது போல, தலைவர் சென்ற நாட்டிலும் மாலையும், தனிமையும் உள்ளதால், அந்த குருவியைப் போல குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வருவார்...என்கிறாள் தோழியிடம் தலைவி.

என்ன ஒரு கற்பனை பாருங்கள்!!!  

Friday, July 18, 2014

குறுந்தொகை -47



தோழி கூற்று
(தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகும் சமயம் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் வந்து தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்யவில்லை"
 என்று கூறி இரவு தலைவன் வருவதை விரும்பாததை குறிப்பால் உணர்த்தியது))

குறிஞ்சி திணை _ பாடலாசிரியர் நெடுவெண்ணிலவினார்

இனி பாடல்-

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
   
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
   
எல்லி வருநர் களவிற்கு
   
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

                         -நெடுவெண்ணிலவினார்

உரை -
 நீண்ட நேரம் காயும் வெண்ணிலவே! கரிய அடியடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல் பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும் காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.



  கருத்து _ தலைவன் தலைவியைக் காண இரவில் வருதல் இனி நல்லதல்ல, அவர் அவளை விரைவில் மணக்க வேண்டும்)

   (இரவில் வேங்கை மலர் பரவிய குண்டுக்கல்லை புலியென எண்ணித் தலைவன் அஞ்சக்கூடும்

குறுந்தொகை - 45



தோழி கூற்று
(வேசியிடம் சென்ற தலைவன் விட்ட தூதுவர் மீண்டும் தலைவியினிடம் வர தலைவன் வர விரும்புவதை வேண்டியபொழுது, தலைவி அதற்கு உடன்பட்டாள் என அறிந்து தோழி, “தலைவன் கொடுமை தன்னைத் துன்புறுத்தவும் அதனைப் பாராட்டாமல் உடன்பட்ட இக்குடியிற் பிறத்தல் கொடிது” என்று கூறிக் குறிப்பினால் தலைவியின் உடன்பாட்டைத் தெரிவித்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஆலங்குடி வங்கனார்

இனி பாடல்-
 
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
   
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
   
மல்ல லூர னெல்லினன் பெரிதென
   
மறுவருஞ் சிறுவன் றாயே

தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.

               -ஆலங்குடி வங்கனார்


உரை-

காலையில் புறப்பட்டு விரைந்து செல்லும் தேரை ஏறுதற்கேற்ப அமைத்து தூய அணிகலன்களை அணிந்த வேசியிடம் சென்ற வளமான ஊரையுடைய தலைவன் மிக்க விளக்கத்தை உடையவன் என எண்ணி, ஆண் குழந்தையினைப் பெற்ற தலைவி அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மன வேதனை அடைவாள்.மனம் வருந்தும் செயலைச் செய்யினும் அதனை மறக்க வேண்டிய குடியில் பிறந்ததற்காக,


    (கருத்து)தலைவி கற்பொழுக்கமுடைய குடியிற் பிறந்தாளாதலால் தலைவனை ஏற்றுக் கொள்வாள்.

   (வேசியிடம் சென்று திரும்பிய தலைவன், தனது மனைவி ஆண்மகன் பெற்றதை அறிந்து அம்மகனைக் காணவருதலும், தலைவி கற்பொழுக்கத்தின் சிறப்பால், அவன் செய்த தவறை மறந்து ஏற்றுக் கொள்வது மரபு . ஆனால் செய்யுளில் "தெறுவதம்ம" என தோழி கூறியது அப்படி ஏற்றுக் கொளல் தகாது என்பதாக தோழி கருதுவதாகக் கொள்ள வேண்டும்) 

Thursday, July 17, 2014

குறுந்தொகை - 44




செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் வெள்ளி வீதியார்

இனி பாடல்-


 
காலே பரிதப் பினவே கண்ணே
   
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
   
அகலிரு விசும்பின் மீனினும்
   
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

                                வெள்ளி வீதியார்

உரை-

என் கால்கள் நடந்து நடந்துநடை ஓய்ந்தன.இணைந்து எதிர் வருவாரைப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன.நிச்சயமாக இந்த உலகத்தில் என் மகளும், அவள் தலைவனும் அல்லாத பிறர், அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் அதிகம் உள்ளனர்.


 (தலவியையும், தலைவனையும் நான் காணவில்லை)

தலைவனையும், தலைவியையும் தேடிச் சென்ற செவிலித் தாய்க்கு இணையாக வரும் பலர் தெரிகின்றனர்..ஆனால் தன் மகளையும், தலைவனையும் தெரிவதில்லை.



Wednesday, July 16, 2014

குறுந்தொகை - 43



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில், “அவர் பிரிவாரென்று சிறிதும் கருதாமையின் நான் சோர்ந்திருந்தேன்; அக்காலத்து அவர்தம் பிரிவைக் கூறின் யான் ஆற்றேனென எண்ணிச் சொல்லாமற் போயினார். இதனை நினைந்து என் நெஞ்சம் வருந்தும்” என்று இரங்கித் தலைவி கூறியது.)

இன்றைய காலகட்டத்தில்..விட்டுக் கொடுத்தல் இல்லாததாலேயே..விவாகரத்துகள் பெருகிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

அந்தக் காலத்திலும் அப்படி நடந்துள்ளதாகத் தெரிகிறது.


பாலத் திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-

 
செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே
 
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே
 
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
 
நல்லராக் கதுவி யாங்கென்

அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

                     -ஔவையார்



  உரை-

தலைவன் தன்னைப் பிரிந்து செல்லமாட்டார் என எண்ணி, சற்று அலட்சியமாய் இருந்துவிட்டேன்.தன் பிரிவை இவளுக்கு அறிவித்தால் அதற்கு இவள் உடன்படமாட்டாள் என எண்ணி என்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டார்.அச்சமயம்,இருவரிடமும் இருந்தது "தான்" என்ற போக்கு.கவலையுறும் என் நெஞ்சம், நல்லபாம்பு கவ்விக் கடித்ததால் வருத்தப்படுவது போல இப்பொழுது கலக்கப்படுகிறது.

(தலைவர் தலைவியிடம் சொல்லாமல் பிரிந்ததால் தலைவி கலங்குகிறாள்)

நல்லபாம்பு கவ்விக் கடித்ததால் வருத்தப்படுவது போல..(உவமை)

Tuesday, July 15, 2014

குறுந்தொகை - 42



தோழி கூற்று
(இரவில் வந்து தலைவியோடு பழகவேண்டுமென்று விரும்பிய தலைவனை நோக்கி, “நெருங்கிப் பழகாவிடினும்  நட்பு அழியாது” என்று குறிப்பால்  மறுத்தது.)
 
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-

காம மொழிவ தாயினும் யாமத்துக்
 
கருவி மாமழை வீழ்ந்தென வருவி
 
விடரகத் தியம்பு நாடவெம்
 
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.

                      - கபிலர்

உரை -

நடு இரவில் மின்னல், இடி இவற்றுடன் பெரு மழை பெய்தலால் நீர் வரத்து அதிகமாகி, அதனால் அருவியானதுபின் நாளிலும் மலையிடத்துள்ள வெடிப்புகளிலும், குகைகளிலும் ஒடும் ஒலி நிறந்த குறிஞ்சி நிலத்தையுடையவனே, காமமானது நீங்குவதாக இருப்பினும் உன்னிடத்தில் எனக்குள்ள நட்பு அழியுமோ?(அழியாது)



 (கருத்து) நீ இரவில் வாராவிடினும் தலைவிக்கும் உனக்கும் உள்ள நட்பு அழியாது.

 
(மழை பெய்து முடிந்தாலும், அதனால் உண்டான நீர்ப்பெருக்கு அருவியாய் நீண்ட நாள் ஓடுவது போல, ஒரு நாள் இரவே  பழகியிருந்தாலும் உன்னுடன் ஆன நட்பு இரவில் நீடிக்காவிடினும் அழியாது)

Monday, July 14, 2014

குறுந்தொகை - 41



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனி பொலிவிழந்ததை கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப் பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; அவரைப் பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியது.)


  பாலைத் திணை  _ பாடலாசிரியர் அணிலாடு முன்றிலார்

இனி பாடல்-

காதல ருழைய ராகப் பெரிதுவந்து

சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
 
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
 
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்

புலப்பில் போலப் புல்லென்
 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.

.
                     -அணிலாடு முன்றிலார்.
 
உரை-

தலைவர் பக்கத்தில் இருந்தால் மிக மகிழ்ச்சியுற்று, விழா கொண்டாடும் ஊரிலுள்ளோர் மகிழ்வதைப் போலநிச்சயமாக மகிழ்வேன்..அவர் என்னை பிரிந்து சென்ற காலத்தில் ,பாலை நிலத்தில் பொருந்திய அழகிய குடியுடைய
சிறிய ஊரில் மனிதர்கள் நீங்கிச் சென்றதும் அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுள்ள வீட்டைப்போல
பொலிவிழந்து வருந்துவேன்.


(தலைவனைப் பிரிந்தால் வருத்தமுறுவேன்) .

அதிக எண்ணிக்கையுள்ளோர் உள்ள வீடு.கலகல வென இருக்கும்.ஒருநாள் அவ்வீட்டிலிருப்போர் காலி செய்து வேறு இடம் சென்றுவிடுகின்றனர் அப்போது அவ்வீட்டினுள் நுழைந்தால் பழைய கல்கலப்பு இல்லை.வெறிச்சோடு இருக்கும் இல்லத்தில் அணில்கள் இங்கும் அங்கும் ஒடுகின்றன.இக்காட்சியை நினைத்துப் பாருங்கள்.
அப்படி வெறுமையாயிடுமாம் தலைவியின் மனம்.என்னவொரு அழகான ஒப்புமை!!

குறுந்தொகை - 40



தலைவன் கூற்று
(தலைவன் தன்னை விட்டு பிரிந்துவிடுவானோ என தலைவி நினைப்பதை உணர்ந்து தலைவன்   ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் செம்புலப் பெயனீரார்


இனி பாடல்-

 
யாயு ஞாயும் யாரா கியரோ
   
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
   
யானு நீயு மெவ்வழி யறிதும்
   
செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.


                       செம்புலப் பெயனீரார்

உரை -

என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தைகைய உறவினர்? என் தந்தையும்,உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்போது பிரிவின்றி இருக்கும் நானும், நீயும் ஒருவரை ஒருவர் முன்பு எவ்வாறு அறிவோம்?இம்மூன்றும் இல்லையாயினும், செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அம்மண்ணோடு கலந்து அந்த நிறத்தை பெறுவது போல
 அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.
 
    (கருத்து) இனி நாம் பிரியமாட்டோம்.

Sunday, July 13, 2014

குறுந்தொகை - 39



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்?” என்று தான் ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் ஔவையார்
 
இனி பாடல்-

   
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
   
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்
   
மலையுடை யருஞ்சுர மென்பநம்
   
முலையிடை முனிநர் சென்ற வாறே.

                   _ ஔவையார்

உரை-

எனது நெஞ்சில் தலைவைத்து உறங்குவதை வெறுத்தவன் பிரிந்து சென்ற வழியானது வெம்மையான வலிமையுடைய காற்றானது
மரக்கிளையிலே வீசுதலால் வாகை மரத்தினது பசுமை இழந்து முற்றிய காயானது ஒலித்ததற்குஇடமாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய சுரமாகும் எனக் கூறுவர் .(அந்த இடம் சென்றவனை நினைத்து எவ்வாறு கவலைப்படாமல் இருக்கமுடியும்? என தலைவி தோழிக்கு உரைக்கிறாள்.

 (கருத்து) தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்து நான் ஆற்றேனாயினேன்.

(அவள் காமம் தணிக்க தலைவன் அருகில்  இல்லை.தனிமையை மட்டுமின்றி, உடலின் தனிமையையும்,அவள் நெஞ்சில் உறங்க ஆளில்லை.அவளை தலவன் வந்து அணைக்கையில்தான் அவள் சுமை குறையும்.




Saturday, July 12, 2014

குறுந்தொகை -38



குறிஞ்சி திணை -கபிலர்

தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணக்க பொருளீட்ட சென்று நெடுங்காலமாக வாராதிருக்கவே, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, "உன்னை மணந்து கொள்ளும் பொருட்டே அவர் பொருளீட்டச் சென்றார்; அப்படியிருக்க  நீ அதனை நன்று என கருதாமல் வருந்துவது ஏன்?’ என்று வினவியபோது, ‘’அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்னிடம் இல்லை’’ என்று தலைவி உணர்த்தியது.)

குறிஞ்சி திணை -  பாடலாசிரியர் கபிலர்)

இனி பாடல்-

 
கான மஞ்ஞை யறையீன் முட்டை
   
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்
   
குன்ற நாடன் கேண்மை யென்றும்
   
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
5
நீரொ டொராங்குத் தணப்ப
   
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.

                            - கபிலர்
    உரை -

காட்டிலுள்ள மயிலானது, பாறையில் இட்ட முட்டைகளை, வெயிலில் விளையாடும் முசு குட்டிகள்(முகம் கருகிய ஒருவகை குரங்கு) உருட்டுவதற்கு இடமாகிய மலைநாட்டையுடைய தலைவனது நட்பு பிரிய, மை தீட்டப்பெற்ற நின் கண்ணினின்று உருகும் நீரோடு நில்லாது,அப்பிரிவிவை எண்ணி வருந்தாமல் பொறுத்துக் கொள்ளுதல் வன்மையுடையவர்க்கு மாத்திரம் எக்காலமும் நல்லதாகும் (ஆகவே பிரிவை பொறுத்து கொள்)
   

  கருத்து - தலைவனின் பிரிவை பொறுக்கும் வல்லமை தலைவிக்கு இல்லை

Friday, July 11, 2014

குறுந்தொகை - 37



தோழி உரைத்தது

(தலைவன் பிரிந்து சென்றுள்ளான்.தலைவியோ அதனால் வருத்தத்தில் உள்ளாள்.தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.அவர் சென்ற பாலை நிலத்தில் பெண்யானையின் பசியைப் போக்க ஆண்யானை தன் துதிக்கையால் மரப்பட்டையை உரித்து நீரை பருகச் செய்யும்.அதைக்கண்டதும் உன் நினைவு வந்து தலைவன் திரும்புவான்" என்கிறாள்)

பாலைத் திணை -பாடலாசிரியர் பெருங்கடுங்கோ  


இனி பாடல் -

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
 
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
   
மென்சினை யாஅம் பொளிக்கும்
   
அன்பின தோழியவர் சென்ற வாறே.

                    - பெருங்கடுங்கோ
 உரை-

தலைவன் உன் மீது அன்புள்ளவன். தலையளி செய்தலும் உடையவர்..அவர் சென்ற வழிகளில், பெண் யானையின் பசியை நீக்க, பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்படியே  பருகச் செய்யும்.(அதைக்கண்டு உன் ஞாபகம் வர திரும்புவார்)

கருத்து - தலைவர் விரைவில் வருவார்

(பெண் யானை தாகம் தீர்க்க ஆண்யானை செய்யும் செயல் தமக்குரிய மனைவியரிடத்தில் அன்பு வைத்துப் பாதுகாக்கும் கடமையை நினைப் பூட்டும் இயல்புடையதாயினமையாலும் அவர் விரைந்து வந்துவிடுவ ரென்பது குறிப்பு.)

யா மரம் பாலை நிலத்தில் வளரும் மரம் என் சங்கப் பாடல்கள் சொல்கின்றன.

குறுந்தொகை -36



தலைவி தோழிக்கு உரைத்தது

(தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் அப்பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் முன்பு பிரியேன் என்று சூளுறவு செய்து இப்பொழுது பிரிந்துறைய, அதனால் உண்டான வருத்தத்தைப் பொறுத்துக் கொண்டு யான் இருப்பவும் நீ வருந்துதல் முறையன்று” என்று உணர்த்தியது.)


 குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பரணர்

 
துறுக லயலது மாணை மாக்கொடி
   
துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
   
நெஞ்சுகள னாக நீயலென் யானென
   
நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்

தாவா வஞ்சின முரைத்தது
   
நோயோ தோழி நின்வயி னானே.
           
                                - பரணர்

  உரை -

உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய, மாணை என்னும் பெரிய கொடியானது தூங்குகின்ற களிற்றின் மேல் படரும் குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவன், என் நெஞ்சு இடமாய் இருந்து பிரியேனென்று, எனது நல்ல தோளை அணைந்த போது அத்தலைவன் உறுதிமொழி அளித்தது மறந்தது உன் வருத்தத்திற்கு காரணமாகுமா(ஆகாதல்லவா?)
 

 (கருத்து) தோழி, தலைவன் உறுதிமொழி உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பம் தருவது; அதனை நானே பொறுத்து ஆற்றியிருப்ப உனக்கு வருத்தம் உண்டாதற்குக் காரணமில்லை.

Thursday, July 10, 2014

குறுந்தொகை -35


தலைவி கூற்று
(தலைவன் பிரிந்தமையால் மெலிவுற்ற தலைவி அழுதாளாக, “நீ அழுதது ஏன்?” என்று வினாவிய தோழிக்கு, “தலைவர் பிரிந்த காலத்தில் அழாமல் உடம்பட்ட என் கண்கள் இப்பொழுது நாணமின்றி அழுதன” என்று தன் வருத்தத்தைக் கண்ணின்மேலேற்றித் தலைவி உரைத்தது.)

மருதம் திண - பாடலாசிரியர் கழார்க் கீரன்


நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
   
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
   
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
   
நுண்ணுறை யழி துளி தலைஇய

தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.

                                   - கழார்க் கீரன் எயிற்றி

உரை-

தலைவன் பிரிந்து செல்கையில், கர்ப்பமான பச்சை பாம்பினது கருவின் முதிர்வு போன்ற, திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு
மலருமாறு நுண்ணிய மழை பொழிந்து துளி பொருந்திய, தண்ணிய வருதலை உடைய வாடைக்காற்றை யுடைய கூதிர்காலத்தும் பிரிந்துறையும் தலைவர் பொருட்டு அழாததால் எனது கண்கள் கண்டிப்பாக நாணம் இல்லாதன..(என்கிறாள் தலைவி தோழியிடம்)

   

    (கருத்து) அவர் பிரியும் பொழுது கண்கள் அழுது தடை செய்யாதது தவறு.



    தோகையால் மூடப்பட்டுப் பசுமையாக இருத்தலின் கரும்பின் அரும்பிற்குப் பச்சைப் பாம்பை உவமை கூறினாள். கார்காலத்து மழை பெய்தபின் மேகத்தில் எஞ்சியிருக்கும் துளிகள் கூதிர்க் காலத்து வீழ்தலின், ‘நுண்ணுறை யழிதுளி தலைஇய வாடை’ என்றாள். தலைஇய - பெய்த வெனலுமாம். வாடையும்: உம் இழிவுச் சிறப்பு; வாடையை உடைய கூதிர்க் காலம் தலைவனும் தலைவியும் இன்புறுவதற்கு ஏற்ற காலம் . ஆதலின் உடன் இருப்பதற்குரிய காலத்தில் பிரிந்துறைகின்றார் என்று தலைவி வருந்தினாள்.

 

Wednesday, July 9, 2014

குறுந்தொகை - 34






(தலைவியை மணந்து கொள்ள வந்துள்ளவனே அவளால் விரும்பப்பட்டவனாதலின், இனி அவன் தன்னை மணப்பான் எனும் செய்தியைக் கேட்டு இதுவரை உண்டான பலவகைத் துன்பங்களும் இன்றி இவ்வூரினர் மகிழ்வாராக என்று தோழி தலைவிக்கு உணர்த்தியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் கொல்லிக் கண்ணன்.

இனி பாடல்-
 
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
   
தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
   
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
   
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ

டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம்
   
குட்டுவன் மரந்தை யன்னவெம்
   
குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே.

                         _கொல்லிக் கண்ணன்.
பாடலின் உரை-
 முதலில் உள்ளதாகிய கடற்கரையில் உள்ள வண்டாழ்ங்குருகின் பெரிய தொகுதியானது பகைவரைக் கொன்ற வீரரது வென்று முழங்கும் முழக்கத்தினை அஞ்சுவதற்கிடமான குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரைப் போன்ற எங்களது இச்சை விளங்குகின்ற அழகிய நெற்றிக்கு உரிமையுடையோளும், வரைவோடு வரும் அத்தலைவனே, தமர் ஒறுக்கவும், வருத்தத்திலிருந்து நீங்காராகி,மறிப்பத் தோழிய பல காரணங்கள் கூறி வருந்துதல் தகாது என்று மறுத்து கூறவும் தெளியாராகி தலைவரையும் பிரிந்து தனியாய்
உறங்கும் வருத்தம் இல்லாதவராகி இவ்வூரில் உள்ளார்.அவன் உன்னை மணந்து கொள்வான் எனும் இனிய செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைக.

(தலைவன் தலைவியை விரைவில் மணக்க உள்ளான்)

(நாம் அவனை தண்டித்தால் அவன் அதை பொருட்படுத்த மாட்டான்.நாம் அவனை மறுத்தால், அதைப்பற்றியும் கவலைப்படமாட்டான்.
ஊர் இதனைப் பற்றி முணுமுணுக்காமல் விடமாட்டான்.ஊரார் எங்கள் உறவைப் பற்றி புறங்கூறி முணுமுணுக்கட்டும்.அவளின் காதலன் அவன் என பேசட்டும்.
அவளது நெற்றி மறந்தை துறைமுகம்.மறந்தை அரசன் குட்டுவனது.அங்கே நாரைகள் பெரியளவில் மல்லர்களிம் பறை ஓசைக் கேட்டு பயப்படுகின்றன.


பாடல் தரும் செய்தி சுருக்கம்-