Wednesday, October 26, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் -25




பரிதிமாற் கலைஞர் ஒரு சமயம் தன் மாணவர்களுக்கு செய்யுள் இலக்கணப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்..

அப்போது ஒரு மாணவன் எழுந்து, 'ஐயா..நீங்கள் நடத்தியதில் எழுத்து புரிகிறது.சீர் புரிகிறது,தளை புரிகிறது,தொடை புரிகிறது..ஆனால் தொடைக்கு மேல் ஒன்றும் புரியவில்லை.அதைச் சற்று விளக்கமாகக் கூறுங்கள்' என்றான்.

உடன் பரிதிமாற் கலைஞர், 'தனியே என் அறைக்கு வா..விளக்குமாற்றால் விளக்குகிறேன்' என்றார்,

வகுப்பு முழுதும் சிரித்தது.

(விளக்குமாற்றால் என்பது இரு பொருள் உடையது.துடைப்பத்தால் எனபது ஒரு பொருள்.விளக்கும் ஆற்றலால் என்பது இன்னொரு பொருள்)

பரிதிமாற் கலைஞர் தமிழாசிரியர் பணிக்காக நேர்முகத் தேர்விற்குச் சென்றார்..

அப்போது அவரிடம்'குற்றியலுகரத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தாருங்கள்' என்றனர்.

'எனக்குத் தெரியாது' என்றார் பரிதிமாற் கலைஞர்.

கேள்வி கேட்டவர்கள், தமிழாசிரியர் பணி அவருக்கேத் தரவேண்டும் என்றனர்.

(எனக்கு தெரியாது  என்பதே இரண்டு எடுத்துகாட்டுகள்.

இலக்கண வகுப்பு...பரிதிமாற் கலைஞர், எழுவாய்,செயப்படுபொருள்,பயனிலை பற்றி விளக்கமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.வகுப்பில் ஒரு மாணவன் மட்டும் வகுப்பைக் கவனிக்கவில்லை.இதனால் கோபம் அடைந்தவர்,'வகுப்பைக் கவனிக்காத நீ உன் இடத்தில் இருந்து எழுவாய்.உன்னால் ஏதும் செயப்படு பொருள் இல்லை.நீ இங்கிருந்தால் உனக்கோ பிறர்க்கோ யாதும் பயனிலை.வகுப்பை விட்டு வெளியேறுக' என்றார்.

டிஸ்கி1- இது போல அவ்வப்போது தமிழ் அறிஞர்கள் பற்றிய செய்திகளை பகிர்ந்துக் கொள்ள ஆசை

6 comments:

SURYAJEEVA said...

அருமையான பகிர்வு.. கடைசி விஷயத்தை கேள்வி பட்டிருக்கிறேன், முதல் இரண்டு புதுசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

ஹேமா said...

இப்படியான செய்திகள் எனக்கு மிகவும் பிடிக்கும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

Arun Ambie said...

அருமையான பதிவு. இந்தத் தமிழுக்காகவே அடிக்கடி வரத் தோன்றுகிறது. முன்பு கொஞ்சி விளையாடிய 24ஐயும் இவ்வார இறுதியில் பார்த்துவிட எண்ணமிருக்கிறது. நேரம் தேவை. பார்க்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Arun Ambie